Monday, 7 August 2023

உலகங்கள்

இன்று ஊரின் பிரபலமான வீதியொன்றில் குடியிருக்கும் ஒருவரைக் காண எனது நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். இப்போது அந்த வீதியில் வங்கிகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருத்துவ பரிசோதனை நவீன ஆய்வகங்கள், சிறிதும் பெரிதுமான கடைகள் ஆகியவை பரவலாக உள்ளன. எங்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வீதியில் இருந்த ஒரு சில தொன்மையான வீடுகளில் நாங்கள் சென்ற வீடும் ஒன்று. அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலத்துக்குச் சென்று விட்டார் போல ஒரு உணர்வு. அந்த வீட்டைக் கட்டி 60 ஆண்டுகள் ஆகியிருக்கக் கூடும். இருப்பினும் புத்தம் புதிதாக இருக்கிறது. வீட்டின் தரை சுவர்கள் ஆகியவை மிக மிகத் தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டில் வயது முதிர்ந்த இரு முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். பணியாளர்கள் ஓரிருவர் காலை மாலை வந்திருந்து பண்டங்களை வாங்கிக் கொடுத்து விட்டு செல்கிறார்கள். வாசலில் ஒரு கேட். அங்கிருந்து பத்து அடி தள்ளி நிலைக்கதவு. கதவுக்குள் ஒரு உலகம்.  கதவுக்கு வெளியே இன்னொரு உலகம். 

இந்த உலகம் விதவிதமான வியப்புகளால் ஆனது. இந்த உலகம் விதவிதமான திகைப்புகளை வழங்கக் கூடியது.  

Friday, 4 August 2023

அழகிய மரம்

நேற்று காலை என் நண்பர் ஒருவர் எனது மாருதி ஆம்னி வாகனத்தை சில மணி நேரம் பயன்படுத்திக் கொள்ளலாமா எனக் கேட்டார். மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் வீட்டுக்குச் சென்று வண்டியை கொடுத்து விட்டு வந்தேன்.  நண்பருக்கு பூம்புகார் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. அங்கே சென்று மதிய உணவருந்தி விட்டு என்னிடம் பேசினார். மாலை 4 மணி சுமாருக்கு ஊர் திரும்பி விடுவேன் என்று சொன்னார். நான் அவருக்காகவும் வண்டிக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு கார் தேவைப்படவில்லை எனினும் எனது ஆம்னியை புதிதாகக் கையாளும் நண்பருக்கு வாகன இயக்கத்தில் எதிர்பாராத இடர் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கரிசனம். 

மாலை 4 மணிக்கு நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்பு. எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பியதாகவும் பின் வண்டி மெயின் ரோட்டில் நின்று விட்டதாகவும் சாலையோரம் இருக்கும் வீடு ஒன்றின் எதிரில் அவர்கள் அனுமதியுடன் வண்டியை நிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். நான் வண்டியை லாக் செய்து சாவியைக் கொண்டு வந்து விடுமாறு சொன்னேன். ஐந்து முப்பது அளவில் அவர் வீட்டுக்குச் சென்று சாவியைப் பெற்றுக் கொண்டேன். எனது நண்பர் ஒருவர் கார் நிற்கும் கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள மெக்கானிக் ஒருவரைத் தனக்குத் தெரியும் என்று கூறி அவருடைய அலைபேசி எண்ணை அளித்தார். மெக்கானிக்கைத் தொடர்பு கொண்டு அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரை என் பைக்கில் அழைத்துக் கொண்டு கார் இருக்கும் இடத்துக்குச் சென்றேன்.

காரில் ஒரு சிறிய ஸ்டார்ட்டிங் டிரபிள். என்ன சிக்கல் என அறிய ஒரு மணி நேரம் ஆகி விட்டது. சிக்கல் இதுதான் எனக் கண்டறிந்ததும் 10 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது. மெக்கானிக்கை காரை ஓட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டு நான் காரைப் பின் தொடர்ந்தேன். 20 நிமிடத்தில் தருமபுரம் வழியாக ஊர் வந்து சேர்ந்தோம். காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு அவரை மீண்டும் அவருடைய ஊரில் கொண்டு விட அவரை ஏற்றிக் கொண்டு என்னுடைய பைக்கில் புறப்பட்டேன். 

தருமபுரம் தாண்டிய போது அங்கே ஒரு தேவார பாடசாலை இருந்தது. மெக்கானிக் என்னிடம் ‘’தேவாரம்’’ என்றால் என்ன என்று கேட்டார். 

