Saturday, 25 July 2026

ஆயிரமும் பூஜ்யமும்

நேற்று காலை எனது வழக்கப்படி இரு சக்கர வாகனத்தை சைட் லாக் செய்து வீட்டில் எல்லார் கண்ணிலும் படும் படி வைத்து விட்டு காலை 8 மணிக்கு சென்னை செல்ல கிளம்பினேன். 1 கி.மீ தூரம் நடந்ததும் என் நண்பர் ஒருவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்தார். என்னைக் கண்டதும் பேருந்து நிலையத்தில் டிராப் செய்கிறேன் என்றார். அவருடன் ஒரு உணவகத்துக்குச் சென்று காலை உணவு அருந்தினேன். பின் பேருந்து நிலையம் சென்றோம். திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது. நடத்துனரிடம் ‘’அண்ணன்! சென்னை போக எத்தனை மணியாகும்?’’ எனக் கேட்டேன்.’’ மதியம் 2.30க்கு வண்டி கிளாம்பாக்கத்துல இருக்கும்’’ என்றார். ’’4 மணிக்கு எழும்பூர்ல ஒருத்தரைப் பார்க்கணும் அண்ணன். சென்னை டிக்கெட் எடுத்துடவா? இல்ல சிதம்பரம் போய் பஸ் மாறிக்கவா?’’ என்றேன். ’’சிதம்பரத்துல நம்ம வண்டி 5 நிமிஷம் மட்டும்தான் நிக்கும். போய்கிட்டே இருக்க வேண்டியது தான்’’ என்றார். பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். மொத்தமே 10 பேர் தான் பேருந்தில் இருந்தோம். நம் மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று பொதுவாக வெளியூர் கிளம்பி செல்வதைப் பெண்கள் தவிர்ப்பார்கள். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் ; பேருந்தில் அந்த இருக்கையை நான் எப்போதும் விரும்புவேன். என் கையில் ரூ.1000 இருந்தது. அதில் காலை உணவுக்கு நண்பருடன் சேர்ந்து அருந்தியதால் ரூ.200 செலவாகி விட்டது. சென்னைக்கு டிக்கெட் ரூ.250. சிதம்பரத்தில் அனைவரும் இறங்கி விட்டார்கள். புதிதாக 5 பேர் மட்டும் ஏறினார்கள். மொத்த பயணிகள் 6 பேர் தான். நிலக்காட்சிகள் எந்த நிலையிலும் எனக்கு இனியவை. அவற்றில் தோய்ந்திருந்தேன். வடலூரில் அவித்த கடலை வாங்கிக் கொண்டேன். தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டேன். வெயில் கடுமையாக இருந்தது. ஓட்டுநரும் நடத்துனரும் நண்பர்களாகி விட்டார்கள். நடத்துநர் என்னிடம் ‘’சார் ! உங்கள மறைமலர் நகர்ல இறக்கி விடறன். அங்க ரயில்வே ஸ்டேஷன் பக்கம். டிரெயின் புடிச்சு எக்மோர் போயிடுங்க’’ என்றார். சொன்னது போலவே மறைமலர்நகரில் இறக்கி விட்டார். பசி கடுமையாக இருந்தது. உணவருந்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என எண்ணினேன். அங்கே இருந்த ஆட்டோ டிரைவரிடம் ‘’பக்கத்துல வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கா?’’ என்று கேட்டேன். மெயின் ரோட்டிலிருந்து 500 மீட்டர் தூரம் உள்ளே இருக்கும் ஹோட்டல் ஒன்றைக் கூறினார். அங்கே சென்று உணவருந்தினேன். உணவு உண்ணும் போது அந்த ஹோட்டல் உணவில் தஞ்சாவூர் சாயல் இருப்பதை உணர்ந்தேன். பணம் கொடுக்கும் போது ‘’அண்ணன் ! நீங்க பூர்வீகம் பழைய தஞ்சாவூரா?’’ என்று கேட்டேன். அவர் சிதம்பரத்துக்காரர். சிதம்பரம் பழைய தென்னாற்காடு என்றாலும் காவிரி வீர நாராயண ஏரி புண்ணியத்தில் அதுவும் காவிரி டெல்டா என ஒரு கணக்கு. ஹோட்டல் உரிமையாளர் மறைமலைநகர் வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. வருடம் ஒரு தடவை குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிட மட்டும் ஊருக்குச் செல்கிறேன் என்றார். உரையாடிக் கொண்டிருந்ததில் இருவரும் மன அணுக்கத்தை உணர்ந்தோம். ஸ்மார்ட்ஃபோனில் செக் செய்து ‘’சார் ! 3.15க்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில் இருக்கு. அத புடிச்சுடுங்க’’ என்றார். அந்த ரயிலைப் பிடித்து விட்டேன். உணவுக்கு ரூ.100 கொடுத்தது போக ரூ.450 கையில் இருந்தது. மறைமலை நகரிலிருந்து எழும்பூருக்கு கட்டணம் ரூ.10. எழும்பூர் சென்று சேர்ந்தேன். நண்பரைச் சந்தித்த போது நேரம் மாலை 5 மணி. ஒரு மணி நேரம் தாமதம். மறைமலைநகரில் இருக்கும் போதே குறுஞ்செய்தி அனுப்பி சந்திக்க 5 மணி ஆகும் எனக் கூறியிருந்தேன். ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு உபயோகமானதாக இருந்தது. நண்பர் தேனீர் தயாரித்து அளித்தார். சந்திப்பு முடிந்ததும் புறப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அப்போது நேரம் 6.15. அப்போதுதான் புதுச்சேரி மெமு கிளம்பியது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் அடுத்த வண்டி அதில் விழுப்புரம் வரை மட்டுமே செல்ல முடியும். அங்கேயிருந்து வண்டி மாற வேண்டும்.  கிளம்பும் மனநிலைக்கு வந்து விட்டதால் அதில் ஏறினேன். பொதுப் பெட்டியில் எட்டு பேர் இருக்கும் இடத்தில் 4 பேர் மட்டும் இருந்தனர். அதில் சென்று அமர்ந்து கொண்டேன். இந்த இடத்துக்கு ஆள் வருகிறார்கள் என அவர்கள் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை. பல பயணிகளிடம் அவர்கள் இந்த பதிலைக் கூறி அமர விடாமல் செய்தனர். வண்டி கிளம்பும் நேரத்தில் அங்கே அமர்ந்திருந்தவர்களின் நண்பர்கள் வந்து அமர்ந்தனர். அது ஒரு சீட்டாட்டக் கும்பல். வண்டி புறப்பட்டதும் பணம் வைத்து சீட்டுக்கட்டு சூதாட்டம் நடத்தினர். ஒருவர் ஒரு ஸ்பீக்கர் மூலம் திரைப்பாடல்களை அலற வைத்தார். ரயிலில் பெருங்கூட்டம் பொதுப்பெட்டியில் நின்று கொண்டு வந்தது. அந்தப் பெருங்கூட்டம் அவர்கள் சீட்டாட்டத்துக்கு வசதியாக இருந்தது. இவர்கள் அனைவரும் ரயில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். இவ்விதம் சூதாடுவதை பல வருடமாகப் பழகியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டேன். இதைப் பற்றி ஊருக்குச் சென்றதும் ரயில்வேயில் புகார் கொடுப்போம் என எண்ணினேன். மேல்மருவத்தூரில் சிலரும் திண்டிவனத்தில் அனைவரும் அந்த சீட்டாட்டக் கும்பல் ஆட்கள் இறங்கி விட்டனர். விழுப்புரம் வந்த போது நேரம் இரவு 10. ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஒரு தோசை மட்டும் உண்டு விட்டு ரயில் நிலைய நடைமேடை பெஞ்சு ஒன்றில் படுத்து உறங்கி விட்டேன். விழுப்புரம் ரயில் நிலையம் 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு ரயில் கடக்கும் நிலையம். அதனால் எப்போதும் அறிவிப்புகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். எனவே கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்து விடும் என எண்ணித்தான் படுத்தேன். ஆழமாக உறங்கி விட்டேன். விழித்துப் பார்த்தால் நேரம் அதிகாலை 2.45. ஊருக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் கடந்து சென்றிருந்தன. அடுத்த வண்டி காலை 6 மணிக்கு. எனவே கோலியனூர் கூட்டு ரோடு சென்று பஸ் பிடித்து சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடுக்கு டிக்கெட் எடுத்தேன். பஸ் ஏறியதும் தூங்கி விட்டேன். வண்டி சேத்தியாதோப்பு சென்ற போதுதான் விழிப்பு வந்தது. அங்கே இறங்கி சிதம்பரம் பஸ் பிடித்து வந்தேன். கையில் எவ்வளவு இருக்கிறது எனப் பார்த்தேன். ரூ. 35 இருந்தது. ஊர் செல்லும் பேருந்திற்குச் சென்று ஊருக்கு பஸ் கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். ரூ.35 என்றார். பயணச்சீட்டு எடுத்து விட்டு பஸ்ஸில் அமர்ந்து உறங்கத் தொடங்கினேன். ஊரை நெருங்கும் போது விழிப்பு வந்தது. ‘’கால்டெக்ஸ்’’ நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். நேற்று கையில் ரூ.1000 உடன் பயணித்தேன். இப்போது கையில் பூஜ்யத்துடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். ‘’ஆயிரமும் பூஜ்யமும்’’ என மனதில் தோன்றியது. இன்று நிறைய வேலைகள் இருந்தன. நேற்று ரயிலில் பயணம் செய்த போது ஊரின் ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஃபோன் செய்தனர். சீர்காழி தீ விபத்து தொடர்பாக எனது வாக்குமூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று. காலை 10 மணிக்கு வருகிறேன் எனக் கூறியிருந்தேன். முத்துநகர் எக்ஸ்பிரஸின் சூதாட்டக் கும்பல் குறித்து சி பி கி ராம் ஸ் இணையதளத்தில் புகார் பதிவு செய்தேன்.