Sunday, 30 August 2026
ஒரு குடும்பத்துக்கு என்னென்ன மரக்கன்று வழங்கலாம்?
ஒரு சிந்தனை - ஒரு யோசனை
’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் பலமும் அதுதான் ; அதன் எல்லையும் அதுதான். தற்போது ஒரு கிராமத்தில் மரக்கன்று வழங்கும் பணியைத் துவங்க ஆரம்பகட்ட வேலைகளைச் செய்து வருகிறேன். பல கிராமங்களில் பணியாற்றிய அனுபவத்தில் கிராமத்தில் அதிக மரக்கன்றுகள் வளர்க்க சிறப்பான வழிமுறைகள் என்ன என்பது குறித்து யோசித்தேன். இந்த விஷயம் குறித்த என்னுடைய எண்ணங்கள் என் அனுபவத்தின் அடிப்படையிலானவை. எல்லா இடத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் இவை பொருந்த வேண்டும் என்பது அவசியமில்லை. நான் சொல்வதற்கு நேர் எதிர் கூட சாத்தியமாக வாய்ப்பு உள்ளது. அதனைத் தெரிந்தே இதனைச் சொல்கிறேன்.
1. பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதில் கிராமங்களில் முக்கிய சிக்கல் மின்சாரக் கம்பிகள் வரை மரங்கள் வளர்ந்து மின் வினியோகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உயரமாக வளரும் மரங்களை பொது இடங்களில் வளர்க்க கிராம மக்கள் விரும்புவதில்லை. உயரம் குறைவாக வளரக்கூடிய மரங்களே மின் கம்பிகளுக்குக் கீழே வளர்க்க முடியும். நந்தியாவட்டை மரம் அதற்கு உகந்தது. அரளியும் உகந்தது. செம்பருத்தியும் வளர்க்கலாம்.
2. தமிழக கிராமங்களில் ஆடு மாடுகள் எல்லா இடங்களிலும் மேயும். எனவே கிராமங்களில் வளர்ப்பது என்றால் பொது இடங்களில் வளர்த்தாலும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தாலும் வேலி அவசியம். மீன்வலை வேலிகள் ஓரளவு செலவு குறைவானவை.
3. ஒரு கிராமத்தைத் தொடர்பு கொண்டால் அதில் உள்ள எல்லா வீடுகளும் ஒரே விதமாக நல்ல முறையில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். அனைவருமே நல்ல விதமாக வளர்க்கவே விரும்புவார்கள். செயலாக்குவதில் நிச்சயம் வித்தியாசங்கள் இருக்கும். விழுப்புணர்வின் மூலமே செயலாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டு வர முடியும்.
4. ஒரு கிராமத்தில் 500 வீடுகளுக்கு எலுமிச்சை மரக்கன்று கொடுக்கிறோம் என்றால் அது காய்க்க 3 ஆண்டுகள் ஆகும். ஒரு மரத்தில் 100 காய்கள் காய்த்தால் ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்தில் 50,000 எலுமிச்சம்பழங்கள் கிடைக்கும். இது எண்ணிப்பார்க்க உற்சாகம் தரும் செயல். இருப்பினும் அந்த 3 ஆண்டுகளும் நாம் ஒவ்வொரு வீடாக செடியை எவ்விதம் பராமரிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும். மண் , சூரிய ஒளி ஆகியவை பொறுத்து இடத்துக்கு இடம் செடியின் வளர்ச்சி மாறும் என்றாலும் சம அளவில் எல்லாருக்கும் நலன் கிடைக்கும் வகையில் செய்யும் பொறுப்பையும் நாமே ஏற்க வேண்டும்.
5. எனது அனுபவத்தில் கிராம மக்கள் பொதுவாக மரக்கன்றுகள் தானாக வளரும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். மரங்கள் தண்ணீர் ஊற்றினால் தான் வளரும் என்பது அவர்கள் உணர்வில் இல்லை. அந்த விழுப்புணர்வை மரக்கன்றுகளை வழங்குவதற்கு முன்பும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கும் போதும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கிய பின்னரும் 5 ஆண்டுகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த பயன் கிடைக்கும். அந்த கிராமத்தின் அகத்திலும் புறத்திலும் 5 ஆண்டுகளில் மாற்றம் நடக்கும்.
Wednesday, 26 August 2026
நூதனம்
நேற்று மாலை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஃபோன் செய்தார்கள். நிகழ்ந்த விஷயத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்கள். ‘’நான் தான் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்கிறேன் என நினைத்தால் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் வருத்தம் தெரிவிப்பதை திரும்ப திரும்ப செய்கிறது’’ என்று கூறினேன். பேசியவர் வருத்தத்துடனே பேசினார். அவரிடம் நடந்ததை ஒருமுறை கூறினேன். ஓரிரு மணி நேரங்களில் என் சி.பி.கி.ராம்.ஸ் புகாருக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இருப்பு வைத்துக் கொள்ள ஒரு அஞ்சல் அலுவலகத்தால் இயலவில்லை என்றால் அந்த அஞ்சல் அலுவலகத்தை மூடி விடலாமே ; அவ்வாறு செய்தால் துறைக்கு லாபம் தானே ? என புகாரில் தெரிவித்திருந்தேன். அது அவர்களை அமைதியிழக்கச் செய்திருக்கிறது. எனக்கு கொடுத்த பதிலில் ஓர் அஞ்சலகம் ஸ்டாம்ப் , கவர் இருப்பு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் எந்த சேவையும் அளிப்பதில்லை எனக் கொள்ள இயலாது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு தங்கள் பதிலைத் தெரிவித்திருந்தார்கள்.
அவர்கள் தெரிவித்த பதிலில் ஒரு விஷயம் நூதனமானது. அதாவது, அந்த அஞ்சல் நிலையத்தில் ரூ.5 ஸ்டாம்ப் தான் இருப்பு இல்லை ; ரூ. 4 மற்றும் ரூ.1 ஸ்டாம்ப் கள் இருந்திருக்கின்றன என்பதை பதிலில் தெரிவித்திருந்தார்கள்.
நான் கையில் உறையுடன் சென்று அதனை அனுப்ப ரூ.5 ஸ்டாம்ப் வேண்டும் எனக் கேட்கிறேன். அங்கிருந்த ஊழியர் என்ன செய்திருக்க வேண்டும் ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் தந்திருக்க வேண்டாமா? அவர் இருப்பு வைத்துக் கொள்ளாததை விட ரூ.5 ஸ்டாம்புக்கு ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் சமமானது என்பதை அறியாதது இன்னும் பெரிய பிழை அல்லவா?