’’அதாவது தம்பி ‘’ என்று ஆரம்பித்தேன். 

‘’மனுஷங்களான நமக்கு நம்மோட மனசு காட்சிகளாகவும் மொழியாவும் சப்தங்களாவும் இருக்கு. இப்ப ’’அம்மா’’ங்கற வார்த்தையை சொல்லும் போது நம்ம மனசு நெகிழுது. ஒரு குழந்தையைப் பாக்கும் போது நம்ம மனசு மிருதுவா ஆகுது. வாலைக் குழைக்கும் நாயையைப் பாத்தா , கரிச்சான் குருவியை கருடனைப் பாத்தா நம்ம மனசு சாஃப்ட் ஆகுது இல்லையா ! அதுக்கு என்ன காரணம் ? மனுஷ மனசு நெகிழும் தன்மை கொண்டது. நெகிழ்வான மனம் தன்னை இசையாவும் கவிதையாவும் வெளிப்படுத்திக்கும். மொழி தெரிஞ்ச எல்லாருக்குள்ளயம் கவிதை இருக்கும். பெரும்பாலானவங்களுக்கு நுண்மையா சின்னதா சிலருக்கு அதிகமா. நெகிழ்வான சென்சிடிவான மனம் ஒரு ஆறு ஓடுறதைப் போல கவிதையா பிரவாகம் எடுக்கும். திருஞானசம்பந்தர் பாடின பாடல்கள் கவிதைகள் தான் தேவாரம். அவருக்கு சின்னக் குழந்தையா இருக்கறப்பவே பாடல் பாடும் தன்மை இருந்தது. அந்த குழந்தையோட மொழி தான் 1500 வருஷம் தாண்டி நம்மகிட்ட வந்திருக்கு. அரிய ஒரு விஷயத்தை தன்னோட அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்ங்கற உணர்வு நம்ம முன்னோர்களுக்கு இருந்துச்சு . அப்படி நம்ம கிட்ட வந்து சேர்ந்ததுதான் நம்மோட மரபு. யூ டியூப் ல ‘’தேவாரம்’’னு தேடினால் ஓதுவார்கள் பலர் பாடிய தேவாரம் கேட்கக் கிடைக்கும். அவசியம் கேள்’’என்று சொன்னேன்.

அந்த மெக்கானிக் தம்பி டிப்ளமா இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்திருந்தான். இளைஞன். ஆர்வமாக மேலும் பல கேள்விகள் கேட்டான். உண்மையில் அவனுக்கு மொழி சார்ந்த நுண்ணுணர்வு இருக்கிறது. நான் கூறியவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டான். அவனுக்கு வாசிப்பதற்கு சில புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பதாகக் கூறினேன். தனது பாட்டனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸின் ‘’இந்திய தேசிய ராணுவத்தில்’’ இருந்ததைக் கூறினான். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 

அவனுக்கு திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்களை நூலாக வழங்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். 

Wednesday, 2 August 2023

பயிற்சி அனுபவம்

 01.01.2023லிருந்து நிகழ்ந்து வரும் 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இதுவரை 365 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இதைப் போல் இன்னும் இருமடங்கு வாசிக்க வேண்டும் ; இலக்கை எட்ட. மூன்றில் ஒரு பாகத்தை நிறைவு செய்ததில் பெற்ற பயிற்சி அனுபவம் எஞ்சும் தூரத்தைக் கடக்க உதவும் என்பதால் அதனை தொகுத்து வகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. 

(1) ஜனவரி 1 அன்று சவால் துவங்கிய போது ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்பதாக இலக்கு இருந்தது. தினம் ஒரு மணி நேரம் என உறுதி செய்து கொண்டதை தினம் 3 மணி நேரம் என வகுத்திருந்தால் வாசிப்பு சவாலில் பாதி எட்டப்பட்டிருக்கும். இப்போது இலக்கை எட்ட தினம் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

(2) வாசிப்பு சவாலின் ஆரம்ப நாட்கள் மிகவும் முக்கியமானவை. சராசரி வாசிப்பை ஆரம்ப நாட்க்ளில் துவங்கினோம் என்றால் இலக்கை எளிதில் எட்டலாம். 

(3) அதிகாலை நேரம் மட்டுமே முழுமையாக நம் கைகளில் உள்ளது. பகல் பொழுதை அன்றாடப் பணிகள் எடுத்துக் கொள்ளும். இரவு உணவை சற்று முன்னரே உண்டு அதன் பின் சில மணி நேரம் வாசிக்க நேரத்தை உண்டாக்கிக் கொண்டால் நலம். 

