Tuesday, 16 June 2020

விருட்ச பூஜை

மொழியை அம்மாவிடமிருந்து முதலில் அறிந்தேன். மரக்கிளையமர்ந்த கா கா எனக் கரையும் காகத்தைக் காட்டியே அன்னையின் மூலம் மொழி அறிமுகம் நடந்தது. பால பிராயம் தொட்டு பறவைகள் மீதும் அவை அமரும் மரங்கள் மீதும் பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது.  காகங்களைப் பித்ருக்களாகக் காண்கிறது இந்திய மரபு.  பின்னர் கதைகளின் நாட்கள் தொடங்கின. இந்த உலகில் இருக்கும் எல்லாக் கதைகளையும் கேட்டு அறிந்திட வேண்டும் என்ற தவிப்பு. சங்கீதக் காக்கையின் கதை. மரத்தடியில் படுத்துறங்கிய தொப்பி வியாபாரியின் கதை. மரா மரத்தில் நுழைந்து ‘’ராம ராம’’ என உச்சரித்து ரத்னாகர் வால்மீகியான கதை. வாழ்வு குறித்த உண்மை அறிய அரசமரத்தின் அடியில் அமர்ந்த பெரும் கருணையாளனின் கதை. வேடனின் பசி தீர்க்க மரத்தில் வசித்த பறவைகள் குடும்பத்துடன் மனமுவந்து தீயில் விழுந்து உணவான கதை. ஞானாசிரியன் யாதவனாக யமுனை தீரத்தில் மரத்தடியில் புல்லாங்குழல் இசைத்த கதை. 

கதை கேட்பவன் ஏதோ ஒரு கணத்தில் கதை சொல்லத் துவங்குகிறான். 

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் ஆடிப் பதினெட்டு அன்று மரக்கன்றுகளை வழங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். மக்கள் காவிரிப் பெருக்கை அன்னையாக வழிபடும் நாள். புது வெள்ளம் வாழ்வின் மீதான புதிய நம்பிக்கைகளை உருவாக்கும் நாள். 

இன்னும் 48 நாட்கள் உள்ளன. எல்லாம் சரியாக இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்கின்றன. பலர் துணையிருக்கின்றனர். இருப்பினும் செயல்பாடுகளுக்கு இறைமையின் ஆசி நாடி மரக்கன்றுகள் வழங்கப்பட்டு முழுமையாக நடப்படும் வரை ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு நாளின் பெரும் பொழுதை பணிகளுக்கு அளித்து செயலாற்ற முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் நிகழும் பணிகளை தளத்தில் பதிவிடுகிறேன். 

அம்மாவிடம் இதற்கு ’’விருட்ச தவம்’’ எனப் பெயரிடலாம் என இருக்கிறேன் என்று சொன்னேன். அம்மா ‘’விருட்ச பூஜை’’ என்று சொன்னார். அது மேலும் பொருத்தமாக இருக்கும் என்று பட்டது. 

Monday, 15 June 2020

அஸ்வமேதமும் அனாயாசமும்

’’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். எனது நண்பரும் உடனிருந்தார். பொது காரியங்கள் செய்யும் போது உற்சாகமாக இருக்க வேண்டும். எவ்விதத்திலும் எவ்விதமான சோர்வும் அணுக வாய்ப்பளித்து விடக் கூடாது. எனக்குப் பல வருடப் பழக்கம் உண்டு. பொது காரியம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் சமூகம் நாம் எண்ணுவது போல் இருக்காது; அதனால் செயலில் நுழையும் போது பெரிய எதிர்பார்ப்பு எதையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது; அதே நேரம் மகத்தானவற்றையே திட்டமிட வேண்டும். ‘’Be Realistic; Plan for a Miracle'' என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  இந்திய மரபு ''சங்க ஸத்வம் ஸம்வதத்வம் ஸம்வோ மனாசி ஜானதாம்’’  ( ஒன்று கூடி சிந்தியுங்கள்; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்; உங்கள் மனம் ஒன்றாகட்டும்) என்கிறது.

’’அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்’’ எனத் தாயுமானவர் கூறுவது போல ஆனந்த நிலையில் இருப்பேன். 

ஒரு கட்டுமானப் பொறியாளராக எனக்கு ஒரு அனுபவம் உண்டு. வீடு கட்டிக் கொடுக்கும் போது கிரகப்பிரவேசத்துக்கு முன் வீட்டின் உரிமையாளர் அவருடைய குலதெய்வம் கோயிலுக்கு குடும்ப சகிதம் செல்வார். அப்போது என்னையும் அழைப்பார்கள். நானும் செல்வேன். குடும்ப உறுப்பினர்கள் குலதெய்வத்திடம் அர்ச்சனை செய்யும் போது என்னையும் பெயர் நட்சத்திரம் கூறச் சொல்வார்கள். எனக்குத் தயக்கமாக இருக்கும். அப்போது நீங்களும் எங்கள் குடும்ப உறுப்பினர்தான் குடும்ப உறுப்பினர்கள் பெயருடன் உங்கள் பெயரையும் சேர்த்தே அர்ச்சனை செய்ய வேண்டும் என்பார்கள். அர்ச்சகரிடம் அர்ச்சனைத் தட்டில் கை வைத்து ‘’லோக ஷேமம்’’ என்பேன். அர்ச்சகருக்கு மட்டும் நான் சொன்னது புரியும். சிலர் இது என்ன புதிய நட்சத்திரமாக இருக்கிறதே என எண்ணுவார்கள்.

மக்களைச் சந்தித்தல் என்பது பொது காரியங்களில் முக்கியமான ஒன்று. அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் அபிப்ராயங்களைத் தயக்கமின்றிக் கூறுவதற்கு ஏதுவான சூழ்நிலையை என் குறைவான பேச்சின் மூலமோ மௌனத்தின் மூலமோ உருவாக்குவேன். ஒருவருக்கு ஒருவர் தயக்கம் இல்லாமல் ஆகும் போது அங்கே நமது பணியின் 80% நிறைவு பெற்று விடும். இது பல வருட அனுபவத்தின் விளைவாக திரண்ட அனுபவம். அவர்கள் மனதில் இருப்பது அனைத்தையும் சொன்ன பின் ஒரு சிறு இடைவெளி கிடைக்கும். அதில் மிகச் சுருக்கமாக நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன். அதிலும் அவர்களால் எதை சிரமமின்றிச் செயல்படுத்த முடியுமோ அதையே சொல்வேன். 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிராமத்துக்கு மோட்டார்சைக்கிளில் நானும் நண்பரும் சென்று கொண்டிருந்தோம். நான் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தேன். 

‘’அண்ணன்! இன்னைக்கு எனக்கு ஒரு புது யோசனை காலைல தோணுச்சு’’

‘’அப்படியா! என்ன யோசனை?’’

‘’இப்ப நாம கிராமத்துல 25,000 மரக்கன்றுகளை நடப் போறோம். அதுல தமிழ்நாட்டுல உள்ள எல்லா மர வகையிலயும் ஒன்னு ஒன்னு அந்த கிராமத்துல இருக்கற மாதிரி செஞ்சுடுவோம்.’’

‘’தமிழ்நாட்டுல 500 வகை மரம் இருக்குமா?’’

‘’500க்கும் கொஞ்சம் கூட இருக்கும்”

‘’நல்ல ஐடியா தான். பாட்டனி படிக்கிற ஸ்டூடண்ட்ஸுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். இந்த வருஷம் சுற்றுச்சூழல் செயல்பாடுகளோட தீம் ‘’பயோ - டைவர்ஸிட்டி’’. தமிழ்நாட்டோட மரங்களின் பயோ டைவர்ஸிட்டி நாம ஒர்க் பண்ர ஒரு கிராமத்துல மட்டுமே உருவாக்குறோம்ங்றது நல்ல ஐடியாதான்!’’

