Monday, 8 March 2021

சாரம்

பிரவாகிக்கும் நதியில்
மிதக்கும் 
இலையும் மலரும்
துறையில்
நீரருந்தும்
ஆவினமும்
நதியை
என்னவாக உணர்கின்றன
*
மென்மையின் சாரல்கள்
நிறைந்திருக்கும்
உனது பிரதேசத்தின்
நிலத்தில்
உயிர்க்கும் 
உயிர்கள்
அடையும் அமரத்துவம்
எதனால்
*
உனது பிரியம்
என்பது
முடிவற்ற மன்னித்தலா
*

Sunday, 7 March 2021

நிதி சேர்க்கை

சிறு குழந்தைகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லாரும் கவனித்திருக்கலாம். உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் குழந்தைகள் அவர்களிடம் ‘’நீங்கள் எப்போது ஊருக்குப் போவீர்கள்?’’ என்று கேட்பார்கள். வீட்டில் அனைவரும் அவ்வாறு கேட்கக் கூடாது என்று கடிந்து கொண்டு சத்தம் போடுவார்கள். உண்மையில் எல்லா குழந்தைகளுமே வீட்டுக்கு வரும் உறவினர்களை விரும்பும்; அவர்கள் அதிக நாட்கள் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படும். ‘’ரொம்ப நாள் தங்கியிருப்பீர்கள் தானே?’’ எனக் கேட்க எண்ணி வேறு மாதிரி கேட்டு விடும். நானும் சிறு வயதில் அந்த மாதிரி கேட்டிருக்கிறேன். 

ஓர் அமைப்பை நடத்துவது என்பது பெரும் பணி. அத்திறன் எளிதில் கைவரப் பெற்றவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் நுண் செயல்பாடுகள். சிறிய அலகில் திட்டமிடப்படுபவை. செயலாக்கப்படுபவை. ’’செய்வன திருந்தச் செய்’’ என்னும் அடிப்படையில் வேலைகள் நடைபெறுகின்றன. கட்டுமானம் என்னுடைய தொழில் என்பதால் அத்தொழிலை மேற்கொள்வதன் பயிற்சி அமைப்பை வழிநடத்துவதிலும் உதவுகிறது. 

இருப்பினும் இவ்வாறான பணிக்கு நான் எதிர்பாராமல் வந்து சேர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். கட்டுமானப் பணி என்பது பணி இடத்தில் நாள் முழுதும் நின்று கொண்டே வேலைகளை மேற்பார்வையிட வேண்டும். கொதிக்கும் வெயிலில் எவ்வித அல்லலும் இல்லாமல் நிற்க பொறியாளர்களுக்குப் பயிற்சி உண்டு. வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டால் மனம் உடனே தயாராகி விடும். எங்கள் தொழிலில் ஒரு வேலையைச் சரியாகச் செய்யாமல் போனால் அதை சரி செய்வதையும் மீண்டும் நாம் மட்டுமே செய்தாக வேண்டாம். பிழை நிகழ்ந்து அதனைத் திருத்துவது என்பது மும்மடங்கு நேரத்தையும் ஆற்றலையும் கோரும்.  எனவே எதையும் முதல் தடவை செய்யும் போதே சரியாகத் திருத்தமாகச் செய்து விடுவது யாவர்க்கும் நலம்!

என்னுடைய தொழில் சார்ந்த பணிகளைத் தவிர மற்ற நேரத்தில் படைப்பூக்கச் செயல்பாடுகளில் (Creative) ஈடுபட்டிருப்பேன். அதன் இயல்புகளும் தன்மைகளும் முற்றிலும் வேறானவை. காந்திய இயக்கத்திலிருந்து இந்தியாவின் பெரும் படைப்பாளிகள் பலர் உருவாகி வந்திருக்கின்றனர். உலகெங்கும் கலைஞர்களுக்கு மேலான சமூகம் குறித்த கனவு இருந்திருக்கிறது; இருக்கிறது. 

என் ஆளுமையின் பகுதியாக இருக்கும் பொறியாளன் - கலைஞன் - சமூகச் செயல்பாட்டாளன் என்பது அவ்வப்போது கலந்து விடும். அவை சிறு சிறு குழப்பங்களை உண்டாக்கி விடுவது உண்டு. 

சில நாட்கள் முன்பு, ‘’காவிரி போற்றுதும்’’  சார்பில் செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு  வீட்டு வாசலில் மலர்ச்செடிகள் வைக்கும் முயற்சிக்கு உதவி செய்த நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். 

***
அன்புள்ள நண்பருக்கு,

நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? நான் இங்கே நலம்.

 

ஒரு புதிய விஷயத்தை முன்னெடுக்க உள்ளேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு நீங்கள் அளித்த நன்கொடை பெரிய தொகை. ஆதலால் இந்த முறை நீங்கள் நிதி அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ எவ்விதமான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது எந்த திசையில் நகர்கிறது என்பதை தங்களைப் போன்றோரிடம் தெரிவித்து ஆலோசிப்பது மனதுக்கு ஊக்கம் அளிக்கிறது.

 

கீழ்க்கண்ட இணைப்பை வாசிக்கவும். தங்கள் அபிப்ராயத்தைத் தெரிவிக்கவும்.

 

ஞான தீபம்

 

அன்புடன்,

பிரபு 


***

கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி ஒரு வசனம் பேசுவார். ‘’இந்தியாவிலயே ஏன் இந்த வேர்ல்ட்லயே கார் வச்சுருக்க கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்’’ என்று. 

அது போல நிதி தர வேண்டாம்; அபிப்ராயம் மட்டும் தெரிவியுங்கள் எனக் கேட்டது நாமாகத் தான் இருப்போம் என நினைக்கிறேன்!