(4) லௌகிக வாழ்க்கையில் நாம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். திட்டமிடுகிறோம். லௌகிகத்துக்கு அப்பால் நாம் முன்னெடுக்கும் விஷயங்களிலும் லௌகிகத் திட்டமிடுதல்களின் தாக்கம் இருக்கும். வழக்கமான மனநிலையில் நாம் எண்ணியது நடவாமல் போனால் அதனைத் தோல்வி எனக் கருதுவோம். அவ்வாறு அல்ல. அதனை ஓர் அனுபவமாகக் கொண்டு முன்செல்ல வேண்டும். 

வாசிப்பு சவால் இன்று தான் தொடங்குவதாக எண்ணுகிறேன். டிசம்பர் 31க்குள் 746 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது தான் சவால். 

1111 மணி நேர சவாலில் 210 நாட்கள் தினமும் குறைந்த பட்சம் 1 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இப்போது 155 நாட்கள் தினமும் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும். ஏழு மாதப் பயிற்சியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த 5 மாதத்தில் செயல்பட வேண்டும். 

இந்த 7 மாத அனுபவத்தில் இருந்து செய்தது செய்யத் தவறியது ஆகியவற்றை அடையாளம் கண்டு முன்னகர வேண்டும். 

மீண்டு எழுவோம் என நம்பிக்கை கொள்ளுதல் எப்போதும் சிறப்பானது. 

Friday, 28 July 2023

முதல் விண்மீன்

 01.01.2023 அன்று துவங்கிய 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இன்று 365வது மணி நேர வாசிப்பை நிறைவு செய்து முதல் விண்மீன் குறியீடைப் பெற்றேன். 555 மணி நேரம் வாசிக்கும் போது இரண்டாம் விண்மீன், 777 மணி நேரம் நிறைவடையும் போது மூன்றாம் விண்மீன், 1000 மணி நேரத்தில் நான்கும் 1111 மணியில் ஐந்து விண்மீனும். இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. ஐந்து விண்மீனும் பெற நான் வழக்கமாக வாசிக்கும் நேரத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து விண்மீன் பெற வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறேன். 

இந்த வாசிப்பு சவாலின் விதிமுறைகளில் ஒன்று தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது. அதன் படி இந்த 7 மாதங்களில் தினமும் ஒரு மணி நேரம் வாசித்திருக்கிறேன். நானாவித அலுவல்கள் மற்றும் இடையறாத லௌகிகப் பணிகளுக்கிடையிலும் வாசிப்புக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கியது வலுவான நல்ல அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

இந்த 7 மாதத்தில் ஒரு நாள் 555 நிமிடங்கள் ( 9 மணி 15 நிமிடம்) வாசித்திருக்கிறேன். மேலும் சில நாட்கள் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக. பெரும்பான்மையான நாட்கள் ஒரு மணி நேரம் மட்டுமே வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது. 

2014ம் ஆண்டு வெண்முரசு எழுதத் துவங்கப்பட்டதிலிருந்து நிறைவடைந்தது வரை தினமும் ஜெயமோகன் தளத்தில் வெண்முரசை வாசித்து வந்தேன். அனேகமாக அன்றன்று வாசித்து விடுவேன். வெண்முரசு எழுதப்பட்ட காலத்தில் காலை எழுந்தவுடன் வெண்முரசு வாசிப்பதென்பது வழக்கமாகிப் போனது. காலை வாசிக்கப்படும் அத்தியாயம் அடுத்த நாள் காலை வரை நினைவுகளில் சுழன்று கொண்டிருக்கும். உலகில் எந்த ஒரு நூலும் தினம் ஒரு அத்தியாயம் என வாசகனுக்கு வாசிக்கக் கிடைத்ததில்லை. அவ்வகையில் வெண்முரசு ஒரு அருநிகழ்வு. வெண்முரசை தினமும் வாசித்த வாசகர்கள் அனைவருமே வெண்முரசு ஆசிரியனுடன் தினமும் பாரதப் பரப்பில் பயணித்தனர். முதல் அத்தியாயத்திலிருந்து நிறைவு அத்தியாயம் வரை தொடர்ந்து வாசித்தது என்பது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வு என்றே மனம் கருதியது. 