நண்பர் வணிகர். நல்முயற்சிகளை மனதாரப் பாராட்டுபவர். 

‘’அண்ணன் இன்னொரு ஐடியா’’

‘’சொல்லுங்க’’

‘’இப்ப நம்ம நாட்டுல ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு மரம் மாநில மரமா இருக்கு. கிராமத்துல ஒரு பொது இடத்துல பெருசா இந்திய வரைபடம் மாதிரி உருவாக்கி அதுல ஒவ்வொரு மாநில பகுதியிலும் அந்த மாநிலத்தோட மரத்தை நடலாம் அண்ணன்’’

நண்பருக்கு முழுமையாகப் புரியவில்லை. நான் விளக்கினேன். 

‘’அண்ணன்! இப்ப நாம ஏ-4 பேப்பர் சைஸில இந்தியாவோட மேப்பைப் பாக்கறோம் இல்லையா?’’

''ஆமாம்’’

‘’அதை அறுநூறு மடங்கு பெருசாக்குனா ஒன்றரை கிரவுண்டு ஏரியா வரும். அதுல இந்திய வரைபடத்தை அதோட எல்லைகளை குத்துக்கல்லால உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளயும் அதோட மாநில மரத்தை நடலாம். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் மினிமம் பத்து அடி தூரம் இடைவெளி இருக்கும்.’’

அவர் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டார். 

‘’இப்ப தமிழ்நாட்டோட மாநில மரம் பனை. கேரளாவுக்குத் தென்னை. கர்நாடகாவுக்குச் சந்தனம். மகாராஷ்ட்ராவுக்கு மாமரம். குஜராத்துக்கு ஆலமரம். ராஜஸ்தானுக்கு வன்னி. ஹிமாச்சலுக்குத் தேவதாரு. பீகாருக்கு அரசமரம் இப்படி’’

‘’இந்த ஒன்னரை கிரவுண்டு இடத்தைச் சுத்தி வந்தா இந்தியாவையே சுத்தி வந்த மாதிரி இல்லையா’’

‘’ஆமாம் அண்ணன். அம்மையப்பரைச் சுற்றி வந்து விநாயகர் உலகையே சுற்றி வந்ததாக விளக்கம் சொன்ன மாதிரி’’

‘’பிரபு! எனக்கு ஒரு டவுட்?’’

‘’உங்க சந்தேகம் என்னன்னு எனக்குத் தெரியும். இந்த ஐடியால்லாம்  யோசிச்சு உருவாக்கறதா இல்ல தானா உருவாகிறதாங்கறது தானே?’’

‘’அதே தான்!’’

’’சினிமால ஓப்பன் எண்டிங்னு ஒன்னு உண்டு. கதையோட முடிவை பார்வையாளனே முடிவு செஞ்சுக்கலாம். எப்படி வேணாலும். அது போல நீங்களே முடிவு பண்ணிக்கிங்க’’

கிராமத்துக்கு சென்று இளைஞர்களை - இளைஞர் குழுக்களை - பரிச்சயமானவர்களை எல்லாம் சந்தித்து பணியின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தேன். ஆடிப்பெருக்கை ஒட்டி மரம் நடுதலை வைத்துக் கொள்ளலாம் என்று முன்பே கூறியிருந்தேன். ஆடி ஆவணியில் அந்தி மழை பெய்யும். மரங்களின் வளர்ச்சிக்கு அது உகந்தது. மக்களும் அதனை ஆமோதித்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கே இருந்திருப்போம். அவ்வூரில் இருக்கும் எல்லா சீமைக்கருவேல் மரங்களையும் அகற்றி விடுவது என முடிவெடுத்தோம். வீதிகளில் சாலைகளில் எங்கும் பூமரங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். உழவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி தருவது குறித்து பரிசீலித்தோம். கிளம்பும் நேரம் வந்தது. இன்னும் இரண்டு பேரை பார்க்க வேண்டும். ஒருவரை மட்டுமே சிறிது நேரம் பார்க்கலாம். அங்கே சென்றோம்.

அவருக்கு எண்பது வயது. அவரைக் காண்பவர்கள் அவருக்கு அறுபது வயது என்றே நினைப்பார்கள். 

‘’பிரபு! சர்வே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? மரக்கன்னு எப்ப வருது?’’

‘’ஆடிப் பெருக்கை ஒட்டி பிளான் பண்ணியிருக்கோம் சார்”

‘’அது கரெக்டான டைம் தான்”

‘’சார்! பொது இடங்கள்ல மேக்ஸிமமா மரக்கன்றுகள் வைக்கற மாதிரி யூஸ்ஃபுல்லான ஐடியாஸ் யோசிங்க சார். இப்ப அதை முடிவு பண்றத்துக்கான நேரம். மரக்கன்னு கொண்டு வர்ரது கொஞ்சம் பெரிய ஒர்க். அதுல நான் பிஸியா இருப்பன். அதே நேரத்துல ஒரு சின்ன விஷயம் கூட மிஸ் ஆகக் கூடாது. லோக்கல் சப்போர்ட் முழுமையா வேணும் சார். ரிஸப்ஷன் ரொம்ப நல்லா இருக்கு. இருந்தாலும் இன்னும் பல பேரை வேலைல சேத்துக்கணும்னு நான் நினைக்கறன்.’’

‘’மாயூரத்துக்கும் கிராமத்துக்கும் ஒரு மாசமா போய்ட்டு போய்ட்டு வர்ரீங்களே. ரொம்ப சிரமம் எடுத்துக்கிறீங்க. பாத்துட்டுத்தான் இருக்கன்’’

‘’சிரமம் ஒன்னும் இல்ல சார். சந்தோஷமாத்தான் செய்யறன்.’’

‘’எல்லாம் நல்லபடியா நடக்கும் பிரபு”

‘’தேங்க் யூ சார்’’

எங்களுக்கு மோர் கொடுக்கச் சொன்னார். 

‘’பிரபு! நீங்க எப்ப வேணாலும் இங்க வாங்க. நான் இல்லன்னாலும் மாமி இருப்பாங்க. காஃபி வேணும்னா காஃபி சாப்பிடுங்க. மதிய நேரத்துல சாப்பாடு எப்போதும் இருக்கும். மோர் குடிங்க. உங்க அகம் மாதிரி நினைச்சுக்கங்க’’

‘’உங்கள மாதிரி பெரியவங்க என் மேல காட்டுற அன்பே போதும் சார்’’

பெரியவர் ஒரு கதை சொன்னார்.

‘’எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார். அவர் எங்கிட்ட சொல்வார். எவனொருவன் மா, பலா, வாழை, ஆல், அரசு, தென்னை, பலா, நெல்லி, வேம்பு, புளி, மூங்கில், சந்தனம், பனை, நாவல், வன்னி, வில்வம், நல்லத்தி முதலான மரங்களை நட்டு வளர்த்து தானும் பலன் பெற்று பிறருக்கும் பயன் பெறத் தருகிறானோ அவன் அஸ்வமேத யாகம் செய்தவன் அடையும் பேறை அடைவான். அவன் மரணத்தை அனாயாசமாகக் கையாளுவான். கடந்து செல்வான்’’

நான் என்னுடைய குறிப்பேட்டில் அவர் சொன்ன மரங்களைக் குறித்துக் கொண்டேன். 

