Friday, 17 July 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு

 இன்று இணையம் மூலமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் விபரங்களை அளித்தேன். 

1980கள் அச்சு ஊடகங்களின் காலம். மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அளிக்கும் விளம்பரங்கள் தினமணியில் வெளியாகும். வீடு வீடாகக் கணக்கெடுக்க வரும் அரசு ஊழியர் கேட்கும் விபரங்களை அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் எனக் கோரும் நாளிதழின் கால் பக்க விளம்பரங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. 

இன்று இணையம் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் விபரங்களைப் பதிவு செய்தேன். மிக எளிய வடிவமைப்பு கொண்ட பக்கம். மிக எளிதாக விபரங்கள் நிரப்பலாம். பொதுமக்கள் அனைவரும் சுயமாக தங்கள் அலைபேசி மூலமோ அல்லது கணினி மூலமோ இதனை மேற்கொண்டால் ஊழியர்களுக்கு நேரமும் உழைப்பும் கணிசமாக மிச்சமாகும். 

மிக எளிய கேள்விகளும் மிக அடிப்படையான விபரங்களும் மட்டுமே கோரப்பட்டுள்ளன. எனினும் அவற்றிலிருந்து ஒரு ஊரின் ஒரு  தாலுக்காவின் ஒரு ஜில்லாவின் ஒரு மாநிலத்தின் மக்கள் வாழ்நிலையை எளிதில் உய்த்துணரலாம். 

வீட்டுக்கூரை எதனால் ஆனது என ஒரு கேள்வி. நம் நாட்டில் பல மாநிலங்கள் 90 சதவீதத்துக்கு மேல் கான்கிரீட் என்ற பதிலைக் கொண்டிருக்கக் கூடும். வீட்டின் சமையல் எரிபொருள் என்ன என இன்னொரு கேள்வி. இதற்கும் பல மாநிலங்கள் 90 சதவீதத்துக்கு மேல் எரிவாயு என்ற பதிலைக் கொண்டிருக்கக்கூடும். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிக்காக ஒரு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் வீடு வீடாக சென்றவன் என்ற முறையில் இந்த கணக்கெடுப்பின் விபரங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதும் இந்தத் தரவுகளிலிருந்து எவ்விதம் புதிய திட்டங்களை உருவாக்கிக் கொள்வது என்பதையும் என் மனம் யூகிக்கிறது ; கற்பனை செய்கிறது. 

ஏதேனும் ஒரு கிராமத்தில் 100 பேருக்கு சுய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவைச் செய்தால் ஒரு ஊழியரின் 500 நிமிடங்களை மிச்சப்படுத்த  முடியும். ஒரு ஊழியரின் ஒரு நாள் பணியை மிச்சமாக்கலாம். இதனை முயற்சி செய்யலாம் என இருக்கிறேன்.