Thursday, 17 September 2020

ஞானக்கூத்தன்

 


கவிஞர் ஞானக்கூத்தனுடன் இரண்டு மணி நேரத்துக்கு மேல் உரையாடும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது. நாங்கள் சந்தித்து உரையாடிய இடம் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தின் பெருவிருட்சம் ஒன்றின் நிழலில் இருந்த சிமெண்ட் பெஞ்ச். கவிஞரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. பல வருடங்களுக்குப் பின் அவர் ஊருக்கு வந்திருந்தார். சென்னை இலக்கிய நிகழ்ச்சிகளில் அவரைப் பலமுறை கண்டிருக்கிறேன் என்றாலும் உரையாடியதில்லை. நான் அவரது கவிதைகளின் தீவிர வாசகன். ரசிகன். எனினும் அவரிடம் சென்று பேசியதில்லை. 

மயிலாடுதுறை வந்திருக்கிறார் - மறுநாள் திருச்சி - சென்னை பகல் விரைவு ரயிலில் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறார் என்பதை அறிந்தேன். சென்னை செல்லும் பகல் விரைவு ரயில் வழக்கமாக மயிலாடுதுறைக்கு வந்து சேர வேண்டிய நேரத்துக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வரும். எதிர் திசையிலிருந்து வரும் ரயில்களுக்கு வழி விட இதனை எல்லா நிலையங்களிலும் நிறுத்தி விடுவார்கள் என்பது காரணம். 

நான் மறுநாள் வைத்தீஸ்வரன் கோவில் செல்ல மோட்டார்சைக்கிளில் கிளம்ப ஆயத்தமானேன். வீட்டிலிருந்து 15 கி.மீ தூரம். 15 நிமிடத்தில் சென்று விடலாம் என்பதால் காலை 9.40க்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய நண்பர் என்னைப் பார்க்க வந்து விட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். 

வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தை நெருங்கும் போது நண்பர் என்னிடம் கேட்டார் : ‘’பிரபு! காலை 11.15க்கு ரயிலின் அட்டவணை நேரம். மணி இப்போது சரியாக 10. பொதுவாக அட்டவணை நேரத்துக்கு 15 நிமிடம் முன்பு அவர் வருவார் என்றால் 11 மணிக்குத்தான் வருவார். நீங்கள் எப்படி 10 மணிக்கு வருவார் என கணிக்கிறீர்கள். நாம் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிடும்’’

நான் பதில் சொன்னேன்; ‘’நீங்கள் நினைப்பது போல் இல்லை. அவர் சென்னைவாசி. சென்னைவாசிகள் பொதுவாக ரயில் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே ரயில் நிலையத்துக்கு வந்து விடுவார்கள்.’’

நண்பர் கேள்வி கேட்டு நான் பதில் சொல்லி முடித்த அடுத்த வினாடி ஒரு வாடகை வாகனம் ரயில் நிலைய வாயிலுக்கு வந்தது. ஞானக்கூத்தன் குடும்பத்துடன் வந்து இறங்கினார். நண்பருக்கு ஒரே ஆச்சர்யம். நடைமேடை பெஞ்சுகளில் அவர்கள் அமர்ந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பின், அவரிடம் சென்று வணக்கம் தெரிவித்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் அவருக்கு ‘’விஷ்ணுபுரம்’’ விருது வழங்கப்பட்ட விழாவில் நான் பங்கேற்ற விபரத்தை அவரிடம் கூறினேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். பின்னர் அவரது கவிதைகள் குறித்து பேசலானோம். எனக்கு அவருடைய ‘’வெள்ளத் தனைய மலர்நீட்டம்’’ கவிதை மிகவும் பிடிக்கும் என்றேன். எங்கள் பேச்சு திருக்குறள் நோக்கி சென்றது. பல திருக்குறள்களை நாங்கள் நினைவுபடுத்தி பேசிக் கொண்டோம். அவர் சிலப்பதிகாரத்தின் மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். நானும் சிலம்பை அறிவேன் என்பதால் சிலப்பதிகாரம் குறித்தும் பேசினோம். ம.பொ.சி குறித்து நிறைய விஷயங்களைக் கூறினார் ஞானக்கூத்தன். ஒரு சிலர் மட்டுமே இருந்த ரயில் நிலைய நடைமேடையில் நாங்கள் ஆர்வத்துடன் ஒரு கற்பனை உலகில் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது மகன் எங்களை புகைப்படம் எடுக்க விரும்பினார். காமிராவை நாங்கள் நோக்கியிருப்பதை விட நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்குமாறு கேட்டுக் கொண்டு உரையாடலை உற்சாகமாகத் தொடர்ந்தோம்.  நான் அவரது ‘’பென்சில் படங்கள்’’ கவிதைத் தொகுப்பைக் கொண்டு சென்றிருந்தேன். அதிலிருந்து நான் மிகவும் விரும்பும் அவரது சில கவிதைகளை வாசித்துக் காண்பித்தேன். நவீன கவிதை, சங்கப்பாடல்கள், உலக கவிதைகள், தமிழ், தமிழ் வரலாறு என பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கிட்டத்தட்ட 2.5 மணி நேரம். ரயிலின் வருகைக்கான அறிவிப்பு ஒலித்தது. நாங்கள் பிரியும் நேரம் நெருங்கியது. 

