இன்று காலை அலாரம் வைத்து எழுந்தேன். 4 மணி நேரம் நடக்க அலாரம் வைத்துக் கொண்டேன். 3 மணி 30 நிமிடம் நடந்தேன். அதிகாலை நேரம். நடக்கத் தொடங்கிய போது மனம் பெருகிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது. மனதுக்குள்ளேயே நிறைய ரியல் எஸ்டேட் டீலிங் பேசினேன். நிறைய அட்வான்ஸ் வாங்கினேன். இப்போது கையிருப்பில் இருக்கும் இடங்கள் தொடர்பானவர்களிடம் சொல்ல வேண்டிய சொற்கள் என மனதில் எழுந்தன. அதில் ஒன்று அல்ஜீப்ராவுடன் தொடர்புடையது. ஒரு மீடியேட்டரிடம் சொல்ல வேண்டிய வார்த்தை இது என என் மனத்தில் உருவானது; ‘’நான் ‘’ஒய்’’ என்னும் விலையைச் சொல்கிறேன். இடத்தை வாங்குபவர் ‘’எக்ஸ்’’ என்னும் விலைக்கு கேட்கிறார். நீங்கள் இடைத்தரகர்; ‘’ஒய்’’ என்ற எண்ணுக்கும் ‘’எக்ஸ்’’ என்ற எண்ணுக்கும் இடையில் இருக்கும் ஒரு எண்ணில் தான் பேரம் முடியும். அந்த எண் ‘’இஸட்’’. இடத்தை வாங்குபவரிடம் பேசி ’’இஸட்’’ என்ன என்பதை என்னிடம் சொல்லுங்கள் ; சொல்லக் கூட வேண்டாம் ; அலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். அந்த ‘’இஸட்’’ என்னும் எண்ணை மட்டும் அனுப்புங்கள் போதும். எனக்கு சம்மதம் என்றால் ‘’யெஸ்’’ என ரிப்ளை அனுப்புகிறேன் ; சம்மதம் இல்லை என்றால் ‘’நோ’’ என ரிப்ளை அனுப்புகிறேன். அவ்வளவுதானே விஷயம்’’ எனக் கூறுகிறேன். இடைத்தரகர்கள் சந்திப்புகளை உருவாக்கவே விரும்புவார்கள் ; சந்திப்பின் மூலம் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. இப்போது தொடர்பில் இருக்கும் இடைத்தரகரிடம் இவ்வாறு அல்ஜீபரா எல்லாம் சொன்னால் அவர் எவ்வளவு புரிந்து கொள்வார் என யோசித்தேன். விலை ரொம்பவும் குறைத்துக் கேட்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் நான் வாங்குபவரை சந்திப்பதைத் தவிர்த்து விடுவேன். இப்போதெல்லாம் அலைபேசியை எப்போதும் கையில் வைத்திருக்கிறேன். அலைபேசி வந்தால் எடுத்துப் பேசுகிறேன். எனக்கு ஒரு வழக்கம் உண்டு. நான் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன் என்றால் அலைபேசி ஒலித்தால் எடுக்க மாட்டேன். எதற்காக வாகனத்தில் செல்கிறேனோ அந்த வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய பின் ‘’ ஜஸ்ட் நௌ சீன் யுவர் மிஸ்டு கால். ஷல் ஐ கால் நௌ?’’ என குறுஞ்செய்தி அனுப்புவேன். எல்லா மிஸ்டு காலுக்கும் இவ்விதம் மெசேஜ் அனுப்புவேன். பேசி விடுவேன். என் மீது பொதுவாக ஒரு புகார் உண்டு. நான் அலைபேசியை எடுப்பதில்லை என. ஆனால் எல்லா அழைப்புகளுக்கும் அப்போதில்லை என்றாலும் அதன் பின்னாவது பேசி விடுவேன். எப்போதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் பலர் என்னுடைய ‘’மிஸ்டு கால்’’ பார்த்து விட்டு மெசேஜ் கொடுக்காமலோ பேசாமலோ இருப்பார்கள். என் ஃபோனை எடுக்காமல் இருப்பார்கள். ஃபோன் லைன் மாற்றி வைப்பார்கள். இத்தகையவர்களை ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என நினைத்துக் கொள்வேன்.
ஏன் காலங்கார்த்தாலேயே ரியல் எஸ்டேட் எண்ணங்கள் என வருந்தினேன். எண்ணங்களை உருவாக்குவதும் மனம் தான். உருவாகும் எண்ணங்களுக்கு வருந்துவதும் மனம் தான் என எண்ணிக் கொண்டு நடந்தேன்.
