Sunday, 24 May 2026

கலியபெருமாள் திருவடியில்

 

பல வருடங்களாக அரியலூர் கலியபெருமாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தேன். எங்கள் பிராந்தியத்தில் பலர் அந்தக் கோயிலுக்கு அவ்வப்போது செல்லும் வழக்கம் கொண்டவர்கள். எங்கள் பகுதியில் பலருக்கு கலியபெருமாள் என்னும் பெயர் இருக்கும். அரியலூரில் இருக்கும் பெருமாளின் பெயரையே நாமமாக இட்டிருப்பார்கள். வைணவம் குறித்த பேச்சு எழும் போதெல்லாம் கலியபெருமாள் கோவில் குறித்து யாரேனும் சொல்வது வழக்கம். அரியலூர் செல்ல வேண்டும் என்றால் மணல்மேடு காட்டுமன்னார்குடி மீன்சுருட்டி ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்ல வேண்டும். இருப்பதில் சுருக்கமான மார்க்கம் அதுவே. ஜெயங்கொண்டத்திலிருந்து விளாங்குடி கைகாட்டி சென்று அங்கிருந்து அரியலூர் செல்ல வேண்டும். ஊரிலிருந்து காவிரிக்கரையோரமாக திருவையாறு வந்து அங்கிருந்தும் அரியலூர் செல்லலாம். கும்பகோணத்திலிருந்தும் ஒரு மார்க்கம் உண்டு. பல மார்க்கங்கள் இருப்பினும் பயணம் நிகழாமல் இருந்தது. இன்று காலை எழுந்ததுமே கலியபெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்னும் எண்ணம் உருவானது. கன்னட எழுத்தாளர் சிவபிரகாஷ் எழுதிய குரு : பழம்பெரும் ஞானத்துக்கான பத்து வாயில்கள் நூல் குறித்து காலையில் எழுதிக் கொண்டிருந்தேன். எழுதி முடிக்க 9.30 மணி ஆயிற்று. காலை உணவருந்தி விட்டு புறப்படுகையில் நேரம் காலை 10 மணி. கோடை அதன் உக்கிரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பருவம் என்றாலும் புறப்பாட்டுக்கு மிக உகந்த காலம் இதுவே. சில நாட்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் சற்று உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தற்போது மகள் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் கூறியிருந்தார். அவர் மிகவும் இனிய மனிதர். அமைதியும் பொறுமையும் தன் இயல்பாகக் கொண்டவர். எப்போதும் தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்பவர். மிகக் குறைவாகப் பேசுபவர். எந்த சூழ்நிலையையும் மிக நுணுக்கமாகப் புரிந்து கொள்பவர். அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது. அவரது மகள் வீடு ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கழுவன் தொண்டி என்னும் கிராமம். அரியலூர் பயண மார்க்கத்திலிருந்து சிறிய தூரத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அரியலூர் செல்லும் வழியில் முதலில் அங்கு சென்றேன். எங்கள் பிராந்தியத்தில் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தால் அவருக்கு ‘’ஹார்லிக்ஸ்’’ பாட்டில் வழங்குவது வழக்கம். வழக்கம் என்று சொல்கிறேனே தவிர என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் பின்பற்றி நான் பார்த்ததில்லை. 1990களில் ஹார்லிக்ஸ் ஒரு முக்கியமான பானம். எங்கள் பகுதி ஹோட்டல்களில் தேனீர் , காஃபியுடன் ஹார்லிக்ஸ்-ம் இருக்கும். பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கு வென்னீரில் ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுப்பார்கள். வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களைச் சந்திக்கும் போது ‘’ஹார்லிக்ஸ்’’ பாட்டில் கொடுப்பார்கள். யாரோ ஒருவர் உடல்நலம் குன்றியிருந்த யாரையோ சந்திக்கும் போது ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுத்திருக்கிறார்கள். அப்போது நான் உடன் இருந்திருக்கிறேன். எனக்கு அது பிடித்திருந்தது. எனக்கு ஹார்லிக்ஸ் சுவை பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாடிக்கையாக வாங்கும் வழக்கம் இல்லை. கொல்லாபுரத்தில் ஹார்லிக்ஸ் வாங்கிக் கொண்டேன் ; நண்பருக்கு அளிக்க. ஒரு பாட்டில் கொண்டு வந்தார்கள். நண்பரின் வயது 67. அவருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே ‘’ஹார்லிக்ஸ் லைட்’’ தருமாறு சொன்னேன். தற்போது விலை ரூ.300. 1990களில் ரூ.86க்கு ஹார்லிக்ஸ் வாங்கியது என் நினைவுக்கு வந்தது. இவ்விதமான ஒப்பிடல்கள் மத்திய வயதுக்கு வந்து விட்டோம் என்பதற்கான அறிகுறிகள். நண்பரின் வீட்டைக் கண்டறிந்து போய் விட்டேன். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுமாறும் மருத்துவ செலவுகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்குமாறும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன் எனக் கூறினேன். நண்பர் வீட்டில் மோர் தந்தார்கள். அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்திருந்தார்கள். புதுமையான ‘’லஸ்ஸி’’ என நினைத்துக் கொண்டேன். மதிய உணவருந்தி விட்டு செல்லுமாறு வற்புறுத்தினார்கள். அப்போது நேரம் 12.30 . நான் அரியலூர் செல்ல மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவர்களிடம் இன்னொரு நாள் உணவருந்த வருகிறேன் எனக் கூறி விட்டு புறப்பட்டேன். 