ஞானக்கூத்தன் என்னிடம் கேட்டார் : ‘’பிரபு! நீங்கள் எழுதுவிங்களா?” 

அப்போது நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. எனவே பதறியடித்து மறுத்தேன். ‘’இல்லை சார்! நான் வாசகன் மட்டும் தான்’’. 

ஞானக்கூத்தன் சொன்னார் : ‘’நீங்கள் எழுதலாம்’’

நான் ‘’பென்சில் படங்கள்’’ புத்தகத்தில் அவரைக் கையெழுத்திடச் சொல்லி பெற்றுக் கொண்டேன்.  

Wednesday, 16 September 2020

எனது படைப்புகள்

  2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு


காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்







பிரிவு


ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


காத்திருப்பு


நாகரிகம்


துவக்கம்


வசந்த மண்டபம்


விடை


இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1

யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3

யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்


வேங்கடத்துக்கு அப்பால்


நமது ஊற்றுக்கள்


கண்ணீரும் வாழ்வும்


வீரப்ப வேட்டை


கிருஷ்ணப்பருந்து


நீரெனில் கடல்


அந்தரப்பந்துகளின் உலகு


உற்சாகமான பார்வையாளன்


சுழித்து நுரைக்கும் வாழ்க்கை


பங்கர் ராய் - வெறும் பாதக் கல்லூரி


காவேரி - வெள்ளமும் வறட்சியும்


கெடிலக்கரை நாகரிகம்


படைப்பாளியைப் படைக்கலனுடன் சந்திப்பவர்களுக்கு


அஞ்சலி : செழியன்


 சித்தாந்தத்தால் மனம் நிரம்பியிருக்கும் நண்பனுக்கு


ஜனனி


மறைந்த தோழன்


சொன்னால் வெட்கப்பட வேண்டும்


காத்தல்

சொல்வனம் இதழில் வெளியான எனது கட்டுரைகளின் இணைப்பு :

யாமறிந்த புலவரிலே

புனைதலும் கலைதலும்

இறுதி அஞ்சலி : ஆ ப ஜெ அப்துல் கலாம்

**

ஆசி

 விரிந்த வானின் கீழ்
கருக்கிருட்டில்
ஆர்ப்பரிக்கும்
அலைகடல் முன் நிற்கிறேன்
உப்புக்காற்று
நிறைகிறது
சுவாசம் முழுமையும்
பரவத் துவங்குகிறது மென் சிவப்பு
ஒளியும்
வானும்
காற்றும்
தொட்டுக் கொண்டிருக்கும்
பிரதேசத்திற்கு
ஆழங்களில் 
மூழ்கி
அமிழ்ந்து
கரைந்து
வந்து சேர்ந்து விட 
முனைகிறேன்
கணந்தோறும் உதிப்பது 
ஒளியின் 
நூதனப் பிராந்தியம்
ஏனென்று
அறியாமல்
ஒரு துளி கண்ணீர்
சிந்துகையில்
உச்சியிலிருந்து கொட்டியது
வான் ஆற்றின்
முதல் துளி

Monday, 14 September 2020

ஆசான் சொல் - 2

 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும். (கேள்வி)

 

ஜனநாயக யுகம் தனிமனிதனுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. தனிமனித உரிமைகளுக்கு – தனிமனித சம வாய்ப்புகளுக்கு தோதான சூழலை உருவாக்க முயல்கிறது. ’’தனிமனிதன்’’ என்ற கருதுகோள் இந்த அளவு கவனம் பெற்ற சூழல் இதன் முன் இருந்ததில்லை. எனினும் இந்நிலைக்கு சில எல்லைகள் உள்ளன. கட்டுப்பாடுகள் உள்ளன.

