Saturday, 8 March 2025

ஒரு சிறுமி

சில நாட்களுக்கு முன், டூ-வீலரில் சென்று கொண்டிருந்த போது வண்டி அலைவது போல் தோன்றியது. வீட்டிலிருந்து 300மீட்டர் தூரம் சென்றிருப்பேன். நான் அப்போது இருந்த இடம் ஒரு பிரதான சாலை. அங்கே ஒரு இடத்தில் பழைய கார் லாரி டயர்களைப் போட்டு வைத்திருந்தார்கள். காற்று பிடிக்கும் கம்ப்ரஸர் இருந்தது. அங்கே சென்றேன். அது ஒரு சிறிய பரப்பு கொண்ட வீடு. வீட்டின் முன் பகுதி பஞ்சர் கடையாக இருந்தது.  வண்டியை அந்த வீட்டின் முன் நிறுத்தி விட்டு உள்ளே இருப்பவர்களை அழைத்தேன். வெளியே வந்தது ஒரு சிறுமி. 

‘’பஞ்சர் பார்க்கணும்’’ என்றேன். 

‘’வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்தி செண்டர் ஸ்டாண்ட் போடுங்க’’ . நான் சிறுமி கூறியவாறு செய்தேன். உள்ளேயிருந்து உபகரணங்களுடன் எவரேனும் வருவார்கள் என எண்ணினேன். உபகரணங்களை எடுத்துக் கொண்டு அந்த சிறுமியே வந்தாள். வண்டியின் பின் சக்கரத்தை வண்டியிலிருந்து நீக்கத் தொடங்கினாள். பின் சக்கரத்தில் லீவரைக் கொடுத்து சக்கரத்தின் உள்ளிருக்கும் டியூபை வெளியே எடுத்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். சக்கரத்திலிருந்து டியூபைப் பிரிப்பது அவ்வளவு எளிய பணி அல்ல. எனினும் அதனை சர்வ சாதாரணமாகச் செய்தாள். பத்து நிமிடத்தில் பஞ்சர் பார்த்து வண்டியை தயார் செய்து விட்டாள். 

அப்போது ஒருவர் காற்று பிடிக்க வந்தார். அவர் அச்சிறுமியிடம் ‘’ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலயா?’’ என்று கேட்டார். அப்போது நேரம் காலை 8.15. 

‘’9.30 க்கு தான் ஸ்கூல்’’ என்றாள் அச்சிறுமி. 

அவளிடம் என்ன வகுப்பு படிக்கிறாய் என்று கேட்டேன். அவள் ஒன்பதாம் வகுப்பு மாணவி. சிறு வயதிலிருந்தே அவளுக்கு இரு சக்கர வாகனங்கள் மேல் ஆர்வம் இருந்திருக்கிறது. அவளது தந்தை பஞ்சர் ஒட்டும் போது உடனிருந்து உதவிகள் செய்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் அவளது தந்தை உடல்நலம் குன்றியிருந்த போது தானே பஞ்சர் ஒட்டத் தொடங்கியிருக்கிறாள். பள்ளி நேரம் போக வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பஞ்சர் ஒட்டுவதுண்டு. 

எனக்கு அச்சிறுமி சொன்ன விஷயங்கள் ஆச்சர்யம் அளித்தன. பஞ்சர் ஒட்டியதற்கான கட்டணத்தை அளித்து விட்டு புறப்பட்டேன். அன்று முழுக்க அன்று காலை நடந்த சம்பவம் நினைவில் இருந்தது. 

அன்று மாலை அச்சிறுமிக்கு ஏழு புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்தேன். அவளது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பாராட்டி. 

அவளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள். அவள் பெயரின் பொருள் ‘’பெருஞ் செல்வம்’’ என்பதாகும். உன் பெற்றோருக்கும் நீ வாழும் சமூகத்துக்கும் நீ பெருஞ் செல்வம் என்று அவளிடம் சொன்னேன். அவள் பெரிதும் மகிழ்ந்தாள். 

Monday, 3 March 2025

பஞ்சத்து ஆண்டி

 இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியாவை உணவுப் பஞ்சம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. இன்று அதனை நம்புவது கடினம். அன்று அது யதார்த்தம். அந்த பஞ்ச காலகட்டத்தை அந்த காலகட்டத்தின் மனிதர்களின் இயல்புகளை சுபாவங்களை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட கதை தி.ஜா வின் ‘’பஞ்சத்து ஆண்டி’’. 

கொட்டு மேளம்

 வாழ்க்கையை நம்பிக்கையுடன் எளிமையாக அணுகும் ஒருவர். சிக்கலான அகம் கொண்ட பலர் அவரை பலவிதங்களில் ஏய்க்க முயல்கின்றனர். எளிய விஷயத்தை எளிய விஷயங்களை ஏன் இத்தனை சிக்கலாக்கிக் கொள்கின்றனர் என்னும் கரிசனமே அவர்கள் மேல் அவருக்கு இருக்கிறது. இத்தகைய கதாபாத்திரம் குறித்த கதை தி.ஜா வின் ‘’கொட்டு மேளம்’’. 

