Thursday, 13 August 2020

காந்திக் காட்சிகள் - காகா காலேகர்

 காந்திய வாழ்க்கைமுறை என்பது மேலான சாத்தியங்கள் நிறைந்த வாழ்க்கை. இந்தியாவில் அற உணர்வு கலையில், நுண் கலையில், பொருளியலில், அரசியலில், அன்றாட வாழ்க்கைமுறையில் கலந்திருப்பதான பழக்கம் குறைந்தபட்சம் ஐயாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. வன்முறையையும் இச்சைகளையும் தாண்டிய வாழ்க்கையை நாடெங்கும் துறவிகளின் சாலைகள் நடைமுறையாய்க் கொண்டிருந்தன. வேத பாடசாலைகள், சமண அறநிலைகள், பௌத்த மடாலயங்கள் என பெரும் நிரை இந்தியாவில் இன்று வரை தொடர்கிறது. மகாத்மாவின் ஆசிரமங்களையும் அவருடைய செயல்பாடுகளையும் இந்த பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இந்த பின்னணியில் புரிந்து கொள்வதே சரியானதாக இருக்கும். 

மகாத்மாவுடன் உடனிருந்த ஆளுமைகள் மகாத்மாவிற்குச் சமமானவர்களே. அவர்களில் சிலரின் ஆளுமையின் உயரமும் அடர்த்தியும் வியப்பளிக்கக் கூடியது.

காகா காலேகரின் ‘’ஜீவன் லீலா’’ என்ற நூலை வாசித்திருக்கிறேன். கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, துங்கபத்திரா, காவிரி முதலிய இந்திய நதிகளைக் கண்டு எழுதிய பயண அனுபவங்கள் ‘’ஜீவன் லீலா’’ எனத் தொகுக்கப்பட்டன. 

காலேகர் ஒரு பள்ளி ஆசிரியர். சாந்தி நிகேதனில் கவி ரவீந்திரநாத் தாகூரிடம் பயின்றவர். காந்தியை சாந்தி நிகேதனில் சந்தித்த பின் தனது வாழ்வு காந்தியுடன் என முடிவு செய்கிறார். வார்தாவிலும் சபர்மதி ஆசிரமத்திலும் தனது பணிகளைச் செய்கிறார். 

காந்தி வாழ்வில் நடந்த 100 சம்பவங்களை காலேகர் தன் நினைவிலிருந்து எழுதுகிறார். 

எளிய சாமானியமான சூழ்நிலைகள். அதில் காந்தியின் - காந்தி உடனிருப்பவர்களின் ஆளுமைச்சித்திரம் உருவாகி வருகிறது. 

ஆந்திராவில் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடுமையான பணிகள். நள்ளிரவு ஒரு மணி வரை பணி புரிகின்றனர். உடல் அசதி தாங்க முடியாமல் உறங்கி விடுகின்றனர். உறங்குவதற்கு முன் நிகழ்த்தும் பிராத்தனையை நிறைவேற்ற முடியவில்லை. காலையில் எழுந்தால் காந்தி படுக்கையில் அமர்ந்திருக்கிறார். காலேகர் எழுந்ததும் காந்தி அவரிடம் இரவு பிராத்தனை செய்தீர்களா என்று கேட்கிறார். இல்லை; பெரும் அசதி என்பதால் உறங்கி விட்டேன் என்கிறார். காந்தி தான் இரவு 2 மணிக்கு வந்தேன்; நானும் பிராத்திக்காமல் உறங்கி விட்டேன் என்கிறார். நம் மீது பெரும் கருணை கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தாதவர்களாகி விட்டோமா என வருந்துகிறார். அந்த வருத்தத்தில் 3 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. அதன் பின் உறங்கவில்லை என்கிறார். 

காலேகர் குஜராத்தில் அகமதாபாத்தில் கல்விப்பணி ஆற்றுகிறார். அவருக்கு மராத்தியும் ஹிந்தியுமே தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு சொல்லித் தர குஜராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் புதிதாக குஜராத்தி கற்றுக் கொள்கிறார். தொடர் பயிற்சியால் குஜராத்தியில் கட்டுரைகள் எழுதி ‘’நவஜீவன்’’ பத்திரிக்கையில் அவை வெளியாகின்றன. குஜராத்தி அகராதி ஒன்றைத் தயாரிக்குமாறு காந்தி அவரைப் பணிக்கிறார். முதல் குஜராத்தி அகராதி மராத்தியரான காலேகரால் வெளியிடப்படுகிறது. 

