Sunday, 21 October 2018

வெட்டவெளியில் தனியே நிற்கிறாய்
ஒரு நம்பிக்கையில்
குருதியும்
காற்றில் மிதக்கும் படைக்கலன்களும்
பார்வையில் படும் இடத்தில்
உனக்கு சொல் அளிக்கப்படவில்லை
தயக்கத்தின் மௌனமும்
இருப்பினும்
மண்ணில்
காத்து நிற்கும்
ஏதோ ஒரு கணத்தில்
மழைபெறும்
விதை உயிர்க்கும்
பொழுதெல்லாம்
ஆசுவாசம் கொண்டு

வான் நீர் நெருப்பு

நட்சத்திர ஒளியை
யாசகம் பெறுகின்றன
தாமரை இலைக்கைகள்
முழு இரவும்
தடாகத்தில்

எஞ்சி நிற்கிறது
இறுதியில்
வீழ்ந்த
துளி
பனிநீர்
அனாதி காலமாக
இறுகி
ஒளிரும் வைரம்

இன்னும்
வந்து சேராத
மீன்கள்
உடலை
அசைத்து அசைத்து
சலனமுறுத்துகின்றன
வாழிடத்தை

Friday, 19 October 2018

வான் நதி

சூரிய மஞ்சள்
மரந்தளிர்ப் பச்சைகளில்
திலகமிடும்
அந்த மாலைப் பொழுதில்
போய்க் கொண்டேயிருக்கும்
ஒரு துறவி
மலையின் மேல்
விரிந்த கைகளுடன்
நின்றிருந்தான்

மகவாய்
அவனைத் தழுவியது
அன்னை மஞ்சள்

சட்டென
நதியாய் ஓடத் தொடங்கினான்

நிலமெங்கும்
ஒளிரும் அன்னை முகம் கண்டு
சந்தோஷம்
பிரதிபலிக்கும்
நதியாய்

Thursday, 18 October 2018

புறநகர் மின்சார ரயில்

பணம் பிதுங்கும் பர்ஸ் போல
மனிதர்கள் நிற்கும்
புறநகர் மின்சார ரயில்
பூனைபோல்
அலைகிறது
குறுக்கும் நெடுக்கும்

அசையும் ரயிலில்
பயணிகளின் மனம்
சுழன்று கொண்டிருக்கிறது
பல பல திசைகளில்

அமர்ந்ததும்
ஆசுவாசமாய்
முதல் வேலையாய்
காதலனை அலைபேசியில் அழைக்கிறாள்
ஓர் இளம்பெண்
அவனுக்குப் பல குறிப்புகளை அளிக்கிறாள்
அவன் ஏதும் ஐயம் கேட்டால்
‘’உனக்கு இது கூட தெரியாதா’’
என அங்கலாய்க்கிறாள்

சேரிடத்தின் பணிகள் குறித்த எண்ணம்
இப்போதே அமைதியிழக்கச் செய்கிறது
ஒரு நடுவயதினனை

தனது குழந்தையை
கோப்புகளுடன்
மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லும் தாய்க்கு
எல்லா நிலையிலும்
குறையாமல் இருக்கிறது
நம்பிக்கை

காதல் கண்களில் மிதக்கும்
காதலனுக்கு
பிடிபடுகிறது
நகரின் ஒத் திசைவு

முரசரையும் கரடி பொம்மையின்
எந்திரச் சாவியென
சுற்றி வருகிறது ரயில்
சுற்றிக் கொண்டிருக்கும் நகரத்தில்

Tuesday, 16 October 2018

ஒரு தருணம்

ஒரு தருணம்
சாதாரணங்களின் எடையை நீக்கி
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம்

மழைநீரால் கழுவப்பட்ட மரங்கள்
புதுப்பச்சையால் உணரப்படுகின்றன
தளிர்களால் சூழப்படுகிறது செந்நெருப்பு
மலர்கள்

துலக்கம் பெறுகிறது
நம் அன்றாடத்தின் காட்சிகள்

பட்டியலில்
இன்னும் மன்னிக்காமல் இருந்தவர்களை
மன்னித்து விடுவிக்கிறோம்
சிலரிடம் மன்னிக்கக் கோருகிறோம்