நடு நாடு எனக் கூறப்படும் அப்பிராந்தியத்தின் நிலக்காட்சிகள் என்னை எப்போதும் பெரிய அளவில் ஈர்க்கும். ஒவ்வொரு முறை அந்நிலத்தில் பயணிக்கையில் இங்கே 10 ஏக்கர் அல்லது 20 ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு வந்து இந்தப் பிராந்தியத்தில் வாழலாம் எனத் தோன்றும். காவிரிப் பிராந்தியம் முழுக்கவே நெல் வயல்கள். நடுநாட்டில் பலவிதமான பயிர்கள் பயிரிடுவார்கள். மரப்பயிர் அதிகம் இருக்கும் என்பதால் நிலக்காட்சி இனிமையாக இருக்கும். 

மதியம் 1.50 அளவில் கலியபெருமாள் கோயில் சென்று சேர்ந்தேன். அக்கோயில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் கல்லங்குறிச்சி. அரியலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. கோயிலைச் சுற்றி கணிசமான ஆலமரங்களும் அரசமரங்களும் இருந்தன. ஒரு ஆலமரத்தின் விழுது மண்ணைத் தொட்டு அது வேர் போல ஆகி அதிலிருந்து மேலும் விரிவாகியிருந்தது. விழுதாகவும் வேராகவும் இருந்த அதன் மீது படுத்துக் கொண்டேன். என் முழு உடலுக்கும் இடம் கொடுக்கும் அளவு அந்த விழுது நீண்டிருந்தது. எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுக்க தினம் ஒரு ஊரில் தினம் இதைப் போல ஒரு மரத்தின் வேரில் உறங்கிச் செல்லும் வாழ்க்கை அமைந்தால் அதை விட வேறு ஆசி உண்டா என நினைத்தேன். சில மணி நேரம் முன்பு தான் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்ததையும் இப்போது இவ்விதம் தொன்றுவதையும் எண்ணிப் பார்த்தேன். இரண்டும் ஒன்று தான். இயற்கையிடம் என்னை ஒப்படைத்து விடுதலே இரண்டும். ஒரு மரத்தின் அடியில் படுத்துறங்கும் போது அந்த மரத்துடன் அந்த மண்ணுடன் அந்த மரம் தொட்டுக் கொண்டிருக்கும் விண்ணுடன் எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு உண்டாகிவிடுகிறது. அது மகத்தானது. மாலை 3 மணிக்கு அங்கே மூன்று மணி ஒலித்தது. அது கோயில் திறக்கப்படுவதன் ஒலி. ஆலயத்தினுள் சென்றேன். சிறிய ஆலயம் எனினும் மிகவும் சக்தி மிக்கது என்பதை உணர முடிந்தது. 