மணமான இளம் தம்பதியர் காந்தியைக் கண்டு ஆசி பெற வருகின்றனர். திருமணத்தில் வைதிகருக்கு தட்சணை தந்தீர்கள் அல்லவா அதே அளவு தட்சணையை ஒரு ஹரிஜனுக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் காந்தி. காலேகர் வந்திருப்பவர்கள் தமிழ்நாட்டின் ஹரிஜன் தலைவரான எம். சி. ராஜாவின் மகனும் மருமகளும் என்கிறார். காந்தி உங்களுக்கு அந்த விதியில் இருந்து தளர்வு என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

காந்திக்கு தான் ஓர் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை இளம் வயதில் இருந்திருக்கிறது என்பதை பதிவு செய்கிறார் காலேகர். 

காந்தியின் கட்டுரைகள், தலையங்கங்கள், கடிதங்கள் ஆகியவை ''The Collected Works of Mahatma Gandhi'' எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பக்க அளவு 40,000 பக்கங்களுக்கு மேல். உலகில் எந்த எழுத்தாளனும் இத்தனை பக்கங்கள் எழுதியது இல்லை. 

கருணை என்பது பெரும் பண்பு. கருணை கொண்டவனின் அகம் உலகையே தன் சேயாய் ஆக்குவது. இலங்கையில் ஒரு சொற்பொழிவில் காந்தி புத்தர் குறித்து பேசும் போது He said எனச் சொல்வதற்கு பதில் I said என tongue slip ஆக சொல்லி விடுவதை காலேகர் கவனிக்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்திக்கும் அவ்வாறு ஆனதாக அந்த சம்பவத்தை பதிவு செய்யும் போது குறிப்பிடுகிறார். 

காந்திய நூல்களில் முக்கியமானது காகா காலேகரின் காந்தி காட்சிகள். 


நூறு புத்தகங்கள்

 இன்றிலிருந்து செப்டம்பர் 14 வரை 33 நாட்கள் இருக்கின்றன. அதில் ஒரு பயிற்சியில் ஈடுபடலாம் என இருக்கிறேன். இந்த 33 நாட்களில் நூறு புத்தகங்கள் வாசிக்க வேண்டும். புத்தகத்தின் பக்க அளவு எவ்வளவாக இருந்தாலும் மொத்தம் நூறு புத்தகங்கள். வாசிப்பை நூலின் பக்க எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை. வாசிப்பில் தோயும் மனமே தீர்மானிக்கிறது.

எழுத்து, கிராமத்தின் பணிகள், லௌகிகப் பணிகள் இவற்றுடன் இந்த  வாசிப்புப் பயிற்சியும். 

பயிற்சி நம்மை உறுதிப்படுத்துகிறது. உறுதி வெல்லச் செய்கிறது. 

Wednesday, 12 August 2020

நிலமும் நீரும்

 இன்று கிராமத்துக்குச் சென்றிருந்தேன். பொது இடத்தில் நட வேண்டிய மரக்கன்றுகளை நிழலான பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தேன். அவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் விட வேண்டும். உள்ளூரில் சில இளைஞர்கள் அப்பணியை மேற்கொள்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நானும் அவ்வப்போது செல்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் மரக்கன்றுகளை பொது இடத்தில் நட்டு விடலாம். 

பணி முடிந்து கிராமத்தை விட்டு புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது, தனது வயலிலிருந்து ஒரு விவசாயி குரல் கொடுத்தார். தனது மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் வயல் வரப்பில் தேக்கங்கன்றுகளை நட்டுள்ளார். அவை புதிய துளிர் விட்டிருக்கின்றன. அவற்றை ஆர்வத்துடன் காண்பித்தார். என் கண்கள் வானத்தைப் பார்த்தன. நான் இப்போதெல்லாம் தினமும் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன். மேகங்களே மண் மேல் கருணையாய்ப் பொழிக என மௌனமாக பிராத்திக்கிறேன். 

தஞ்சை காவிரி வடிநிலம் நீரால் மிதப்பது. ஆற்றின் கால்வாயின் நீர் பயிரின் வேருக்குச் செல்ல வேண்டும். சில அடிகள் தூரத்தில் நீர் இருக்கும். வயலுக்கு வந்து சேராமல் கூட போகலாம். 