Tuesday, 25 August 2026
மீண்டும் ஓர் அஞ்சலகம் ; மீண்டும் ஒரு சி.பி.கி.ராம்.ஸ் புகார்
இன்று அளித்த சி பி கி ராம் ஸ் புகாரின் தமிழாக்கம்
நேற்று நண்பகல் **** ஊரில் உள்ள அஞ்சலகத்துக்குச் சென்று ரூ.5 தபால் ஸ்டாம்ப் கேட்டேன். அந்த ஊரின் சப் போஸ்ட் மாஸ்டர் தன் அஞ்சலகத்தில் ரூ. 5 ஸ்டாம்ப் கையிருப்பு இல்லை எனக் கூறினார். என் கையில் முகவரி எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்த காக்கி உறை இருந்தது. அதை அஞ்சல் உறையில் இட்டு முகவரி எழுதி தபாலை அனுப்ப முயற்சித்து ரூ.5 அஞ்சல் உறை தாருங்கள் எனக் கேட்டேன். தன் அஞ்சலகத்தில் ரூ.5 தபால் உறையும் இல்லை எனக் கூறினார். மயிலாடுதுறை எல்லைக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் போஸ்டல் ஸ்டாம்ப் , போஸ்டல் கவர் இல்லை எனக் கூறுவதும் அதனை நான் புகாராகத் தெரிவிப்பதும் எனக்கு இது மூன்றாவது தடவை. முதல்முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இரண்டாம் முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இப்போது மூன்றாவதாக ***** இந்த ஊரில். ஒரு வாடிக்கையாளர் அஞ்சல் அலுவலகத்தில் அடிப்படையான ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் எதிர்பார்ப்பது நூதனமான ஒன்றா? சாதாரண அடிப்படை விஷயம் இல்லையா? ஒரு ரயில் நிலையத்துக்குச் சென்று பயணிக்க விரும்பும் ஊருக்கு பயண டிக்கெட் கேட்டு ரயில் நிலைய ஊழியர் டிக்கெட் கையிருப்பு இல்லை எனக் கூறுவதற்கு ஒப்பான செயல் அல்லவா ஒரு போஸ்ட் ஆஃபிஸில் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இல்லை எனக் கூறுவது? ஒரு போஸ்ட் ஆஃபிஸ் ரூ.5 போஸ்டல் கவரும் ரூ.5 ஸ்டாம்பும் விற்பனை செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்றால் அந்த போஸ்ட் ஆஃபிஸை மூடி விடுவது தானே உத்தமம்? அஞ்சல்துறைக்கு செலவு மிச்சம் அல்லவா? ரூ.5 போஸ்டல் கவர் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் கூட இருப்பு வைத்துக் கொள்ள இயலாத அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர் சேவையை மற்ற விஷயங்களில் அளிக்குமா என்னும் ஐயம் எழுவது இயல்பான ஒன்று தானே?
Monday, 24 August 2026
சங்கர நாராயணன்
ஊரிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு சிவத்தலம். 1400 ஆண்டுகளுக்கு முன் சைவத் திருமுறைகளின் துவக்கம் நிகழ்ந்த ஊர். சைவத்தின் பேராலயங்களில் ஒன்று. நேற்று மாலை அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலயப் பிரகாரங்களில் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். கோயில் குளக்கரையில் அக்குழந்தைகளின் தாய்மார்கள் 10 பேர் ஒரு வட்டமாக அமர்ந்து துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த ஊரில் துணிக்கடை, நகைக்கடை வைத்திருக்கும் வட இந்திய வணிகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என யூகித்தேன். இன்னிசையால் தமிழ் பரப்பிய திருத்தலத்தில் ஒலித்த ஹிந்தி பஜன் மேலும் இனிமையை சேர்ப்பதாக எண்ணினேன். அவர்கள் துதிப்பது யாரை என அவர்கள் பாடும் பாடல்களை கவனித்தேன். ‘’கோபால்’’ ஜமுனா’’ ஆகிய வார்த்தைகள் காதில் விழுந்தன. அந்தப் பெண்கள் ராஜஸ்தான் அல்லது குஜராத் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் இசைப்பது மீராவின் பாடல்கள். அத்தலத்தில் கோயில் கொண்டிருப்பவன் சங்கரன். அவன் சங்கர நாராயணனும் தானே!
Sunday, 23 August 2026
ஒரு பகல் ஒரு புத்தகம் ஒரு ஆலயம்
Thursday, 20 August 2026
ஆலயமும் கலையும் மரபும்
நேற்று ஊருக்கு அருகில் மிகப் புராதானமான ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலயத்தின் இறைவன் போர்க்கடவுள். உயிர்களின் அக இருளை அழிக்கக்கூடியவன். அவன் சன்னிதி முன் கண் மூடி அமர்ந்திருந்தேன். அப்பேராலாயம் விரிந்து கிடக்க அதில் இருக்கும் ஒவ்வொரு மனிதருமே சிறு எரும்பெனவே தம்மை உணர்வார்கள் என்னும் விதமாக ஆலயம் தன் இருப்பில் நிலைத்திருந்தது. அக அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தேன். மனம் அமைதி கொண்டிருந்தது.
அப்போது அங்கு நாதஸ்வர இசை கேட்டது. மெல்ல அந்த இசை கோயில் முழுவதும் நிரம்பியது. ஒலிபெருக்கி இல்லாத நேரடியான இசை. இவ்விதம் இந்த இசை இந்த இடத்தில் 1500 ஆண்டுகளாகக் கேட்கிறது. இந்த ஆலயம் கற்றளியாக எழுப்பப்படுவதற்கு முன் ஆலய இறைவன் விருட்சம் ஒன்றின் அடியில் வீற்றிருந்த போதும் இந்த இசை இசைக்கப்பட்டிருக்கும்.
மாலிக்காஃபூர் படையெடுத்து வந்த போதும் அதன் பின் 60 ஆண்டுகளும் இந்த இசை கேட்காமல் இருந்தது. அந்த இருளை நீக்கி எழுந்த விஜயநகரப் பேரரசு தென்னகத்தில் அந்த இசையை மீண்டும் ஒலிக்கச் செய்தனர். அதன் பின்னரும் சில ஐரோப்பிய ஆட்சியாளர்களால் இடையூறு ஏற்பட்டது. அப்போதும் அந்த இசை இடைவெளிகளுடன் கேட்டுக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு 30 கோயில்கள் எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் கூட 1140 கோயில்கள். ஒரு கோயிலில் ‘’கோயில் பணியாளர்கள்’’ என வேதம் ஓதுபவர்கள், தேவார ஓதுவார்கள், நாதஸ்வரம், தவில் மற்றும் மற்ற இசைக்கருவிகளை இசைப்பவர்கள் என 100 பேரை அரசாங்கத்தால் நியமிக்க முடியும். அவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000 வழங்க வேண்டும். மொத்தம் 1,14,000 பேர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ஆகும் ஊதிய செலவு ரூ.250 கோடி. ஓராண்டுக்கு ரூ.3000 கோடி. ஆலயம் மூலமாக ஆலய சொத்துக்கள் மூலமாக அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாய் இவ்விதம் செலவு செய்யப்பட்டால் மாநிலத்தில் ஆன்மீகமும் கலையும் தமிழும் வளரும். அதன் மூலம் மொழியும் பண்பாடும் எல்லா மக்களையும் சென்றடையும்.
