Monday, 7 August 2023
உலகங்கள்
Friday, 4 August 2023
அழகிய மரம்
Wednesday, 2 August 2023
பயிற்சி அனுபவம்
01.01.2023லிருந்து நிகழ்ந்து வரும் 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இதுவரை 365 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இதைப் போல் இன்னும் இருமடங்கு வாசிக்க வேண்டும் ; இலக்கை எட்ட. மூன்றில் ஒரு பாகத்தை நிறைவு செய்ததில் பெற்ற பயிற்சி அனுபவம் எஞ்சும் தூரத்தைக் கடக்க உதவும் என்பதால் அதனை தொகுத்து வகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
(1) ஜனவரி 1 அன்று சவால் துவங்கிய போது ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்பதாக இலக்கு இருந்தது. தினம் ஒரு மணி நேரம் என உறுதி செய்து கொண்டதை தினம் 3 மணி நேரம் என வகுத்திருந்தால் வாசிப்பு சவாலில் பாதி எட்டப்பட்டிருக்கும். இப்போது இலக்கை எட்ட தினம் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
(2) வாசிப்பு சவாலின் ஆரம்ப நாட்கள் மிகவும் முக்கியமானவை. சராசரி வாசிப்பை ஆரம்ப நாட்க்ளில் துவங்கினோம் என்றால் இலக்கை எளிதில் எட்டலாம்.
(3) அதிகாலை நேரம் மட்டுமே முழுமையாக நம் கைகளில் உள்ளது. பகல் பொழுதை அன்றாடப் பணிகள் எடுத்துக் கொள்ளும். இரவு உணவை சற்று முன்னரே உண்டு அதன் பின் சில மணி நேரம் வாசிக்க நேரத்தை உண்டாக்கிக் கொண்டால் நலம்.
(4) லௌகிக வாழ்க்கையில் நாம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம். திட்டமிடுகிறோம். லௌகிகத்துக்கு அப்பால் நாம் முன்னெடுக்கும் விஷயங்களிலும் லௌகிகத் திட்டமிடுதல்களின் தாக்கம் இருக்கும். வழக்கமான மனநிலையில் நாம் எண்ணியது நடவாமல் போனால் அதனைத் தோல்வி எனக் கருதுவோம். அவ்வாறு அல்ல. அதனை ஓர் அனுபவமாகக் கொண்டு முன்செல்ல வேண்டும்.
வாசிப்பு சவால் இன்று தான் தொடங்குவதாக எண்ணுகிறேன். டிசம்பர் 31க்குள் 746 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது தான் சவால்.
1111 மணி நேர சவாலில் 210 நாட்கள் தினமும் குறைந்த பட்சம் 1 மணி நேரம் வாசித்திருக்கிறேன். இப்போது 155 நாட்கள் தினமும் 5 மணி நேரம் வாசிக்க வேண்டும். ஏழு மாதப் பயிற்சியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த 5 மாதத்தில் செயல்பட வேண்டும்.
இந்த 7 மாத அனுபவத்தில் இருந்து செய்தது செய்யத் தவறியது ஆகியவற்றை அடையாளம் கண்டு முன்னகர வேண்டும்.
மீண்டு எழுவோம் என நம்பிக்கை கொள்ளுதல் எப்போதும் சிறப்பானது.
Friday, 28 July 2023
முதல் விண்மீன்
01.01.2023 அன்று துவங்கிய 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இன்று 365வது மணி நேர வாசிப்பை நிறைவு செய்து முதல் விண்மீன் குறியீடைப் பெற்றேன். 555 மணி நேரம் வாசிக்கும் போது இரண்டாம் விண்மீன், 777 மணி நேரம் நிறைவடையும் போது மூன்றாம் விண்மீன், 1000 மணி நேரத்தில் நான்கும் 1111 மணியில் ஐந்து விண்மீனும். இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. ஐந்து விண்மீனும் பெற நான் வழக்கமாக வாசிக்கும் நேரத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து விண்மீன் பெற வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறேன்.