மகாத்மா காந்தி வாழ்வில் ஒரு சம்பவம். அலகாபாத்தில் ஆனந்த பவனத்தில் நேருவுடன் இருக்கிறார் மகாத்மா. காலைப் பொழுது. தோட்டத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். காந்தி ஒரு சிறு பாத்திரத்தில் சிறு அளவு நீர் எடுத்து பல் துலக்குகிறார். ‘’பாபு ஜி! கங்கை வெள்ளமாய்ப் பாய்கிறது. ஏன் இவ்வளவு குறைவான நீரை இவ்வளவு கவனத்துடன் எடுக்கிறீர்கள்’’ என்கிறார் நேரு. ‘’ஜவஹர்! கங்கையின் நீர் நமக்கானது மட்டும் அல்ல. அது கோடானு கோடி மக்களுக்கும் சொந்தமானது. அந்த உணர்வு நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்’’ என்கிறார் மகாத்மா. 

இந்தியாவின் அனைத்துப் பேரரசுகளும் மக்களுக்காக நீர்நிலைகளையும் பாசன வசதிகளையும் உருவாக்கியவை. இந்தியாவின் பாரம்பர்ய விவசாய ஞானம் என்பது மழைப்பொழிவைப் பற்றிய அறிவே. 

நாம் நமது கல்வித் திட்டத்தில் நமது மரபை அறிமுகப்படுத்த வேண்டும். இங்கே செயலாக்கப்படும் அனைத்தும் நமது மரபின் வேர்களிலிருந்து கிளம்பி வர வேண்டும். குறைந்தபட்ச உடல் உழைப்பு, நீர் மேலாண்மை ஆகியவை பாடமாகப் பயிலப்பட வேண்டும். 

Monday, 10 August 2020

வெண்முரசும் இந்தியாவும்

 இன்று ஜெ தளத்தில் வெளியாகி உள்ள கட்டுரையின் இணைப்பு


வெண்முரசும் இந்தியாவும்

Sunday, 9 August 2020

எனது நிலம்

 கடந்த ஐந்து மாதங்களாக, பெரிதாக எங்கும் வெளியில் செல்லவில்லை. கிராமம் சார்ந்த பணிகள் இருப்பதால் சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது அங்கே சென்று விடுகிறேன். 

ஒரு சில முறை கடற்கரைக்குச் சென்றிருந்தேன். மரத்தடிகளை நாடி சில முறை சென்றேன். 

பெரும் இந்திய நிலம் என்னை எப்போதும் அழைப்பதாகவே எப்போதும் எண்ணுவேன். 

தேசிய நெடுஞ்சாலைகள் கல்கத்தாவின் தூரத்தைக் காட்டும் போதோ ஹைதராபாத் அல்லது நாகபுரியின் தொலைவை அறிவிக்கும் போதோ ரயில்வே லெவல் கிராஸிங்கில் வாரணாசி விரைவு ரயில் கடந்து செல்லும் போதோ அந்த ஊர்கள் என்னைக் கூப்பிடுவதாக எண்ணுவேன். 

கடந்த ஐந்து மாதங்களில், சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் நாடு முழுவதும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைத் தாண்டி விட்டால் பெரும்பாலான சாலைகளில் சரக்கு வாகனங்களே சாதாரண காலத்திலும் சென்றவாறிருக்கும். புனிதத் தலங்களுக்கு சுமோ போன்ற வாகனங்களில் சிறு சிறு குழுக்களாக மக்கள் பயணிப்பர். மற்றபடி பெரும்பாலானோரின் பயணங்கள் ரயில் பயணங்களே. இந்திய ரயில்கள் ஓயாமல் பயணிகளைச் சுமந்து கொண்டு திரியும். இந்திய மையநிலத்தின் சாலைப் போக்குவரத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இந்தியா முழுதும் பல்வேறு உணவுப் பொருட்களை பண்டங்களை சரக்குந்துகளே கொண்டு சேர்க்கின்றன. 

கார்வார் இப்போது எப்படி இருக்கிறது? நர்சிங்பூரில் குளிர் ஆரம்பித்திருக்குமா? மீரட்டில் மோட்டார்சைக்கிள் பயணத்தின் மேல் பேரார்வம் காட்டிய இளைஞர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்தூர் எவ்விதம் இயங்குகிறது? ஜெய்ப்பூர் சந்தைகளில் எப்போது மக்கள் கூடுவார்கள்? 

இந்திய நிலமெங்கும் எத்தனையோ கிராமங்களில் அலைந்தவன் என்ற முறையில் இந்தியா என்பது கிராமங்களே என உணர்ந்திருக்கிறேன். 