பண்டைய அரசுகள் இவ்விதமே செய்திருக்கின்றன.
அதன் தொடர்ச்சியை ஜனநாயக அரசுகளும் செய்ய வேண்டும்.
இதன் மூலம் தமிழ் வளரும் . இசை வளரும். பண்பாடு வளரும்.
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் பதவியிலிருந்து அகற்றப்பட்டு புதிய கட்சி ஒன்று அரசமைத்துள்ளது. இனி தமிழகத்தில் பழைய திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. புதிய கட்சிகளே இனி தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவர். ஏதேனும் ஓர் அரசியல் கட்சி தமிழகக் கோயில்களில் 1,00,000 ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், நாதஸ்வர, தவில், மிருதங்கக் கலைஞர்கள் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு சார்பில் கோயில் ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்க வேண்டும்.
Wednesday, 19 August 2026
கவிஞர் கண்ணதாசன் 100
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையிலும் அவருடைய பண்பாட்டுப் பங்களிப்பைப் போற்றும் வகையிலும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் எனக்குப் பிடித்த 100 பாடல்களின் வரிகளை வெளியிட உத்தேசித்துள்ளேன்.
Tuesday, 18 August 2026
கவிஞர் கண்ணதாசன்
Monday, 17 August 2026
கணக்கெடுப்பு எண்
இன்று வீட்டுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஆசிரியை வந்திருந்தார். நான் கடந்த 15 நாட்களாகவே சென்சஸ் எடுக்க வீட்டுக்கு வருவார்கள் என அனைவரிடமும் கூறியிருந்தேன். இன்று காலை வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. உடன் வீட்டுக்குச் சென்றேன். கையில் திறன்பேசியுடன் ஆசிரியை காத்திருந்தார். அவரிடம் என்னுடைய பாக்கெட் நோட்டில் குறித்து வைத்திருந்த சுய கணக்கெடுப்பு எண்ணைக் கூறினேன். அவர் தன் திறன்பேசியில் பதிவிட்டார். உடன் சென்சஸ் இணையதளத்தில் நான் பதிந்திருந்த விபரங்கள் அவர் கணக்குக்கு சென்று விட்டது. அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் பத்து லட்சம் பேர் சுய கணக்கெடுப்பு விபரம் பதிவு செய்திருப்பதாகக் கூறினார். சுய கணக்கெடுப்பு பதிவு செய்திருந்தால் தங்கள் பணி மிகவும் எளிதானதாக இருக்கும் என்று சொன்னார். ஃபிப்ரவரியில் மேற்கொள்ள உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் சுய கணக்கெடுப்பு உண்டு என்று கூறினார். அவர் கூறிய தகவல் எனக்குப் புதிது. இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்பில் 40 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. வீட்டின் கணக்கெடுப்பு எண்ணை சுவரில் எழுதி விட்டு அடுத்த வீட்டில் கணக்கெடுப்பு மேற்கொள்ள புறப்பட்டார்.
Sunday, 16 August 2026
தெருவிளக்கும் தமிழக அரசியலும்
தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.
தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி.
அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும்.
இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது.
2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன்.
2014ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது. பியூஷ் கோயல் மத்திய மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவர் ஒரு பட்டயக் கணக்காளர் (சார்டட் அக்கவுண்டண்ட்). சி ஏ தேர்வில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் மின்சார சேமிப்பை நாடெங்கும் நிகழ்த்த மாநில அரசாங்கங்கள் தங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு இவற்றுக்குப் பதில் சி எஃப் எல் அல்லது எல் இ டி விளக்குகளை மத்திய அரசு வழங்கும் எனக் கூறினார். நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய பாதரச ஆவி விளக்குகளுக்குப் பதிலாக மின்சாரம் குறைவாகத் தேவைப்படும் எல் இ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் நாட்டுக்கு பல லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டது.
அரசு நிர்வாகமும் ஊழலும்
பிரிட்டிஷார் உலகெங்கும் காலனி நாடுகளை அடிமைப்படுத்தி உருவாக்கினர். அந்த நாடுகளின் செல்வத்தையும் மனிதர்களின் உழைப்பையும் கொள்ளையடிப்பதே அவர்களின் ஆட்சியின் நோக்கம். பிரிட்டிஷ் அமைப்பில் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து கீழ்நிலை அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்தனர். பிரிட்டிஷ் ஆட்சி முறை ஊழலை அடிப்படையாய்க் கொண்டது. தனது பணியாளர் மேல் மேலாதிக்கம் செலுத்த ஊழல் புகார் மீதான நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் ஆட்சிமுறை கொண்டிருந்தது. அது அவர்களின் நிர்வாக பாணி. இதைக் கூறும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் மிகக் குறைவாக இருக்கும் நிர்வாகங்களையும் தம் ஆட்சியில் பிரிட்டிஷார் கொண்டிருந்தனர். நூதனமான விஷயமாக இருந்தாலும் அதுவும் ஓர் உண்மையே. ரயில்வே, தபால் ஆகிய இரு துறைகள் பிரிட்டிஷ் ஆட்சியில் மிக மிகக் குறைந்த ஊழல் கொண்டிருந்ததைக் காணலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் மிக அதிக ஊழல் இருந்த துறைகள் என உள்ளாட்சி அமைப்புகளைக் கூறலாம். நகராட்சி, மாநகராட்சி, ஜில்லா போர்டு ஆகியவற்றைக் கூறலாம்.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசு ஊழியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் மனோபாவத்துடனே விளங்கினர் ; இப்போதும் விளங்குகின்றனர். இன்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊழல் நிறைந்து இருப்பதையும் ரயில்வேயும் தபால் துறையும் ஊழல் மிகக் குறைவாக இருப்பதையும் காணலாம். நம் நாடு வளர வேண்டும் என்றால் ஊழல் மனோநிலை அரசு ஊழியர்களிடம் இல்லாமல ஆக வேண்டும். பொதுமக்கள் அரசு குறித்தும் நிர்வாகம் குறித்தும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வே ஜனநாயகத்தின் மிகப் பெருஞ்செல்வம்.
Saturday, 15 August 2026
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம்
அனுப்புநர்
வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு
கிராம சபைக் கூட்டம்
இன்று ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என் காலையிலிருந்தே எண்ணம் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கிராம அளவில் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிய கிராம சபைக் கூட்டம் உதவும் என எண்ணினேன்.
தமிழக அரசியல் என்பது ஒரு மூடுமந்திரம். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எந்த விஷயமும் முடிந்து விடும்.
காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றேன். கூட்டம் 12 மணி அளவில் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று அது முடிவடைந்த பின் வந்ததால் சற்று தாமதம்.