வாழ்வின்
முடிவற்ற இனிமையின் முன்
வாழ்வின்
முடிவற்ற வாய்ப்புகளின் முன்
காலடி வைக்கப்படுகிறது
நடை பயிலும் மகவாக

Monday, 15 October 2018

மழை பெய்த ஊர்

ஊரே கழுவப்பட்டிருக்கிறது மழைநீரால்
ஈரத்தரையில் காத்திருக்கின்றனர்
குளித்துக் கிளம்பியிருக்கும் குழந்தைகள்
எப்போதும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
சாலையில் கடந்து செல்லும்
ஓர் இளம்பெண்
முகத்தில்
சூடியிருக்கிறாள்
கூடுதல் புன்னகையை
முருங்கை இலைகள்
பழுத்து
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
கார் கண்ணாடி மேல்
மூட்டமான மேகம்
நிலத்தில்
வரைந்து கொண்டிருக்கிறது
புதிதான சில காட்சிகளை
அல்லது
சில காட்சி திருத்தங்களை
நூதனமாய்த் தொங்குகின்றன
ஈரமான சட்டைகள்

Sunday, 14 October 2018

மர்ஃபி என்றால்

மர்ஃபி என்றால்
ஓர் ஒளி
ஒரு துடிப்பு
ஒரு ததும்பல்
ஒரு நம்பிக்கை
ஒரு மன்னிப்பு
ஒரு கரையேற்றம்
ஓர் அலையாடல்
ஒரு சூர்யோதயம்
ஒரு நிறைநிலவு
ஒரு பிறைச்சந்திரன்
ஒரு மழைப்பொழிவு
ஒரு மலைப்பாதை
ஒரு துளி அமுது

மர்ஃபி என்றால்
ஒரு சுட்டிப்பயல்

புறப்பாடு

இன்று
அதிகாலை நடையில்
உடலெங்கும்
பூத்திருந்த
மரமொன்றைக் கண்டேன்

சிறு சிறு குருவிகள்
போல்
மலர்கள்
காற்றில்
நடுங்கி அமர்ந்திருந்தன

தீச்சுடரின்
ததும்பலென
மெல்ல மெல்ல
அசைவு

கரு வாய்
அகன்ற
மகவின் உடலின்
பிசுபிசுத்த
ஈரம்

நீண்ட
மிக நீண்ட
சாலையில்
நின்றிருக்கும்
அம்மரத்தின்
ஏகாந்த இனிமையாய்
புறப்பட்டுச் சென்றன
அவ்வப்போது
வானுக்கும்
அவ்வப்போது
மண்ணுக்கும்

Saturday, 13 October 2018

என்ன செய்வதென்று தெரிவதில்லை

என்ன செய்வதென்று தெரிவதில்லை
சட்டென ஒரு பிழையான புரிதல் வெளிப்படும் போது
நம்ப இயலாத ஒரு கணிப்பு முன்வைக்கப்படும் போது
பல்லாண்டு வேர் கொண்ட உறவின் கிளைகள் கட்டுப்பாடின்றி முறியும் போது
வெறுப்புடன் ஒரு பிரிவுச்சொல் உச்சரிக்கப்படும் போது
அனைத்தையும் அப்படியே விட்டு விடச் சொல்லும் போது
இனி எப்போதும் சரி செய்ய வாய்ப்பே இல்லை எனும் போது
எச்சொல்லும் இனி புரிந்து கொள்ளப்படாது எனும் போது
கண்ணீரின் உணர்வுகள் கண்ணுக்குத் தெரியாமல் போகும் போது

என்ன செய்வதென்று தெரிவதில்லை
இனி
என்ன செய்வதென்று தெரிவதில்லை

அழைப்பு

வலைகள்
உலர்ந்து கொண்டிருக்கும்
அந்தத் தீவில்

தோணிகள்
நிலத்தில் கவிழ்ந்திருக்கும்
அந்தத் தீவில்

எப்போதோ வரும்
மனிதர்களை
சற்று
நின்று பார்த்து விட்டு
நண்டுகள்
சட்டென்று
வளைக்குள் புகுந்து கொள்ளும்
அந்தத் தீவில்

எப்போதும்
இருக்கிறது
ஓர் இளம்பெண்ணின் புன்னகை

எப்போதும்
அத்தீவுக்கே
வந்திராத
ஓர் இளம்பெண்ணின் புன்னகை