ஒரு கிராமத்தில் ஆற்றும் பணி என்பது அந்த அளவில் நிறைவைத் தருகிறது.


Saturday, 8 August 2020

 அன்று பெய்த மழை

பெருக்கெடுக்கும் சிறுகால்கள்

குறுக்கிட்டுச் செல்லும்

மலைப்பாதையின் மேல்

மௌனத் தவம் 

புரிகின்றன

நீர் மேகங்கள்

பூத்திருக்கும் மரத்தை

பார்த்த வண்ணம்

இருக்கிறான்

தொலை தூரப் பிரயாணி

Thursday, 6 August 2020

மழை

வானம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேகங்கள் திரள்கின்றன. மழை பொழிந்தால் நலமாக இருக்கும். மரக்கன்றுகளின் ஒரு பகுதி மக்களைச் சென்றடைந்துள்ளது. அனைவரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் வயல் வரப்புகளில் நட்ட வண்ணம் இருக்கின்றனர். ஒரு கிராமம் முழுமையும் ஈடுபடும் செயல். ஒற்றுமை மகத்தான மனிதப் பண்பு. ஒரு நற்செயலுக்காக மனிதர்கள் ஒன்றுபடுவார்கள் எனில் அதில் நிகழும் கூறுகள் அளப்பறியவை. அற்புதமானவை. 

மண்ணின் உயிர்ச்சக்தி பயிராகிறது; கனியாகிறது; மலராகிறது; வாழ்வாகிறது. 

மண்ணிற்கும் விண்ணிற்கும் வணக்கம். 

Monday, 3 August 2020

யதார்த்தமும் பிரமைகளும்

நான்காண்டுகளுக்கு முன்னால் நான் ரிஷிகேஷ் வரை மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது பயணத்தில் பாதுகாப்பு குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு சிலர் கூறினர். நான் ஒரு அபாயமான செயல்பாட்டில் ஈடுபடுவதாக அபிப்ராயப்பட்டனர். என் உள்ளுணர்வு நான் தனித்து இருப்பதாகவோ சிக்கலான ஒன்றைச் செய்வதாகவோ அறிவிக்கவில்லை. உணர்வெழுச்சியும் உவகையும் நம்பிக்கையும் கொண்டதாகவே இருந்தது. அபிப்ராயம் சொன்ன எவரும் பைக்கை எடுத்துக் கொண்டு 100 கி.மீ சென்று ஓர் ஆலயத்தையோ ஓர் கடற்கரையையோ ஒரு வனப்பகுதியையோ பார்த்து அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு மாலை வீடு திரும்பும் ஒரு நாளின் அனுபவம் கூட இல்லாதவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் எப்படி அவர்கள் கற்பனையிலோ அனுபவத்திலோ இல்லாத ஒன்றைப் பற்றி எவ்வித தயக்கமும் இல்லாமல் அபிப்ராயம் சொல்ல முடியும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஓர் ஆங்கில வார இதழ் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு நிலம் மாவோயிஸ்டுகளின் ஆட்சியில் இருக்கிறது என்று நடுப்பக்க கட்டுரை எழுதினார்கள். உண்மை என்ன? இன்று மாவோயிஸ்டுகள் எங்கே? இந்தியா முழுமைக்கும் வினியோகமாகும் ஒரு வார இதழ் எந்த ஆதாரத்தில் இவ்வாறு செய்திக் கட்டுரை வெளியிடுகிறது? மாவோயிஸ்டுகள் சீனாவால் பராமரிக்கப்படுபவர்கள் என்ற உண்மையை அந்த வார இதழ் அறியாதா? அவர்கள் வெளியிடும் இவ்வாறான கட்டுரை மக்களை தவறாக வழிநடத்தும் என்ற பிரக்ஞை ஏன் அவர்களிடம் இல்லை? 

பொதுப் பிரக்ஞையில் உறைந்து போயிருக்கும் சில விஷயங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையேயான வேறுபாட்டை சுட்டிக் காட்ட முற்படுகிறேன். 

உணவுப் பொருட்களுக்கு ஆதரவு விலை, இலவச மின்சாரம், நேரடி கொள்முதல் ஆகியவையே அரசாங்கம் விவசாயத்துக்கு வழங்கும் சலுகைகளாக இருந்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளும் இவற்றை ஒட்டியதாகவே இருக்கிறது.  இவை விவசாயத்துக்கு எவ்விதத்தில் உதவுகின்றன?