தமிழக மக்கள் எந்நேரமும் அரசியலையும் அரசையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படைக் கடமையைச் செய்வதில் சுணக்கம் காட்டுபவர்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1000 - 5000 வரை இருக்கும். கிராம சபைக் கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வருகை தர வேண்டும். நான் கலந்து கொண்ட கூட்டத்தில் இழுத்துப் பிடித்து 50 பேர் வந்திருந்தனர். 01.04.20226 லிருந்து 31.07.2026 வரை அந்த கிராமத்துக்கு ஆன செலவுகளை ஒரு போஸ்டராக சபை அரங்கில் வைத்திருந்தார்கள். அந்த விபரங்களைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். அங்கிருந்த அரசு ஊழியர் நான் விபரங்களைக் குறித்துக் கொள்வதைப் பார்த்து என்னிடம் நான் யார் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டார். 120 நாளில் ரூ.4,80,000 செலவு செய்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ.4000 செலவாகிறது.
முதற் பார்வையில் தெரு விளக்கு பழுது நீக்கம் ரூ.25,000 எனக் குறிப்பிட்டிருந்தனர். 120 நாளில் ரூ.25,000 செலவு எனில் ஒரு நாளைக்கு ரூ.200 செலவாகிறது என்று பொருள். அந்த ஊரில் தினம் ஒரு மின்விளக்கு மாற்றினால் தான் அந்த செலவு ஆகும். தினம் ஒரு விளக்கு பழுதடைய சாத்தியம் இல்லை.
தெருவிளக்கு பொருள் வாங்கியது என ரூ.8000 செலவு. முன்னர் குறிப்பிட்டது தெருவிளக்கு பழுது நீக்க. இப்போது பொருள் வாங்கியது என்பதற்காக. ரூ.8000க்கு வாங்கிய பொருளை ரூ.25,000 செலவு செய்து பொருத்தினார்களா என்னும் கேள்வி எழுகிறது.
கை பம்ப் வாங்க என ரூ.6000 செலவு. கை பம்ப் பழுது நீக்க என ரூ.8000 செலவு.
தெரு விளக்கு, கை பம்ப் செலவை தணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்கலாம் என உள்ளேன்.
அரசு மக்களை இணைக்க வேண்டும். மக்கள் இணைந்தால் மகத்தான மாற்றங்கள் நடக்கும்.
தமிழகம் இப்போது தான் ஒரு ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தி மாற்றங்களுக்குத் தயாராகி உள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் அதிக மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.
சட்டமும் அரசும்
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் பல அரசியல் கட்சிகளில் செயல்பாட்டாளராக இருந்தவர். திராவிடக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளில் செயல்பட்டிருக்கிறார். எந்த விஷயமும் அதனுள் அரசியலைக் கொண்டுள்ளது எனத் தீவிரமாக நம்புபவர். அவர் எந்த விஷயத்தையும் அரசியலின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்வார்.
தனது பூர்வீக சொத்து ஒன்றை விற்பனை செய்யும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டுள்ளார். சிறு அளவில் அதில் அவருக்கு சில ஆலோசனைகள் வழங்கினேன். பூர்வீக சொத்து 100 ஆண்டுகளாக அவர்கள் குடும்பத்திடம் இருக்கிறது. இப்போது விற்பனை செய்யும் நிலையில் ‘’கேப்பிடல் கெயின்’’ எனப்படும் மூலதன ஆதாய வரி அதற்கு வரும். அந்த மூலதன ஆதாய வரியை மொத்த வரித்தொகைக்கு வேறு ஒரு சொத்தை வாங்கினாலோ அல்லது மொத்த வரித்தொகைக்கு அவருடைய சொத்து ஏதேனும் ஒன்றில் கட்டுமானம் மேற்கொண்டாலோ அல்லது மூலதன ஆதாய வரி பத்திரங்கள் வாங்கினோலோ அதனைத் தவிர்க்க முடியும். வருமான வரியில் மிகச் சாதாரணமான விஷயம் இது.
இப்போது அவர் மனதை இந்த விஷயம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது ; பின் தொடர்கிறது . மூலதன ஆதாய வரி இப்போது அவரை முழுவதுமாக வியாபித்திருக்கிறது. எனினும் அதனை அதன் கணக்கீடுகளை அவர் முழுமையாகப் புரிந்து கொண்டாரா என்பது இப்போதும் ஐயமே.
ஓர் எளிய சட்டத்தினைப் புரிந்து கொள்ளவே இவ்வளவு சிரமப்படுகிறாரே இவர் தன் வாழ்நாள் முழுக்க அரசியலை எப்படி புரிந்து கொண்டிருப்பார் என்று எண்ணினேன்.
Friday, 14 August 2026
நாம்
ஜூலை 28, 29 ஆகிய இரு தினங்களில் வங்கியில் நிகழ்ந்த சேவைக்குறைபாட்டை வங்கியின் சி இ ஓ வுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எனது கடிதம் எந்த தனிநபருக்கும் எதிரானது அல்ல ; சினத்தின் வெளிப்பாடும் அல்ல. ஒரு வித்தியாசமான நிகழ்வை வங்கி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தினேன் . அவ்வளவுதான். நாம் ரயில் நிலையம் செல்கிறோம் ; அங்கே சந்தேகத்துக்கு இடமாக ஒரு பை கேட்பாரற்று கிடக்கிறது எனில் ஆர் பி எஃப் காவலர்களிடம் தெரிவிப்பதைப் போன்ற நிகழ்வுதான் நான் செய்ததும்.
எங்களுக்கு சேவைக்குறைபாடு நிகழ்ந்த தினத்தில் காலை 11.30க்கு வங்கியில் உரக்க குரலெழுப்பியிருக்க முடியும். அதனை நான் ஒரு வழிமுறையாகவோ அல்லது தீர்வாகவோ எப்போதும் எண்ணுவதில்லை. காலை 11.30 மணிக்கே ‘’ஸோனல் அலுவலகம்’’ ஃபோன் செய்ய முடியும். அந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 100 கிளைகள் இருக்கும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை அந்த 100 கிளைகளிலிருந்தும் ஏதேனும் ஒரு ஃபோன் வந்தால் அந்த அலுவலகம் ஃபோன் அட்டண்ட் செய்வதை மட்டுமே ஒரு வேலையாகச் செய்ய முடியும். நான் தாமதமாக வேலை முடிந்த பின் நடந்ததை விவரித்து கடிதம் அனுப்பினேன். அது ஒரு நாகரிக வழிமுறை.
எனக்கு வங்கி மீதோ வங்கி ஊழியர்கள் மீதோ வங்கியின் சம்பந்தப்பட்ட ஊழியர் மீதோ அல்லது பிற ஊழியர்கள் மீதோ வருத்தம் கிடையாது. நிகழ்ந்தது ஒரு பிழை. அதனை சுட்டிக் காட்டினேன். அவ்வளவுதான். கடிதம் அனுப்பிய பின் வங்கிக்குச் சிலமுறை செல்ல நேர்ந்த போது வங்கி ஊழியர்களின் பார்வையில் சிறு துணுக்குறலை உணர்ந்தேன். அது ஏன் என யோசித்தேன். அவர்கள் வங்கி என்பது ஊழியர்களான அவர்களுடையது என எண்ணுகிறார்கள். அது முழு உண்மை அல்ல ; பகுதி உண்மை. வங்கி என்பது வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்னும் இரு குழாமுக்கும் சொந்தமானது. நான் புரிந்து கொண்டிருப்பது முழு உண்மை.