250 ஆண்டுகளுக்கு முன் சிதளங்குடி என்னும் ஊரில் கோபால படையாச்சி என்பவர் தம் குடிகளுடனும் குடும்பத்துடனும் வாழ்ந்து வந்தார். பெருவிவசாயியான கோபால படையாச்சி மிக அதிக எண்ணிக்கையில் பசுமாடுகளைப் பராமரித்து வந்தார். ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய அவரது மாடுகளில் சினையுற்றிருந்த ஒரு பசுமாட்டைக் காணவில்லை. பல திசைகளிலும் தேடிப் பார்த்தும் அந்த மாடு கிடைக்கவில்லை. துயரத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் கனவில் ஒரு பெரியவர் தோன்றி அவரது மாடு இருக்கும் இடத்தைக் காட்டினார். காலை விடிந்ததும் தன் குடும்பத்தினரையும் குடிபடைகளையும் அழைத்துக் கொண்டு கனவில் வந்த பெரியவர் சொன்ன இடத்துக்குச் சென்ற போது மாடு அங்கே இருந்திருக்கிறது. மாட்டுக்கு அருகே ஒரு கம்பம் இருந்திருக்கிறது. அந்தக் கம்பத்தை வணங்கி விட்டு மாட்டை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அன்று இரவு உறக்கத்தில் கோபால படையாச்சி கனவில் மீண்டும் வந்த பெரியவர் தான் யார் என்பதை உன்னால் உணர முடியவில்லையா எனக் கேட்டு தானே பெருமாள் என்பதைக் கூறியிருக்கிறார். மறுநாள் அங்கே சென்று அந்த கம்பத்தைக் கல்லங்குறிச்சிக்கு கொண்டு வந்து பெருமாள் எழுந்தருளியிருக்கும் கம்பத்தை ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினார் கோபால படையாச்சி. 250 ஆண்டுகளாக கோபால படையாச்சியின் சந்ததிகள் அந்த ஆலய அறங்காவலர்களாக இருந்து பராமரிக்கின்றனர். மூலவர் கம்பமாக நின்றிருக்க உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் அருள் பாலிக்கிறார். 

திருப்பாவையைக் கல்வெட்டாக 1950ம் ஆண்டு எழிலுற வடித்திருந்தார்கள். திருப்பாவை மொத்த 30 பாடல்களையும் 240 வரிகளாக பாராயணம் செய்தால் அந்த 240 வரிகளும் ஒரு மந்திரம் ஆகும் என எண்ணினேன். தமிழில் அதைப் போல பல மந்திரங்களைக் கண்டடைய முடியும். மந்திரம் என்பது ஒலியே. அது மொழியின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பது. 

அங்கேயே இருக்க வேண்டும் என விரும்பினேன் ; ஆயினும் இன்னும் 100 கி.மீ க்கு மேல் பயணித்தால் மட்டுமே வீடடைய முடியும். நேரம் அப்போது மாலை 4.30. நேராக கோயிலுக்கு வந்து மரத்தடியில் படுத்து உறங்கி விட்டதால் மதிய உணவு அருந்தவில்லை. மாலை 5 மணி அளவில் அரியலூர் சென்று ஒரு உணவ்கத்தில் உணவருந்தி விட்டு ஊருக்குப் புறப்பட்டேன். 

கோபால படையாச்சி வாழ்ந்த ஊரின் பெயர் கோபாலன் குடிகாடு. அது மருவி ‘’கோப்பிலன்குடிகாடு’’ என்றாகி விட்டது. அந்த ஊருக்கு கோபாலன் குடிகாடு எனப் பெயரிடுவது கோபால படையாச்சிக்கு சமூகம் செய்யும் மரியாதையாக இருக்கும் என எண்ணினேன். மாநில வருவாய்த்துறை அமைச்சருக்கு இந்த விஷயம் குறித்து ஒரு மனு அனுப்ப வேண்டும் என எண்ணினேன். 