இந்திய விவசாயத்தை இன்ன விதமானது என்று பகுத்து விட முடியாது. உலகில் எத்தனை விதமான வேளாண் முறைகள், வேளாண் நிலங்கள் உண்டோ அத்தனையும் இந்தியாவில் உண்டு. எங்களுக்குப் பொறியியல் கல்லூரியில் ‘’நில அளவை’’ வகுப்பு எடுக்கும் போது Survey Chain குறித்து விளக்குவார்கள். அது 66 அடி நீளம் கொண்டது (20.11 மீ). அதனை Gunter என்பவர் உருவாக்கினார். அதனால் அதனை Gunter Chain என்றும் கூறுவார்கள். அது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ரெவின்யூ செயின் எனப்பட்டதாகக் கூறி அன்றைய ஆட்சி வருவாயில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு நிலவரியாகக் கிடைத்தது; இன்று வருமான வரி முக்கியமான வருவாய் ஆதாரமாக இருப்பதால் நிலவரி 6 விழுக்காட்டுக்கும் கீழே சென்று விட்டது என்று கூறுவார்கள். விவசாயமும் விவசாயிகளும் அரசாங்கத்துக்குப் பெரிய அளவில் உதவ முடியும் என்பதே யதார்த்தம். 

விவசாயம் சார்ந்த கல்வி என்பது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவின் வரலாற்றில் மன்னர்கள் அவர்கள் மேற்கொண்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவே நினைவுகூரப்படுகிறார்கள். இந்திய விவசாயம் கடந்து வந்த பாரம்பர்யமான பாதை என ஒன்று இருக்கிறது. அது உலகின் சிறந்த அறிவுக் களஞ்சியம். குறைந்தபட்சம் அவ்வாறேனும் அது தக்க வைக்கப்பட வேண்டும்.

ரசாயன உரங்கள் இன்றி விளைந்த பயிர்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய சந்தை இருக்கிறது. இந்தியாவால் சகல விதமான பயிர்களையும் உற்பத்தி செய்ய முடியும். நமது நாட்டின் மருத்துவச் சந்தையில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி ஆகியவை முக்கியப் பங்காற்ற முடியும். ’’கதர்’’ இயக்கம் தற்பொழுது வேகம் எடுத்தால் கூட லட்சோப லட்சம் எளிய இந்திய விவசாயிகளுக்கு பயன் தரும். இந்திய நதிக்கரைகள், வாய்க்கால் கரைகள், நீர்நிலைகள் ஆகியவை பெரும் பரப்பு கொண்டவை. அவை விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு உதவ முடியும்.

வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.


Saturday, 1 August 2020

தேவையும் திணிப்பும்

இந்திய கிராமங்கள் உருவாக்கப்பட்டவை. இந்த உருவாக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளது. துறவிகளும் அரசர்களும் இந்திய கிராமங்களை உருவாக்கியுள்ளனர். நம் கவனத்தில் அவை இல்லை. சற்று சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மையை உணர முடியும். இந்தியாவின் அரசர்கள் தங்கள் குடிமக்களைத் தொகுத்து வேளாண்மை செய்யப்படாத நிலத்தை அளித்து ஒரு கிராமத்தை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு அளித்துள்ளனர். நிலம் அளித்ததுடன் அவர்களுடைய பணி நிறைவு பெற்று விடவில்லை. விவசாயப் பணிகளுக்கு அடிப்படையான மழை மற்றும் பருவநிலை குறித்த தகவல்களால் ஆன பஞ்சாங்கங்களை நாடு முழுதும் உள்ள கிராமங்களுக்கு அளித்தனர். பஞ்சாங்கம் ஒரு கணித ஆவணம். துறவிகள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மக்களை ஒற்றுமைப்படுத்தினர். மக்களை ஒற்றுமைப்படுத்தும் எல்லா சமயங்களையும் அரசர்கள் ஆதரித்தனர். இந்திய விவசாயமும் இந்திய விவசாயிகளின் பிரச்சனைகளும் புரிந்து கொள்ளப்பட இந்த அடிப்படையை உணர்வது அவசியம். மேலைக் கல்வி நம் மண்ணிற்குத் தொடர்பில்லாதது. அதன் எல்லைக்குள் நம் நாட்டின் கல்வியும் விவசாயிகளும் கொண்டு வரப்பட்டது ஒரு கொடுந்துயர்.