Tuesday, 11 August 2026
விசாரணை
எனது நண்பர் ஒருவர் அவரது சொத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற விரும்பினார். அவர் சொத்து பத்திரத்தின் நகலை எடுத்துக் கொண்டு அவருக்கு விபரம் கேட்டு சொல்வதற்காக வங்கிக்குச் சென்றேன். மேலாளரின் அறை கண்ணாடி அறை. மேலாளர் இருக்கைக்கு எதிரே கோட் அணிந்திருந்த ஒருவர் அமர்ந்திருப்பதை நான் அறைக்கு வெளியிலிருந்து பார்த்தேன். அவர் வங்கியின் ‘’ஸோனல் மேனேஜர்’’ ஆக இருக்கக் கூடும் என யூகித்தேன். வங்கிக்கு வெளியே வந்து வெளியூர் பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் நிற்கிறதா என்று பார்த்தேன். ‘’இந்திய அரசு’’ என எழுதிய வாகனம் ஒன்று வங்கியிலிருந்து சற்று தள்ளி புங்கன் மர நிழல் ஒன்றில் நின்று கொண்டிருந்தது. ஓட்டுநர் நல்ல தூக்கத்தில் இருந்தார். வாகனம் வந்து நெடுநேரம் ஆகிறது என எண்ணினேன். பின்னர் வங்கிக்கு உள்ளே வந்தேன். மேலாளர் அறையில் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஊழியர்கள் சற்று பதட்டமாக இருந்ததாகத் தோன்றியது. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு இருப்பதா அல்லது வெளியேறி விடுவதா என யோசித்தேன். மேலாளரிடன் ஆவண நகலைக் காண்பித்து அபிப்ராயம் கேட்டு விட்டு புறப்படலாம் என எண்ணினேன். மேலாளர் மேஜையில் கணிணித் திரை புதிய திசையில் இருந்தது. தலைமை அலுவலகத்திலிருந்து எவரேனும் இணையம் மூலம் வந்திருக்க முடியும் என யூகித்தேன்.
‘’டாகுமெண்டல் எவிடெண்ஸ்’’ பலமாக உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்கள் விசாரணை நடத்தினால் தாமதத்துக்கு காரணமான ஊழியர் மேல் நடவடிக்கை இருக்கும். எனது கடிதம் சி இ ஓ வை அடைந்து இன்றுடன் ஒன்பது நாள் ஆகிறது. உச்ச அலுவலகத்திலிருந்து கீழ் அலுவலகம் வரை குறைந்தபட்சம் 200 ஊழியர்களையாவது இந்த சம்பவம் சென்றடைந்திருக்கும். கடிதத்தின் நேரடிப் பலன் அதுதான். பெற்றுக் கொண்ட விண்ணப்பத்துக்கு ஒரு ஒப்புகைச்சீட்டு அளித்திருந்தால் இந்த பிரச்சனையே உருவாகியிருக்காது என்றே எல்லாரும் சொல்வார்கள். இருந்தாலும் வங்கிச் சூழல் ஒரு வாடிக்கையாளர் புகார் ஒரு ஊழியரின் ‘’பணிப் பதிவு’’ ஆவணங்களில் எதிர்மறைப் பதிவை உருவாக்குவதை வங்கிச் சூழலின் அகங்காரம் சீண்டப்பட்டு அனுமதிக்காது; அந்த ஊழியரைத் தப்ப வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். எனது அறிதலின் ஒரு பகுதியாக என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக் கொள்கிறேன்.
‘’ஸோனல் மேனேஜர்’’ சிஸ்கோ ஃபோன் மூலம் திரையில் பார்த்துப் பேசி அறிமுகம் உள்ளவர். 10 நிமிடம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த வகையில் அவரிடம் இன்றும் ஒரு உரையாடலை மேற்கொள்வோமா என எண்ணினேன். விசாரணை ரொம்ப நேரம் பலரிடம் நடந்து கொண்டிருந்ததை கண்ணாடி அறைக்கு வெளியிலிருந்து பார்த்தேன். வேறு ஒரு வாசல் வழியே ‘’ஸோனல் மேனேஜர்’’ வெளியேறிச் சென்றார். மேலாளர் வெளியே வந்தார். அவரிடம் நண்பரின் சொத்து ஆவணத்தைக் காட்டி விட்டு சில ஜயங்களைக் கேட்டு விட்டு புறப்பட்டேன். அப்போது ஜூலை 28,29 ஆகிய தினங்களின் சி சி டி வி காட்சிகளை வங்கி ஊழியர் ஒருவர் சோதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
Sunday, 9 August 2026
எழுதும் ஒருவர்
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அகம் ஆழம் மிக்கது என அவரை சந்தித்த முதல் தினத்திலிருந்து எண்ணியிருக்கிறேன். அவர் உலகியல் பணிகளையும் உலகியல் திட்டமிடல்களையும் சிறப்பாகச் செய்யும் ஒருவர். அவரது உத்யோகம் தொடர்பான பணிகள் அவரது நாளின் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொள்ளும். அவருடன் சில முறை பயணிக்கவும் வாய்ப்பு அமைந்தது. அவரது காரில் ஒருமுறை நீண்ட பயணம் செய்தோம். அவரது டூ வீலரில் நீண்ட பயணம் ஒன்று மேற்கொண்டோம். சிலமுறை ஒன்றாக ரயிலில் பயணித்திருக்கிறோம். வெவ்வேறு ஊர்களில் சந்தித்திருக்கிறோம். ஓரிரு வாரங்கள் முன்னால் அவர் தனது முதல் சிறுகதையை எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனை நான் எவ்விதம் வாசிக்கிறேன் என்பதை அவருக்குத் தெரிவித்தேன். இன்று ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தார். இந்தக் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார் : ‘’அதாவது , ஒரு வாசகர் ஒருவரிடம் நான் எழுதுமாறும் படைப்புச் செயல்பாட்டுக்குள் இருக்குமாறும் சொல்லிக் கொண்டிருந்த போது நான் உடனிருந்தேன் . அச்சொற்களை எனக்கான சொற்களாகவும் எடுத்துக் கொண்டேன்’’ என்றார். நண்பர் தொடர்ந்து எழுத வேண்டும் என விழைகிறேன்.