நடக்கும் போது நடக்க மட்டும் செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
அப்போது ஒரு ஜென் கதை நினைவுக்கு வந்தது. ஜென் குரு ஒரு சீடனைப் பார்த்து ‘’ஆறு அடி நீளம் ; ஆறு அடி அகலம் ; ஆறு அடி ஆழம்’’ உள்ள குழியைத் தோண்டு என்பார். சீடன் இரண்டு நாள் கடுமையாக வேலை செய்து குரு சொன்ன விதமான குழியைத் தோண்டு விடுவான். குருவிடம் அதனைக் காட்டுவான். ‘’இந்தக் குழியை மூடி விடு’’ என அப்போது சொல்வார் குரு. இதுதான் ஜென் கதை. இது என் மனதில் வந்தது. நான் படித்த கதை என்ன என்றால் குரு ஒரு பெரிய குழியைத் தோண்டு எனக் கூறுவார். சீடன் பெரிய குழியை இரண்டு நாள் வேலை செய்து தோண்டி வைப்பான். இரண்டு நாட்கள் கழித்து அதனைப் பார்க்கும் குரு ‘’குழியை மூடி விடு’’ என்பார். இதுதான் நான் படித்த கதை. இந்த ‘’6 அடி நீளம் 6 அடி அகலம் 6 அடி ஆழம்’’ என்பது என்னுடைய சிவில் என்ஜினியரிங் ஃபீல்டில் ஃபவுண்டேஷனுக்காக வெட்டப்படும் குழிகளின் அளவுகளில் ஒன்று. அந்தக் குழியை வெட்ட எவ்வளவு கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதில் எவ்வளவு மண் வெளியே வரும் என்பதும் எனக்குத் தெரியும். இந்தக் கதையில் இன்னொரு அம்சம் இருக்கிறது. குழி வெட்டும் போது உதாரணத்துக்கு 1 அடி நீளம் 1 அடி அகலம் 1 அடி ஆழம் கொண்ட குழியை வெட்டினால் சாமானியர்கள் நீளம் Xஅகலம் Xஆழம் மூன்றையும் பெருக்கி 1 கன அடி மண் வெளியே வரும் என எண்ணுவார்கள். அந்த பதில் தவறு. 1.5 கன அடி மண் வெளியே வரும். நிலப்பரப்பு இறுக்கமாக இருக்கும். குழி வெட்டப்படும் போது மண் துகள்களின் இறுக்கம் தளர்ந்து விடுவதால் கன அளவு அதிகமாகி விடும். வெட்டிய குழியை திரும்ப மூடுவது நாம் எண்ணிய அளவு இலகுவாக இருக்காது. கூடுதல் மெனக்கெடு தேவைப்படும். உண்மைக்கும் நமது எண்ணங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறித்த கதை என்றும் அதனைக் கொள்ளலாம். ஒருவர் ஒரு குழியைத் தோண்ட அறிந்திருக்கிறார் என்றால் அவர் குழி தோண்டுதல் குறித்து பகுதி அறிதலும் பகுதிப் புரிதலும் கொண்டிருக்கிறார் என அர்த்தம். குழி தோண்டி அதனை மூடவும் அறிந்திருக்கிறார் என்றால் அவர் புரிதல் முழுமையானது என்று அர்த்தம். முழுமைப் புரிதல் குறித்த கதை என்றும் அதனைக் கொள்ளலாம். புத்த பிக்குகளின் தோற்றம் மனதில் எழுந்தது. அது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நடக்கும் போது எண்ணங்கள் கிளரப்பட்டு ஏதாவது யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது.
இரு இரு சக்கர வாகனங்களில் 6 பேர் கூச்சல் போட்டுக் கொண்டு சென்றார்கள்.
வாட்ச்மேன் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இங்கே வாட்ச்மேன்களின் வேலை இரவு 11.30 அளவில் படுத்துத் தூங்கி காலை 5 மணிக்கு எழுந்து விடுவது தான். கடை வாசலில் ஒரு ஆள் இருக்கிறார் என்னும் அளவிலான பாதுகாப்பு போதுமானது என கடைக்காரர்கள் எண்ணுவார்கள் என எண்ணிக் கொண்டேன்.