இந்த வாசிப்பு சவாலின் விதிமுறைகளில் ஒன்று தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது. அதன் படி இந்த 7 மாதங்களில் தினமும் ஒரு மணி நேரம் வாசித்திருக்கிறேன். நானாவித அலுவல்கள் மற்றும் இடையறாத லௌகிகப் பணிகளுக்கிடையிலும் வாசிப்புக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கியது வலுவான நல்ல அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
இந்த 7 மாதத்தில் ஒரு நாள் 555 நிமிடங்கள் ( 9 மணி 15 நிமிடம்) வாசித்திருக்கிறேன். மேலும் சில நாட்கள் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக. பெரும்பான்மையான நாட்கள் ஒரு மணி நேரம் மட்டுமே வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது.
2014ம் ஆண்டு வெண்முரசு எழுதத் துவங்கப்பட்டதிலிருந்து நிறைவடைந்தது வரை தினமும் ஜெயமோகன் தளத்தில் வெண்முரசை வாசித்து வந்தேன். அனேகமாக அன்றன்று வாசித்து விடுவேன். வெண்முரசு எழுதப்பட்ட காலத்தில் காலை எழுந்தவுடன் வெண்முரசு வாசிப்பதென்பது வழக்கமாகிப் போனது. காலை வாசிக்கப்படும் அத்தியாயம் அடுத்த நாள் காலை வரை நினைவுகளில் சுழன்று கொண்டிருக்கும். உலகில் எந்த ஒரு நூலும் தினம் ஒரு அத்தியாயம் என வாசகனுக்கு வாசிக்கக் கிடைத்ததில்லை. அவ்வகையில் வெண்முரசு ஒரு அருநிகழ்வு. வெண்முரசை தினமும் வாசித்த வாசகர்கள் அனைவருமே வெண்முரசு ஆசிரியனுடன் தினமும் பாரதப் பரப்பில் பயணித்தனர். முதல் அத்தியாயத்திலிருந்து நிறைவு அத்தியாயம் வரை தொடர்ந்து வாசித்தது என்பது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வு என்றே மனம் கருதியது.
2023ம் ஆண்டு 1111 மணி நேர வாசிப்பு சவாலுக்காக மீண்டும் ஒருமுறை வெண்முரசு வாசிப்பது என்று முடிவு செய்தேன். 2014ல் வெண்முரசை தினந்தோறும் வாசிப்பது என முடிவு செய்ததை விடவும் சிறப்பான முடிவு 2023ல் மீண்டும் வாசிக்க முடிவெடுத்தது. முதலில் ‘’நீலம்’’ வாசித்தேன். பின்னர் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் வாசித்து விட்டு மீண்டும் நீலம். அதன் பின் பிரயாகை என அடுத்தடுத்த நூல்கள். இப்போது ‘’எழுதழல்’’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு சவாலில் வாசித்த புத்தகங்களின் பெயர்களைக் குறிக்க ஒரு நிரை உள்ளது. அதில் இதுவரை நான் வாசித்த நூல்கள் என ஐந்து புத்தகங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. வெண்முரசை முழுமையாக வாசித்து விட்டு வாசித்த ஆறாவது நூலாக ‘’வெண்முரசு’’ என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்று ஒரு ஆவல்.
வெண்முரசை தினந்தோறும் வாசித்த வாசகர்களில் ஒருவனாக இருந்தாலும் வெண்முரசில் மூழ்கி அத்தனை நூல்களையும் தொடர்ச்சியாக வாசிப்பதே ஆகச் சிறந்த வாசிப்பு என்பது எனது எண்ணம். வெண்முரசு வாழ்க்கையில் பத்து தடவையாவது முழுமையாக வாசிக்கப்பட வேண்டிய படைப்பு என்று இக்கணம் தோன்றுகிறது.
வெண்முரசு வாசிப்புக்காக மட்டும் கூட ஒரு வாசிப்பு சவால் நிகழ்த்தப்பட வேண்டும்.
