Sunday, 24 May 2026

விடுதலையின் பற்பல வாசல்கள்


நூல் : குரு: பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் ஆசிரியர் : ஹெச்.எஸ். சிவபிரகாஷ் தமிழில் : ஆனந்த் ஸ்ரீநிவாசன் பக்கம் : 112 விலை : ரூ.130 பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம், 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், சென்னை -77.     

பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாக அகவிடுதலை அடைந்த ஆயிரக்கணக்கான யோகிகளின் ஞானிகளின் நாடு. இன்றும் இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருவனும் ஒரு பகலில் நடந்து செல்லக்கூடிய பொழுதில் அல்லது ஒரு பகலின் பாதி பொழுதில் நடந்து செல்லக்கூடிய தொலைவில் யோகிகளும் ஞானிகளும் வாழ்ந்த மண் இருந்து கொண்டு இருக்கிறது. இன்றும் இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே யாவற்றையும் துறந்து சென்று விட்டு விடுதலையாகி நிற்கும் நிலை மீது ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. இந்த மண்ணில் அறிவர் ஆவது குறித்து எண்ணாதவர் குறைவு. 

புடவி கோடானுகோடி உயிர்களால் ஆனது. அந்த உயிர்கள் பிரும்மம் அவற்றுக்களித்திருக்கும் எல்லைக்குள் வாழ்கின்றன. மனிதப் பிறவிக்கு  எல்லைகளை அளித்த பிரும்மம் அந்த எல்லைகளை மீறிச் சென்று பிரும்மமாகவே ஆகும் சாத்தியத்தையும் அளித்தது. கோடானுகோடி மனிதர்களில் ஒருவரே ஒரு நூற்றாண்டுக்கு ஒருவரே மனிதன் பிரும்மமாக ஆகும் சாத்தியத்தை அடைகின்றனர். அவர்களின் வாழ்வும் இருப்பும் மனிதர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டுகிறது. கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், ரமணர், நாராயண குரு... என அந்நிரை பெரியது. அந்நிரையில் அந்த பெரும் ஆசிரியர்களின் மாணாக்கர்களாய் அமைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரியது. 

மானுடன் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதல் ஆன்ம உணர்வு மானுட குலத்துடன் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது அல்லது சிந்தித்த முதல் மனிதன் அடைந்த பேருணர்வாக ஆன்ம உணர்வு இருந்திருக்கக் கூடும். மானுடன் சமூகமாக உருவாகி அதன் நற்பயன்களை அடையத் தொடங்கினான். மானுடன் எவராயினும் அவர்தம் வாழ்நாள் ஒருநாள் முடிவுக்கு வருவதைக் கண்டான். இறைவர்கள் இறங்கி அருளும் பூசகனும் ஒருநாள் மரணிப்பதை சமூகங்களைக் கட்டியாளும் மன்னர்களும் ஒருநாள் மரணிப்பதை மனிதன் காண்கிறான். அந்த மரணம் உணர்த்தும் நிலையாமையை கண் கொண்டு எதிர்கொள்ள எல்லா மானுடருக்கும் திறனில்லை. மனிதனை அச்சுறுத்தும் ஒன்றாகவே மரணம் எப்போதும் அவனுக்கு இருந்தது. மரணத்தைப் புரிந்து கொள்ள மரணத்தை எதிர் கொள்ள மனிதர்கள் பொருளைச் சேகரிக்கத் தொடங்கினர் ; உறவுகளை மேலும் மேலும் என அதிகமாக்கிக் கொண்டனர். பிறர் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை அதிகரிக்கத் தொடங்கினர். இவை அனைத்தும் எதிர் திசைப் பயணங்கள். மானுடர் இதனை யுகம் யுகமாக நூற்றாண்டுகளாக இதனை மேற்கொண்டவாறே இருக்கின்றனர். செல்ல வேண்டிய திசைக்கு அடைய வேண்டிய திசைக்கு நேர் எதிர் திசையில் மேற்கொள்ளும் இப்பயணங்கள் அளிக்கும் துயரை வாழ்நாள் முழுக்க சுமக்கின்றனர் மானுடர். 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் வாழும் மனிதனுக்கு மானுட குலத்தின் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனை விடவும் புறவயமான வசதிகள் அதிகம் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. மானுட சமூகத்தின் கணிசமான நாடுகளில் உணவுப் பற்றாக்குறை இல்லாமல் ஆகியிருக்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் முழுவதும் மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த மானுட சமூகங்கள் இன்று உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் அளவுக்கு ஜனநாயகத்துக்கு வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் உலகம் கண்ட இரண்டு பெரும்போர்கள் அளவுக்கு இன்று இல்லை என்றாலும் உலகில் எங்கேனும் ஒரு பகுதியில் போர் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.மனிதர்களின் நுகர்வு ஏதோ ஒருவகையில் உலகின் ஒவ்வொரு மனிதனையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கிறது. இன்றைய மனிதன் ஆளாகும் அக அழுத்தம் அளவுக்கு என்றுமே மனித குலம் அக அழுத்தங்களுக்கு ஆளானது இல்லை. இன்றைய மனிதனுக்கு ஆன்மீகம் சாத்தியமா என்னும் கேள்வி இல்லாத மனிதர்களே இல்லை. 