தனிமனிதன் சமூகம் என்ற அமைப்பில் தவிர்க்கவே முடியாத உறுப்புமாவான். சமூக இயக்கத்துடன் மிகக் குறைந்த தொடர்பைப் பேணிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜனநாயக யுகம் வழங்க முற்படும் போதும் ஒரு தனிமனிதன் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் தவிர்க்கவே இயலாதவை. தவிர்க்கக் கூடாதவை.

இந்தியாவில் எங்கும் உரிமைகளைப் பற்றிய குரல் எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அடிப்படைக் கடமைகள் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. மேலைச் சமூகங்களில் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்னென்ன என்று தீவிரமாக வலியுறுத்தப்படுகின்றன. பொது இடங்களில் தூய்மையைப் பேணுதல், அதிகாரிகள் பொது மக்களிடம் கனிவாகப் பேசும் முறைகள், சக மனிதர்களுக்கு அளிக்க வேண்டிய குறைந்த பட்ச மரியாதை, பொது சொத்துக்களை பராமரித்தல் ஆகியவை அங்கே பள்ளி, கல்லூரிகளிலேயே போதிக்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த விஷயங்கள் குறித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேச வேண்டும். பொது இடங்களில் தூய்மையை பராமரிப்பது குறித்து எவ்வளவு அதிகம் பேசப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவும் அது நன்மையே. ஏன் ரயில் நிலையத்தில் குப்பை போடக் கூடாது, ஏன் கியூவில் பலர் நிற்கும் போது முண்டியடித்துக் கொண்டு முன்னே செல்லக் கூடாது, பொது கழிப்பறைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை எவ்வளவு அதிகம் கூற முடியுமோ அவ்வளவு அதிகம் கூறுவது நல்லதே.

நல்லவற்றை மிகச் சிறிய அளவில் சமூகம் கேட்டு பின்பற்றினால் கூட அது மிக்க பயனுள்ளதே.

Sunday, 13 September 2020

மாற்று

 சொல்வனம் இதழில் சமீபத்தில் எழுதிய ‘’மாற்று’’ சிறுகதை வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு

மாற்று

பால் கணக்கு

எனது நண்பர் கிர், காங்கரேஜ், காங்கேயம் ஆகிய நாட்டு மாடுகளை வளர்க்கிறார். நாட்டு மாட்டுப் பாலை காலையிலும் மாலையிலும் என் வீட்டிற்கு வழங்கி விடுவார்.

எனது வீட்டைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் எத்தனை மாடுகள் இருக்கின்றன எனக் கணக்கிட்டேன். பதினைந்து மாடுகள் இருக்கின்றன. எத்தனை வீடுகள் என்று தோராயமாகக் கணக்கிட்டேன். ஆயிரம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் காலையிலும் மாலையிலும் அரை லிட்டர் பால் வாங்கினால் கூட தினமும் 1000 லிட்டர் பால் தேவை. ஒரு மாடு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு பத்து லிட்டர் கறந்தால் கூட 150 லிட்டர் மட்டுமே கிடைக்கும்.

இந்த 150 லிட்டர் பாலிலும் கணிசமான அளவு பாக்கெட் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து விடுகின்றன. 100 லிட்டர் பால் எப்படி 1000 லிட்டர் பால் தேவையைப் பூர்த்தி செய்கிறது?

இந்த பாலுக்குப் பின்னால் இருக்கும் சமூக உளவியல் என்ன?

சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவரது பாட்டனார் எங்கள் ஊரில் பெரிய நிலக்கிழாராக இருந்திருக்கிறார். ஐம்பது ஏக்கர் நிலம் அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமாக இருந்தது. 15 மாடுகள் வளர்த்திருக்கிறார்கள். மாடுகள்  அனைத்தும் வயலில் தொழு உரத்துக்காகவே வளர்க்கப்பட்டன என்று கூறினார். 15 மாடுகள் இருந்தும் அவர்கள் வீட்டில் தனது பாட்டனாருக்கோ பாட்டிக்கோ தந்தைக்கோ பால், தேனீர், காஃபி அருந்தும்  பழக்கம் இல்லை என்கிறார். பாலைத் தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் எடுத்து அதனை உருக்கி நெய்  தயாரித்திருக்கிறார்கள். உணவில் அதிக அளவில் நெய் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பால் அருந்தும் பழக்கமே இல்லை என்கிறார். வீட்டில் பலரும் வந்து மோர் வாங்கிச் செல்வார்கள் என்று கூறினார்.

ஆயுர்வேதத்தில் பால் குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் நுழைந்த உணவுப்பழக்கம் பாலும், காஃபியும் தேனீரும். நாட்டின் ஒரு நாள் பால் தேவையையும் நாட்டின் மாடுகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் எப்படி குறைவான அளவு பால் வேதிப் பொருட்களால் மிகையாக்கப்படுகிறது என்பதை அறிய முடியும்.

பால் தவிர்க்க வேண்டிய ஒரு உணவுப்பொருள். பாலுக்குப் பதிலாக மோர் அருந்தலாம்.


ஆசான் சொல் - 1

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. (இறைமாட்சி)

 

பொருட்பாலில் முதல் குறள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறள். பொருட்பாலில் முதல் அதிகாரமாக ஆட்சி அதிகாரத்தின் முக்கியத்துவத்தைக் கூறும் ‘இறைமாட்சி”யை வைக்கிறார். ஒரு நாட்டின் பொருளியல் வளம் பெற வேண்டும் எனில் அங்கே திறன் மிக்க அரசு செயல்பட வேண்டும். திறன் மிக்க அரசு தம் குடிகளின் வாழ்வை பலவிதத்திலும் மேம்படுத்த முயற்சி செய்யும்.

அரசின் முதல் அங்கமாக திருவள்ளுவர் குறிப்பிடுவது ராணுவத்தை. ராணுவ வீரர்கள் அப்பணிக்கு வரும் போதே உயிரைப் பணயம் வைக்கின்றனர். அவர்களுடைய அர்ப்பணிப்பும் தீரமும் எந்நிலையிலும் போற்றப்பட வேண்டும் என்பதாலேயே திருவள்ளுவர் ஆட்சியின் முக்கிய அங்கமாக படையைக் குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக அவர் குறிப்பிடுவது பல்வேறு குடிகளை. வேளாண் குடிகள், ஆயர் குடிகள், வணிகக் குடிகள், தொழிலாளர் குடிகள் என ஒரு நாட்டில் வெவ்வேறு தன்மை கொண்ட குடிகள் பொலிவார்கள். சோளம் பயிரிடும் விவசாயி ஒரு விதமானவன். மஞ்சள் பயிரிடுபவன் வேறு விதமானவன். கடலை பயிரிடுபவனின் வாழ்க்கை வித்யாசமானது. வேளாண் குடிகள் வான்மழையைக் கணித்து மண்ணில் தங்கள் உழைப்பை நல்கும் இயல்பு கொண்டவர்கள். அவர்களுடைய தொழில் சிறக்க தேவைப்படும் உதவிகளை ஓர் அரசு அளிக்க வேண்டும். அத்தனை குடிகளும் இணைந்திருக்கும் வெளியை உருவாக்குவதும் அரசின் பணி. அவ்வாறு ஒரு பொது வெளியை உருவாக்கி தம் குடிகளின் பண்பு நலன்களை உயர்த்துவதும் அரசின் பணியே. நெடுநோக்கில் ஓர் அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக வள்ளுவர் குறிப்பிடுவது கூழ். மக்கள் உண்ணும் உணவை அவர்களுடைய உணவுப் பழக்கத்தைக் குறிப்பிடுகிறார். சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை போன்று நீர் குறைந்த அளவு தேவைப்படும் பயிர்களும் உண்டு. நெல், கோதுமை போன்று மிக அதிக அளவிலான நீர் தேவைப்படும் பயிர்களும் உண்டு. ஒரு நாட்டில் நீர்வளம் குறைவான பகுதிகளில் விளையும் உணவு தானியம் மக்கள் நுகர்வில் அதிகம் புழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளுவர் விரும்புகிறார். மகாத்மா ‘கதர்’ துணியை ஆதரித்ததற்கு காரணம் அது லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் அளிக்கும் என்பதாலேயே.

