பிரபு மயிலாடுதுறை
Thursday 16 May 2024
எழுதாக் கிளவி
திருவரங்கன் உலா
சைவர்களுக்கு கோயில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் குறிக்கும். வைணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி ஆலயத்தைக் குறிக்கும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் முதலாவது என்னும் பெருமைக்குரியது ஸ்ரீரங்கம். ஆச்சாரியரான ராமானுஜர் தனது செயற்களமாகக் கொண்ட ஊர் ஸ்ரீரங்கம். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் வாழ்வுடன் இணைந்தே இருக்கும் ஊர் ஸ்ரீரங்கம்.
இஸ்லாமியர்கள் இந்திய நிலப்பகுதியை தாக்கி இங்கிருக்கும் செல்வத்தைக் கொள்ளையடிக்கவும் இங்குள்ள சமயத்தையும் வழிபாட்டு முறைகளையும் பண்பாட்டையும் அழிக்கவும் படை திரட்டி வந்தார்கள். இந்திய நிலத்தின் வடபகுதி இஸ்லாமியர் படையெடுப்பால் பேரழிவுக்கு உள்ளானது. விந்திய சாத்பூரா மலைகள் இருந்ததால் இந்தியாவின் தென்பகுதிக்குள் இஸ்லாமியர்களால் எளிதில் நுழைய முடியவில்லை. அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காஃபூர் இந்தியாவின் தென்பகுதியைத் தாக்கிய முதல் ஆக்கிரமிப்பாளன். தென்னிந்தியாவின் பல ஆலயங்கள் மாலிக்காஃபூர் படையெடுப்பால் தகர்க்கப்பட்டன. மாலிக்காஃபூரின் ஆக்கிரமிப்பு சேனை தென்னக மக்களுக்கு பல கொடுமைகளைச் செய்தது. இஸ்லாமிய சேனையின் ஒரு பகுதி தமிழகத்தில் தங்கியிருந்த காலகட்டம் அது.
மாலிக்காஃபூர் படையெடுப்புக்குப் பின் , தில்லியிலிருந்து உலூக் கான் மீண்டும் ஒருமுறை ஸ்ரீரங்கத்தையும் மதுரையையும் தாக்குகிறான். தென்னகம் கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் இஸ்லாமியர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தது. எல்லா ஆலயங்களும் மூடப்பட்டன. ஆலய வழிபாடு என்பது அரச விரோத காரியமாகப் பார்க்கப்பட்டது. ஆலயத்தின் அனைத்து திருவிழாக்களுக்கும் தடை விதிகப்பட்டது. கடுமையான வரிகள் மக்கள் மீது விதிக்கப்பட்டன.
இஸ்லாமிய அடக்குமுறையிலிருந்து தப்ப ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு குழு , உற்சவர் நம்பெருமாளுடன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்புகின்றனர். நாளும் ஒரு உற்சவன் பொழுதும் ஒரு திருவிழா என இருந்த நம்பெருமாள் தென்னக நிலம் காணும் வகையில் 48 ஆண்டுகள் இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே என ஒரு உலா நிகழ்த்துகிறார். ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் செல்கிறார். அங்கிருந்து அழகர் கோவில் போகிறார். பின்னர் மதுரையைக் கடந்து திருநெல்வேலி ஆழ்வார் திருநகரி போய் நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் போகிறார். மலைநாடுகள் வழியே பயணித்து மேல்கோட்டை சென்றடைகிறார். பல ஆண்டுகள் அங்கே இருக்கும் பெருமாள் பின்னர் திருப்பதி சென்று சேர்கிறார்.
இஸ்லாமியர்களை வீழ்த்தி பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய நிலப்பரப்பைக் காத்த விஜயநகரப் பேரரசு உருவான பின்னர் அதன் ஸ்தாபகர்களான ஹரிஹர புக்கரின் வாரிசான குமார கம்பணன் தனது படை கொண்டு மதுரையை ஆண்ட இஸ்லாமியர்களை வீழ்த்தி தமிழகத்தின் இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருகிறார். 48 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் நகர் நீங்கிய நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறார்.
இந்த சரித்திர நிகழ்வுகளை பின்புலமாக் கொண்டு எழுதப்பட்ட கதை ‘’ திருவரங்கன் உலா’’.
தமிழகத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கிய காலகட்டத்தைக் குறித்து எழுதப்பட்ட கதை என்ற வகையில் ‘’திருவரங்கன் உலா’’ முக்கியத்துவம் பெறுகிறது.