 

நூல் அறிமுகம் : சிகாகோ பிரசங்கங்கள்

 


சிகாகோ பிரசங்கங்கள் ; சுவாமி விவேகானந்தர் , மொழிபெயர்ப்பு ; சுவாமி சித்பவானந்தா, பக்கம் : 41 விலை : ரூ. 10 வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், அ.கு.எ 639115.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உரையாற்றினார். மாநாட்டில் சுவாமிஜி ஆறு முறை உரையாற்றியிருக்கிறார். முதல் உரையிலேயே அவர் மாநாட்டில் கூடியிருந்தவர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். அவ்வுரை குறித்த தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியான போது ஒட்டு மொத்த அமெரிக்காவும் சுவாமிஜியைத் திரும்பிப் பார்த்தது. உற்று நோக்கியது. 

ஆறு உரைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. அவற்றைத் தொகுத்து வாசிக்கும் போது ஹிந்து மதம் குறித்தும் இந்தியா குறித்தும் சமயங்களின் இலக்குகள் மற்றும் எல்லைகள் குறித்தும் முழுமையான புரிதல் உண்டாகிறது. 

முதல் உரை

மாநாட்டில் கூடியிருந்தவர்களை, தன் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் உணர்ந்து அவ்வாறு அழைத்ததன் மூலமே மானுடம் தழுவிய தனது பார்வையை வெளிப்படுத்தினார். ‘’வசுதைவ குடும்பம்’’ என இந்திய மரபு கூறுவதும் அதையே என்பதை உணர்த்தினார். 

மதங்களுக்குள் சமரசம் நிலவ வேண்டும் என்பது சிகாகோ மாநாட்டின் முயற்சி. அத்தகைய தன்மை இந்திய மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்ததை சுவாமிஜி எடுத்துரைக்கிறார். யூதர்களும் ஜாரதுஷ்டிரர்களும் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான போது அவர்களுக்குப் புகலிடம் அளித்து அவர்கள் சமயத்தை அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வழிவகை செய்து கொடுத்த நாட்டிலிருந்து பண்பாட்டிலிருந்து தான் வந்தவன் என சுவாமிஜி குறிப்பிடுகிறார். 

நதிகள் கடலை அடைவது போல சமயங்கள் ஒவ்வொரு பாதையில் கடவுளை அடைகின்றன. சமய பேதத்தை மனதில் இருத்துவது அறியாமை என்கிறார் சுவாமிஜி. 

முதல் உரையிலேயே சுவாமிஜி பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பகவத்கீதையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ‘’எவர் என்னை எந்த வடிவில் வழிபட்டாலும் அதனை ஏற்பேன்’’ எனக் கூறுவதை எடுத்துரைக்கிறார். 

சிகாகோ மாநாடு துவங்கப்படுவதை உணர்த்த எழுப்பப்பட்ட மணியோசை மதவெறிக்கு சாவுமணியாக இருக்கட்டும் என முதல் உரையை நிறைவு செய்கிறார். 

இரண்டாவது உரை

சுவாமிஜி சிகாகோவில் தனது இரண்டாவது உரையில் இன்றும் மிகப் பிரபலமான ‘’கிணற்றுத் தவளை’’ கதையைக் கூறுகிறார். 

அந்த காலகட்டத்தில் உலகெங்கும் ஏகாதிபத்ய சக்திகள் தாங்கள் அடிமைப்படுத்திய நிலங்களில் வாழும் மக்களின் பண்பாட்டை அழிக்க கிருஸ்தவ மத பரப்புனர்களை அனுப்பிக் கொண்டிருந்தன, அவர்கள் உலகெங்கும் கிருஸ்துவமே உயர்ந்தது என பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த பின்புலத்தில், சுவாமிஜியின் ’’கிணற்றுத் தவளை’’ கதை மேலும் கூடுதல் அர்த்தங்கள் பொதிந்தது. 

தங்களைச் சமயவாதிகள் எனக் கருதிக் கொள்பவர்கள் திறந்த மனத்துடன் உரையாடக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். 

மூன்றாவது உரை

இந்திய மண்ணில் எண்ணற்ற வழிபாட்டு வழிமுறைகள் இருப்பதை சுட்டிக் காட்டும் சுவாமிஜி அவற்றுக்கு வேதங்களே அடிப்படை என்கிறார். வேதங்கள் எவ்விதம் பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கான அடிப்படையாக இருக்கிறது என்பதையும் சுவாமிஜி விளக்குகிறார்.ஆலய வழிபாட்டிலிருந்து அத்வைத உணர்வு வரை அனைத்தும் இந்திய மண்ணின் பகுதியாக விளங்குவதை சுட்டிக் காட்டுகிறார். இந்த உரையில் சுவாமிஜி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர் என்ற முறையிலும் அத்வைதியாகவும் அத்வைதத்தின் மேலான தன்மை குறித்து விரிவாக எடுத்துரைக்கிறார். 

நான்காவது உரை

மேலை நாடுகளின் மனசாட்சியை நோக்கி சுவாமிஜி ஒரு இந்தியத் துறவியாக எங்கள் மக்களுக்கு இப்போதைய தேவை உணவு ; மதம் அல்ல என்பதை துணிச்சலாகக் கூறுகிறார். 

ஐந்தாவது உரை

இந்த உரையில் சுவாமிஜி தான் ஒரு பௌத்தன் என்கிறார். ஹிந்துக்கள் புத்தரைக் கடவுளாகவும் அவதார புருஷராகவும் கருதுகிறார்கள் என்கிறார். 