‘’நான் சொன்ன அத்தனை மரத்தையும் அவர் தோட்டத்துல வளர்த்தாரு. எல்லாருக்கும் கொடுத்து சந்தோஷப்பட்டாரு. தானே வளர்த்த நெல்லி மரத்தோட கட்டையையும் சந்தன மரக் கட்டையையும் பரண் மேல அடுக்கி வச்சிருந்தாரு. தன்னோட மரணத்துக்குப் பிறகு தன்னை அந்த மரக்கட்டைகளால் ஆன சிதையில ஏத்தணும்னு சொன்னாரு. அதே போல ஒருநாள் தோட்டத்துல நெல்லி மர நிழல்ல சேர் போட்டு ஒக்காந்திருந்தாரு. நான் வயலுக்குக் கிளம்பறேன்னு அவர்ட்ட சொன்னேன். சாப்டிட்டு போ ; வெறும் வயிறா போகாதேன்னார். சாப்டுட்டு  ஒரு விபரம் கேக்க வந்து பெரியப்பான்னு கூப்படறேன்; உயிர் நின்னுருக்கு. அவர் சொன்ன மாதிரியே மரணத்தை ரொம்ப அனாயாசமாக கையாண்டுட்டுத்தான் போனார், அவர் இறந்த மூணு மணி நேரத்துல அவர் சொன்ன மாதிரியே சிதை ஏத்துனோம்’’

மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது நண்பர் அஸ்வமேத யாகம் என்றால் என்ன என்றார்.


Sunday, 14 June 2020

சலனம்

அன்பின் மொழி
கொள்ளும்
நீர்மைக்கு

பணிதலின் முடிவற்ற
வாய்ப்புகளுக்கு

கனிவின்
எல்லையின்மைக்கு

நேயத்தின்
சாத்தியங்களுக்கு

மண்ணில் விழுந்த
பூங்கழலின் கொலுசு மணி ஒன்று
இயற்றும் ஓயாத் தவம்
மகரந்தங்கள் பறக்கும் காற்று
நாணப் புன்னகை
விண் ஏறும் தீ


Friday, 12 June 2020

தொடுவானம்

சாலையில்
மென்காற்று
உரசிச் சென்ற போது
வான் நோக்கினாய்
நட்சத்திரங்கள் ஆம் என்றன
நிலவு ஆம் என்றது
புன்னகைத்தன நகரும் மேகங்கள்

Wednesday, 10 June 2020

அமிர்தவர்ஷிணி

தீயென
உணர்ந்த போது
தாகம் தணித்துக் கொண்டிருந்தாய்
மாலையில் இல்லாமல்
காலையில் உயிர்த்திருக்கும்
பசுந் தளிர்களாய்
முளைத்துக் கொண்டிருந்தாய்
மீன்களென அசைந்தன
புவியெங்கும் மலர்கள்
கரைந்து கொண்டிருக்கிறது பனிக்கட்டி 

Tuesday, 9 June 2020

வங்கிகள் - சில கேள்விகள்

1. கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு வங்கிக் கிளையை எடுத்துக் கொள்வோம். அதன் வரம்புக்குள் 15 கிராமங்கள் இருக்கக் கூடும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அக்கிராமத்தில் உள்ள எல்லாருக்கும் ஒரு விடுபடல் கூட இன்றி வங்கிக் கணக்கு துவங்க முயற்சி எடுத்ததுண்டா? 

2. நகர்ப்புறங்களில் இருக்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொள்வோம். ஏதேனும் ஒரு கல்லூரிக்குச் சென்று அக்கல்லூரியில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க ஏற்பாடு செய்ததுண்டா?

3. வங்கியின் செயல்பாடுகள் மற்றும் இயங்குமுறை குறித்த அறிமுகத்தை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வங்கிகள் முயற்சி ஏதும் மேற்கொண்டதுண்டா?

4. தங்கள் கிளையைச் சுற்றியிருக்கும் ஊரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தங்கள் கடமையே என வங்கிகள் உணர்வதுண்டா?

5. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் வங்கி முறைக்கும் இந்தியாவில் செயல்படும் முறைக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்பதை வங்கிகள் உணர்ந்திருக்கின்றனவா?

6. அஞ்சல்துறை சேமிப்புக்கு முகவர்கள் உண்டு. ஆயுள் காப்பீட்டுக்கு முகவர்கள் உண்டு. வங்கியின் வாடிக்கையாளரை அதிகப்படுத்த - டெபாசிட் அதிகப்படுத்த சிறிய அளவில் கூட முகவர்கள் இல்லையே. ஏன்?

7. ஏதேனும் ஒரு ஊரின் வீதி வணிகர்கள் முற்றிலும் வங்கியின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் என்ற தரவு உண்டா? ஏன் அவ்வாறான பணியை முன்னெடுக்கவில்லை?

8. அரசு ஊழியர்களின் மாத ஊதியம் வங்கிக்கணக்கில் வரவாகும் என அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பல அரசு ஊழியர்களே வங்கியின் வளையத்துக்குள் வந்தார்கள் என்பது உண்மைதானே?

9. பொதுமக்கள் மத்தியில் வங்கிக்குச் செல்வதற்கு ஒரு தயக்கம் இருப்பது உண்மைதானே? வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர் சேவையை பெரிதாக நினைப்பதில்லை என்பது தான் காரணமா?

10. வாடிக்கையாளரைச் சந்தித்தல் - வாடிக்கையாளர் கூட்டங்களை நடத்துதல் - வாடிக்கையாளர்களுக்கு புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தல் ஆகிய மக்கள் தொடர்பு பணிகளே தங்களின் அடிப்படை என்பதை வங்கிகள் உணர்கின்றனவா?

Monday, 8 June 2020

பிழை ஈடு

சில மாதங்களுக்கு முன், ஒரு சேவை அமைப்பு குறித்து தற்செயலாக அறிய நேர்ந்தது. கல்வித்துறையில் அற்புதமான பணியைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறு நன்கொடை வழங்க வேண்டும் என எண்ணினேன். 

பாரதியாரின் ‘’அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற வரியை அனைவரும் கேட்டிருப்போம். ‘’வெள்ளைத் தாமரை’’ என்ற கவிதையில் பாரதி எழுதிய வரி இது. திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் உருவாக்கிய போது அதற்காக பாரதியார் எழுதிய பாடல் அது. 

’நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்’’ என்ற வரியும் அக்கவிதையிலேயே வருகிறது. பாரதி கல்விப் பணியை வாணி பூசனை என்கிறார். அந்த பூசனையில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்பி ரூ.500 அனுப்பி வைக்கலாம் என முடிவு செய்தேன். 

மறுநாள் காலை வங்கிக்குச் சென்று ஒரு வரைவோலை எடுத்து அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். என்னுடைய டெபிட் கார்டின் கால அவகாசம் முடிந்திருந்தது. அதை புதுப்பிக்கும் வரை நன்கொடையை தள்ளி வைக்க வேண்டாமே என்று வரைவோலையாக அனுப்பினேன். வரைவோலை எண்ணைக் குறித்துக் கொண்டேன். அஞ்சல் அலுவலகம் சென்று உறையில் அந்த வரைவோலையை வைத்து அனுப்பி விட்டு விபரம் குறிப்பிட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். 

மூன்று நாட்கள் கழித்து வேறு ஒரு வேலையாக வங்கிக்குச் சென்றேன். அப்போது வரைவோலையின் எண்ணைத் தெரிவித்து அது சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்ந்து விட்டதா என்று கேட்டேன். வரைவோலை எண் இருந்தால் அதனை சோதிக்க இயலும். இன்னும் அந்த வரைவோலை வங்கியில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். மூன்று நாட்கள் ஆகிறதே; தபால் சென்று சேர்வதில் ஏதும் சிக்கலா? வேறு சிக்கல் ஏதுமா? என்று தவிப்பாயிருந்தது. அவர்கள் பணியில் சிறு அளவில் இணைந்து கொள்ள விரும்பிய என் நோக்கம் நிறைவேறாதது எனக்கு சஞ்சலம் தந்தது. மேலும் நான்கு நாட்கள் ஆனது. வங்கிக்கு ஃபோன் செய்தேன். வரைவோலை எண்ணைக் கூறி கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டதா என்று கேட்டேன். இன்னும் இல்லை என்றார்கள்.