Thursday, 27 July 2023
முளைப்பு
Wednesday, 26 July 2023
தாவல்
Tuesday, 25 July 2023
நிழல்
Monday, 24 July 2023
விசை
Friday, 21 July 2023
நூறு எலுமிச்சைகள்
இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியூரில் வேலை பார்க்கும் எனது பள்ளித் தோழர் ஊருக்கு வந்திருந்தார். அவரை தற்செயலாக சந்தித்தேன். சில வாரங்களுக்கு முன்னால் அவரது தந்தை 90 வயதில் இயற்கை எய்தினார். அவர் இறந்த சில மணி நேரங்களில் எனக்கு செய்தி வந்தது. நண்பரின் தந்தை மிகவும் இனிய மனிதர். பல விஷயங்களில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர். நண்பர் தந்தையின் மறைவால் மனவருத்தத்துடன் இருந்தார். 90 வயது என்பது நிறை ஆயுள் என்பதால் வருத்தம் கொள்ளாதீர்கள் என்று ஆறுதல் சொன்னேன்.
உரையாடிப் பிரியும் நேரம் வந்த போது நண்பரிடம் அவரது தந்தையின் நினைவாக நூறு மரக்கன்றுகள் நடுவோமா என்று கேட்டேன். நண்பர் மிகவும் உற்சாகமாகி விட்டார். எவ்வளவு தொகை செலவாகும் என்று கேட்டார். ரூ. 1500 ஆகும் என்று சொன்னேன். அடுத்த நாள் என் கணக்குக்கு பணம் அனுப்புவதாகக் கூறி எனது வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொண்டார்.
செயல் புரியும் கிராமத்துக்கு ஃபோன் செய்து நூறு மரக்கன்றுகள் நட ஊரில் எந்த இடம் பொருத்தமாக இருக்கும் ; என்ன மரக்கன்றுகள் பொருத்தமாக இருக்கும் என்று வினவினேன். ஒரு விவசாயி தனது நண்பரின் களம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கே நூறு எலுமிச்சைகளை நடலாம் என்று சொன்னார். அந்த விவசாயிடம் தகவல் கூறி அவருடைய விருப்பத்தைக் கேட்டு என்னிடம் கூறுங்கள் என்று சொன்னேன்.
நேற்று நண்பர் தொகையை என்னுடைய கணக்குக்கு அனுப்பியதன் குறுஞ்செய்தி வந்தது. நண்பருக்கு நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி விட்டு 100 எலுமிச்சை மரக்கன்றுகளை வாங்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நர்சரிக்கு சென்றதும் ‘’என்ன சார் ! ரொம்ப நாளாக உங்களைப் பார்க்க முடியவில்லை’’ என்றார்கள். சமீபத்தில் தானே நெல்லிக்கன்றுகள் வாங்கிச் சென்றேன் என ஞாபகப்படுத்தினேன். ’’காவிரி போற்றுதும்’’ மீண்டும் மீண்டும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். மானசீகமாக உடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நிகழும் நடவடிக்கைகள் குறித்து கூறி விட்டு மரக்கன்றுகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு விடை பெற்றேன்.
ஊர் எல்லையை அடைந்ததும் விவசாயிக்கு ஃபோன் செய்தேன். அவர் மோட்டார்சைக்கிளில் வந்து தனது வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞர். ஆர்வத்துடன் விவசாயம் செய்கிறார். வயலின் ஒரு பகுதியில் தேக்கு பயிரிடுமாறு ஆலோசனை சொன்னேன். அது நான் எப்போதும் சொல்வது. அவரை ஐ.டி நிறுவன ஊழியரின் தேக்கு வயலுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன்.
‘’காவிரி போற்றுதும்’’ அணுகுமுறை என்பது கிராமத்தில் விவசாயிகளின் சொந்த இடத்தில் அவர்கள் நெல் விவசாயம் செய்தது போக மீதி உள்ள இடங்களில் எத்தனை மரங்களை வளர்க்க முடியுமோ அத்தனை மரங்களை வளர்க்கச் செய்ய வேண்டும் என்பதே. வேலி அமைக்க வசதி இல்லை என நினைப்பவர்கள் நந்தியாவட்டை , அரளி ஆகிய ஆடு மேயாத மரக்கன்றுகளை வளர்க்கலாம். மா, பலா, நெல்லி,கொய்யா, பப்பாளி, நாவல் ஆகிய பழமரங்களை நடலாம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆக சாத்தியமான மரங்கள் நடப்பட வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம்.