அகம் நிறைந்த ரயில்கள்
எல்லா ரயில்களுமே என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவைதான். பாசஞ்சர் ரயில்கள் மீதும் பிரியமும் ஈடுபாடும் உண்டு. ரயில் அளவுக்கே ரயில் நிலையங்களும் என்னை ஈர்ப்பவை. ரயில் நிலையங்கள் வாழ்வின் மீது கூடுதல் நம்பிக்கையை உருவாக்குகின்றன. காவிரி வடிநில பிராந்தியத்தின் சிறு ரயில் நிலையங்கள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஆலமரமாவது அல்லது அரசமரமாவது இருக்கும். அனேகமாக நம் நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நிழல் தரும் மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஊரிலிருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில்கள் விழுப்புரம் பாசஞ்சர், திருச்சிராப்பள்ளி பாசஞ்சர். முன்னர் காரைக்குடி பாசஞ்சர் இருந்தது. இப்போது அது திருவாரூரிலிருந்து புறப்படுகிறது. எல்லா ரயில்களின் பெயர்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா ரயில்களும் எனக்குப் பிடிக்கும். கொரமண்டல் எக்ஸ்பிரஸ், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ஆகிய பெயர்கள் பிடித்த பெயர்கள். ரயில் ஒன்றைப் பிடித்து ஒரு ஊருக்குச் செல்வதில் இன்றும் தீராத உவகை இருக்கிறது ; அந்த உவகையே என் வாழ்க்கை இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை எனக்குக் காட்டுகிறது.
Saturday, 8 August 2026
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
Wednesday, 5 August 2026
உடன்பிறந்தானிடம் பிறந்த வீட்டுப் பெருமை
Tuesday, 4 August 2026
முடிவுகளும் தீர்வுகளும்
Monday, 3 August 2026
பேச்சுவார்த்தை
வெள்ளிக்கிழமை மாலை 6.40க்கு இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தை விரைவுத் தபாலில் அனுப்பி அதன் நகலை மத்திய நிதியமைச்சருக்கும் விரைவுத் தபாலில் அனுப்பினேன். தபால் இன்று மாலை 4 மணி அளவில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்குக் கிடைத்திருக்கிறது. இரவு 8 மணி அளவில் இந்தியன் வங்கி கிளையிலிருந்து மேலாளர் பேசினார். அவர் எனக்கு மிக நல்ல பரிச்சயம் உள்ளவர். அவர் அழைத்த மரியாதைக்கு உடனே வருகிறேன் என்று அங்கு சென்றேன். என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி வாசிக்க மிகவும் வாய்ப்பு குறைவு என நான் நினைத்தேன். ஆனால் எனது கடிதம் தலைமை நிர்வாக அதிகாரியின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது என்பதை கிளை மேலாளரின் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன். கடிதம் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதப்பட்டு அதன் நகல் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டு இருப்பதால் மத்திய நிதியமைச்சர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு வந்த நகல் கடிதத்தை இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது. அந்தக் கடிதம் சில நாட்கள் கழித்தாவது தலைமை நிர்வாக அதிகாரிக்கு வரும். தலைமை நிர்வாக அதிகாரியின் காரியதரிசிகள் அந்தக் கடிதத்தை அதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் இருக்க முடியாது; அந்நிலையை யூகித்து அதன் மூலாதாரமான என் கடிதத்தை தலைமை நிர்வாக அதிகாரி கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள் என எண்ணினேன். இந்திய அதிகாரவர்க்கம் நூதனமானது ; நூதனமான மனோபாவங்கள் கொண்டது. ஒரு சாமானியன் அவற்றை முழுதும் புரிந்து கொள்ள முடியாது. மேலாளர் இந்தியன் வங்கியின் பல உயரதிகாரிகள் தனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார். மேலாளரை சந்திக்கச் செல்லும் போதே பேச்சுவார்த்தையின் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது என்னும் முடிவோடு தான் சென்றேன். அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைக் கேட்போம் என முடிவு செய்து கொண்டேன். மேலாளர் ஏதேதோ விஷயங்கள் சொன்னார். அவர் பல விஷயங்களைப் பேசி விஷயங்களை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர் ; சிறப்பாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிபவர். சம்பவம் நடந்த இரு நாட்களும் அவர் ஊரில் இல்லை ; இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. எனினும் இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். வங்கியின் இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ சி பி கி ராம் ஸ் ல் புகாரைப் பதிவு செய்திருந்தாலோ மிக எளிதில் இந்த விஷயத்தை ‘’கேஸ் குளோஸ்’’ செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கேஸ் என்பது ஒரு எண் ; ஒரு எண்ணிக்கை. இந்த மாதம் 100 புகார்கள் பதிவாயின ; இந்த மாதமே 100 புகார்களுக்கும் தீர்வு கண்டு கேஸ் குளோஸ் செய்தோம் என கணக்கு காட்டுவார்கள். எனவே இம்முறை விரைவுத் தபாலில் அனுப்பி வைத்தேன். இப்போது இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்துக்கும் எனக்கும் இடையில் இந்த விஷயம் இருக்கிறது. கிளை அலுவலகத்துடனோ அல்லது பிராந்திய அலுவலகத்துடனோ நான் பேச வேண்டும் என அவசியம் இல்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால் தலைமை அலுவலகம் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதங்களை முழுக்க அளிக்க வேண்டியிருக்கும். இந்தியன் வங்கி அளிக்கும் தீர்வு எனக்குத் திருப்தியில்லை என்றால் நான் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல உள்ளேன். அப்போது சம்பந்தப்பட்ட வங்கியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றிருந்தால் தான் அதனை எடுப்பார்கள். அப்போது தலைமை அலுவலகம் பதில் சொல்லும் நிலைக்கு வரும். இந்த விஷயத்தை சரியாக அணுகி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரிசர்வ் வங்கிக்கு செல்வேன் என்பதையும் அந்தக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
என் கடிதத்தின் உணர்வையோ அதில் இருக்கும் நியாயத்தையோ வங்கியைச் சேர்ந்தவர்கள் காண மாட்டார்கள். ஒரு சாமானிய வாடிக்கையாளன் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தி விட்டானே என்பது தான் வங்கியைச் சேர்ந்த அனைவரின் எண்ணமாக இருக்கும். அவர்கள் எளிதில் ஒரு அணியாக மாறுவார்கள். அவர்களுக்கு வாடிக்கையாளர்களை பல ஆண்டுகள் எதிர்கொண்டதன் அனுபவம் இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் எவ்விதம் எதிர்கொள்ளப்பட்டன என்னும் நினைவுகள் இருக்கும். அவை அவர்களுக்குள் எளிதில் பரிமாறிக் கொள்ளப்படும். வங்கி நிர்வாகம் கூட்டாகவே எந்த விஷயத்தையும் எதிர்கொள்ளும். இன்னும் சொல்லப் போனால் பிழை இழைத்த தவறிழைத்த ஊழியர்களுக்கு ஆதரவாகவே நிர்வாகம் நடக்கும் ; அதன் மூலம் மொத்த ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற முயலும்.