நான் அந்த அமைப்புக்கு மின்னஞ்சல் செய்தேன். விபரம் கூறி வரைவோலை அவர்களுக்கு வந்ததா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டேன். இரண்டு நாட்களுக்கு மேல் ஆனது. பதில் இல்லை. எனக்கு ஃபோன் செய்து கேட்க தயக்கமாக இருந்தது. அவர்கள் மகத்தான பணியைச் செய்கிறார்கள். நான் ஒரு சிறிய தொகையை மட்டுமே அனுப்பியிருக்கிறேன். அதை குறித்து மட்டும் எப்படி கேட்பது என தயங்கினேன். மேலும் இரண்டு நாட்கள் ஆனது. தடையை உடைத்து ஃபோன் செய்தேன். அது அந்த அமைப்பின் செயலாளரின் எண். நான் அமைப்பின் பெயரைச் சொன்னதும் அவர் தன்னை அந்த அமைப்பின் செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அவர்கள் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் எத்தனை சிறப்பானது என்பதையும் அவர்கள் சேவை நன்றிக்குரியது என்பதையும் தெரிவித்தேன். அவர் மிகவும் பக்குவமானவர். எனக்கு நன்றி தெரிவித்தார். சமீபத்தில் ஆண்டு விழா இருக்கிறது; அதற்கு அவசியம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார். மிகவும் மகிழ்ந்தேன். சேவை புரிபவர்கள் இயல்பில் சொற்களில் பழக்கத்தில் ஒரு மேலான தன்மையும் பெருந்தன்மையும் இயல்பாக வந்து விடுகிறது. நான் சுருக்கமாக எனது சிக்கலை விளக்கினேன். அவர் பொருளாளரின் எண்ணை அளித்தார். 

‘’வணக்கம். பிரபு பேசுகிறேன். மயிலாடுதுறையிலிருந்து.’’

‘’வணக்கம். ஓ! நீங்கள் தானா அது. நீங்கள் அனுப்பிய டி.டி யை வங்கியில் செலுத்தினோம். அந்த டி.டி.யில் வங்கி மேலாளரின் கையொப்பமில்லை என்று கூறிவிட்டார்கள்.’’

வரைவோலையில் இப்படி ஒரு சிக்கல் இருக்க முடியும் என்பது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. பொருளாளருக்கும் அப்படியே இருந்திருக்கக் கூடும்.

எனக்கு சட்டென ஒன்று தோன்றியது.

‘’ வங்கியின் கவனக்குறைவால் ஒரு பிழை நிகழ்ந்துள்ளது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கே நான் ரூ.1000 க்கான வங்கி வரைவோலையை எடுத்து அனுப்பி வைக்கிறேன். சிரமத்துக்கு வருந்துகிறேன்’’ என்றேன்.

பொருளாளர் ‘’இந்த டி.டி.யை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.’’ என்றார்.

சரி என்று சம்மதித்தேன்.

உடனடியாக வேறு ஒரு வங்கிக் கிளைக்குச் சென்று ரூ.1000 க்கான வரைவோலையை எடுத்து - வங்கி ஊழியர் மற்றும் மேலாளர் சரியாகக் கையெழுத்திட்டுள்ளனரா என உறுதி செய்து கொண்டு- தபாலில் அனுப்பினேன்.

இரண்டு நாட்களில் பொருளாளரிடமிருந்து ரூ.500 வரைவோலை வந்தது. அதை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றேன்.

மேலாளரிடம் கொடுத்தேன். நிகழ்ந்தது அனைத்தையும் சொன்னேன்.

‘’எங்க மிஸ்டேக் தான் சார்.’’

’’கொஞ்சம் கவனமா இருங்க சார். பணம் எப்போதுமே ஹியூமன் எமோஷன்ஸோட குளோஸான தொடர்பு உள்ளது. சந்தோஷம் துக்கம் பெருமிதம் பணிவு பாசம் நீதி நல்லது கெட்டது எல்லாத்துக்குமே பணம் சாட்சியா இருக்கும். ஒரு பேங்க் கஸ்டமர் ஒரு சாரிட்டிக்கு டொனேட் பண்றது ரெகுலர் ரொடீன். அதுல எவ்வளவு டிரபிள் பண்ணிட்டீங்க பாருங்க’’

‘’சாரி சார். இந்த டி.டி யை கேன்சல் செஞ்சுடவா’’

‘’ஏன் கேன்சல் செய்யப் போறீங்க. செஞ்ச தப்பைத் திருத்திக்கீங்க. கையெழுத்துப் போட்டுக் கொடுங்க.’’

மேலாளர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

அன்றே சேவை அமைப்புக்கு மேலாளர் கையெழுத்திட்ட வரைவோலையை அனுப்பி வைத்தேன்.

மூன்று நாட்கள் கழித்து பொருளாளருக்கு ஃபோன் செய்தேன்.

‘’பிரபு! வணக்கம். எப்படி இருக்கீங்க?’’

நான் வரைவோலைகள் குறித்து விசாரித்தேன்.

‘’ரெண்டுமே கணக்குல சேந்துடுச்சு. உங்களுக்கு இப்ப ஹேப்பி தானே?’’

நான் நன்றி தெரிவித்தேன்.

‘’பிரபு! ஒரு டவுட்.’’

கேட்கச் சொன்னேன்.

‘’ நீங்க ரூ.500 முதல்ல அனுப்புனீங்க. அது கணக்குல சேரலை. உடனே ரூ.1000 அனுப்பிட்டீங்க. அப்புறம் அந்த டி.டி யையும் மேனேஜர் கையெழுத்தோட திரும்ப அனுப்புனீங்களே அது ஏன்?

‘’அந்த டி.டி உங்களோட சேவை அமைப்புக்கானதுன்னு முடிவானது. ஒரு பிழையால உங்க கணக்குல சேர தாமதம் ஆனதால பிழைக்கு ஈடா நான் அனுப்பிய தொகை தான் ரூ.1000. அந்த டி.டி திரும்பி வந்தாலும் அது உங்களோடதுதான். அதனால சரி செய்து திருப்பி அனுப்பினேன்.’’

‘’உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம்’’

பரஸ்பரம் நன்றி கூறி ஃபோனை வைத்தோம்.

எனது நண்பர் ஒருவர் ஊரின் சிறந்த வணிகர். வங்கியொன்றில் எழுபத்து ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடனை சரியாக திருப்பிச் செலுத்தி வந்தார். அவருக்கு மேலும் பத்து லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்டது. முன்னர் கடன் பெற்றிருந்த வங்கியிடம் விண்ணப்பம் செய்தார்.                             

நடையாக நடந்தார். அவருக்கு கடன் மறுக்கிறோம் என்றும் சொல்லவில்லை. கடன் தொகையை அளிக்கவும் இல்லை. மூன்று மாதத்துக்கு மேல் ஆனது. அவர்கள் தாமதம் செய்வதைக் கூட அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஏன் சரியான பதில் கொடுக்காமல் இருக்கிறார்கள் என என்னிடம் வருத்தப்பட்டார். 

அப்போது அவர் நிறுவனத்துக்கு அருகாமையில் இருக்கும் வங்கியின் மேலாளர் மாறுதலாகிப் பணியில் சேர்ந்திருந்தார். அவர் வங்கிக்கு அருகில் இருக்கும் பெரிய நிறுவனமாயிற்றே என்று மரியாதை நிமித்தம் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கிருந்தேன். நண்பர் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஏற்பட்ட அனுபவத்தை நான் சொன்னேன். உங்கள் நிறுவன ஐ.டி ரிடர்ன் பார்க்கலாமா என்றார். நண்பர் தந்தார். பேங்க் ஸ்டேட்மெண்ட் இருக்கிறதா என்று கேட்டார். ஃபைல் அவரிடம் தரப்பட்டது. தலைமை அலுவலகத்துக்கு ஃபோனில் பேசினார். உங்கள் கடனை எங்கள் வங்கிக்கு மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் டர்ன் ஓவருக்கு ஒரு கோடி வரை எளிதாகக் கடன் தரலாம் என்றார். இரண்டுமே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். 