2023ம் ஆண்டு 1111 மணி நேர வாசிப்பு சவாலுக்காக மீண்டும் ஒருமுறை வெண்முரசு வாசிப்பது என்று முடிவு செய்தேன். 2014ல் வெண்முரசை தினந்தோறும் வாசிப்பது என முடிவு செய்ததை விடவும் சிறப்பான முடிவு 2023ல் மீண்டும் வாசிக்க முடிவெடுத்தது. முதலில் ‘’நீலம்’’ வாசித்தேன். பின்னர் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் வாசித்து விட்டு மீண்டும் நீலம். அதன் பின் பிரயாகை என அடுத்தடுத்த நூல்கள். இப்போது ‘’எழுதழல்’’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு சவாலில் வாசித்த புத்தகங்களின் பெயர்களைக் குறிக்க ஒரு நிரை உள்ளது. அதில் இதுவரை நான் வாசித்த நூல்கள் என ஐந்து புத்தகங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. வெண்முரசை முழுமையாக வாசித்து விட்டு வாசித்த ஆறாவது நூலாக ‘’வெண்முரசு’’ என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்று ஒரு ஆவல். 

வெண்முரசை தினந்தோறும் வாசித்த வாசகர்களில் ஒருவனாக இருந்தாலும் வெண்முரசில் மூழ்கி அத்தனை நூல்களையும் தொடர்ச்சியாக வாசிப்பதே ஆகச் சிறந்த வாசிப்பு என்பது எனது எண்ணம். வெண்முரசு வாழ்க்கையில் பத்து தடவையாவது முழுமையாக வாசிக்கப்பட வேண்டிய படைப்பு என்று இக்கணம் தோன்றுகிறது. 

வெண்முரசு வாசிப்புக்காக மட்டும் கூட  ஒரு வாசிப்பு சவால் நிகழ்த்தப்பட வேண்டும். 

Thursday, 27 July 2023

முளைப்பு

 மண்ணின் உயிரின் சில துளிகளையும்
வானக அமுதத் துளி ஒன்றையும்
தன்னுள் நிரப்பி
மண்ணிலிருந்து
விண்ணுக்கு
எழுகிறது
ஒரு 
சின்னஞ்சிறு விதை

Wednesday, 26 July 2023

தாவல்

 உற்சாகம் ததும்பும் சின்னக் குழந்தை
மைதானத்தில் சைக்கிள் ஓட்டுகிறான்
இந்த உலகம்
இந்த வானம்
அனைத்துக்கும் சென்று விட வேண்டும்
என்பது
அவன் முனைப்பு
ஐயம் ஏதுமின்றி
அவன் நம்புகிறான்
அது இயலும் என
அம்மா வீட்டுக்கு அழைத்தால்
அவனால் செல்லாமல் இருக்க முடிவதில்லை
அம்மா சொல்லை அவன் தாண்டுவதில்லை
அவன் தாவலுக்குள் 
இருக்கிறது
இந்த வானம்
இந்த உலகம்

Tuesday, 25 July 2023

நிழல்

 ஒரு மரத்தின் நிழலில் அமர்கிறேன்
அரசமரம்
சிறு மகவின் உள்ளங்கையென
இலைகள்
கொட்டிக் கிடக்கின்றன
மண்ணில்
மண்ணுடன் பிணைந்துள்ளன வேர்கள்
தடிமனான அடித் தண்டு
நீண்டிருக்கும் கிளைகள்
அந்த மரம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது
அந்த மரம் அரற்றிக் கொண்டிருக்கிறது
அந்த மரம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது
வானின்
ஒளியின்
நம்பிக்கைகளின் 
கருணையை 
தன் நிழல் பரப்பாக
தன் இருப்பாக
கொள்கிறது
அந்த மரத்தின் நிழலில் அமர்கிறது மானுடம்
காலகாலமாக
அந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கிறேன்
இப் பொழுது

Monday, 24 July 2023

விசை

 யாவற்றையும் தாங்கும் இந்த மண்
மீது
நடந்து கொண்டிருக்கிறேன்
என்பது மகிழ்ச்சியானது
எவ்வளவு மகிழ்ச்சியானது
இந்த மண்
அனாதி காலமாக 
உயிர்களை 
உயிர்த்திருக்கச் செய்திருக்கிறது
உயிர்களுக்கு 
தீராத மகிழ்ச்சிகளை
அளித்திருக்கிறது
ஆழ்ந்த 
மிக ஆழ்ந்த 
ஓய்வை அளித்திருக்கிறது
இந்த மண் 
உயிரின் சமுத்திரம்
இந்த மண்
உயிரின் களஞ்சியம்
விதையாக மக்கி
தாவரமென மண் கீறி எழுந்து
மலரெனப் புன்னகைத்து
பறவையென 
பறந்து
 அமர
விழைகிறேன்
இந்த மண்ணின் மீது