அமைச்சர்கள் குடிமக்களின் எண்ணம், விருப்பம், செயல் திறன் ஆகியவற்றைக் கணித்து அவர்களுக்கு உதவக் கூடிய விஷயங்கள் குறித்து அரசுக்கு எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஓர் அரசு மேற்கொள்ளும் எச்செயலும் குறியீட்டு ரீதியிலானதே. ஒரு நாட்டின் ஒரு ஆட்சியின் இயல்பு எவ்வாறானது என்பது அவர்கள் நட்பு நாடுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதிலிருந்தே அறிய முடியும். ‘’பூடான்’’ மிகச் சிறிய நாடு. சொந்தமாக ‘’கரன்சி’’ கூட அந்நாட்டிடம் இல்லை. இந்தியாவின் ‘’கரன்சி’’யைப் பயன்படுத்துகிறது. அந்நாட்டை இந்தியா மிகவும் மரியாதையுடன் மிக்க முக்கியத்துவம் கொடுத்து நடத்துகிறது. ஜி.டி.பி அளவுகோல் படி பூடான் உலக நாடுகளில் மிகவும் பின்னால் இருக்கலாம். ஆனால் ‘’Happiness Index’’ என்ற குறியீடு ஒன்று உள்ளது. ஒரு நாட்டு மக்கள் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை அக்குறியீடு குறிக்கும். அதில் முதல் இடத்தில் இருக்கும் நாடு பூடான். பூடானுடன் மிக நல்ல நட்பை இந்தியா 70 ஆண்டுகளுக்கும் மேலாக பேணுகிறது.

Geo-Political நலன்களை ‘அரண்’ என்ற பிரிவில் குறிப்பிடலாம்.

ஓர் அரசாட்சி இந்த ஆறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் வலிமை வாய்ந்த அரசாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

Saturday, 12 September 2020

உண்ணா நோன்பு

சஷ்டி விரதம் இருந்த அனுபவம் எனக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னால். ஆறு நாட்கள். ஆறு நாட்களும் தண்ணீர் மட்டுமே அருந்தினேன். வேறு எவ்வகையான திட உணவோ திரவ உணவோ அருந்தவில்லை. அதன் பின்னர் மேலும் ஒருமுறை முயன்றேன்.

எனது மன அமைப்புக்கு உண்ணா நோன்புகள் மேற்கொள்வது கடினம். அதனை நான் அறிவேன்.

அடுத்த சில நாட்கள் உண்ணா நோன்பிருக்க எண்ணியுள்ளேன்.

தண்ணீர் மட்டுமே அருந்துவது. வேறு எந்த உணவும் உடலுக்கு அளிப்பதில்லை.

நமது வாழ்க்கைமுறை நமது தேவையைத் தாண்டிய உபரியை நம் முன் குவிக்கிறது. நமக்குத் தேவையானதைத் தேர்வதில் நாம் மிகுந்த எச்சரிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.

பால் நம் உடலுக்கு மிகவும் கடினமான உணவு. மனிதக் குடல் பாலைச் செரிக்க மிகவும் சிரமப்படும். பால், தேனீர், காஃபி ஆகியவை நாம் தவிர்க்க வேண்டியவை. எண்ணெய் மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், முளை கட்டிய தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. அதனைச் செயல்படுத்துவது மிகவும் கடினமானது.

நாம் பழக்கத்தின் அடிப்படையிலேயே நம் உணவுப் பழக்கத்தை மேற்கொள்கிறோம். நமது உடல் உழைப்பு சார்ந்த பணிகளும் பழக்கத்தை அடிப்படையாய்க் கொண்டவையே.

இந்திய மரபு வாழ்க்கையை ஒரு வளையம் அல்லது சுழற்சி என்கிறது. அதிலிருந்து வெளியேறுவதற்கான வழி அதனுள்ளேயே இருக்கிறது என்பதையும் நம் மரபு சொல்கிறது. நோன்புகள் அதற்கான வழிகள். நாம் விரும்பும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மார்க்கங்கள்.