நண்பருக்குத் தயக்கம். மேலாளரிடம் நன்றி கூறி அனுப்பி வைத்து விட்டு என்னிடம் ஆலோசித்தார்.

‘’பிரபு! இப்ப இருக்கற வங்கியில சில அசௌகர்யங்கள் இருக்கு. உண்மைதான். இருந்தாலும் ரொம்ப நாள் பழக்கம் இல்லையா? மனசு சங்கடமா இருக்கு.’’

‘’சார்! இந்த மேனேஜரை இன்னைக்குத் தான் சந்திக்கிறோம். நம்ம இடத்துக்கு அவர் வந்திருக்கார். நம்ம பேப்பர்ஸ் வைச்சு நம்ம டர்ன் ஓவர் வச்சு எவ்வளவு லோன் தர முடியும்னு சொல்றார். நாம எதிர்பார்க்கிற லோனுக்கு மேலேயே தர்ரார். பழைய பேங்க்-ல ஆஃபர் பண்ற ரேட் ஆஃப் இண்ட்ரஸ்ட் விட குறைவா தர்ரார். இதை நாம ஏத்துக்கலனைன்னா நாம ஒரு தப்பு இல்ல; ரெண்டு தப்பு பண்றோம். முதல் விஷயம் புறக்கணிக்க வேண்டிய ஒன்னை சப்போர்ட் பண்றோம். ரெண்டாவது, சப்போர்ட் பண்ண வேண்டிய ஒன்னை புறக்கணிக்கிறோம்.’’

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் 

என்ற திருக்குறளை அவரிடம் சொன்னேன்.

அன்றே புதிய வங்கிக்குச் சென்று கடன் விண்ணப்பம் பெற்று பழைய வங்கியில் பெற்றிருக்கும் கடன் விபரத்தைக் குறிப்பிட்டு தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்தோம். அவர் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார். ஒரு வாரத்தில் ஒப்புதல் வந்தது. பழைய வங்கிக்கு ஃபோன் செய்து கடன் நிலுவைத் தொகை எவ்வளவு என்றோம். தொகையைச் சொன்னார்கள். புதிய வங்கியிடம் அந்த தொகையைக் கூறினோம். அத்தொகைக்கு ஒரு காசோலை வழங்கி விட்டார்கள். நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை அனுப்பி அக்காசோலையை பழைய வங்கியின் கடன் கணக்கில் செலுத்தி விட்டு வரச் சொன்னோம். தொகை பெரிது என்பதாலும் முழுமையாகக் கடன் தீர்க்கப்படுகிறது என்பதாலும் காசாளர் காசோலை விபரத்தை மேலாளரிடம் தெரிவித்திருக்கிறார். மேலாளர் அலறியடித்து ஃபோன் செய்தார். 

ஃபோனை எடுத்து நண்பர் காலை வணக்கம் சொல்லி நிறுவனத்தின் பெயரைச் சொன்னார்.

‘’நான் மேனேஜர் பேசறன்’’

‘’சொல்லுங்க சார்’’

‘’ஏன் லோன் குளோஸ் பண்றீங்க’’

‘’நான் எதிர்பார்த்த லோனை விட அதிகமாவும் குறைவான ரேட் ஆஃப் இண்ட்ரஸ்டலயும் எங்களுக்கு இன்னொரு லோன் கிடைச்சிருக்கு’’

‘’இவ்வளவு பெரிய லோன் ஏன் குளோஸ் ஆகி இன்னொரு பேங்குக்கு போகுதுன்னு ஹெட் ஆஃபிஸ்ல கேப்பாங்க”

‘’அவங்களுக்கு நடந்ததைச் சொல்லுங்க’’

‘’உங்களை நேரில் பாக்க இப்ப வரலாமா?’’

‘’யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் சார்’’

மேலாளர் இரண்டு துணை மேலாளர்களை அழைத்துக் கொண்டு நிறுவனத்துக்கு வந்தார். நாங்கள் ஒரு பணியாளரை அனுப்பி நகரின் சிறந்த கடையிலிருந்து தேனீரை ஃபிளாஸ்கில் வாங்கி வைத்திருந்தோம். மேலாளர்களுக்குத் தேனீர் பறிமாறினோம். 

‘’ஹெட் ஆஃபிஸ்ல கேள்வி மேல கேள்வி கேப்பாங்க”

நண்பர் பொறுமையாகப் பதில் சொன்னார்.

‘’எனக்கு லோன் அவசரமா வேணும் சார். நூறு நாளைக்கு மேல நான் வெயிட் பண்ணிட்டேன். ஏன் தாமதம் ஆகுதுன்னு காரணமாவது சொல்லியிருக்கலாம்.’’

‘’நான் ஸோனல் மேனேஜர் கிட்ட பேசறன். அவங்க கொடுக்கற ரேட் ஆஃப் இண்ட்ரஸ்ட்ல அவங்க சாங்ஷன் பண்ற தொகையை தர்ரேன்.’’

‘’சார்! புது பேங்க்-ல ஒரு வாரத்துல செக் கொடுத்துட்டாங்க. அது உறுதிப்படுத்தப்பட்ட ஒண்ணு. நீங்க கொடுக்கறது வாக்குறுதி. இந்த ரெண்டுல எதை தேர்ந்தெடுக்கறது. நீங்களே சொல்லுங்க. 'Known Devil is better than Unknown Angel' இல்லையா?’’

மேலாளர் குழு திரும்பிச் சென்றது. 

அரை மணி நேரத்தில் காசோலை வரவு வைக்கப்பட்ட விபரம் நண்பரின் அலைபேசிக்கு வந்தது. நண்பர் புதிய வங்கி மேலாளருக்கு ஃபோன் செய்தார்.

Sunday, 7 June 2020

எனது படைப்புகள்

2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு

காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்

லீலாவதி


புள்ளரையன் கோவில்


ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


காத்திருப்பு


நாகரிகம்


துவக்கம்


வசந்த மண்டபம்


விடை


இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1

யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3

யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்


வேங்கடத்துக்கு அப்பால்


நமது ஊற்றுக்கள்


கண்ணீரும் வாழ்வும்


வீரப்ப வேட்டை


கிருஷ்ணப்பருந்து


நீரெனில் கடல்


அந்தரப்பந்துகளின் உலகு


உற்சாகமான பார்வையாளன்


சுழித்து நுரைக்கும் வாழ்க்கை


பங்கர் ராய் - வெறும் பாதக் கல்லூரி


காவேரி - வெள்ளமும் வறட்சியும்


கெடிலக்கரை நாகரிகம்


படைப்பாளியைப் படைக்கலனுடன் சந்திப்பவர்களுக்கு


அஞ்சலி : செழியன்


 சித்தாந்தத்தால் மனம் நிரம்பியிருக்கும் நண்பனுக்கு


ஜனனி


மறைந்த தோழன்


சொன்னால் வெட்கப்பட வேண்டும்


காத்தல்

சொல்வனம் இதழில் வெளியான எனது கட்டுரைகளின் இணைப்பு :

யாமறிந்த புலவரிலே

புனைதலும் கலைதலும்

இறுதி அஞ்சலி : ஆ ப ஜெ அப்துல் கலாம்

Tuesday, 2 June 2020

காவிரி போற்றுதும்


அன்னம் பஹு குர்வித:
-தைத்ரீய உபநிஷத்

இன்றும் காவிரி வடிநில மாவட்டங்களின் (காவிரி டெல்டா) முக்கியமான தொழில் விவசாயமே. லட்சக்கணக்கான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இங்கு நிகழும் அனைத்து வணிகங்களுக்குமான நுகர்வோர் விவசாயிகளே. அதாவது அவர்களின் வருவாயையும் உபரி வருவாயையும் கொண்டே எல்லா வணிகங்களும் லாபமீட்டுகின்றன. இங்கே விவசாயம் லாபமான தொழிலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘’அப்படி கூறி விட முடியாது’’ என்பதே பதிலாக இருக்கிறது. எனக்கு எந்த பகுதியின் சமூகவியல் பொருளியல் செயல்பாடுகள் மீதும் ஆர்வமும் கவனமும் உண்டு. எல்லா பண்பாடுகளின் மீதும் ஆர்வம் உண்டு. சமூக மாற்றத்துக்கான செயல்களைப் புரிய வேண்டும் என்ற விருப்பமும் காந்திய வழிமுறைகளின் மீது நம்பிக்கையும் உண்டு.