புத்தர் கருணையின் வடிவமாக இருந்ததை எடுத்துக் காட்டும் சுவாமிஜி அவர் வறியவர்களுக்கு உதவி செய்வதையே மகத்தான ஒன்றாகக் கருதியை சுட்டிக் காட்டுகிறார். 

உண்மையில் நான்காவது உரைக்கும் ஐந்தாவது உரைக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. மக்கள் மீதான கருணையே மேலை நாடுகளின் நோக்கம் எனில் புத்த மதத்தைப் போல ஏழைகளுக்கு உதவுவதே உங்கள் சமயமாக இருக்கும்; உங்கள் நோக்கங்கள் வேறானவை என்பதை நேரடியாகத் தெரிவிக்காமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார். 

இறுதி உரை

மதமாற்றம் உலகில் அமைதியின்மையையும் கொடுஞ் செயல்களையுமே உண்டாக்கும் என்றும் மதமாற்றம் எதற்குமே தீர்வு அல்ல; அதுவே எல்லா சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணம் என்றும் சுவாமிஜி சொல்கிறார்.  


Saturday, 6 March 2021

முதல் ஆதரவு - கடிதம்

 அன்பின் பிரபு

இதை ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சியாகவே பார்க்கிறேன். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டுள்ளன. உங்களின் அனைத்து முயற்சிகளும் சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். 

அன்புடன்
உலகநாதன்

அன்புள்ள உலகநாதன்,

ஸ்ரீநிவாஸைப் போல நீங்களும் திருவாரூர்க்காரர் என்பதை கடிதத்தின் முதல் வரியை வாசிக்கும் போது நினைவுபடுத்திக் கொண்டேன். ஆரூரின் அடையாளம் ஆழித்தேர் தானே!

இந்தியாவில் வாழ்க்கை என்பது பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. வேண்டுமானால் இப்படியும் சொல்லலாம் : உலகில் எந்த மண்ணை விடவும் ஒப்பீட்டளவில் நம் மண்ணில் கூடுதலாகக் கொண்டாட்டம் இருந்திருக்கிறது. 

இசை , கூத்து ஆகியவை அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெற்று இருந்திருக்கின்றன. ஒரு கிராமத்தில் தான் எத்தனை விதமான விளையாட்டுக்கள் விளையாடியுள்ளனர். இன்றும் இந்தியாவில் சங்கீதக் கச்சேரிகள் பெரும் கொண்டாட்டங்களே. 

அன்னியக் கல்வி முறை ஓயாமல் இந்தியர்களிடம் நூற்றாண்டுகளுக்கு மேலாக மெல்ல சொல்லிக் கொண்டே இருந்தது : நீங்கள் வறியவர்கள் . நீங்கள் நாகரிகம் இல்லாதவர்கள். நீங்கள் எதையும் நிர்மாணிக்க இயலாதவர்கள் என. நமது நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவார்களாயின் அளப்பரிய சாதனைகள் இங்கே நிகழும். 

நான் தினமும் சாமானிய மக்களைச் சந்திப்பவன். இன்று நாம் மரக்கன்றுகள் வழங்கிய கிராமத்துக்குச் சென்றிருந்தேன். தைப்பூசத்தன்று சென்றிருந்தேன். பின்னர் இன்று செல்கிறேன். ஒரு பெண் என்னைப் பார்த்ததும் ‘’சார்! எங்க வீட்டுக்கு பாரிஜாதக் கன்னு ஒண்ணு வேணும் சார். கோயில்ல பூஜைக்கு வேணும்’’ என்றார். என்னிடம் கேட்டதுமே பாரிஜாதக் கன்று நடப்பட்டு வளர்ந்து பூத்து அதன் மலர் இறைவனுக்கு அர்ப்பணம் ஆகி விட்டதைப் போல அப்பெண்ணுக்கு பூரிப்பு. ‘’ரெண்டு நாள்ல திரும்ப வருவேன். அப்ப வாங்கிட்டு வரேம்மா’’ என்றேன். 

ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் நாம் தந்த அரளி பூச்செடிகள் நல்ல உயரம் வளர்ந்து பூத்துள்ளன. காணவே மகிழ்ச்சியாக இருந்தது. 

மக்கள் நுட்பமாக இருக்கிறார்கள். நுட்மான ஒன்றை நுட்பமாகவே ஏற்கிறார்கள். 

உங்களைப் போன்ற நண்பர்கள் உடனிருந்து அளிக்கும் உற்சாகம் நம் செயல்பாடுகளைக் கொண்டாட்டமாக ஆக்குகின்றன. 

அன்புடன்,
பி ம

Friday, 5 March 2021

நூல் அறிமுகம் : சுவாமி விவேகானந்தர்



நூல் : சுவாமி விவேகானந்தர் ஆசிரியர் : ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பக்கம் : 106  வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  அ கு எ :639115. விலை : ரூ. 27/- 

இந்தியா என்னும் நிலப்பரப்பு வெறும் பௌதிக நிலம் அன்று. பல்லாயிரம் ஆண்டுகளாக உயிரினங்களில் சிந்தனை என்னும் சிறப்பு அம்சம் கொண்டதான மனித இனம் வாழ்தலில் ஆக உயர்ந்த நிலையை எய்துவதற்கான சாதனங்களை உருவாக்கித் தருவதை தம் கடமையெனக் கருதி மேற்கொண்டு வருவது இம்மண்ணின் மகத்துவங்களில் ஒன்று. மிருக நிலையிலிருந்து உயர்ந்த அமர நிலைக்கு மனித வாழ்வைக் கொண்டு செல்லுதலே இந்திய வாழ்முறையின் நோக்கமாயிருந்திருக்கிறது. ஞானியரின் யோகியரின் பக்தர்களின் பெருநிரை ஒன்று இம்மண்ணில் தொடர்ந்து இலங்கிய வண்ணமே இருக்கிறது. அத்தன்மையுடையோரில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். சுவாமிகளைப் பற்றி ஸ்ரீராமகிருஷண சிஷ்ய மரபில் வந்தவரான ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இந்நூலை இயற்றியுள்ளார். 

