இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் இருக்கக்கூடும். அப்போது பள்ளி மாணவனாக இருந்தேன். குடும்ப நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம். வீட்டுக்கு வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு சென்றார்கள். அவர்கள் சென்ற பின் திருமண அழைப்பிதழை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மணமகனின் ஊர் மாம்பழப்பட்டு என இருந்தது. இந்த ஊர் எனக்கு மிகவும் கேள்விப்பட்ட ஊராக இருந்தது. கேள்விப்பட்ட ஊர் என்பதை விட வாசிப்பின் மூலம் அறிந்த ஊர் என்று சொல்லலாம்.
அதாவது, பகவான் ஸ்ரீரமண மகரிஷி சிறுவனாயிருந்த போது அவரது ஊர் திருச்சுழியிலிருந்து திருவண்ணாமலை வருகிறார். வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பி விடுகிறார் ; பள்ளிக்கு செலுத்த தன்னிடம் அளிக்கப்பட்ட கட்டணத்தை எடுத்துக் கொண்டு செல்வதையும் அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். ரயிலில் பயணிக்கும் அவர் விழுப்புரம் ரயில் சந்திப்பை வந்தடைகிறார். அங்கிருந்து திருவண்ணாமலைக்குச் செல்ல பயணச்சீட்டு கேட்கிறார். ஆனால் அவர் கையில் இருந்த தொகையைக் கொண்டு திருவண்ணாமலைக்கு பயணச்சீட்டு அளிக்க முடியாது ; ஆதலால் விழுப்புரத்துக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் மாம்பழப்பட்டு என்னும் ரயில் நிலையத்துக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்க முடியும் எனக் கூறி அதனை அளிக்கின்றனர். ஸ்ரீரமணர் ரயிலேறி மாம்பழப்பட்டு வந்து சேர்கிறார். அங்கே அவரைக் காணும் ஒருவர் அவரிடம் அவரைக் குறித்து விசாரித்து அறிந்து திருவண்ணாமலைக்கு பயணச்சீட்டு எடுத்துக் கொடுக்கிறார். ரமணர் அண்ணாமலையை அடைகிறார். ரமணர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் குறித்து நூல்களில் வாசித்திருந்ததால் எனக்கு மாம்பழப்பட்டு என்னும் ஊர்ப்பெயர் மிகவும் பரிச்சயமானதாக இருந்தது.
சில வாரங்கள் கடந்தன ; நான் குடும்ப நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது நான் மாம்பழப்பட்டு ஊர் குறித்து வாசிப்பின் மூலம் அறிந்தது குறித்து கூறினேன். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. ‘’நாங்கள் 1000 கல்யாணப் பத்திரிக்கை கொடுத்திருக்கிறோம். அதில் நீயும் இன்னொருவரும் மட்டும் தான் மாம்பழப்பட்டு ஊர் குறித்து இந்த விபரங்களைக் கூறியிருப்பது. வேறு யாரும் அந்த ஊரைக் கேள்விப்பட்டிருக்கவில்லை.’’என்று கூறினர்.