இம்முறை மேற்கொள்ளும் உண்ணா நோன்பை உடல் இயக்கத்தை மன இயக்கத்தை உற்று நோக்குவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தலாம் என இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கைமுறையில் ஆக்கபூர்வமான சில மாற்றங்களைக் கொண்டு வரவும் இதனைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

இந்தியாவில் சமணர்கள் உண்ணா நோன்பின் முன்னோடிகள். மகாத்மா உண்ணா நோன்பை மிக முக்கியமான வாழ்க்கைச் சாதனமாகக் கையாண்டார்.

 

ஆசான் சொல்

 திருக்குறள் ஒரு கவிதை நூலும் கூட என்பது அதன் சிறப்புகளில் தலையாயது. கவிதை காலங்களை யுகங்களைக் கடந்தும் புதிதாக மலர்ந்திருக்கும் இந்த தருணத்துக்கானது என்று எண்ண வைக்கிறது. அறத்தின் குரல் ஒலிக்கும் ஆசானாக இருக்கும் போதே வாழ்வின் நுட்பமான தன்மையை எழுதும் கவிஞராகவும் இருக்கிறார் திருவள்ளுவர். கவிதையின் மீது மாளாக் காதல் கொண்ட வாசகனாக திருக்குறளை நான் அணுகும் விதத்தை ‘’ஆசான் சொல்’’ என்ற பெயரில் எழுதலாம் என இருக்கிறேன். 

Friday, 11 September 2020

ஆசான்

 

கவியுள்ளம் என்பது நுண்ணிய அரிதான மெல்லிய உணர்வுகளால் ஆனதாக இருக்கிறது. கோடானுகோடி மண் துகள்களில் ஒளி விடும் ஒரு பொன் துகளென அரிதான வாழ்க்கைத் தருணம் ஒன்றை கண்டு கொள்ளும் விழிகள் கவிஞனுக்கு அமைகிறது. அவன் அழகை ஆராதிப்பவனாக இருக்கிறான். விழுமியம் ஒன்றின் வெளிப்பாடு கண்டு உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் சிந்துபவனாகிறான். அநீதிக்கு எதிராக அறச்சீற்றத்துடன் முதல் குரல் எழுப்புபவனாகிறான். ஒரு தருணத்தில் வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற இயங்குமுறையை அச்சமின்றி அறிஞனாக எதிர்கொள்கிறான். ஞானியர் அடையும் மௌனத்தையும் உணர்ந்தவனாகிறான்.

கவிதை எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை கவிதையும் கவிஞனும் உருவாக்கும் வியப்பும் வெளிப்படுத்தும் புதுமையும் இன்னதென்றும் இவ்வாறென்றும் வகுக்கவோ கூறவோ இயலாதது. கவிதை பல காலடிகள் பட்டிடாத ஒரு மர்மப் பிராந்தியமாகவே நீடிக்கிறது.

என்னுடைய சிறு வயதிலிருந்தே திருக்குறளை வாசித்திருக்கிறேன். அப்போதே திருவள்ளுவர் ஆச்சர்யம் அளிக்கக் கூடிய ஒருவராகவே இருந்திருக்கிறார். திருக்குறள் வாசிக்கும் எவருமே வள்ளுவரின் மேதமையையும் படைப்பூக்கத்தையும் பலமுறை நேருக்கு நேராகக் காணும் அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

ஆசிரியர்கள் பல வகையினர். சிறந்த ஆசிரியன் மிகப் பெரிய விஷயத்தை கற்றலின் ஆரம்ப படிநிலையில் இருக்கும் மாணவனைக் கூட ஆர்வத்துடன் தனது பிரும்மாண்டமான ஞானத்தின் வெள்ளத்தில் மாணவன் மீதான கருணையின் ஓடத்தில் பயணிக்கச் செய்பவராக இருக்கிறார். அந்த வெள்ளத்தில் சொந்த முயற்சியில் நீந்திக் கரை காணும் மாணவர்கள் உண்டு. ஓடத்தில் பயணிப்பவர்கள் உண்டு. பெரும் நாவாய்களை அதில் இயக்கியவர்கள் உண்டு. உள்ளத் தனையது உயர்வு.