இந்திய மரபு, மனிதனின் ஆத்மீகப் பாதை பல பிறவிகளாகத் தொடர்வது எனக் கூறுகிறது. எனினும் ஒரு குரு தன் ஆத்மீக சாதனையை திறனும் கவனமும் அர்ப்பணிப்பும் மிக்க தம் சீடனுக்கு எளிதில் வழங்கிட முடியும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து ஆன்மீக ஞானம் பெற்றவர் சுவாமி விவேகானந்தர். 

சுவாமிஜியின் பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் மூன்றாவதாகப் பிறக்கிறார் சுவாமிஜி. சிறு வயதிலேயே சேட்டைகள் பல புரிபவராக இருக்கிறார். சுவாமிஜியின் அன்னை சிவபெருமானிடம், ‘’நீ எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினேன். நீ உன் பூத கணம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறாயே ‘’ என்கிறார். சிறு வயது முதலே இறை உரு முன் தியானத்தில் நெடுநேரம் அமர்ந்து விடுவது சுவாமிஜியின் பழக்கம்.

பால பருவத்தில் , சுவாமிஜி வாழ்வில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அவருடைய கல்வி எவ்விதம் நிகழ்ந்தது என்பதையும் விளக்குகிறார். 

குருதேவர் ராமகிருஷ்ணரால் ஆட்கொள்ளப் படுவது, குருவுக்குப் பின், மடத்தை உண்டாக்குவது. பரதேசியாக நாடு முழுதும் அலைந்து திரிந்தது, சிகாகோ சர்வ மத சபை என சுவாமிகளின் வாழ்விலும் இந்திய வரலாற்றிலும் முக்கியமான இந்நிகழ்வுகளை சுவை பட விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தர். 

சுவாமிஜி, சுவாமிஜியின் இந்திய மேல்நாட்டு சீடர்கள், ஆற்றிய பணிகள், அவருடைய செய்தி என அனைத்தைப் பற்றியும் சுருக்கமான அறிமுகம் அளிக்கக் கூடிய நூல்.  

 

முதல் ஆதரவு

 ஆதித்ய ஸ்ரீநிவாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வரும் திருவாரூர்க்காரரான திரு. க. ஸ்ரீநிவாஸ் என் நண்பர். தற்போது கர்நாடக மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணி புரிந்து வருகிறார். சலூன் நூலகங்கள் குறித்து அவரிடம் பேசினேன். துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன். தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விஷயத்தைக் கொண்டு சென்று அவர்கள் உதவியுடன் குறைந்தபட்சம் 100 சலூன்களுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறினார். எனக்கு அது பெரிய நம்பிக்கையை அளித்தது. 

நண்பா! நீ என் மீது வைத்துள்ள அன்புக்கும் பிரியத்துக்கும் மதிப்புக்கும் மிக்க நன்றி. உனக்கு எல்லா நலன்களும் கிட்டட்டும்!

அவர் தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உதவி கேட்டு எழுதிய கடிதத்தைக் கீழே தருகிறேன். 


அன்புள்ள நண்பருக்கு,

“Books are the quietest and most constant of friends; they are the most accessible and wisest of counselors, and the most patient of teachers.”– Charles W. Eliot

வாசிக்கும் சமூகம் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அப்படியான ஒரு இடம் நோக்கி சிறு அடிவைப்பு. முதல் படி இது. பொது இடங்களில் புத்தகங்களை வைப்பதைவிட அச்சிட்டு எல்லோருக்கும் இலவச வினியோகம் செய்வதை விட சிறிது நேரம் கண்டிப்பாக காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும் இடங்களில் புத்தகங்கள் இருந்தால்?


அப்படியான ஒரு இடமாக சலூன்கள் உள்ளன. எப்படியும் நாம் குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் வரை காத்திருக்க நேரும் இடம் சலூன். அங்கு கண்ணில் படும்படி ஒரு பத்து புத்தகம். வரும் வாடிக்கையாளர்களில் பத்தில் ஒருவர்  படித்தால் கூட போதும். ஒரு மாவட்டத்தில் இருக்கும் அத்தனை சலூன்களிலும் புத்தகங்களிருந்தால்?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காக்கள் - மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம். தோராயமாக 500 சலூன்கள். ஒரு கடைக்கு 10 புத்தகங்கள். எல்லாம் சிறிய முக்கியமான புத்தகங்கள். பத்து புத்தகங்களுக்கு ஆகும் செலவு ரூ.100. ஒருவர் ரூ.100 அல்லது அதிகபட்சம் ரூ.200 கொடுத்து உதவலாம்.

இதனை முன்னெடுப்பவர் என் நெருங்கிய நண்பர் 'மயிலாடுதுறை பிரபு'. இவர் காவிரி போற்றுதும் எனும் ஒரு தன்னார்வ முன்னெடுப்பின் மூலம் மயிலாடுதுறை தாலுக்காவில் ஒரு கிராமத்தில் சுமார் 20000 மரக்கன்றுகளை நட்டுள்ளார் .அவருடைய திட்டமிது. செவ்வனே செய்து முடிப்பார்.

ஆக உங்களிடம் நான் கோருவது ரூ.100 அல்லது ரூ.200. எதுவானாலும்.


இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் உங்கள் கொடை ஒரு புத்தகத் திரட்டாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஏதாவது ஒரு சலூனில் இருக்கும். அறிவாக மக்களில் மலரும்.

"A thousand mile journey starts with one single step."

அன்புடன்
க.ஸ்ரீநிவாஸ்

Thursday, 4 March 2021

ஞான தீபம்

நான் வாடிக்கையாகச் செல்லும் சலூனின் உரிமையாளர் எனது நண்பர். இளைஞர். சமூகப் பிரக்ஞை உள்ளவர். 

சென்ற ஆண்டில் நான் அங்கு சென்றிருந்த போது அவரிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். 

‘’தம்பி! சலூன் -ல சின்னதா ஒரு புக் ஷெல்ஃப் வைங்க. இருபது முப்பது புத்தகம் வைக்கற மாதிரி. என்கிட்ட ஆயிரம் புக்ஸுக்கு மேல இருக்கு. அதுல இருந்து முப்பது புத்தகம் உங்களுக்கு கிஃப்ட்டா தர்ரேன். சலூனுக்கு வர்ரவங்க வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது வாசிக்கக் கொடுங்க. யூஸ் ஃபுல்லா இருக்கும். ‘’

‘’எங்க அண்ணன்! எல்லார் கையிலும் செல்ஃபோன் இருக்கு. எல்லாரும் செல்ஃபோனைத் தோண்டிட்டு இருக்காங்க’’

‘’உண்மை தான் தம்பி. மனுஷங்கள்ள பெரும்பாலானவங்க பழக்கத்துக்கு அடிமையா இருக்கறவங்க தான். ஆனா அவங்களுக்கும் எது சரி எது தப்புன்னு தெரியும். ஒரு சலூன்ல லைப்ரரி போல ஒரு சிஸ்டம் இருக்கறத அவங்க ரொம்ப வேல்யூ உள்ளதா நினைப்பாங்க’’

’’அண்ணன் கடையில சில இண்டீரியர் ஒர்க் பண்ணலாம்னு இருக்கன். அப்ப ஒரு புக் ஷெல்ஃப் அரேஞ்ச் பண்றேன். ‘’

சில மாதங்கள் சென்றன. அவர் சலூனில் ஒரு ஏ.சி.யைப் பொருத்தினார். சுழலும் நாற்காலிகளை புதிதாக வாங்கிப் போட்டார். எனினும் அவர் திட்டமிட்ட விதத்தில் தச்சுவேலை எதையும் செய்யவில்லை. தற்காலிகமாக அதனை தள்ளி வைத்தார். 

ஒருமுறை நான் சென்றிருந்த போது உற்சாகமாக வரவேற்றார். 

‘’அண்ணன்! விஷயம் கேள்விப்பட்டீங்களா!’’

‘’என்ன விஷயம் தம்பி?’’

‘’தூத்துக்குடி-ல ஒரு சலூன்ல லைப்ரரி மாதிரி நிறைய புக்ஸ் வச்சுருக்காங்க. முடி வெட்டிக்க வர்ரவங்க அந்த புக்ஸை எடுத்துப் படிக்கிறாங்க. பிரைம் மினிஸ்டர் ரேடியோவில பேசற ‘’மன் கி பாத்’’ நிகழ்ச்சில அந்த சலூன் கடைக்காரரோட பேசியிருக்கார் அண்ணன்’’

‘’அப்படியா! நல்ல விஷயம் தம்பி. நிறைய பேருக்கு இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்கறது போய் சேரும். இன்னும் பல பேரு கூட செஞ்சு பாப்பாங்க’’

அந்த உரையின் ஒரு பகுதியின் காணொளியை எனக்கு தன்னுடைய அலைபேசியில் காண்பித்தார். 

‘’அண்ணன்! நாம முன்னாடி பிளான் செஞ்சதைப் போல ஏதாவது செய்யணும் அண்ணன்.’’ சகோதரர் மிகவும் ஆர்வமாக இருந்தார். 

‘’நான் யோசிக்கிறேன் தம்பி’’

வீட்டுக்கு வந்து யோசித்தேன். நடந்த சம்பவங்கள் மனதில் முன்னும் பின்னுமாய் வந்து போயின. ஒரு விஷயம் குறித்து யோசிக்கையில் நான் அதனை மனதில் ஆழ விட்டு விடுவேன். நாம் எதிர்பார்க்காத கணம் ஒன்றில் ஒரு யோசனை அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு அவதானம் மேலெழுந்து வரும். அப்படி ஒரு யோசனை உண்டானது. 

மறுநாள் நான் சலூன்கடைக்காரரைச் சந்தித்தேன். 

‘’தம்பி! நீங்க சொன்ன விஷயத்தை யோசிச்சுப் பார்த்தேன். ஒரு ஐடியா தோணுச்சு.’’

‘’சொல்லுங்க அண்ணன்’’

‘’இப்ப நம்ம ஊர் மாவட்டத் தலைநகரா ஆகியிருக்கு. தமிழ்நாட்டோட சின்ன மாவட்டங்கள்ல ஒன்னு. இந்த மாவட்டம் முழுதும் எத்தனை சலூன் இருக்கும்?’’

அவர் யோசித்தார். 