நாள் முழுக்க பெருமாள் கோயிலில் இருந்ததால் நாங்கூர் திவ்யதேசங்கள் அனைத்தையும் இணைக்கும் விதமாக ‘’நாங்கூர் பரிக்ரமா’’ ஒன்றை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கோரி ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு ஒரு மனு அனுப்ப வேண்டும் என எண்ணினேன். 

அந்திப் பொழுதில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அரியலூர் அருகே நெடுஞ்சாலை அருகே இருந்த வீடொன்றின் முன் வாகனத்தை நிறுத்தினேன். குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டேன். வாசலில் அந்த வீடு பக்கத்து வீடு என பல குழந்தைகள் இருந்தன. அனைத்துக் குழந்தைகளும் 7 வயதிலிருந்து 9 வயது வரை ஆனவை. ‘’உங்களுக்கெல்லாம் எப்போ ஸ்கூல் ரீ ஓபனிங்’’ எனக் கேட்டேன். அனைத்தும் கோரஸாக ஜூன் 1 என்றன. அரசாங்கம் வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் 5ம் தேதி தான் ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நியூஸ்ல சொன்னாங்க; நீங்க கேக்கலயா? என்றேன். குழந்தைகள் உற்சாகமாகி மகிழ்ச்சிக் கூச்சலிட்டன. அதற்குள் ஒரு சிறுவன் ஜூன் 5ம் தேதி என்ன நாள் எனப் பார்த்து அன்று வெள்ளிக்கிழமை என்றான். ஸ்கூல் ஆரம்பிச்ச அடுத்த ரெண்டு நாள் லீவு என குழந்தைகள் ஆர்ப்பரித்தன. ஒரு சிறுவன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். முழுதும் குடித்து விட்டு மேலும் வேண்டும் எனக் கேட்டேன். கொண்டு வந்தான். அதையும் முழுக்கக் குடித்தேன். தாகம் அவ்வளவு இருந்தது. 

பயணிக்கத் தொடங்கினேன். அப்போது என் மனதில் ஒரு காட்சி பளிச்சிட்டது. அதாவது கிழக்கே சிதம்பரம் மேற்கே திருச்சிராப்பள்ளி. சிதம்பரத்துக்கு நேர் வடக்கே சென்னை. திருச்சிக்கு நேர் வடக்கே வேலூர். இந்த நான்கு ஊர்களுக்கும் நடுவே இருக்கும் பெரும் பரப்பை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்னும் எண்ணம் சோழர்களுக்கு இருந்திருக்கிறது. அதன் துவக்கம் ராஜேந்திர சோழன். பழைய தென்னாற்காடு திருச்சி செங்கல்பட்டு வடார்க்காடு மாவட்டங்களாகும் அவை. இந்த பரப்பில் விவசாயத்தை குளங்கள் மூலமும் ஏரிகள் மூலம் செழிக்கச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு ராஜேந்திர சோழனுக்கு இருந்திருக்கிறது. இவை அனைத்துமே மனித உழைப்பால் உருவாக வேண்டியது. மனித உழைப்பை மிக அதிக அளவில் ஒருங்கிணைத்து அடைய வேண்டியது. நதிக்கரைகளையே மனிதர்கள் தன்னியல்பில் விரும்புகின்றனர். சாமானிய குடிகளால் கடும் உழைப்பை அளித்து நிர்மாணிக்கும் விஷயங்கள் மீது பேரார்வம் கொள்ள முடியவில்லை. இந்த மனப்பதிவை உறுதிப்படுத்தும் சிந்தனைகளே மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருந்தன. முக்கியமான ஒன்றை என் அகம் தொட்டுணர்ந்திருக்கிறது என எண்ணிக் கொண்டேன். பயணம் எனக்களிக்கும் கொடைகளில் இதுவும் ஒன்று.