நமது நாட்டின் மன்னராட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு குடிகள் இருந்துள்ளார்கள். வேளாண் குடிகள், ஆயர் குடிகள், வணிகக் குடிகள், தொழிற் குடிகள், தொழில்நுட்பக் குடிகள், தொழிலாளர் குடிகள், கைவினைஞர்கள் என பல்வேறு குடிகள் ஒரே கிராமத்தில் இருந்துள்ளனர். அதன் அர்த்தம் என்னவெனில் அத்தனை குடிகளும் ஒரு கிராமத்தில் குடியேற்றப்பட்டு கிராமத்துக்கான வருவாய் உருவாக்கப்பட்டது என்பதே. 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவாகி நிலைபெற்ற ஒரு மரபை முற்றிலும் புறந்தள்ளுவது என்பதைப் போன்ற அறிவீனம் வேறேதும் இல்லை. 

பாரம்பர்யமான எத்தனையோ முறைகள் இந்தியர்களின் பழக்கத்திலேயே இருந்துள்ளது. இன்றும் அது தொடர்கிறது. அவை நடைமுறை சார்ந்தவை. மேலாண்மை விதிகள் சார்ந்தவை. காலமாற்றம் என்பது உலகின் எல்லா சமூகங்களையும் பாதிக்கும். அவ்வாறான பாதிப்பையே இந்தியாவும் எதிர்கொண்டது. நமது நாட்டின் சிக்கல்களுக்கு ஐரோப்பாவிடம் பதில் எதிர்பார்ப்பது எவ்வளவு உசிதமானது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். 

ஐரோப்பாவின் வரலாறும் வாழ்க்கையும் ஆசியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கே மண் வளம் குறைவு. குறைவான பரப்புக்குள் விவசாயம் செய்து கொள்ள வேண்டும். கடல் உணவும் மாமிசமும் அங்கே முக்கிய உணவு. தொழிற்புரட்சிக்குப் பின் அங்கே பெரும் சுரண்டல் நிகழ்ந்தது. மனித உழைப்பு மிக மோசமாகச் சுரண்டப்பட்டது. அக்காலகட்டத்தில் ஐரோப்பா தனது சொந்த மக்களையே சுரண்டிக் கொழுத்தது. பின்னர் தொழிற்புரட்சியின் விளைவாக உருப்பெற்ற ஏகாதிபத்யமும் முதலாளித்துவமும் ஆசிய, ஆஃப்ரிக்க, அமெரிக்க நாடுகளைச் சுரண்டின. 

அவர்கள் சொந்த பழக்கத்தின் காரணமாக உலகின் எல்லா சமூகங்களும் சுரண்டலை அடிப்படையாய்க் கொண்டவை என்றே எண்ணினார்கள். அது உண்மையல்ல. 

நான் பணி புரியும் கிராமத்தில் எதைப் பேசத் துவங்கும் முன்னும் நான் விவசாயி அல்ல என்று அறிவித்து விட்டே எதையும் கூறுவேன். எனது நண்பர் ஒருவர் சொன்னார். விவசாயத்தில் ‘’தோட்டக்கலை’’ என்ற பிரிவு உண்டு. அதன் அடிப்படையான பாடப்புத்தகங்கள் விவசாயம் பயின்றவர்களால் உருவானது அல்ல; பொழுதுபோக்காக புதிதாக சில விஷயங்களை முயன்று பார்த்த விவசாயம் அறியாதவர்களால் எழுதப்பட்டவையே என்று. 

இரண்டு நாட்களாக எனக்கு ஒரு எண்ணம் உருவானது. அங்கே 400 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் பூசணிக்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய், வெண்டை ஆகிய நான்கு விதைகளை அவர்கள் தோட்டத்தில் இட கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவாகாது. வீட்டுத் தோட்டத்தில் இடுவதற்கு பெரிய உடல் உழைப்போ பெரிய பராமரிப்போ தேவையில்லை. கிராமம் முழுதும் உற்பத்தியானால் புதிய வழிகள் திறக்கும். 

விவசாயிகள் இந்த விதையை வாங்க பல கிலோமீட்டர் பயணித்து வர வேண்டும். கிராமத்தில் பாக்கெட் பால் கிடைக்கிறது. பாக்கெட்டில் இருக்கும் சன் ஃபிளவர் ஆயில் கிடைக்கிறது. பிரிட்டானியா பிஸ்கட் கிடைக்கிறது. ஆனால் நாட்டுக் காய்கறிகளின் விதை கிடைப்பதில்லை. 

நாம் பல விஷயங்களைக் குறித்து ஆழமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.