Sunday, 8 February 2026

நலவாழ்க்கை

அனுபவங்கள் வாழ்க்கை குறித்து மேலும் புரிந்து கொள்ள எனக்கு உதவுகின்றன. எனக்கு சிறு வயதிலிருந்தே கவனிக்கும் வழக்கம் உண்டு. மனிதர்களைப் பார்ப்பதையும் கவனிப்பதையும் எப்போதும் செய்து வந்திருக்கிறேன். மனிதர்களின் வழக்கங்களை குடும்பங்களின் வழக்கங்களை சமூகங்களின் வழக்கங்களை எப்போதும் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒருபுறம் படைப்பூக்கம் கொண்ட மனம் ; இன்னொரு புறம் இந்த கவனம். உலகியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து சட்டென வெளியே வந்து விடுவதற்கான வழிகளையும் இருப்பில் வைத்திருக்கிறேன். அவை அன்றாட உலகியல் வாழ்வில் எனக்கு உதவுகின்றன. பலவிதமான உலகியல் பணிகளை ஆற்றுகிறேன். இருப்பினும் என்னை உலகியலாளன் எனக் கூற முடியாது ; படைப்பூக்க மனம் கொண்டவனாகவே நான் இருக்கிறேன். 

இன்று எனது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். அவரது மகன் 7ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு அவர் கணிதப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சி காணவே மிகவும் இனிதானதாக இருந்தது. மீட்டர் அளவை கிலோ மீட்டருக்கு மாற்றும் கணக்கு. கணிதம் சொல்லித் தருதல் என்பது கணிதத்தின் தர்க்கத்தை சொல்லித் தருதலே. கணிதம் முழுமையான தர்க்கம். இன்னொரு புறம் அது தூய இசையும் கூட. சமூகத்தில் குழந்தைகளுக்கு கணிதம் எவ்விதம் சொல்லித்தரப்பட வேண்டுமோ அவ்விதம் சொல்லித் தரப்பட வேண்டும். நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பெருக்கல் வாய்பாடு மனப்பாடம் செய்யும் வழக்கம் உண்டு. கணிதத்தை எண்களை குழந்தைகள் மனதுக்குள்ளும் மூளைக்குள்ளும் கொண்டு செல்வதற்கு அது மிகச் சிறந்த முறை. உலகின் எல்லா குழந்தைகளுக்கும் மனப்பாடம் செய்யும் முறை சென்று சேர வேண்டும். நான்மறை பயில்வதின் சிறு கூறு பெருக்கல் வாய்பாடு மனப்பாடம் செய்வதில் உள்ளது. நான்மறை பயில எட்டு வயதில் குழந்தைகள் ஆசிரியரின் குருகுலத்துக்குச் செல்வார்கள். எட்டு ஆண்டுகளிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் மொத்த மறையையும் மனப்பாடமாகப் பயில்வார்கள். அதற்கு ‘’மனனம்’’ என்று பெயர். எட்டு ஆண்டுகளுக்கு பின் வேத வித்யார்த்தி விரும்பினால் அதன் பொருளை மேலும் பயில்வார்கள். தமிழ் மொழியும் அவ்விதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பேரிலக்கியங்களை முதலில் மனனம் செய்து கொள்ள வேண்டும். கம்ப ராமாயணம், திருப்புகழ், சிலப்பதிகாரம், திருக்குறள் என. அதன் பின் அதன் அர்த்தத்தில் ஆழ வேண்டும். 

எனக்கு சிறு வயதிலிருந்தே வாய்ப்பாடு மனப்பாடமாகத் தெரியும். ஒன்று தொடங்கி 20 வாய்பாடு வரை அறிவேன். 16 என்றும் 12 என்றும் இரு எண்களைக் கூறினால் என் மனம் 192 என்று சொல்லும். 16 மற்றும் 13 என்றால் 208 எனக் கூறும். பலர் அதை ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கண்டால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் சிறுவனாயிருந்த காலகட்டத்தில் மனப்பாடம் வலியுறுத்தப்பட்டது. 