பள்ளிப்பாடங்களில் திருக்குறள் படித்து, அம்மாவிடம் மனப்பாடம் செய்து ஒப்புவித்து, தேர்வுகளில் ‘’விசும்பின்’’ எனத் துவங்கும் குறளையும் ‘’தரும்’’ என முடியும் குறளையும் சரியாக எழுதி மதிப்பெண் பெற்று, இப்போது கவிதைகள் எழுதிக் கொண்டு கவிதைத் தொகுப்பு கொண்டு வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டம் வரையும் திருவள்ளுவர் வசீகரிக்கக் கூடியவராக இருக்கிறார்.

இப்போதும் எண்ணிப் பார்ப்பதுண்டு. ஒரு வாழ்க்கையில் எப்படி இத்தனை அனுபவங்கள். இத்தனை ஞானம். வள்ளுவரிடம் இந்த கேள்வியைக் கேட்கும் தோறும் அவர் புன்னகைக்கிறார். கங்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கைப்பிடி அள்ளிக் குடித்து தாகம் தணிந்தவர்கள் உண்டு. பல கைப்பிடிகள் அள்ளிக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்டவர்கள் உண்டு. தாகமும் கங்கையும் எப்போதும் இருக்கும். அவரவர் அவரவர் வழியில் தாகம் தணிப்பர்.

இளம் வயதில் ஒரு வணிகனாக திருவள்ளுவரை நான் மிகவும் நெருங்கினேன்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை. (பொருள் செயல்வகை)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள் (பொருள் செயல்வகை)

ஒரு வணிகன் இதன் பொருளை எத்தனை அணுக்கமாக அறிந்திருப்பான்.

வர இருக்கும் பொருளை நம்பி ஒரு வணிகச் செயலைத் துவக்குவது எத்தனை ஆபத்தானது என்பதை வணிகர்கள் அறிவார்கள். எதிர்பாராத இடையூறுகள் வரும். தொழிலில் சகஜமாக உறவைப் பேணியவர்கள் வேறு குரலில் பேசத் துவங்குவார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையலாம். எதிர்பாராத ஏதேனும் திடீரென முளைத்து வரலாம். எதிராளியிடம் ஒன்றை எதிர்பார்த்து செயல் செய்வது என்பது உண்மையில் சண்டையிடும் இரண்டு யானைகளுக்கு அருகில் நின்று சண்டையைப் பார்ப்பது போன்றதே. நம் கையில் இருக்கும் பொருள் இருக்கும் போது செயல் புரிந்தால் அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். கட்டுப்பாட்டை மீறும் எவற்றையும் சீரமைக்க மாற்றியமைக்க முடியும். நினைப்பதை நடத்திக் கொள்ள முடியும். கையில் பொருள் இல்லாமல் வினை ஆற்றுவது யானைகளுக்கு அருகிலிருந்து யானைச்சண்டையைப் பார்ப்பது. கையில் இருக்கும் பொருளுடன் வினை ஆற்றுவது என்பது குன்றின் மேல் நின்று அபாய உணர்வின்றி யானைச் சண்டையை அவதானிப்பது. ஒரு வணிகனிடம் சொல்ல வேண்டியதை எப்படி இவ்வளவு நுட்பமாக வள்ளுவர் சொன்னார்?

எனக்கு மிகவும் நெருக்கமான குறள்களில் ஒன்று.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. (வினைத்திட்பம்)

அளவினாலோ அனுபவத்தினாலோ சிறியதாக இருந்தாலும் மிக முக்கியமான பணியை எவராலும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த திருக்குறள் வழங்கியது. அளவில் பெரிய தேரில் மிக அவசியமான பணியை அச்சாணி ஆற்றுகிறது. உலகில் எதையும் பெரிது சிறிது என வகைப்படுத்திக் கொள்வது பகுதி அறிதலே. முழுமையான அறிதலும் புரிதலும் அனைத்தையும் உள்ளடிக்கியதாகவே இருக்கும்.

முயற்சியின் சிறப்பைக் கூறும்

கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்த

வேல் ஏந்தல் இனிது

என்ற திருக்குறளை எனது ஒவ்வொரு முயற்சிகளிலும் எண்ணிக் கொள்வது உண்டு.

ஆசான் அருகமர்ந்து மேலும் கற்பதற்கான விருப்பம் கூடிக் கொண்டே இருக்கிறது. திருவள்ளுவர் இனிமையாகக் கற்பிப்பவர். இனிதாகக் கற்பிக்கும் ஆசான் வாய்ப்பது ஓர் நல்லூழ்.