நான் வங்கி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். வங்கிகள் சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்தவன். அந்த அடிப்படையிலேயே வங்கிகள் மீதும் வங்கிச் சேவைகள் மீதும் வங்கிப் பணியாளர்கள் மீதும் சேவைக் குறைபாடு தொடர்பான புகார்களை பதிவு செய்பவன்.
சென்ற ஆண்டு நம் நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆண்டு வணிகம் ரூ.383 லட்சம் கோடி என புள்ளிவிபரம் கூறுகிறது. நம் நாட்டின் மொத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 85,000. இந்த கணக்கீட்டின் படி ஒவ்வொரு வங்கிக் கிளையும் ஓராண்டுக்கு சராசரியாக 450 கோடி ரூபாய்க்கு வணிகம் புரிகின்றன. ஒரு மாதத்துக்கு ரூ.37.5 கோடி. ஒரு நாளைக்கு சராசரியாக 1.25 கோடி ரூபாய்க்கு ஒவ்வொரு வங்கியிலும் வணிகம் நடக்கிறது.
ஒரு நாளைக்கு ரூ.1,25,00,000 வணிகம் நடத்தும் வணிக நிறுவனம் போல் வங்கிகள் வாடிக்கையாளர்களை நடத்துகின்றனவா? வங்கிக்கிளைக்கு சென்ற ஒரு வாடிக்கையாளரை எந்த வங்கி ஊழியராவது ‘’வருக வருக’’ எனக் கூறி வரவேற்றது உண்டா? இவர்கள் நடத்தும் வணிகத்துக்கு பணம் தருபவர்கள் வாடிக்கையாளர்களாகிய பொது மக்கள். ஒரு வட்டிக்கடைக்காரர் கூட தன்னுடைய சொந்த பணத்தை வட்டிக்கு விடுகிறார். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. வட்டிக்கடைக்காரர் அளவுக்கு கூட வங்கிகளுக்கு சிரமம் இல்லை.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வங்கிச் சேவையைக் கூட திருப்தியாக அளிப்பது இல்லை. ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட சிறப்பான கனிவான வாடிக்கையாளர் சேவையை அளிக்கிறார். அதனால் தான் வணிகத்தில் நிலைத்திருக்கிறார். ஆண்டுக்கு 383 லட்சம் கோடி வணிகம் செய்யும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கனிவான சேவையை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பானது தானே?