அறிவியலை செய்து பார்த்து மீண்டும் மீண்டும் செய்து பார்த்து கற்க வேண்டும். மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிக்கும் முறை சிறப்பானது. நம் நாட்டிலும் அந்த நாட்டின் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவியல் கற்கும் வாய்ப்பு நமது நாட்டின் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். அரவிந்த் குப்தா போன்றோர் இந்த விஷயத்தில் பெரிய அளவில் செயலாற்றியிருக்கின்றனர். 

கலைகளையும் நுண்கலைகளையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தலாம். இருப்பினும்   அதில் படைப்பூக்கத்துடன் இருப்பது என்பது ஆர்வமும் விருப்பமும் கொண்ட சிலருக்கே சாத்தியமாகிறது. 

நாம் எவ்விதம் உணவருந்துகிறோம் ; நாம் எவ்விதம் உடலைப் பராமரிக்கிறோம்; நாம் எவ்விதம் சிந்திக்கிறோம் என்பதில் நம் குழந்தைகளுக்கு குடும்பத்தின் சமூகத்தின் பொது வழக்கங்கள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. கல்வியில் இந்த விஷயங்கள் முக்கிய இடம் பெற வேண்டும். உடலுக்கு உகந்த உணவை அளிப்பதும் உடலுக்கு பயிற்சி கொடுப்பதும் அடிப்படைக் கல்வியாக இருக்க வேண்டும். 

நண்பர் சமூக அமைப்பொன்றில் செயலாற்றுபவர். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரிடம் நான் ஒரு அவதானத்தைச் சொன்னேன். அதாவது ஒரு கிராமத்தில் 5000 பேர் வசிக்கிறார்கள் என்றால் அதில் 10 வயதிலிருந்து 50 வயது வரை இருப்பவர்கள் 3000 பேர் இருப்பார்கள். இவர்களை தினமும் அவர்கள் உடல்நலனுக்கான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தைச் சொன்னேன். 

இன்று நம் சமூகம் வறுமையை வென்றுள்ளது. உணவு போதிய அளவு எல்லாருக்கும் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு அவர்களுடைய உடல் குறித்த விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டும். கிராமத்தில் 3000 பேர் இருக்கிறார்கள் எனில் அதில் நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்களை தனியாகப் பிரித்து அவர்களுக்கு நடைப்பயிற்சியின் நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். தினமும் அவர்கள் நடைப்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். யோகாசனம் செய்ய விரும்புபவர்களுக்கு யோகாசனம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு கால்பந்து, கைபந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளைக் கற்றுத் தர வேண்டும். அந்த ஊரில் வசிக்கும் 3000 பேரும் ஏதேனும் உடல் சார்ந்த பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும் என்று சொன்னேன். 3000 என்பது இலட்சிய எண்ணிக்கை. அதில் 10 சதவீதமான 300 என்பதே சிறப்பான எண்ணிக்கை தான். அதில் ஆறில் ஒரு பங்கான 50 பேர் தினமும் இந்த இயங்குமுறைக்குள் வருவார்கள் என்றால் கூட அதன் பயனை கிராமம் சில நாட்களிலேயே உணரத் தொடங்கி விடும். 

சமூக அமைப்பைச் சேர்ந்த நண்பருக்கு நான் கூறிய விஷயம் ஆர்வமளித்தது. இணைந்து சிந்திப்போம் என்று கூறினார். 

இந்த பதிவை எழுதும் போது இதற்கு ‘’நல்வாழ்க்கை’’ என்று தலைப்பிட்டிருந்தேன். கடைசி பத்தியை எழுதி முடித்ததும் தலைப்பை ‘’நலவாழ்க்கை’’ என ஆக்கினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. நலவாழ்க்கை நல்வாழ்க்கையும் கூட.