‘’நம்ம மாவட்டத்துல மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்னு நாலு தாலுக்கா இருக்கு. நாலு தாலுக்காவிலயும் மொத்தமா 250 கிராமங்கள் இருக்கு. சராசரியா மூணு கிராமத்துக்கு ஒரு சலூன்னு வச்சுகிட்டா கிராமங்கள்-ல 80-லிருந்து 100 சலூன் இருக்கும். பெரிய டவுன், சின்ன ஊர்னு சேர்த்தோம்னா மொத்தம் 400 சலூன் இருக்கும்’’

‘’கரெக்ட் தான் சார்! 400 - 500 சலூன் இருக்கும்’’

‘’நாம இந்த 400 சலூன்லயும் பத்து புக் தர்ரோம். ஒரே நாள்ல நம்ம மாவட்டம் முழுக்க இருக்கற சலூன்கள் சலூன் லைப்ரரியா ஆகுது.’’

‘’கொஞ்சம் பெரிய வேலையாச்சே சார்’’

‘’பெரிய வேலை தான். ஆனா முக்கியமான வேலை. நாம சேந்து செய்வோம். உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணுமோ அத நான் கொடுக்கறன். இதைப் பத்தி நீங்க யோசிங்க. உங்களுக்கு இது சம்பந்தமா மனசுல என்ன கேள்விகள் வருதோ அதுக்கு நான் பதில் சொல்றேன். நாம இந்த விஷயம் சம்பந்தமா சேர்ந்து யோசிப்போம். வேதத்தில ஒரு மந்திரம் இருக்கு.

‘ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனம் ஒன்றாகட்டும்’ ‘’

அவர் யோசிக்கட்டும் என நான் வீட்டுக்கு வந்து விட்டேன். 

நானும் வீட்டுக்கு வந்து ஒவ்வொரு சலூன் நூலகத்திலும் இருக்க வேண்டிய பத்து நூல்கள் என்னவாக இருக்கலாம் என யோசித்தேன். அந்த பத்து நூல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தரின் நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்தேன். 




இந்தியாவில் பலருக்கு சுவாமி விவேகானந்தர் பெரும் உந்து சக்தியாக விளங்கியுள்ளார். சமூக சேவகர்கள், கல்வியாளர்கள், தொண்டு புரிபவர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் என பலருக்கு சுவாமிஜியே சிந்தனையின் அடித்தளமாக இருந்துள்ளார். எனவே இந்த பத்து நூல்களும் சுவாமி விவேகானந்தரை அடிப்படையாய்க் கொண்டு இருப்பது உகந்ததாக இருக்கும் என்று எண்ணினேன். 




சுவாமி சித்பவானந்தர் தமிழ் அறிஞர். தமிழில் விவேகானந்த இலக்கியத்தில் முக்கியமான முன்னோடி. அவருடைய தமிழ்த் தொண்டு தமிழ்நாட்டுச் சூழலில் முழுதாக உணரப்படவில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. மொழி, சமயம், இலக்கியம், ஆன்மீகம், சமூகம் சார்ந்து பலநூல்களை இயற்றியவர். தமிழ்நாட்டில் பெரும் கல்வி மற்றும் சமூகப் பணியாற்றியவர். அவர் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய நூல்களாக இந்த 10 நூல்களும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். 

1. சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகாந்தரின் வாழ்க்கையை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நூல். 

2. ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை விரிவாக முன்வைக்கும் நூல். சுவாமிஜி குறித்து ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து சுவாமிஜி வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து சுவாமிஜி இளைஞர்களுக்கு விடுத்த அறைகூவல் குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல். 

3. சிகாகோ பிரசங்கங்கள்

சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜி ஆற்றிய சரித்திர பிரசித்தி பெற்ற உரைகளின் தொகுப்பு இந்நூல்.

4. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்

சுவாமிஜி சிகாகோவில் உரையாற்றிய பின் இந்தியா திரும்புகையில் கப்பலில் இராமேஸ்வரம் பாம்பன் வந்தடைகிறார். அவர் பாம்பன், இராமேஸ்வரம், இராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் உரையாற்றியுள்ளார். அந்த உரைகளின் தொகுப்பு இந்நூல். 

5. விவேகானந்த உபநிஷதம்

சுவாமிஜி அமெரிக்காவில் தன் மேலைச் சீடர்களுடன் ‘’ஆயிரம் தீவுச் சோலை’’ என்னும் இடத்தில் தங்கியிருந்து அவர்களுக்கு வேதாந்தத்தைப் போதித்தார். அந்த போதனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 

6. ஸ்ரீராமகிருஷ்ண சரிதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர். நமது நாடும் நமது பண்பாடும் அழியாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும். அவரது வரலாற்றை எடுத்துரைக்கும் சிறுநூல். 

7. இராமாயணம்

சுவாமி சித்பவானந்தர் வால்மீகி இராமாயணத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

8. மகாபாரதம்

சுவாமி சித்பவானந்தர் வியாச பாரதத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

இந்த எட்டு நூல்களும் சுவாமி சித்பவானந்தர் இயற்றியவை. 

9. ஆத்ம போதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அத்வைதி. அத்வைதத்தின் ஆச்சார்யரான ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட நூல் ஆத்ம போதம். திரு. வி.எஸ். நரசிம்மன் என்பவர் சுலோகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

10. கந்தர் அனுபூதி

அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட ‘’கந்தர் அனுபூதி’’. 

இந்த பத்து நூல்களும் கொண்ட தொகுப்பு இந்தியா குறித்து இந்திய ஆன்மீகம் குறித்து இந்தியப் பண்பாடு குறித்து மிக நல்ல அறிமுகம் அளிக்கக் கூடியவை. 

அவற்றை இணையத்தில் rktapovanam(dot)org தளத்தில் ஆர்டர் செய்தேன். இரண்டு நாளில் கைக்கு வந்தது. நண்பரின் சலூனில் கொண்டு போய் வைத்தேன். 