உலகின் எந்த காலகட்டதையும் விட இந்த காலகட்டத்தில் ஆன்மீகம் மனிதனுக்கு விடுதலை அளிக்கும் சாத்தியம் மிக அதிகம். ஆன்மீகம் மனிதனுக்கு அளிக்கும் விடுதலை என்னும் சாத்தியம் மாறிலியாகவே இருக்கிறது. அப்பாதையைத் தேர்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவோ கூடுதலாகவோ இருந்திருக்கிறதே தவிர ஆன்மீகம் மாற்றம் அடையாமல் இருக்கிறது. மனிதர்கள் அணுகும் விதங்கள் கூடியிருக்கின்றன. 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் மனிதனுக்கு உணவுப் பற்றாக்குறை தீர்ந்துள்ளது. வெவ்வேறு விதமான உபகரணங்கள் அவனது உடல் உழைப்பைக் குறைத்துள்ளன. அவன் ஈட்டும் செல்வம் எண்மங்களாக சேமிக்கப்படுகின்றன. ஆயினும் மனிதனைப் பயமும் பதட்டமும் சூழ்ந்துள்ளது. அவன் மனதை நுகர்வு வியாபித்திருக்கிறது. அது அளிக்கும் அழுத்தத்தை அவனால் தாங்க முடியவில்லை. அவனது சக மனிதர்களுக்கும் அதே நிலை. இன்றைய நிலையில் 3000 ஆண்டு கால பழமை வாய்ந்த ஆன்மீக மரபுகளால் அவனுக்கு என்ன அளிக்க முடியும் என்பது இக்காலகட்டத்தின் பெரும் கேள்விகளில் ஒன்று. கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவபிரகாஷ் எழுதியிருக்கும் ‘’குரு : பழம்பெரும் ஞானத்துக்கான பத்து வாயில்கள்’’ என்னும் நூல் இக்கேள்விக்கான பதில்களை மானுடம் முன் வைக்கிறது. 