இந்த விஷயத்தில் நிறைய ‘’டாகுமெண்டல் எவிடென்ஸ்’’ இருக்கின்றன. வாடிக்கையாளர் வங்கிக்குச் சென்ற நேரம் , ‘’ஸ்விஃப்ட்’’ விண்ணப்பம் அளித்த நேரம் ஆகியவை சி சி டி வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர் விண்ணப்பத்தை அளித்த நேரம் காலை 11.30 மணி. அந்த விண்ணப்பம் அன்றைய ‘’ஃபாரெக்ஸ்’’ நேரத்தைக் கடந்து மாலை 3.30க்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விண்ணப்பம் 4 மணி நேரம் தாமதமாக உள்ளீடு செய்யப்பட்டது என்பது பெரும் பிழை. அந்த விண்ணப்பம் அடுத்த நாள் மாலை 6.45க்கு மட்டுமே பிராசஸ் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே டிஜிட்டலாக பதிவாகியிருக்கும் பதிவுகள். தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் விபரம் கோரி இவற்றைப் பெற முடியும். வங்கி தன் ஊழியரைக் காக்க முயன்றால் கூட ரிசர்வ் வங்கி ஆம்டஸ்மன் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
நேரம் இரவு 9.30 ஆகியிருந்தது. புறப்படுகிறேன் எனக் கூறி புறப்பட்டேன். வாய்மொழியாக அளிக்கப்படும் எந்த வாக்குறுதியையும் ஏற்கக் கூடாது என இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் எனக் கேட்க உள்ளேன். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இது ஒரு பயிற்சி ; அனுபவம் என எடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினேன்.
ஒரு புதிய நண்பர்
நேற்று ஊருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒருவரைச் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவருடன் 15 நிமிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் கிராமத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளை முன்னெடுக்க வாய்ப்பு இருக்குமா என பரிசீலித்தோம். அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன் என்று கூறினேன்.
அன்புள்ள நண்பருக்கு,
நமது பண்பாடு மண்ணிலும் கல்லிலும் மரத்திலும் இயற்கையிலும் உறைந்திருக்கும் இறைமையை மானுடரை உணரச் சொல்கிறது. இயற்கையை உணர்பவனும் அறிபவனும் ஆராதிப்பவனுமே இறைமையின் முற்றத்துக்குச் சென்றடைகிறான் என்பது நம் பண்பாட்டின் புரிதல்.
‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தை ஒரு தேசம் என்றே காண்கிறது. குறியீட்டுரீதியில் ஒரு கிராமத்துக்குச் செய்யும் பணி என்பது தேசம் முழுமைக்கும் செய்யும் பணியே ஆகும்.
நமது கிராமத்தில் நம்மால் பல பணிகளை முன்னெடுக்க முடியும். எளிய அடிப்படையான பணிகள். எனினும் பெருவலிமை கொண்ட அடித்தளமாய் அமைய வாய்ப்புள்ள பணிகள்.
ஒரு கிராமத்தில் தோராயமாக 500 குடும்பங்கள் இருக்கின்றன எனக் கொள்வோம். அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கோ சிறுவர்களுக்கோ சிறுமிகளுக்கோ தங்கள் தோட்டத்தில் பலா, நெல்லி, நாவல், பப்பாளி, விருட்சி, நந்தியாவட்டை, வில்வம் ஆகிய மரக்கன்றுகளை வளர்க்க ஆவல் இருக்கக் கூடும். அதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்திருக்கும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தின் 500 வீடுகளையும் நேரடியாக அணுகி அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகள் எத்தனை எவை எவை என்னும் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக ஒரு உதாரணத்துக்கு 20 மரக்கன்றுகள் வேண்டும் எனக் கூறினால் அந்த கிராமத்தில் சட்டென 10,000 மரங்கள் நடப்பட ஒரு வாய்ப்பு உருவாகிறது அல்லவா? அந்த வாய்ப்பு மிகவும் மங்களகரமானது என்பது ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணம். அந்த மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்த்துக் கொள்ள நாம் வழங்குவோம்.
மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் மரங்களை நடுவதில் மரங்களுக்கு நீர் வார்ப்பதில் நாம் மக்களுக்கு அடிப்படையான சில விஷயங்களைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. 10,000 மரங்களுமே சிறப்பாக வளர அந்த வழிகாட்டல்கள் அவசியம். இருப்பினும் 500 அல்லது 1000 ஆயிரம் பேருக்கு அந்த வழிகாட்டலை அளிப்பது என்பது அதிக நாட்களையும் அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும் பணி. இருப்பினும் அந்தத் தொடர்பு கொள்ளல் நம் நோக்கங்கங்களை முழுமை செய்யும் என்பதுடன் கிராமத்தின் மொத்த மக்களையும் இணைக்கும் செயலாகவும் இருக்கும்.
முதல் கட்டமாக கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரக்கன்றுகள் கொடுத்து அவை ஓராண்டில் கணிசமான அளவில் வளர்ச்சி பெற்றன என்றால் அந்தக் கிராமத்தின் மக்களைக் கொண்டே ஊரின் பொது இடங்களில் நிழல் மரங்களையும் பூமரங்களையும் பெரிய அளவில் நட முடியும். நாம் மரங்களை மட்டும் நடவில்லை ; மக்கள் மனங்களில் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் நடுகிறோம்.
‘’ஒன்று கூடி சிந்தியுங்கள் ; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள் ; உங்கள் மனம் ஒன்றாகட்டும்’’ என்கிறது நம் மறை.
‘’காவிரி போற்றுதும்’’ இவ்விதமான பணிகளை சில கிராமங்களில் வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறது. எனவே ‘’காவிரி போற்றுதும்’’ இப்பணிகளை எவ்விதம் வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பதில் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக எதனை முன்னே செய்வது எதனை அடுத்து செய்வது எனத் திட்டமிடுவதிலும் தேர்ச்சி கொண்டிருக்கிறது.
தங்கள் கிராமத்தில் தங்களுடன் இணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது. நாம் சேர்ந்து சிந்திப்போம் ; சேர்ந்து விவாதிப்போம். நம் இலக்கை சேர்ந்து அடைவோம். ‘’காவிரி போற்றுதும்’’ புரிதல்களில் முதன்மையானது ‘’ஒற்றுமையே வலிமை’’ என்பதேயாகும்.
