Saturday, 4 April 2026

திட்டமிடல்கள் -2 (ஹாஸ்யம்)

காந்திய வழிமுறைகளில் முதன்மையானது ஒரு விஷயத்தை ‘’ஆறப் போடுங்கள்’’ என்பது. ஒரு விஷயம் தீவிரமாக இருக்கும் போது அதன் எல்லா முனைகளும் கொதிநிலையில் இருக்கும். அது அந்த விஷயத்தை செயலாக்குவதற்கு தடையாக உருவாகக் கூடும். ஊர் மாற்றம் குறித்து அமைப்பாளர் மிக அளந்தே தன் அடிகளை முன்னெடுக்கிறார். 

முதல் படியாக ஸ்ரீரங்கத்தில் ஒரு வாடகை வீட்டை பார்க்க இருக்கிறார். மிகக் குறைவான வாடகை மற்றும் மிகக் குறைவான அட்வான்ஸ் கொண்ட ஓட்டு வீடு. அங்கே எந்த பண்டங்களும் கொண்டு செல்லப் போவதில்லை. நான்கு செட் ஆடைகள் மட்டும் வைத்திருப்பது. 

ஒரு வாரத்தில் 3 நாட்கள் ஊரில் இருந்தால் 3 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் இருப்பது. இவ்விதமே 6 மாதத்திலிருந்து 1 வருடம் தொடர்வது. 

தேவையெனில் காலை முதல் பாசஞ்சர் வண்டியைப் பிடித்து திருச்சிராப்பள்ளியிலிருந்து ஊருக்கு வந்து விட்டு லௌகிகப் பணிகளை முடித்து விட்டு மாலை ரயிலில் திருச்சிராப்பள்ளி சென்று விடுவது. ரயிலில் ஒரு சீசன் டிக்கெட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். 

ஓராண்டில் இங்கும் அங்கும் என இருந்து விட்டு அதன் பின் அடுத்த கட்டம் நோக்கிச் செல்லலாம்.