நான் எப்போதுமே ஏதேனும் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். என்னால் இயன்ற சிறு பணிகளை அவ்வப்போது செய்வேன்.

சமீபத்தில் நண்பர்கள் சிலர், ஒரு குழுவாக இணைந்து சில சமூகச் செயல்பாடுகளை முன்னெடுக்க விரும்பினர். அதற்கு எனது ஆலோசனைகளைக் கேட்டனர். அவர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். அக்குழுவுக்குள் ஒருங்கிணைப்பு இருந்தது. நான் என் யோசனைகளை முன்வைத்தேன். அவர்கள் செயல்களில் துணை புரிந்தேன். எங்கள் குழுவுக்கு ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

சிலப்பதிகாரம், ‘’திங்களைப் போற்றுதும்’’ என்று துவங்குகிறது. இளங்கோ அடிகள் நிலவைப் பெண்மைக்கான – நீதி உணர்வுக்கான – குறியீடாக ஆக்கி அதனை குடிமக்கள் காப்பியத்தின் முதல் சொல்லாக்கினார். அதிலிருந்து ‘’போற்றுதும்’’ என்ற சொல்லையும் காவிரியையும் இணைத்து ’’காவிரி போற்றுதும்’’ என்று பெயரிட்டோம்.

எங்கள் ஊரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் கல்வி பயிலும் இளைஞர்களைச் சந்தித்து அவர்களிடம் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வை உருவாக்குவதும் அவர்களை அவர்கள் கிராமத்தில் அவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கத்தை அளிப்பதும் அவர்கள் செயல்களுக்கு அவர்களுக்கு கிராமத்திற்கு வெளியிலிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை ஏற்பாடு செய்து கொடுப்பதும் எங்கள் பணிகள் என வரையறுத்துக் கொண்டோம்.

பொதுவாக சமூகப் பணிகள் ஆற்றுவதில் திட்டமிடலும் திட்டமிடலுக்குப் பின் படிப்படியாக செயல்களில் முன்னேறிச் செல்வதும் அவசியமானது. சமூகப் பணி சமூகம் பற்றி நாம் மேலும் புரிந்து கொள்வதற்கான இன்னொரு வாய்ப்பே. நாம் எண்ணுவது எண்ணியவாறே நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது; ஆனால் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றுவதற்குத் தேவையான உழைப்பையும் நேரத்தையும் கொடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சரியான பாதையில், மிக மெதுவாக முன்னகர்ந்தால் கூட  எண்ணியதை எய்தி விடலாம்.

அருகாமையில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றேன். இளைஞர்கள் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரையாடினேன். எங்கள் நோக்கங்களைச் சொன்னேன். அவர்கள் ஆர்வமாயிருப்பதை அறிந்து கொண்டேன். அவர்களிடம் ஒரு விஷயத்தை முன்வைத்தேன்.

நமது மண் பலவகையான தாவர வகைகள் வளரும் இயல்பு கொண்டது. மண்ணில் வேரூன்றி விண் நோக்கி வளர்ந்தவாறிருக்கும் விருட்சத்தை தெய்வ வடிவமாகவே வழிபடும் மரபு நம்முடையது. இன்றும் நம் கிராமங்களில் ஆலமரமும் அரசமரமும் இருக்கிறது. அவை உயிர் ஆலயங்கள். ஒவ்வொன்றும் ஐம்பது வருடம், அறுபது வருடம் ஆனவை. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நடப்பட்டவை. நம் தலைமுறையில், கிராமத்தில் ஒரு சிலரேனும் ஆல், அரசு, வில்வம், கொன்றை, வன்னி ஆகிய மரங்களை பொது இடங்களில் நட்டு பராமரிக்க வேண்டும். ஒருபுறம், சிவனை நாம் கொன்றை மலர் சூடியவன் என வணங்குகிறோம். நமது மொழி இலக்கியங்கள் இறைமையை இயற்கையின் இனிய தன்மை கொண்டதாக முன்வைக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக நம்மை உணர கிராமங்களில் விருட்சங்கள் பொது இடங்களில் நடப்பட வேண்டும். மரத்தின் நிழலில் அமரும் மனிதன் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறான். பட்சிகள் சிலம்பும் ஒலி வாழ்வை இனிமையாக்குகிறது. பட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்துக்கு உதவுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருக்கும் மரபின் வாரிசுகளான நாம் நமது பங்களிப்பை ஆற்ற வேண்டும். இந்த விஷயங்களை அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதனை ஏற்றனர். எந்த நல்ல விஷயத்தையும் சமூகம் வரவேற்கிறது என்பது ஓர் உண்மை.

இந்த விஷயம் உண்மையில் நூதனமானது. மண்ணிலும் நீரிலும் நாள் முழுதும் நிறைந்து பொழுதெல்லாம் விவசாயம் செய்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு மரம் நடுவதைப் பற்றி நகரத்திலிருந்து சென்ற ஒருவர் எடுத்துக் கூறுவது என்பதில் உள்ள முரண் அந்த விஷயத்தைப் பற்றி மேலும் யோசிக்கச் செய்தது. அதற்கான காரணத்தைக் கண்டடைந்தேன். இப்பகுதியின் விவசாயிகள் நெற்பயிர் வேளாண்மைக்குப் பழகியவர்கள். பெரும்பாலானோர் இரண்டு போகம் பயிரிடுகிறார்கள். இப்போதெல்லாம் மூன்று போகம் என்பது அபூர்வம். உழவு, நாற்றங்கால் உருவாக்குதல், நடவு, களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை என நூறு நாட்கள் ஒரு போகத்துக்கு வேலை இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால், நூறு நாட்களில் முதல் முப்பது நாட்களுக்கு முழு நேரமாகவும் பின்னர் குறைவான நேரமும் அளிப்பதாக இருக்கும். வருடத்தின் 365 நாட்களில் கணிசமான நாட்கள் வேலையில்லாமல் இருக்கும். உளுந்து பயிர் நெல் அறுவடையை ஒட்டி விதைத்து விட்டு பெரிய பராமரிப்புகள் ஏதும் இன்றி அறுவடை செய்யக் கூடியது. நெல், உளுந்து என்பதே இப்பிராந்தியத்திய விவசாயத்தின் பொது மனநிலை. அறுவடை முடிந்த பின்னர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து விட்டு அடுத்த போகத்துக்கான பணியைத் துவங்கும் வரை எந்த விதமான பணியிலும் ஈடுபடாமல் இருப்பது என்பதே அவர்களின் வழமையாகி விட்டது.

கிராமத்தின் மக்கள்தொகையில் மிகப் பெரும் பகுதி விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களுமே. அவர்கள் ஈட்டும் வருமானத்தை நகர்ப்பகுதிகளில் உள்ள வணிக அங்காடியில் செலவு செய்து விடுகின்றனர். நகர்ப்பகுதியிலிருந்து கிராமத்துக்கு வரும் செல்வம் என்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. கொங்கு மண்டலம் மஞ்சள் பயிரிடுவதன் மூலம் –பருத்தி பயிரிடுவதன் மூலம் – பணப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் தன்னை வலுவான விவசாயப் பகுதியாக மாற்றிக் கொண்டுள்ளது.