அன்புடன்,
அமைப்பாளர்
‘’காவிரி போற்றுதும்’’
விசாரணையும் முடிவுகளும்
Sunday, 2 August 2026
அம்மை அப்பன்
இன்று காலை சிதம்பரத்தில் கடலூர் சீனு அவர்களைச் சந்தித்தேன். கால்பந்து ஆடும் சிறுவனின் ‘’விசா’’ நடைமுறைகளுக்கு அவனது குடும்பத்தில் யாராவது ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரு பெரும் தொகை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காகவாவது ‘’டெபாசிட்’’ ஆகியிருக்க வேண்டும். அது ஒரு வழக்கமான நடைமுறை. எனது நண்பர்கள் அனைவரிடமும் உதவி கேட்டிருக்கிறேன். உதவி கேட்பது அடிப்படை விஷயம். அது நிகழ்ந்தது என்றால் தான் உதவி கிடைப்பது அடுத்து நடக்கும். எத்தனை பேரிடம் உதவி கேட்க முடியுமோ அத்தனை பேரிடமும் கேட்டிருக்கிறேன். நான்கு பேர் உதவி செய்ய முன்வந்தால் கூட எளிதாக இருக்கும். 10 பேர் உதவ முன்வந்தால் மிக எளிதாக இருக்கும். கடலூர் சீனு கடந்த 3 வாரங்களாக நீண்ட தூரப் பயணங்களில் இருந்தார். அவ்வப்போது குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினேன். கடலூர் சீனுவைப் போல் உணர்வு நுட்பம் கொண்ட இன்னொருவரைப் பார்க்க முடியாது. நாங்கள் சந்தித்துக் கொண்டால் எங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. பெரும்பாலும் பேசிக் கொள்ளவும் மாட்டோம். எங்களைச் சுற்றி இருக்கும் சூழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒரே விதமான சிந்தனை இருக்கும். மாறுபாடு இருக்கும் விஷயங்கள் மிகச் சில. மாறுபடும் விஷயத்தில் அவர் பார்வை என்ன கோணம் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
கால்பந்து ஆடும் சிறுவன் கல்லூரி சேர்க்கை விஷயத்தில் சீனு பெருமளவு உதவக் கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பேசியிருக்கிறார். மிக நல்ல விஷயம் அது. மிக நல்ல உதவியும் கூட. அடுத்த 3 மாதங்களுக்கு பணம் வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும். கடலூர் சீனு ஒருவரே ஏற்பாடு செய்வதை விட மேலும் சிலரும் இந்த உதவியில் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். கூட்டுப் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் பெரிய பாரம் இருக்காது. நாங்கள் உள்ளது உள்ளபடி நிலைமையை பேசிக் கொண்டோம். நாங்கள் சந்தித்து பேசிக் கொண்ட இடம் சிதம்பரம் நடராஜர் ஆலயம். நாங்கள் சிதம்பரத்தில் எப்போது சந்தித்தாலும் நடராஜர் ஆலயத்தில் தான் சந்திப்போம். கோவிந்தராஜப் பெருமாளும் அங்கே இருப்பார் என்பது மேலும் சிறப்பு. எங்கள் இருவருக்குமே சிதம்பரம் கோவிலில் இருப்பது பிடிக்கும். பல மாவட்டக்காரர்களும் பல மாநிலக்காரர்களும் சிதம்பரம் ஆலயத்துக்கு வருவார்கள் என்பதால் சிதம்பரம் எப்போதுமே சிறப்பு மிக்க ஓர் ஆலயம். பெருமாளிடமும் நடராஜரிடமும் சிறுவனுக்காக வேண்டிக் கொண்டோம். நடராஜர் ஆலயத்தில் 3 மணி நேரம் இருந்தோம். நேரம் 12.30 ஆகி விட்டதால் தில்லை காளியம்மன் கோவில் செல்ல முடியவில்லை. அவர் கடலூரிக்கும் நான் ஊருக்கும் புறப்பட்டோம். ஊர் வந்து ‘’வீடடைந்தேன்’’ என குறுஞ்செய்தி அனுப்பினேன். சீனு ‘’குடிகாட்டைக் கடக்கிறேன்’’ எனப் பதில் அனுப்பினார். இன்று மாலை கதிராமங்கலம் வனதுர்க்கையை வணங்கினேன்.
கடலூர் சீனு உடனிருப்பது கால்பந்து ஆடும் சிறுவனின் விஷயத்தில் எனக்கு பெரும் துணையாக உள்ளது.
உத்தேசம் (நகைச்சுவை)
நேற்று மகாதானத் தெரு தென்கோடிக்கும் வடகோடிக்கும் இடையே இருக்கும் தூரம் 700 மீட்டர் எனக் கூறியிருந்தேன். இன்று காலை நடைப்பயிற்சிக்கு செல்லும் போது இரு சக்கர வாகனத்தின் ஸ்பீடாமீட்டர் அளவுபடி அளந்து பார்த்தேன். மகாதானத் தெருவில் நீளம் 700 மீட்டர் தான்.
Saturday, 1 August 2026
மனச்செயல்
மனம் என்பதை மனச்செயல் என்று கூறுவார்கள்.
இன்று காலை நடைப்பயிற்சியின் போது அதனை உணர்ந்தேன். இன்று உணர்ந்ததை மிக முக்கியமானதாக நினைக்கிறேன். ரியல் எஸ்டேட் தொடர்பான பல விஷயங்கள் மனதில் நிறைந்திருக்கின்றன. அவை பெருகிக் கொண்டேயிருக்கின்றன. லௌகிகத்தில் அது இயல்பானது. என்றாலும் இன்று அதிகாலையிலேயே அவ்விதம் இருந்தது புதிதாக இருந்தது. இன்று காலை 3 மணி 30 நிமிடம் நடந்தேன். மனம் தன் பல்கிப் பெருகும் செயலிலிருந்து அமைதி கொண்டது 2 மணி 30 நிமிடத்துக்குப் பிறகு தான். கடைசி ஒரு மணி நேரம் மனதில் எழும் எண்ணங்கள் மிக மெதுவானதாக ஆகி விட்டன. அடர்த்தி குறைவான விஷயங்களே மனதில் உதித்தன. உடல் சோர்வுற்றதைப் போல மனமும் சோர்வு கொண்டது. மிக வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மனம் சோர்வு கொண்டு மெதுவாக ஆனதை விரும்பினேன். அதன் பின் நாள் முழுவதும் மனம் அமைதியாக இருந்தது.
எனக்கு எப்போதுமே மனதை கவனிக்கும் வழக்கம் உண்டு.
ஒரு பேருந்தில் பயணிக்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும் ; ரயிலில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு விதமாக இருக்கும் ; பிரியமான ஒருவருடன் பேசும் போது ஒரு விதமாக இருக்கும்; நம்மை அசௌகர்யமாக உணரும் ஒருவருடன் பேசும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு இரைச்சல் கேட்கும் போது மனம் ஒரு விதமாக இருக்கும். ஒரு குழந்தையிடம் பேசும் போது ஒரு விதமாக இருக்கும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் சொல்கிறபடி மனம் கேட்கிறதா? மனம் சொல்கிறபடி நான் கேட்கிறேனா? எனக்குள் இருக்கும் மனம் ஒன்று தானா? எனக்குள் பல மனங்கள் இருக்கின்றனவா?
இவ்விதமான கேள்விகள் எழுந்தன. இவ்விதம் கேள்விகள் எழுந்தது நல்ல விஷயம் என்று தான் எண்ணினேன். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் எழுந்தால் அதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது அல்லவா?
இன்று காலை மனதில் பிரவாகித்த பல எண்ணங்களில் ஒரு பகுதியைத் தான் இன்று காலை எழுதினேன்.
மனம் பற்றி மேலும் எழுதுகிறேன்.