மரம் நடுதல் என்பது உணர்வுபூர்வமான செயல். உண்மையில் மரம் நடக்கூடிய ஒருவர் தன் ஆழ்மனத்தால் எப்போதும் தான் நட்ட ம்ரத்தின் வளர்ச்சியை கவனித்துக் கொண்டே இருக்கிறார். அது அந்த மரத்துடன் உணர்ச்சிகரமான ஒரு தொடர்பை உண்டாக்குகிறது. மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. அவ்விதமாக உணர்வுபூர்வமாக மரங்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டவர்களின் சூழல் பிரக்ஞை சிறப்பானதாக இருக்கும். அவர்கள் வாழும் கிராமம் சுற்றுச்சூழலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பதாய் மாறும். ‘’காவிரி போற்றுதும்’’ அதனால் தான் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.
விவசாயி நண்பர் நாளை தனது களத்தில் நூறு எலுமிச்சை மரங்களை நட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். நடும் போது உடனிருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Tuesday, 18 July 2023
சகஜ நிலை
யோக தியான வகுப்புகள் ஒரு வார காலம் நடைபெறுகிறது எனில் முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு சகஜமான மனநிலையை உருவாக்கும் விதமாக அந்த மூன்று நாள் வகுப்புகளையும் வடிவமைத்திருப்பார்கள். தொழில்நுட்ப உலகம் விரிவாக விரிவாக தனிமனிதன் அகம் தான் பழகிய குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டுமே சகஜமாக இருக்கிறது. புதிதாக ஒன்றைப் பழகுகையில் முரண்டு பிடிக்கிறது. அந்த முரண்டு பிடிக்கும் மனநிலை எதையும் முழுமையாகப் பயிலவோ பயிற்சி செய்யவோ முற்றாக அனுமதிக்காது. எனவே முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களின் மனநிலையை சகஜமாக்குவார்கள். அதன் பின் அங்கே பயிலல் இயல்பாக நிகழும்.
‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் மேற்கொண்ட எந்த முன்னெடுப்புக்கும் மிக நல்ல ஆதரவு எப்போதும் மக்களால் அளிக்கப்பட்டது. மக்கள் அனைவருமே நமது முன்னெடுப்புகளை வரவேற்றார்கள்.
(1) செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறினோம். கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டன. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமங்களின் பட்டியலில் முதலிடம் வகித்தது.
(2) அவர்கள் நமது அழைப்பை ஏற்று தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மலர்ச்செடி கன்றை அளித்தோம். அவற்றை அவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டனர்.
(3) ஒரு குடியரசு தினத்தன்று முதல் தினம் அந்த ஊரின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்றை அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதனை நடுமாறு கேட்டுக் கொண்டோம். மேலும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். கிராம மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக நாம் இவற்றை முன்வைத்தோம். இரண்டு நிகழ்வுகளிலும் கிராம மக்கள் முழு ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
(4) விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டு பொருளியல் பலன்கள் பெற வேண்டும் என்ற நம் விருப்பத்தை நாம் தொடர்ந்து முன்வைக்கிறோம்.
(5) மழை தொடர்ந்து பெய்யும் போது கிராமத்தின் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏழு நாட்கள் தினம் மாலை வேளையில் உணவு தயாரித்து அளித்தோம். அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு வாரத்துக்குப் பயன்படும் மளிகைப் பொருட்களை அளித்தோம். குடிசை வீடுகளில் மழைக்காலம் என்பது சற்றே அசௌகர்யமான காலம். அந்த காலத்தில் நாம் அவர்களுக்கு ஆற்றும் பணி என்பது அவர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை சமூகத்தின் மீது அளிக்கிறது.
(6) தொடர்ந்து பல்வேறு விதமான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்.
(7) சென்ற ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக எல்லா வீடுகளுக்கும் காய்கறி விதைகளை வழங்கினோம்.
(8) இந்த ஆண்டு காய்கறி நாற்றுக்களை உருவாக்கி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த செயல்கள் மூலம் ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் அனைவருக்குமான அமைப்பாக கிராமத்தில் உள்ளது. நமது செயல்களில் நாம் ஒட்டுமொத்த கிராமத்தையும் கிராமத்தின் மக்களையும் இணைத்திருக்கிறோம். நமக்கு அளிக்கப்படும் ஆதரவும் நம் மீது காட்டப்படும் பிரியமும் கிராமத்தின் சகஜ நிலை என்று கொள்ள முடியும்.