அஷ்டாங்க யோகம் யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, திருஷ்டி, சமாதி என யோக வழிமுறையின் எட்டு அங்கங்களை எடுத்துரைக்கிறது. யமம் என்பது யோக சாதகன் கொண்டிருக்க வேண்டிய இயல்பான அகநிலையைக் குறிப்பது. நியமம் என்பது அவன் மேற்கொள்ள வேண்டிய அகஒழுங்கைக் குறிப்பது. உடலை யோக சாதனத்துக்கான உபகரணமாக ஆக்கிக் கொள்வதைக் குறிப்பது ஆசனங்கள். இயல்பான அகநிலையும் அகஒழுங்கும் யோகம் கோரும் குறைந்தபட்ச உடல்வலிமையும் கொண்டவர்கள் தங்கள் மூச்சின் மீது ஏற்படுத்திக் கொள்ளும் ஆளுகை குறித்துப் பேசுவது பிராணாயாமம். இருபத்து ஓராம் நூற்றாண்டின் மனிதன் தற்போது இருபதாம் நூற்றாண்டு வரை மானுடர்கள் கொண்டிருந்த சராசரி சாமானிய உடல் உழைப்பு கூட இல்லாமல் இருக்கிறான். அவன் நடந்து செல்ல வேண்டிய அவசியம் மிக மிகக் குறைந்து விட்டது. நூறு அடி தூரத்தைக் கூட பெட்ரோல் வாகனம் மூலம் கடக்கிறான். எப்போதும் கணினி முன்னும் அலைபேசி முன்னும் அமர்ந்தேயிருக்கிறான். அவன் அகத்தை நுகர்வும் வேட்கையும் பூசல்களும் வியாபித்திருக்கின்றன. இத்தகைய இயல்பு கொண்ட ஒருவன் ‘’யமம்’’ என்னும் நிலையை முழுதாக எய்தவே முழு வாழ்நாளும் தேவைப்படும். அவ்வாறெனில் இன்றைய மனிதன் ஆன்மீகப் பாதையில் அதன் உப பாதைகளில் ஒன்றான யோகப் பாதையில் செல்வது எங்கனம் என்னும் கேள்வி எல்லார் மனத்திலும் இருக்கும் கேள்வியாகும். இந்தக் கேள்விக்கான பதிலை ஆன்மீகப் பாதையின் வேறொரு சிறு சாத்தியம் ஒன்றை கன்னட எழுத்தாளர் சிவப்பிரகாஷ் ‘’குரு : பழம்பெரும் ஞானத்தின் பத்து வாயில்கள் ‘’ நூலில் சுட்டிக்காட்டுகிறார். 

நவீன மனிதனுக்கு ஞானத்தை பத்து தனி வாயில்கள் கொண்ட பிரதேசமாக உருவகித்துக் கூறுகிறார். இந்த வாயில்கள் தனித்தனி அல்ல என்பதைத் தெரிவித்தாலும் அவற்றைத் தனித்தனி வாயில்களாகக் கூட சாதகன் அணுக முடியும் என்பதைக் காட்டுகிறார். 

குரு என்பது ஒரு வாயில். சீடன் அல்லது சாதகன் தன்னை எந்த அளவு திறந்து வைத்திருக்கிறான் என்பதே அவன் குருவை அடைவதற்கான அளவுகோல். மனித வடிவில் குருவைக் கண்டவர்கள் உண்டு ; அடைந்தவர்கள் உண்டு. இயற்கையின் வடிவில் குருவைக் கண்டவர்கள் உண்டு. மந்திர ரூபமாகவும் குருவைக் காண முடியும் ; அடைய முடியும். இவை சாத்தியக்கூறுகள். இந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்னும் காரணத்துக்காகவே குருவைத் தேட எண்ணும் ஒவ்வொருவரும் குருவை அடைந்து விடுவர் என்னும் நிபந்தனை இல்லை. மனிதன் ஒருவன் சீடன் ஒருவன் குருவுக்கான தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதற்கான சாத்தியங்களே  அவை. மனிதனின் சீடனின் தேடலின் தீவிரம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ அதைப் பொறுத்து அவன் குருவைக் கண்டடைவான் ; மந்திர ரூபமாகவோ - இயற்கையாகவோ - மானுட வடிவிலோ. சிவபிரகாஷின் நூல் இந்த சாத்தியத்தைக் காட்டுகிறது. 

மந்திரம் என்னும் இரண்டாம் வாயிலைக் காட்டுகிறார் சிவபிரகாஷ். இயற்கையை நாமரூபங்களாகவே நம் மனம் அறிகிறது. ரூபங்களாலும் நாமங்களாலும் ஆனது நம் மனம். நம் மனதின் ஆழங்களை உயரங்களை முற்றறிய நமக்குத் துணை புரிவது மந்திரம். மந்திரம் குருவாக மாறி மனிதனுக்கு துணை நிற்பதுண்டு ; விடுதலை அளிப்பதுண்டு என்னும் சாத்தியத்தை சிவபிரகாஷ் கூறுகிறார். எந்த மந்திரம் விடுதலை அளிக்கும் மந்திரம் என்பது மனிதனுக்கு உடனே எழும் கேள்வி. அது மந்திரத்தைப் பொறுத்ததல்ல - மனிதனைப் பொறுத்தது என்பதே அக்கேள்விக்கான பதில். 

