Tuesday, 25 August 2026

மீண்டும் ஓர் அஞ்சலகம் ; மீண்டும் ஒரு சி.பி.கி.ராம்.ஸ் புகார்

இன்று அளித்த சி பி கி ராம் ஸ் புகாரின் தமிழாக்கம் 

நேற்று நண்பகல் **** ஊரில் உள்ள அஞ்சலகத்துக்குச் சென்று ரூ.5 தபால் ஸ்டாம்ப் கேட்டேன். அந்த ஊரின் சப் போஸ்ட் மாஸ்டர் தன் அஞ்சலகத்தில் ரூ. 5 ஸ்டாம்ப் கையிருப்பு இல்லை எனக் கூறினார். என் கையில் முகவரி எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்த காக்கி உறை இருந்தது. அதை அஞ்சல் உறையில் இட்டு முகவரி எழுதி தபாலை அனுப்ப முயற்சித்து ரூ.5 அஞ்சல் உறை தாருங்கள் எனக் கேட்டேன். தன் அஞ்சலகத்தில் ரூ.5 தபால் உறையும் இல்லை எனக் கூறினார். மயிலாடுதுறை எல்லைக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் போஸ்டல் ஸ்டாம்ப் , போஸ்டல் கவர் இல்லை எனக் கூறுவதும் அதனை நான் புகாராகத் தெரிவிப்பதும் எனக்கு இது மூன்றாவது தடவை. முதல்முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இரண்டாம் முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இப்போது மூன்றாவதாக ***** இந்த ஊரில். ஒரு வாடிக்கையாளர் அஞ்சல் அலுவலகத்தில் அடிப்படையான ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் எதிர்பார்ப்பது நூதனமான ஒன்றா? சாதாரண அடிப்படை விஷயம் இல்லையா? ஒரு ரயில் நிலையத்துக்குச் சென்று பயணிக்க விரும்பும் ஊருக்கு பயண டிக்கெட் கேட்டு ரயில் நிலைய ஊழியர் டிக்கெட் கையிருப்பு இல்லை எனக் கூறுவதற்கு ஒப்பான செயல் அல்லவா ஒரு போஸ்ட் ஆஃபிஸில் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இல்லை எனக் கூறுவது? ஒரு போஸ்ட் ஆஃபிஸ் ரூ.5 போஸ்டல் கவரும் ரூ.5 ஸ்டாம்பும் விற்பனை செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்றால் அந்த போஸ்ட் ஆஃபிஸை மூடி விடுவது தானே உத்தமம்? அஞ்சல்துறைக்கு செலவு மிச்சம் அல்லவா? ரூ.5 போஸ்டல் கவர் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் கூட இருப்பு வைத்துக் கொள்ள இயலாத அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர் சேவையை மற்ற விஷயங்களில் அளிக்குமா என்னும் ஐயம் எழுவது இயல்பான ஒன்று தானே?