Saturday, 4 April 2026

பள்ளியும் கல்வியும்

பன்னெடுங்காலமாக இந்தியர்கள் அவர்களுடைய விவசாய வாழ்க்கைக்குத் தேவையான விவசாயக் கல்வியறிவைக் கொண்டிருந்தனர். அடிப்படை மொழிக் கல்வியும் கணிதக் கல்வியும் இந்தியர்கள் பெற்றிருந்தனர்.  விஞ்ஞானத்தையும் தொழிற்கல்வியையும் தொழிலை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சமூகங்கள் கற்றன. நுண்கலைகளை ஆர்வமுடையவர்கள் ஆசிரியர்களிடம் சென்று கற்றனர். 

கிராமத்தில் இருக்கும் சாமானியர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆசிரியர் இருந்து கல்வி கற்பித்திருக்க முடியும். அந்த ஆசிரியரின் உலகியல் தேவைகளை கிராமம் பூர்த்தி செய்திருக்கக்கூடும். விஞ்ஞானமும் தொழிலும் தொழில் பட்டறைகளில் போதிக்கப்பட்டிருக்கக்கூடும். 

நம் நாட்டில் பெரும் கல்வி நிலையங்கள் இருந்திருக்கின்றன ; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவை யாரால் நடத்தப் பட்டிருக்கும்? நாட்டின் துறவிகளே அவற்றில் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். துறவிகள் வாழும் இடமே பள்ளி. 

பிரிட்டிஷ் ஆட்சி தங்கள் தேவைக்காக எழுத்தர்களை உருவாக்கும் ‘’மெக்காலே கல்வி’’ முறையைக் கொண்டு வந்தது. இன்றும் அந்த வடிவமே ஏதோ ஒரு வகையில் நீடிக்கிறது. 

நம் நாட்டில் ஏதோ ஒரு வகையில் பள்ளிகள் தொல்கல்வி முறைக்கு இடம் தர வேண்டும். இது குறித்த சிந்தனை எழ வேண்டிய நேரம் இது.