நான் நடந்து கொண்டிருக்கும் தெரு மகாதானத் தெரு. நீளமான தெரு. 700 மீட்டர் நீளம் இருக்கும். தெரு தெற்கு வடக்கானது. வட கோடியிலிருந்து தென் கோடி வரை சென்று விட்டு பின் தென்கோடியிலிருந்து வடகோடி வரை நடக்கிறேன். இது எனக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். நீண்ட தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது புதிய பிராந்தியத்துக்குச் சென்றால் தெருநாய்கள் ஒரு குழுவாக மாறி பின் தொடர்கின்றன. அதனால் மகாதானத் தெருவில் வட கோடிக்கும் தென் கோடிக்கும் நடக்கிறேன்.
நாயின் உடலில் இயற்கையாக ‘’ரேபிஸ்’’ வைரஸ் இருக்காது. பூனையின் உடலில்தான் ‘’ரேபிஸ்’’ வைரஸ் இருக்கும். ‘’ரேபிஸ்’’ உள்ள பூனையை நாய் கடித்திருந்தால் அதன் உடலிலும் ‘’ரேபிஸ்’’ வைரஸ் வந்து விடும்.
ஒரு எலி செத்து கிடந்தது
அந்தத் தெருவில் 10 நாய்கள் இருக்கின்றன. வட கோடியில் 7 நாய்கள். தென் கோடியில் 3 நாய்கள். அந்தத் தெரு இப்போது கடைத்தெருவாக ஆகி விட்ட படியால் அவை மிக அதிக மனிதப் புழக்கத்தில் உள்ளவை. ‘’யார் இவன் வித்தியாசமாக காலை 2 மணிக்கு வாக்கிங் போகிறான்?’’ எனப் பார்த்து விட்டு தங்கள் வழமைகளுக்குத் திரும்பி விட்டன.
இரண்டு நாய்கள் ஒரு பூனையைத் துறத்திக் கொண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி வளாகத்துக்குள் ஓடின. பூனை தப்பி விட்டது. பூனை சிறிய உடல் கொண்டது. சட்டென மதில் சுவர் மேல் ஏறி விடும். அவ்வளவு லகுவாக நாய்களால் ஏறிட முடியாது. சற்று நிதானித்துதான் ஏறிட முடியும்.
தெருவை பார்க்கும் பார்வைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை கவனித்துப் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது என எண்ணினேன்.
நடந்து கொண்டே இருந்தேன். நான் மெதுவாக நடப்பேன் ஆனால் சீராக நடப்பேன்.
வேப்பம்பழங்கள் உதிர்ந்து கிடந்தன.
வேப்பம்பழத்தின் வாசனையை மனம் உணர்ந்தது. அகம் வாசனைகளால் ஆனது எனத் தோன்றியது.
என் ஆர் காங்கிரஸ் க்கு ஒருவர் பெரிய பேனர் வைத்திருந்தார். ‘’இன்றைய புதுச்சேரி முதல்வரே! நாளைய தமிழக முதல்வரே! பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’ என வாழ்த்து சொன்னது அந்த பேனர். திராவிடக் கட்சிகளின் ‘’மோனோபோலி’’ உடைக்கப்பட்டு விட்டது என்பதால் இனி தமிழக அரசியல் ‘’பாலிபோலி’’ எனத் தோன்றியது. நல்ல விஷயம் தான்.
புதிதாகப் பெரிதாக ஒரு கருவுறுதல் மருத்துவமனை பேனர் இருந்தது. ஒருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்.
ரொம்ப நேரம் ஆனது போல் இருந்தது. அலைபேசி 6 மணிக்கு அலாரம் வைக்கப்பட்டு சுவிட்ச் ஆஃபில் இருந்தது. அலைபேசி அடிக்கும் வரை நடப்போம் என எண்ணினேன். நடந்து நடந்து உடல் சோர்ந்து விட்டது. உடல் சோர்ந்ததும் எண்ணங்கள் பிரவாகிப்பது மிக மிகக் குறைந்து விட்டது. மனம் உடல் வலியை மட்டுமே உணர்த்திக் கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் மங்கள இசை ஒலித்தது.
ஒரு வீட்டில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டது.
சில பெண்கள் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடத் துவங்கினார்கள்.
மகாதானத் தெருவிலிருந்து 2 நிமிடத்தில் டூ வீலரில் வீட்டுக்கு வந்து விட்டேன். நேரம் காலை 5.45.
மனம் அமைதியாய் இருப்பதாக எண்ணினேன்.
மனம் என்றால் என்ன என்னும் கேள்வி எழுந்தது.