Thursday, 21 May 2026

கூட்டணி மந்திரிசபை

நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கூட்டணி மந்திரிசபை அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது ; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் தமிழகத்தில் இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்து அது பல முனைகள் கொண்டதாக மாறத் துவங்கியிருப்பதன் துவக்கமே இந்த கூட்டணி மந்திரிசபை எனக் காண்கிறேன்.  

தேசியக் கட்சியான காங்கிரஸ் 60 ஆண்டுகளில் முதல்முறையாக மந்திரிசபையில் இடம் பெற்றிருக்கிறது. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் இனி முக்கியமான இடம் வகிக்கப் போகின்றன என்பதற்கான துவக்க நிகழ்வாக இதனைக் கொள்ள முடியும். பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய்வை தமிழகத்தில் இருக்கும் பிற தேசியக் கட்சிகள். 

இந்த மந்திரிசபையில் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் மந்திரிகளாகியிருக்கின்றனர். எந்த அரசியல் கட்சிக்கும் உழைப்பை நல்குபவர்கள் பட்டியல் சாதியினரே. தமிழக அரசியல் சூழலில் வாக்களிப்பதை முக்கிய ஜனநாயகக் கடமையாக எண்ணி மிக அதிக அளவில் வாக்களிப்பவர்களும் பட்டியல் சாதியினரே.தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியமைப்பதற்கும் அடிப்படையாக அமைவது பட்டியல் சாதியினரின் வாக்குகளே. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மந்திரிசபையில் இடம் தரப்பட்டுள்ளது. இம்முறை பட்டியல் சாதியினருக்கு தமிழக மந்திரிசபையில் 20 சதவீதம் இடம் தரப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மகிழ்வளிக்கும் விஷயம் இது. தமிழகத்தின் நிதி அமைச்சராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்றிருப்பது மிகச் சிறப்பானது. வேதியர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மந்திரியாகியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் இல்லாத நிலை இது. கடந்த 60 ஆண்டுகளில் வேதியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும்  மாநில அமைச்சராக இருந்திருக்கிறார். இந்த மந்திரிசபையில் இருவர் மந்திரிகளாகியிருக்கின்றனர்.

புதிய மந்திரிசபைக்கு வாழ்த்துக்கள்.