‘’தம்பி! எந்த நல்ல விஷயத்தையும் உடனே செய்யணும். சுபஸ்ய சீக்கிரம்-னு சொல்லுவாங்க. இந்த புக்ஸ்ஸை சலூன்ல வைங்க. ஒரு வாரம் பத்து நாள் பாருங்க. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு. கஸ்டமர் என்ன மாதிரி கேள்வி கேக்கறாங்க. எப்படி ரிஸீவ் பன்றாங்கன்னு அப்சர்வ் பண்ணுங்க. அடுத்து என்ன செய்யலாம்னு நாம அப்புறம் யோசிக்கலாம்’’

ஒரு வாரம் கழித்து நான் சலூனுக்குச் சென்றேன். 

‘’அண்ணன்! நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குன்னன். தினமும் அஞ்சு ஆறு பேர் புக் எடுத்து படிக்கிறாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்கறாங்க அண்ணன்’’ 

‘’தம்பி! சுவாமிஜி நம்ம நாட்டையே உருவாக்கினவர். மகாத்மா காந்தி, அரவிந்தர், திலகர், வல்லபாய் படேல், நேரு, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் னு பலபேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவரு. இன்னைக்கு நம்ம தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில அது ஸ்கூலோ காலேஜ்ஜோ சுவாமிஜி பத்தி ஒரு வார்த்தை இல்லை. குழந்தைகளும் இளைஞர்களும் அவங்க பள்ளிப்படிப்பு வழியா சுவாமி விவேகானந்தரைக் கேள்விப்பட கூட வழி இல்ல. இன்னைய தேதில ஒரு கவர்மெண்ட் ஸ்கூலோ காலேஜோ செய்யாதத நீங்க செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நிச்சயம் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் தம்பி.’’

மேலும் சில நாட்கள் சென்றன. நான் அவ்வப்போது சென்று பார்த்து வந்தேன். அவருக்கு சில விஷயங்கள் குறித்து விளக்கம் தேவைப்பட்டது. அவற்றைக் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த பதில்களைத் தந்தேன். 

1. அண்ணன்! சலூன் -ல ஆன்மீகப் புத்தகங்கள் இருக்கறது பொருத்தமா இருக்குமா?

தம்பி! மகாபாரதத்துல ஒரு கதை இருக்கு. ஒரு யோகி ரொம்ப வருஷம் தவம் செஞ்சு நிறைய சித்திகளை அடையறாரு. அவர் தவம் செஞ்சுகிட்டு இருக்கும் போது வானத்துல பறக்கற ஒரு பறவை அவர் மேல தெரியாம எச்சமிட்டுடுது. அதை அவர் கோபத்தோட பாக்கறார். அது எரிஞ்சு சாம்பலா விழுந்திடுது. தான் தவத்துல ரொம்ப பெரிய இடத்துக்கு வந்துட்டோம்னு பல வருஷ தவத்தை முடிச்சுட்டு ஊருக்குள் வர்ராறு. 

ஒரு வீட்டு வாசல்ல நின்னு ‘’பவதி பிக்‌ஷாம் தே ஹி’’ன்னு பிச்சை கேக்கறார். அந்த வீட்டு அம்மா பிச்சை போட வர நேரமாகுது. அவங்க வந்ததும் கோபமா பாக்கறாரு. அந்த அம்மா ‘’ என்ன முனிவரே! என்ன கொக்குன்னு நினைச்சீங்களா உங்க பார்வையாலே எரிக்கறதுக்கு ‘’ன்னு சிரிச்சிட்டே கேக்கறாங்க. முனிவருக்கு ரொம்ப அதிர்ச்சி. உங்களுக்கு எப்படி நடந்ததை அறியுற தவவலிமை வந்ததுன்னு கேக்கறாரு. 

தவம் செய்யறவனுக்கு மட்டும்தான் தவவலிமை கிடைக்கும்னு இல்லை. தன்னோட கடமையை முழுமையாச் செய்றவனுக்கும் தவவலிமை கிடைக்கும். உடம்பு முடியாத என்னோட கணவருக்கு நான் சிரத்தையா பணிவிடை செய்றன். அதனால எனக்கு இந்த சித்தி கிடைச்சுதுன்னு அந்த அம்மா சொல்றாங்க. 

அந்த அம்மாட்ட அந்த முனிவர் ஞானோபதேசம் செய்யச் சொல்றாரு. 

இந்த ஊர்ல கடைத்தெருவுல ஒரு இறைச்சிக் கடை இருக்கு. அந்த இறைச்சிக் கடைக்காரர போய் பாருங்க. அவர் தான் உங்களுக்கு உபதேசம் செய்ய மேலும் பொருத்தமானவர்னு சொல்றாங்க. 

முனிவர் அந்த இறைச்சிக்கடைக்காரரைப் பார்க்கப் போறார். 

அந்த இறைச்சிக் கடை ஒரே சந்தடியா இருக்கு. பிராணிகளோட ரத்தம், எலும்பு , தோல்னு சிதறிக் கிடக்கு. முனிவர் அங்க போய் நிக்கறார், கடைக்காரர் அவரைப் பார்த்ததும் ‘’வாங்க முனிவரே! உங்களை அந்த அம்மா அனுப்பினாங்களா. கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? நான் என்னோட வேலைகளை முடிச்சுட்டு வர்ரேன்னு சொல்றார். 

முனிவர் ரொம்ப நேரமா காத்திருக்கார். சாயந்திரமா வியாபாரத்தை முடிச்சுட்டு கடையை சுத்தமாக் கழுவி விட்டுட்டு முனிவருக்கு ஸ்வதர்மம் பத்தி உபதேசம் செய்றார். 

இது மகாபாரதக் கதை தம்பி. 