வேறு வழியில்லை

 தி. ஜானகிராமனின் ‘’பசி ஆறிற்று’’ கதையை நினைவுபடுத்தும் கதை. ஏறக்குறைய ஒரே கதைக்களம். கிட்டத்தட்ட ஒரே இயல்பு கொண்ட கதாபாத்திரங்கள். ஒரே விதமான கதையின் முடிவு. 

Sunday, 2 March 2025

அத்துவின் முடிவு

சாமானிய நிலையிலிருந்து செல்வம் ஈட்டி பெரும் செல்வந்தன் ஆனவன் ஒருவன். உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிறான். அவனது குடும்பம் அவனை பாரமாக நினைக்கிறது. மரணம் மிக விரைவில் அவனை அழைத்துக் கொள்கிறது.  மரணித்தவன் ஈட்டிய செல்வத்தில் கணிசமான அளவு கடனும் இருக்கிறது. கடன் செல்வத்தை ஈடு செய்து விடுகிறது. இதுவே தி.ஜா வின் அத்துவின் முடிவு கதை. 

ரசிகரும் ரசிகையும்

 முகஸ்துதியை விரும்பாதவர் இல்லை. இருப்பினும் ஒருவர் அதன் எல்லையைக் கடந்து ஸ்துதி செய்கிறார். ஸ்துதி செய்யப்பட்டவர் ராட்சச கோலம் பூண்டு ரணகளம் செய்து விடுகிறார். இதுவே தி.ஜா வின் ‘’ரசிகரும் ரசிகையும்’’ கதை. 

ஜீவனாம்சம்

 ஒரு முதியோனுக்கு இளையாளாக வாழ்க்கைப்பட்டு வருகிறாள் ஓர் இளம்பெண். ஓயாத சண்டை சச்சரவு. கணவனுக்கு போதுமான ஊதியமும் இல்லை. இளம் மனைவி தன்னை அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற்றிக் கொள்கிறாள். வெளியேறிய அவளின் பொருளாதார சூழ்நிலை மேம்படுகிறது. கணவனுக்கு மாதா மாதம் ஒரு தொகையை அனுப்பி வைக்கிறாள் ஜீவனாம்சமாக. இதுவே தி.ஜா வின் ‘’ஜீவனாம்சம்’’ கதை. 

Saturday, 1 March 2025

கடன் தீர்ந்தது

 கடன் நெருப்பு பகை மூன்றையும் மிச்சமில்லாமல் அழிக்க வேண்டும். மிச்சம் வைத்தால் நாம் எதிர்பார்க்காத வண்ணம் பேரழிவை உண்டாக்கி விடும். நல்ல மனிதன் ஒருவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து பெருநஷ்டமடையச் செய்கிறான் துர்குணம் கொண்ட ஒருவன். துர்குணம் கொண்டவன் மோசடி செயல்பாடுகளுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்று உடல்நலம் குன்றி சாகக் கிடக்கிறான். நற்குணம் வாய்ந்தவன் துர்குணம் கொண்டவனின் மரணத் தறுவாயில் அவனிடம் வந்து நீ செய்த துரோகத்தை மன்னித்தேன் எனக் கூறி துர்குணம் கொண்டவன் பட்ட கடனிலிருந்து பாபத்தின் சுமையிலிருந்து விடுவித்துச் செல்கிறான் என்பதே தி.ஜா வின் ‘’கடன் தீர்ந்தது’’

அவப்பெயர்

 ஒரு செல்வந்தன். செல்வச் செருக்கில் ஒரு பெண்ணை கருவுறச் செய்கிறான். வயிற்றில் சிசுவுடன் அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். மரணித்த சிசுவை நூதனமான சூழல் ஒன்றில் அந்த செல்வந்தன் காண நேர்வதன் கதையே தி.ஜா வின் ‘’அவப்பெயர்’’ . 

அதிர்ஷ்டம்

மத்திய தர வர்க்க ஆசாமி ஒருவன். மத்திய தர வர்க்கத்தின் எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதற்கேயுரிய பிரத்யேகமான பற்றாக்குறைகளும் கொண்டவன்.  அசந்தர்ப்பமாக யாரோ ஒருவருடைய ‘’மணி பர்ஸ்’’ அவன் கைக்கு வந்து விடுகிறது. தன் எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அளிக்கும் எச்சரிக்கைகளை மீறி வீட்டுக்குக் கொண்டு வந்து விடுகிறான். அந்த பர்ஸில் சல்லிக்காசு கூட இல்லை. உண்மையில் அது அவனுக்கு அதிர்ஷ்டமே. இதுவே தி.ஜா வின் ‘’அதிர்ஷ்டம்’’ கதை.