Friday, 21 July 2023

நூறு எலுமிச்சைகள்

இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியூரில் வேலை பார்க்கும் எனது பள்ளித் தோழர் ஊருக்கு வந்திருந்தார். அவரை தற்செயலாக சந்தித்தேன். சில வாரங்களுக்கு முன்னால் அவரது தந்தை 90 வயதில் இயற்கை எய்தினார். அவர் இறந்த சில மணி நேரங்களில் எனக்கு செய்தி வந்தது.  நண்பரின் தந்தை மிகவும் இனிய மனிதர். பல விஷயங்களில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர். நண்பர் தந்தையின் மறைவால் மனவருத்தத்துடன் இருந்தார். 90 வயது என்பது நிறை ஆயுள் என்பதால் வருத்தம் கொள்ளாதீர்கள் என்று ஆறுதல் சொன்னேன். 

உரையாடிப் பிரியும் நேரம் வந்த போது நண்பரிடம் அவரது தந்தையின் நினைவாக நூறு மரக்கன்றுகள் நடுவோமா என்று கேட்டேன். நண்பர் மிகவும் உற்சாகமாகி விட்டார். எவ்வளவு தொகை செலவாகும் என்று கேட்டார். ரூ. 1500 ஆகும் என்று சொன்னேன். அடுத்த நாள் என் கணக்குக்கு பணம் அனுப்புவதாகக் கூறி எனது வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொண்டார். 

செயல் புரியும் கிராமத்துக்கு ஃபோன் செய்து நூறு மரக்கன்றுகள் நட ஊரில் எந்த இடம் பொருத்தமாக இருக்கும் ; என்ன மரக்கன்றுகள் பொருத்தமாக இருக்கும் என்று வினவினேன். ஒரு விவசாயி தனது நண்பரின் களம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கே நூறு எலுமிச்சைகளை நடலாம் என்று சொன்னார். அந்த விவசாயிடம் தகவல் கூறி அவருடைய விருப்பத்தைக் கேட்டு என்னிடம் கூறுங்கள் என்று சொன்னேன். 

நேற்று நண்பர் தொகையை என்னுடைய கணக்குக்கு அனுப்பியதன் குறுஞ்செய்தி வந்தது. நண்பருக்கு நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி விட்டு 100 எலுமிச்சை மரக்கன்றுகளை வாங்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நர்சரிக்கு சென்றதும் ‘’என்ன சார் ! ரொம்ப நாளாக உங்களைப் பார்க்க முடியவில்லை’’ என்றார்கள். சமீபத்தில் தானே நெல்லிக்கன்றுகள் வாங்கிச் சென்றேன் என ஞாபகப்படுத்தினேன். ’’காவிரி போற்றுதும்’’ மீண்டும் மீண்டும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். மானசீகமாக உடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நிகழும் நடவடிக்கைகள் குறித்து கூறி விட்டு மரக்கன்றுகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு விடை பெற்றேன். 

ஊர் எல்லையை அடைந்ததும் விவசாயிக்கு ஃபோன் செய்தேன். அவர் மோட்டார்சைக்கிளில் வந்து தனது வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞர். ஆர்வத்துடன் விவசாயம் செய்கிறார். வயலின் ஒரு பகுதியில் தேக்கு பயிரிடுமாறு ஆலோசனை சொன்னேன். அது நான் எப்போதும் சொல்வது. அவரை ஐ.டி நிறுவன ஊழியரின் தேக்கு வயலுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன். 

‘’காவிரி போற்றுதும்’’ அணுகுமுறை என்பது கிராமத்தில் விவசாயிகளின் சொந்த இடத்தில் அவர்கள் நெல் விவசாயம் செய்தது போக மீதி உள்ள இடங்களில் எத்தனை மரங்களை வளர்க்க முடியுமோ அத்தனை மரங்களை வளர்க்கச் செய்ய வேண்டும் என்பதே. வேலி அமைக்க வசதி இல்லை என நினைப்பவர்கள் நந்தியாவட்டை , அரளி ஆகிய ஆடு மேயாத மரக்கன்றுகளை வளர்க்கலாம். மா, பலா, நெல்லி,கொய்யா, பப்பாளி, நாவல் ஆகிய பழமரங்களை நடலாம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆக சாத்தியமான மரங்கள் நடப்பட வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