நமது தொன்ம மரபு முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கின்றன என்கிறது. இனியும் கூட புதிய தெய்வங்கள் பிறந்து வரக்கூடும். ஒவ்வொரு மனிதனும் கூட தனக்கான தெய்வத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும். தான் உருவாக்கும் தெய்வம் ஒரு மாயக்கணத்தில் பிரபஞ்சப் பெருநியதியின் ஒழுங்குடன் ஒத்திசைந்து விடுகிறது. தான் உருவாக்கிய தெய்வத்தின் மூலமே அந்த ஒழுங்கையும் ஒத்திசைவையும் மனிதன் அல்லது சாதகன் தேடும் தேடிக் கண்டடையும் சாத்தியம் குறித்து பேசுகிறது நூலின் தெய்வம் என்னும் வாயில். 

மனித உடல் மூலமாக ஆன்மீக உணர்வை அடைய முடியும். உடலை வலிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பிரபஞ்சப் பெருநியதியின் ஒழுங்கை உடல் இயக்கம் மூலமே கூட உணர முடியும் என்னும் சாத்தியத்தை உடல் என்னும் வாயில் பேசுகிறது. 

நவீன வாழ்க்கை மனதுக்கு மனதின் சௌகர்யங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயல்பினை சூடத் தொடங்கி விட்டது. உடல் மனத்தை சுமக்கும் அடிமையாகி விட்டது. இருப்பினும் பிராணன் இல்லையென்றால் உடலும் மனமும் தனித்தனியாகி விடும். கோடானுகோடி மனிதருக்கு மரணத்தறுவாயில் மட்டுமே பிராணன் குறித்த பிரக்ஞையே வருகிறது. சில கணங்கள் மட்டுமே நீடித்து ஆயுள் முடிவுக்கு வருகிறது. பிராணன் குறித்த பிரக்ஞையை மனிதன் பிராணனை அவதானிப்பதன் மூலம் அடைய முடியும். அதன் மூலம் ஆன்மீக அறிதலை அடைய முடியும் என்னும் சாத்தியத்தைக் காட்டுகிறது பிராணன் என்னும் வாயில். 

மனிதர்களை அடிமையாக்கும் மனத்தை மனிதனால் அடிமையாக்க முடியும். தன்னை வெல்லுதலே பெரிய இறுதி வெற்றி. மனம் என்னும் வாயில் என்னும் அத்தியாயம் காட்டும் சாத்தியமாகும் இது. காமமும் செயல்களும் படைப்புத்திறனும் கூட வேறு வாயில்கள் என்பதைக் காட்டுகிறார் சிவபிரகாஷ். 

அந்த வாயில்கள் மூடிய வாயில்கள் அல்ல. அவை எப்போதும் திறந்தே இருக்கும் வாயில்கள். எனினும் கோடானுகோடி பேர் அதில் நுழைய உளம் கொண்டாலும் ஓரிருவரே அந்த வாயில்களைக் கடந்து செல்கின்றனர். அது ஏன் என்பது அனைவரும் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி. அதற்கான பதில் என்பது அது வாயில்கள் தொடர்பானது அல்ல கடந்து செல்லும் மனிதனைக் குறித்தது என்பதே அதன் பதில்.  

ஒன்று இரண்டு மூன்று என ஒவ்வொரு வாயிலாகக் கடக்க வேண்டும் என்னும் முறைக்கு சிவபிரகாஷ் சிறு தளர்வு அளிக்கும் வழிமுறையைக் காட்டுகிறார். ஐந்து ஏழு மூன்று ஒன்று எனக்கூட சென்று பார்க்க முடியும் என்கிறார். ஊழ் முதல் படியில் கூட யோகியர் பலருக்கும் ஞானியர் பலருக்கும் முக்தியை அளித்திருக்கிறது என்பதை மானுட குலம் பழம்பெரும் ஞானத்தின் அருளையும் ஆசியையும் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் தனது நூலாக அளித்திருக்கிறார் சிவபிரகாஷ். 

சிந்திக்கும் இயல்பு கொண்ட கற்பனைத் திறன் கொண்ட மனிதருக்கு ஆன்மீகப் பாதை குறித்த முக்கியமான நூலாகவும் அவர்கள் வாழ்க்கையை உணரும் விதத்தில் அறியும் விதத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் நூலாகவும் இந்நூல் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.