Tuesday 14 May 2024
திறப்பு
Monday 13 May 2024
கோடி கண்கள்
Sunday 12 May 2024
நடு நாடு
பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் நடு நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. இருப்பினும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் சிதம்பரம் , காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்கள் காவிரிப் பாசனம் ( இன்னும் சரியாகச் சொன்னால் வீர நாராயண ஏரிப் பாசனம்) பெறும் பகுதிகள் என்பதால் சோழ நாட்டுடன் இணைத்துக் கூறப்படும்.
மயிலாடுதுறையிலிருந்து நேர் வடக்கு என்பது மணல்மேடு. எழுத்தாளர் கல்கி பிறந்த ஊர் அது. வட காவேரி எனப்படும் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் மணல்மேடு. ஆற்றின் வடகரையில் உள்ள ஊர் முட்டம். தற்போது மணல்மேடு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. முட்டம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த இரண்டு ஊர்களுக்கு இடையே இப்போது ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் இருக்கக்கூடும். பாலம் கட்டப்படும் முன் இரு ஊர் மக்களும் கோடையில் நதி வறண்டிருக்கும் போது நதியை நடந்தே கடந்து செல்வார்கள். முட்டத்திலிருந்து மயிலாடுதுறை வர வேண்டும் என்றால் நதியை நடந்து கடந்து மணல்மேடு வந்தால் அங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் மயிலாடுதுறை. இல்லாவிட்ட்டால் சிதம்பரம் சென்று அங்கிருந்து மயிலாடுதுறை வர வேண்டும். தூரம் 65 கி.மீ. ஆற்றில் தண்ணீர் இருக்கும் போது பரிசல் இயங்கும். பரிசலில் மணல்மேடு மக்கள் முட்டத்துக்கும் முட்டம் மக்கள் மணல்மேட்டுக்கும் வருவார்கள். இவ்வாறான ஒரு முறை இருக்கிறது என்று யாரோ சொல்லக் கேட்டு ஆர்வத்தின் காரணமாக நானும் பரிசலில் சென்றிருக்கிறேன். பரிசலில் டூ வீலரை ஏற்றிக் கொள்ள முடியும். அப்படி முட்டம் சென்று அங்கே அருகே இருக்கும் பகுதிகளை சுற்றிப் பார்த்திருக்கிறேன்.
அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கையில் முட்டத்திலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு ஒரு சுருக்கமான வழி இருப்பதைக் கண்டு பிடித்தேன். முதலில் முட்டம் வந்து விட வேண்டும். பின்னர் அங்கிருந்து ஓமாம்புலியூர் சாலையைப் பிடித்து மோவூர் வர வேண்டும். மோவூரில் வடக்காகத் திரும்பி ஆயக்குடி செல்ல வேண்டும். ஆயக்குடியிலிருந்து ரெட்டியூர் செல்ல வேண்டும். ரெட்டியூரிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வரும். அங்கிருந்து 4 கி.மீ ல் கங்கை கொண்ட சோழபுரம். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் ஜெயங்கொண்டம். அப்படியே வடக்கே சென்றால் விருத்தாசலம்.
‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ சென்ற போது இந்த மார்க்கத்தில் காட்டுமன்னார் கோவிலை இணைத்துக் கொண்டு சென்றேன்.
இன்று காலை 8 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்டேன். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் செல்ல வேண்டும் என விரும்பினேன். மணல்மேடு முட்டம் கங்கை கொண்ட சோழபுரம் ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் பயணித்தேன். புதிய வாகனம் 2200 கி.மீ ஓடியிருக்கிறது. ‘’புல்லிங்’’ இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது. ஒரு சர்வீஸ் முடிந்திருக்கிறது. அடுத்த சர்வீஸில் புல்லிங் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கூடும்.
வண்டியில் செல்லும் போது உடனடியாக தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் என பைக் பயணம் புறப்பட வேண்டும் என மனம் திட்டமிட்டது. மயிலாடுதுறை - திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- சேது ரஸ்தா- ராமேஸ்வரம் - திருச்செந்தூர் - திருநெல்வேலி - கன்யாகுமரி - திருவட்டாறு - திருவனந்தபுரம் - மலை நாட்டு வைணவ திவ்ய தேசங்கள்- காசர்கோடு - மங்களூர் - உடுப்பி - சிருங்கேரி - மைசூர் - பெங்களூர் வழியாக ஆந்திராவில் நுழைந்து ஆந்திராவில் ஒரு சுற்று என மனம் துள்ளியது.