மரம் நடுதல் என்பது உணர்வுபூர்வமான செயல். உண்மையில் மரம் நடக்கூடிய ஒருவர் தன் ஆழ்மனத்தால் எப்போதும் தான் நட்ட ம்ரத்தின் வளர்ச்சியை கவனித்துக் கொண்டே இருக்கிறார். அது அந்த மரத்துடன் உணர்ச்சிகரமான ஒரு தொடர்பை உண்டாக்குகிறது. மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. அவ்விதமாக உணர்வுபூர்வமாக மரங்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டவர்களின் சூழல் பிரக்ஞை சிறப்பானதாக இருக்கும். அவர்கள் வாழும் கிராமம் சுற்றுச்சூழலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பதாய் மாறும். ‘’காவிரி போற்றுதும்’’ அதனால் தான் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. 

விவசாயி நண்பர் நாளை தனது களத்தில் நூறு எலுமிச்சை மரங்களை நட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். நடும் போது உடனிருக்குமாறு கேட்டுக் கொண்டார். 


Tuesday, 18 July 2023

சகஜ நிலை

 யோக தியான வகுப்புகள் ஒரு வார காலம் நடைபெறுகிறது எனில் முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு சகஜமான மனநிலையை உருவாக்கும் விதமாக அந்த மூன்று நாள் வகுப்புகளையும் வடிவமைத்திருப்பார்கள். தொழில்நுட்ப உலகம் விரிவாக விரிவாக தனிமனிதன் அகம் தான் பழகிய குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டுமே சகஜமாக இருக்கிறது. புதிதாக ஒன்றைப் பழகுகையில் முரண்டு பிடிக்கிறது. அந்த முரண்டு பிடிக்கும் மனநிலை எதையும் முழுமையாகப் பயிலவோ பயிற்சி செய்யவோ முற்றாக அனுமதிக்காது. எனவே முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களின் மனநிலையை சகஜமாக்குவார்கள். அதன் பின் அங்கே பயிலல் இயல்பாக நிகழும். 

‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் மேற்கொண்ட எந்த முன்னெடுப்புக்கும் மிக நல்ல ஆதரவு எப்போதும் மக்களால் அளிக்கப்பட்டது. மக்கள் அனைவருமே நமது முன்னெடுப்புகளை வரவேற்றார்கள். 

(1) செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறினோம். கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டன. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமங்களின் பட்டியலில் முதலிடம் வகித்தது. 

(2) அவர்கள் நமது அழைப்பை ஏற்று தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மலர்ச்செடி கன்றை அளித்தோம். அவற்றை அவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டனர். 

(3) ஒரு குடியரசு தினத்தன்று முதல் தினம் அந்த ஊரின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்றை அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதனை நடுமாறு கேட்டுக் கொண்டோம். மேலும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். கிராம மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக நாம் இவற்றை முன்வைத்தோம். இரண்டு நிகழ்வுகளிலும் கிராம மக்கள் முழு ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

(4) விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டு பொருளியல் பலன்கள் பெற வேண்டும் என்ற நம் விருப்பத்தை நாம் தொடர்ந்து முன்வைக்கிறோம். 

(5) மழை தொடர்ந்து பெய்யும் போது கிராமத்தின் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏழு நாட்கள் தினம் மாலை வேளையில் உணவு தயாரித்து அளித்தோம். அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு வாரத்துக்குப் பயன்படும் மளிகைப் பொருட்களை அளித்தோம். குடிசை வீடுகளில் மழைக்காலம் என்பது சற்றே அசௌகர்யமான காலம். அந்த காலத்தில் நாம் அவர்களுக்கு ஆற்றும் பணி என்பது அவர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை சமூகத்தின் மீது அளிக்கிறது. 

(6) தொடர்ந்து பல்வேறு விதமான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். 

(7) சென்ற ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக எல்லா வீடுகளுக்கும் காய்கறி விதைகளை வழங்கினோம்.

(8) இந்த ஆண்டு காய்கறி நாற்றுக்களை உருவாக்கி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 

இந்த செயல்கள் மூலம் ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் அனைவருக்குமான அமைப்பாக கிராமத்தில் உள்ளது. நமது செயல்களில் நாம் ஒட்டுமொத்த கிராமத்தையும் கிராமத்தின் மக்களையும் இணைத்திருக்கிறோம். நமக்கு அளிக்கப்படும் ஆதரவும் நம் மீது காட்டப்படும் பிரியமும் கிராமத்தின் சகஜ நிலை என்று கொள்ள முடியும்.