கிராமங்களிலேயே இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது என்றார் மகாத்மா காந்தி. இந்திய நிலத்தில் பயணித்த ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் அதனை உணர்ந்திருக்கிறேன். இந்தியா மாற்றம் பெற வேண்டும் எனில் அம்மாற்றத்துக்கான பணி இந்திய கிராமங்களிலேயே நிகழ வேண்டும். ஒரு இந்திய கிராமத்தில் செயலாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் அல்லது செய்யப்படும் சோதனை எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொருந்தும் என்பது ஒரு நடைமுறை உண்மை.

’’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள் கூடி எவ்விதமான பணிகளை முன்னெடுக்கலாம் என்று சிந்தித்தோம். விவாதித்தோம். அவற்றின் விளைவாக சில செயல்களை முன்னெடுக்க முடிவு செய்தோம். நண்பர்களில் சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள். இணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டோம். எவ்விதமான சமூகப் பணியும் ஒருங்கிணைப்பைக் கோரும் என்பது ஒரு முக்கியமான புரிதல். பல விதமான பணிகள் இருக்கின்றன. நாம் எவ்விதமான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்; அதற்கு எவ்விதமான வேலை முறை உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்து கொள்வது அவசியம் என்பதை நண்பர்களுக்கு விளக்கினேன்.

காந்திய வழிமுறைகளில் ஒன்றான ‘’நுண் செயல்பாடு’’ என்பதை எங்களுக்கான வழிமுறையாக ஏற்றோம். நுண் செயல்பாடு அளவில் சிறியது. எனினும் பெருவலு கொண்டது. செயல்பாட்டாளர்களினுள்ளும் விரிவான புரிதலையும் ஆழமான ஈடுபாட்டையும் உருவாக்கக் கூடியது. ’’உருள் பெருந்தேரின் அச்சாணி’’ போன்றது.

கிராமங்களில் உள்ள பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவது என்பதை எங்கள் செயல்பாடாகத் தேர்ந்தெடுத்தோம். ஒரு கிராமத்தில் 6 லிருந்து 7 தெருக்கள் இருக்கும். அதிகபட்சம் 250 மரக்கன்றுகள் வரை நட முடியும். ஆடு மாடுகள் மேயாமல் இருக்க அவற்றுக்கு நாமே வேலி அமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். செய்யக்கூடிய எளிய பணியைத் தான் திட்டமிட்டிருந்தோம் என்றாலும் எனது மனம் முழு நிறைவடையவில்லை. நான் அது குறித்து எப்போதும் யோசித்தவண்ணம் இருந்தேன். விவசாயிகள் தங்கள் ஆயுள் முழுவதும் பயிரை வளர்ப்பதில் ஈடுபட்டிருப்பவர்கள்; மரம் செடி கொடிகளுக்கு மத்தியிலேயே எப்போதும் இருப்பவர்கள்; எங்கள் சிறிய குழுவுக்கு இது திருப்தியளிக்கும் பணி என்றாலும் மேலும் பெரிய அளவில் அந்த கிராமத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருந்தது. அப்போது என் மனத்தில் புதிதாக ஓர் எண்ணம் உதித்தது. எங்கள் குழுவின் நோக்கம் மரம் வளர்ப்பது; அது பொது இடத்தில் இருந்தால் என்ன அல்லது விவசாயிகளின் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் என்ன என்று யோசித்தேன். பயன் தரக்கூடிய மரக்கன்றுகளை விவசாயிகளிடம் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டுக் கொள்ளுமாறு வழங்கி விடலாம்; மரத்தை ஆர்வத்துடன் அவர்கள் பராமரிப்பார்கள். நம்மாலும் ஒரு கிராமத்துக்கு பெரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை வழங்க முடியும் என எண்ணினேன். விவசாயியான எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து அவர் வீட்டுத் தோட்டத்தின் பரப்பளவு என்ன என்று கேட்டேன். 10,000 சதுர அடி என்றார். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எத்தனை மரங்கள் உள்ளன என்று கேட்டேன். நான்கு வாழைமரங்கள் உள்ளன என்றார். அவர் தோட்டத்தின் பரப்பளவுக்கு கிட்டத்தட்ட நூறு மரங்கள் நட்டு வளர்க்க முடியும். மழைக்காலத்தில் நட்டால் பருவமழை பொழியும் நான்கு மாதங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் கூட இருக்காது. தானாக வளர்ந்து விடும். அதன் பின் கோடையில் கூட தன் பாட்டை தான் பார்த்துக் கொள்ளும். கிராமத்தில் மற்ற வீடுகளில் அதிக அளவில் மரம் நட்டிருப்பார்களா என்று கேட்டேன். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் இப்படித்தான் என்றார். ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கும் எனில் ஒரு வீட்டுக்கு 10 மரக்கன்றுகள் வழங்கினால் மொத்தம் 4000 மரக்கன்றுகளை அக்கிராமத்துக்கு வழங்க முடியும் என்பது எங்களுக்கு பேரார்வம் அளித்தது. 250 என்ற சிறிய எண்ணிக்கையிலிருந்து 4250 என்ற சற்றே பெரிய எண்ணிக்கைக்கு எங்கள் திட்டமிடல் சென்றது எங்களுக்கு உற்சாகம் தந்தது. என் மனம் மட்டும் இன்னும் ஏதோ இருக்கிறது என்பதைக் கூறியவாறு இருந்தது. நான் யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வருவாய் கிராமத்தின் பரப்பளவு சராசரியாக 1000 ஏக்கர். அதில் விளைநிலம் 500 ஏக்கர் இருக்கும். அதன் வரப்புகளில் அடர்ந்து வளராது உயரமாக வளரும் மரக்கன்றுகளை குறைந்தபட்சம் ஏக்கருக்கு 40 என்ற எண்ணிக்கையில் நட முடியும். இருவருக்கு பொதுவாக இருக்கும் வரப்பில் நடத் தேவையில்லை; ஒருவரின் சொந்த நிலத்தின் உள்வரப்பில் நட்டுக் கொண்டாலே போதும்; 500 ஏக்கர் நிலத்தின் வரப்புகளில் 20,000 மரக்கன்றுகளை நட முடியும். எங்கள் எண்ணிக்கை 24,250 க்குச் சென்றது. மியாவாக்கி என்ற ஜப்பானிய முறை ஒன்று உள்ளது. அரை ஏக்கர் பரப்பளவில் இரண்டடிக்கு இரண்டடி என்ற இடைவெளியில் அடர்த்தியாக பல்வேறு மரங்களை நட்டு பராமரிக்கும் முறை அது. அரை ஏக்கர் பரப்பளவில் 5000 மரக்கன்றுகள் நட முடியும். அதனையும் சேர்த்த போது மொத்த எண்ணிக்கை 29,250 ஆனது. 250லிருந்து 29,250. கிட்டத்தட்ட நூறு மடங்கு. நண்பர்கள் உற்சாகமானார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு கிராமத்தில் செயல்படுத்துவோம் என்றார்கள். நான் செயலாக்கத்துக்கான வழிமுறைகளை யோசிக்கலானேன்.

நாங்கள் விவாதித்து உருவாகிய வழிமுறைகள்:

1. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும்.

2. அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை வழங்க வேண்டும். அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் அளிக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படும் எல்லா மரக்கன்றுகளும் நடப்பட வேண்டும்.

4. சொந்தமாக தரப்படும் மரக்கன்றுகளையும் பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரிப்போம் என்ற சொல்லுறுதியை கிராமத்தினர் அனைவரிடமும் பெற வேண்டும்.

5. அவர்கள் கேட்ட மரக்கன்றுகளை அவர்கள் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும்.

6. மரம் வளர்ப்பதில் அவர்களுக்கு வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

7. நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி, கோவில் என வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். எந்த விடுபடலும் இருக்கக் கூடாது.

