Thursday, 21 May 2026

பொறி வைத்தது யார்?

அடியேன் செய்தித்தாள் மூலமாக அரசியலை அறியும் சாமானியன் மட்டுமே. தற்போது எல்லா சாமானியர்களைப் போலவும் இணையம் மூலமும் அரசியல் நிகழ்வுகளை அறிகிறேன்.

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து முடிவுகள் வெளியானது. தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி 107 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஆளுங்கட்சியாய் இருந்த கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. அந்தக் கட்சிக் கூட்டணியிடம் 73 உறுப்பினர்கள் இருந்தனர். அதிலிருந்த ஒரு கட்சி தனிப் பெரும் கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்தது. முன்னர் ஆளுங்கட்சியாய் இருந்து பின்னர் எதிர்க்கட்சியாகியிருக்கும் கட்சியின் கூட்டணிக்கு 68 உறுப்பினர்கள் இருந்தனர். மூன்றாவது இடம் வந்த கூட்டணிக்கு 53 உறுப்பினர்கள். 

கூட்டணிகள் ஒருவிதமாக 112, 68, 53 என்றானது. 

ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சி தனது கூட்டணிக் கட்சிகளில் சில மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படாமல் தடுக்கப்பட தமிழக சட்டப்பேரவையின் தனிப்பெரும்கட்சியை ஆதரித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் தங்கள் தயவில் தான் புதிய ஆட்சி நடைபெறுகிறது என்றும் தனிப்பெரும் கட்சி ஆட்சியமைத்ததற்குக் காரணமே தங்கள் கட்சிதான் என்றும் கூறினர் ; கூறுகின்றனர். அவர்களின் ராஜதந்திரப் பொறியில் தனிப்பெரும் கட்சி சிக்கியிருக்கிறது என அவர்கள் நினைக்கின்றனர். 

எனக்கு இன்னொரு கோணம் தென்படுகிறது. 

சட்டப்பேரவையின் தனிப்பெரும் கட்சியாகத் தன்னை முன்னிறுத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு கோரவில்லை. புதிதாக 5 உறுப்பினர்கள் இருக்கும் கட்சியின் ஆதரவைப் பெற்று 112 என ஆதரவைக் காட்டி உரிமை கோரினர். அதன் பின் தான், ஆளும்கட்சியாயிருந்து எதிர்க்கட்சியான கட்சியின் கூட்டணிக் கட்சிகள் தனிப்பெரும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல சுற்று பேச்சுக்கள் நடந்தன. சிறு கட்சிகளின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 9. அந்த கட்சிகளில் ஒன்று முதல்வர் பதவி கோரியிருந்தால் கூட அது நிறைவேற வாய்ப்பிருந்தது. குறைந்தபட்சம் அந்த 9 உறுப்பினர்களும் அமைச்சர் பதவி கோரியிருக்க முடியும். தமிழகத்தில் அமைச்சரவையின் உச்சபட்ச எண்ணிக்கை 31. மொத்த மந்திரி பதவிகள் 31ல் கூட்டணிக் கட்சிகளுக்கு 9 என்பது மிகவும் கூடுதலான எண்ணிக்கை அல்ல. ஆனால் அவர்கள் எதையும் கோராமல் ஆதரவு தர முன்வந்தனர். மூன்றாவது இடம் வந்திருக்கும் கட்சியுடன் உடன்பாடு செய்து கொண்டு விடுவார்களோ அல்லது அந்தக் கட்சியை உடைத்து விடுவார்களோ என அவர்கள் எண்ணியிருக்கலாம். 

நாட்கள் நகர்ந்தன. நான்கு கட்சிகளின் 9 உறுப்பினர்களும் எந்த கோரிக்கையையும் பொதுவில் வெளிப்படுத்தாமல் ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். மூன்றாவதாக வந்த கட்சி பிளவுபட்டிருக்கிறது. அதில் 25 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறெனில் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 209 என்றாகும். அதில் 105 உறுப்பினர்கள் இருக்கும் கட்சிக்கு பெரும்பான்மையே கிடைத்து விடும். அந்த 25 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து அதில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மையே கிடைத்து விடும். எந்த கட்சிக்கும் கூட்டணி மந்திரி சபையில் இடம் தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. 

இப்போது எழும் கேள்வி : பொறி வைத்தது யார்? யார் பொறியில் யார் சிக்கியிருக்கிறார்கள் ?