தன்னோட கடமையை முழுமையாச் செய்றது தான் ஆன்மீகம்னு சுவாமி விவேகானந்தர் சொல்றார். நீங்க சமூகப் பிரக்ஞையோட ஒரு நல்ல காரியம் செய்யறீங்க. அதை எங்கயும் செய்யலாம் தம்பி. தீபம் எங்க இருந்தாலும் ஒளி கொடுக்கும். மல்லிகை எப்போதும் மணம் வீசும். 

2. புத்தகங்களை யாராவது வீட்டுக்கு எடுத்துப் போய் வாசிக்கக் கேட்டா என்ன செய்றது?

அவசியம் கொடுங்க தம்பி. என் கையில நான் ஸ்பேரா சில புக்ஸ் வச்சுக்கறன். அதுல இருந்து ரீ-பிளேஸ் பண்றேன். 

3. ஒரு நாளுக்கு 5 அல்லது 6 பேர் தான் படிக்கிறாங்க. எல்லாரும் படிக்கறது இல்லையே?

அதாவது தம்பி நாம இப்ப செய்யறது முதல் முயற்சி. மாவட்டம் முழுசும் 500 இடத்துல இருந்தா ஒரு நாளைக்கு ஒவ்வொரு சலூன்லயும் ஒருத்தர்னு எடுத்துப் பார்த்தா கூட 500 பேர் தினமும் பார்க்கறாங்கன்னு அர்த்தம். ஒரு மாசத்துக்கு ஒரு வருஷத்துக்குன்னு கணக்கு போட்டு பாருங்க. எத்தனை பேரை ரீச் செய்யும்னு யோசிங்க. 

அண்ணா ஹசாரே ஒரு ரயில்வே ஸ்டேஷன் புக் ஷாப்-ல தற்செயலா சுவாமி விவேகாந்தர் புத்தகத்தை வாசிக்கறார். அதுதான் அவர் வாழ்க்கைல ஒரு முக்கியமான திருப்புமுனையா இருந்துச்சு. ‘’ரலேகான் சித்தி’’ மாதிரி கிராமத்தோட அடிப்படை அது. 

நம்ம முயற்சி என்ன பலன் கொடுக்கும் நம்மால முழுக்க கணிச்சுற முடியாது தம்பி. 

4. இப்ப நான் என்ன செய்யணும்?

’’தம்பி! நான் ஃபிரண்ட்ஸ் சில பேர்ட்ட பேசி இருக்கேன். அவங்க சப்போர்ட் பண்றேன்னு சொல்றாங்க. அவங்களுக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு. 400 சலூன். சலூனுக்கு 10 புக்-னா மொத்தம் 4000 புக்ஸ். நாம ஃபிரண்ட்ஸ் சப்போர்ட்டோட புக்ஸை வாங்கிடுவோம். அப்புறம் ஒவ்வொரு சலூனுக்கும் நேரா போய் விஷயத்தைச் சொல்லி கொடுத்துட்டு வருவோம். நல்ல விஷயத்தை எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க தம்பி. உங்க சலூன்ல ஒரு மாசமா இந்த 10 புக்ஸ் இருக்கு. உங்க எக்ஸ்பீரியன்ஸ அவங்களுக்கு சொல்லுங்க. அது இன்னும் பொருத்தமா இருக்கும்.’’

5. இது பெரிய அளவில பலன் கொடுக்குமா சார்?

இது சின்ன அளவில பலன் கொடுத்தாக் கூட நிறைய பேருக்கு பிரயோஜனமா இருக்கும் தம்பி. 

6. இதுல வேற ஏதும் சிறப்பா செய்யனுமா?

மார்ச் 15 அன்னைக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி. அன்னைக்கு நம்ம மாவட்டத்துல உள்ள எல்லா சலூன்லயும் இந்த பத்து புக்ஸ் இருக்கற மாதிரி ஏற்பாடு செய்யலாம். 

வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. 

இந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 



 

நிறை

ஒரு சின்னஞ்சிறு தீச்சுடரை
ஒளிரும் மலர் ஒன்றை
அந்தியின் முதல் விண்மீன் புன்னகையை
இன்றுயிர்த்த ஒரு தளிரை
அகமெங்கும்
நிறைக்கிறேன்
நீ
நிறைந்த
அகம் எங்கும்

Tuesday, 2 March 2021

நீ என்று

நீ என்று
வான விரிவை
புள் சிறகை
மலர்தலை
அலைகடல் குளிர்மையை
கருணை நிரம்பிய விழிகளை
மெல்லிய மென்மையை
ஸ்படிக ஒளிர்தலை
இசையின் இனிமையை
எதனைச் சொல்வேன்
நீ என்று
எதனைச் சொல்வேன்

ஏன்

உனது மேஜையின் 
பேப்பர் வெயிட்டின் வர்ணங்களை
ஒரு கணம்
ஆச்சர்யமாக நோக்கும் போது

*

உனது வாகனத்தை 
சீராக இயக்குகையில்
உன் அகத்துக்கு சில மீட்டர் முன்னால்
ஒரு வீட்டில்
பூத்திருக்கும்
சிவப்பு விருட்சிப் பூக்களைக்
காணும் போது

*

சில நிமிடங்கள்
உன் கைக்கு வந்து சேர்ந்து விட்ட
குழந்தையின் நெற்றியை
உன் நெற்றியுடன் சேர்த்து 
வைத்துக் கொள்ளும் போது
அதன் விழிகளை நோக்கும் போது

*

வானத்தில் முழு நிலா
நிறைந்திருக்கும் போது

*
எப்போதாவது
நீ
ஏன் 
கண் கலங்குகிறாய்?