கள ஆய்வு

வேளாண்மையில் ஆர்வம் உடைய விவசாயிகள் சிலர் எனது நண்பர்கள். அவர்களிடம் இது குறித்து விவாதித்தேன். அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை நான் மேற்கொண்டேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்கள் குழு குறித்து சொல்லி மரக்கன்றுகள் நடுதலை ஒரு சமூகச் செயல்பாடாக மேற்கொள்கிறோம்; உங்களுக்குத் தேவையான எத்தனை மரக்கன்றுகள் வேண்டுமானாலும் வழங்குகிறோம்; இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு எங்கள் நோக்கம் சிறப்பாக நிறைவேற உதவுங்கள் என்று கேட்டு அவர்கள் கூறிய மரக்கன்றுகளையும் எண்ணிக்கையையும் குறித்துக் கொண்டேன். கிராம மக்கள் பேரார்வத்துடன் பெரும் வரவேற்பு அளித்தனர். சிலர் சில ஐயங்களை எழுப்பினர். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு நான் அளித்த விளக்கங்களும்:

1. நீங்கள் யார்? உங்கள் தொழில் என்ன? உங்கள் நண்பர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
எனது பெயர் பிரபு. மயிலாடுதுறையில் வசிக்கிறேன். எனது தொழில் கட்டிட கட்டுமானம். எனது நண்பர்களும் மயிலாடுதுறையில் வசிக்கிறார்கள். சிலர் பொறியாளர்கள். சிலர் வணிகர்கள். சிலர் விவசாயிகள்.

2. நீங்கள் ஏன் எங்களுக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும்?
மரம் வளர்த்தலை ஒரு சமூகச் செயல்பாடாகவும் பண்பாட்டுச் செயல்பாடாகவும் நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அம்மரங்கள் வளர்வதால் நிகழும் நன்மைகளுக்காக நாங்கள் இதனைச் செய்கிறோம்.

3. இதனால் உங்களுக்கு என்ன லாபம்?
இதனால் சமூகம் பயன் பெறும். அதுவே எங்கள் நோக்கம். எங்களுக்குத் தனிப்பட்ட லாபம் ஏதும் இதில் இல்லை.

4. மரக்கன்றுகள் தரும் போது பணம் கேட்பீர்களா?
எங்களுக்கு நீங்கள் எந்த பணமும் தர வேண்டாம். வழங்கப்படும் மரக்கன்றுகளை நல்லவிதமாகப் பராமரித்து வளர்த்துக் கொண்டாலே போதும்.

5. மரக்கன்றுகள் வளர்ந்து பயன் தரும் போது உரிமை கோருவீர்களா?
எப்போதும் எந்த விதமான உரிமையும் கோர மாட்டோம். எங்களுக்கு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் உதவும் விதத்தில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட ஆசை. பொது இடத்தில் இருப்பதை விட தேவைப்படும் விவசாயிகளின் தோட்டத்திலோ அல்லது வயலிலோ இருந்தால் சிறப்பான பராமரிப்பு அவற்றுக்குக் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செயல்படுகிறோம். உங்களுக்கும் பலன் ; சமூகத்துக்கும் பலன். இதுவே எங்கள் நோக்கம். மரக்கன்றுக்கு சாலையில் வளர்கிறோமோ அல்லது தோட்டத்தில் வளர்கிறோமோ என்ற பேதம் இல்லை. சாலையில் இருப்பதை விட தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அது பயன்படும் எனில் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியே.

கள ஆய்வின் போது நாங்கள் விவசாயிகளின் பரிசீலனைக்கு முன்வைத்த சில யோசனைகள்:

1. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் இருக்கிறது என எடுத்துக் கொள்வோம். இப்போது 10லிருந்து 15 வீடுகளில் எலுமிச்சை மரம் இருக்கக் கூடும். அதில் உருவாகும் பழங்கள் கிராமத்துக்குள் அவர்கள் அண்டை வீட்டாருக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் உறவினர்களுக்குள்ளும் பகிரப்படும். 400 வீட்டிலும் ஒரு எலுமிச்சை மரம் இருக்குமாயின் அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சீசனில் 300 பழங்கள் காய்க்குமெனில் அக்கிராமத்தில் 1,20,000 பழங்கள் உற்பத்தியாகும். அக்கிராமத்திலேயே இருக்கும் ஒருவர் அருகில் இருக்கும் பெரிய சந்தை ஒன்றில் விற்பனை செய்ய முடியும். ஆநிரைகளுக்கு தீவனமாகும் மர வகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படும் போது அதன் உற்பத்தி ஊரின் பசுந்தீவனத் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்யும். மலர் மரங்கள் மூலம் சேகரமாகும் மலர்களை ஆலயங்களில் மாலைகளாக விற்பனை செய்ய முடியும்.
 
2. ஒரு ஏக்கர் நிலம் உள்ள ஒருவர் தன் உள் வரப்பில் 40 தேக்கு மரக்கன்றுகள் நடுவாரெனில் 15 ஆண்டுகளில் அவர் அதன் மூலம் ரூ.20,00,000 வருமானம் பெறுவார். இது அவர் அந்த ஒரு ஏக்கர் பரப்பில் 15 ஆண்டுகளாக இரண்டு போகம் நெல் பயிரிட்டு அடையும் வருமானத்தை விட அதிகம்.

3. இவற்றை எல்லா விவசாயிகளும் பலமுறை சிந்தித்திருப்பார்கள். பெரிய லாபம் இல்லாத ஒரு விஷயத்தை மீள மீளச் செய்வதன் சோர்வால் அவர்கள் ஆர்வம் குன்றியிருக்கின்றனர். ஒரு வெளிப்புற ஆர்வத்தை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களை அவர்கள் நன்மைக்காக அவர்களாக செயல் புரியும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

4. இவற்றுடன் மரம் நடுவதால் நிகழும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பலன்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன.

5. தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தில் இத்தனை மரங்களை வளர்த்து விட முடியும். ஆவணி மாதத்தை ஒட்டி நடப்படும் கன்றுகள் அந்த ஆண்டின் பருவமழையைப் பயன்படுத்தியே வேர் பிடித்து நிலை பெற்று விடும். அதன் பின் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும். அந்த சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை.

6. ஒரே நாளில் ஊரின் எல்லா குடும்பங்களும் ஒரே நேரத்தில் மரம் நடுதல் என்பது மிக முக்கியமான ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக ஆகும். அக்கிராமத்தின் வரலாற்றில் அது ஒரு மிக முக்கிய நிகழ்வாக ஆகும்.

இந்தியாவுக்கென ஒரு பாரம்பர்யமான வாழ்க்கை முறை பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இம்முறையில் சமூகத்தில் அனைத்து பிரிவினருக்குமான இடமும் நீதியும் உறுதி செய்யப்படுகிறது. முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு விதமான வெளிப்புறத் தாக்குதலுக்கு ஆளான பின்னரும் இந்தியா தன்னை தகவமைத்துக் கொண்டு எழுந்துள்ளது. இந்தியா தன் பண்பாட்டுக் கூறுகளை மீட்டு எழுவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகுக்குமே நன்மை பயக்கும்.

தொடர்புக்கு:
ulagelam(at)gmail(dot)com

Monday, 1 June 2020

சாட்சி

நாம்
ஏற்றிய தீச்சுடர்
தன்னியல்பாய்
இவ்வுலகெங்கும்
பரவ
கைகள் விரித்தது

நீ
நீர்த்திரை கண்களுடன்
அதனை
ஓர்
அருமணியாக்குவோம்
என்றாய்

கடலாழத்தில் அது ஒளி விடுவதைக் கண்டோம்
என சான்றுரைத்தன
மீன்கள்

அது வானத்து விண்மீன்களில் ஒன்றாய் இருப்பதை
தினமும் கண்டான்
இன்னும் மொழியத் துவங்காத
சிறு குழந்தை