நடு நாடு முந்திரியின் விளைநிலம். நிறைய முந்திரிக்காடுகளைக் கடந்து சென்றேன். விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் ஆலயத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தேன். நெஞ்சுருக்கும் பிராத்தனைகள் - வேண்டுதல்கள். இறைமையின் கருணையால் உயிர்கள் ஒவ்வொரு மூச்சிலும் உயிர் வாழ்கின்றன. 11 மணிக்குப் புறப்பட்டு பயணித்த அதே மார்க்கத்தில் மீண்டும் வந்து 1 மணிக்கு வீடடைந்தேன். ஐந்து மணி நேரம். 200 கி.மீ பயணம்.
Saturday 11 May 2024
தரங்கம்பாடி
Friday 10 May 2024
நூறு மரங்கள்
Sunday 5 May 2024
தேக்குப் பண்ணைகள்
இன்னொரு தேக்கு தோட்டம்
Friday 3 May 2024
சிறப்பு விற்பனை ( நகைச்சுவைக் கட்டுரை)
அமைப்பாளர் மூன்று தினங்களுக்கு முன்னால் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் ஓர் அறிவிப்பைப் பார்த்தார். அதாவது, சென்ற மழைக்காலத்தில் சென்னையில் மழைநீர் பலநாட்கள் வடியாமல் இருந்த போது தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனில் மழைநீர் புகுந்து புத்தகங்கள் நனைந்தன. திடீரென ஏற்பட்ட இந்நெருக்கடியை சமயோசிதமாகக் கையாண்டு நனைந்த புத்தகங்களை அதிக சேதாரம் இல்லாமல் உலர்த்திக் காத்தனர். இவ்விதமான நூல்கள் சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பு எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் வெளியாகியிருந்தது. வெள்ளியன்று மாலை 5.30லிருந்து 8.30 வரை இந்த சிறப்பு விற்பனை நிகழும் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அமைப்பாளர் சென்னை செல்லத் திட்டமிட்டார். வழக்கம் போல், தவிர்க்க இயலாத சில லௌகிகப் பணிகள். போக முடியாமல் ஆகி விடும் என அவரின் உள்ளுணர்வு கூறியது. எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணினார்.
வங்கி மேலாளரான தனது இளவலுக்கு ஃபோன் செய்தார்.
‘’தம்பி ! தேசாந்திரி ஸ்பெஷல் சேல் போட்டுறுக்காங்க. எஸ். ரா தளத்தைப் பாரு. நான 5 நிமிஷம் கழிச்சு பேசறன்’’
மூன்று நிமிடத்தில் தம்பி கூப்பிட்டான்.
’’அண்ணன்! ரூ. 100 ரூ.200ன்னு ரெண்டு கேட்டகிரில புக்ஸ் இருக்கு. நாம தேசாந்திரிக்கு ஃபோன் செஞ்சு தபால்ல அனுப்ப சொல்லுவோமா?’’
‘’தபால்ல அனுப்புவாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்கு. ரூ.100 புக் அனுப்ப ரூ.50 செலவாகிடும். அதனால தான் ஸ்பெஷல் சேல் போட்டிருக்காங்க. அப்புறம் கொஞ்சம் டேமேஜ் ஆன புக் ஒரு வாசகர் பாத்து எடுக்கும் போது அது அவராவே எடுக்கறது. ஆனா தபால்ல வந்தா இன்னும் பெட்டர் காப்பி இருந்தா நல்லா இருக்கும்னு தோணும் இல்லயா. இட்ஸ் ஹியூமன்’’
‘’ஆமா அண்ணன் . நீங்க சொல்ற ஆங்கிள் கரெக்ட் தான்’’
‘’நாம யாரையாவது அனுப்பி வாங்க சொல்லணும். யாரை அனுப்பலாம்?’’
‘’திராத் அப்பா தான் கரெக்ட் சாய்ஸ். நீ விஷயத்தை எக்ஸ்பிளைன் பண்றியா?’’
‘’அண்ணன் ! திராத்துக்கு அன்னைக்குத் தான் நாமகரணம். அன்னைக்கு முழுக்க அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப பிஸியா இருப்பாங்க’’
’’வேற யார் பொருத்தமா இருப்பாங்க?’’
’’என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் வீடு கும்மிடிப்பூண்டில இருக்கு’’
‘’இல்ல அது ரொம்ப தூரம் சரியா வராது. நான் யோசிக்கறன். நீயும் யோசி’’
கிழக்குக் கடற்கரை சாலையில் அடையாருக்கும் மாமல்லபுரத்துக்கும் நடுவில் வசிக்கும் எழுத்தார்வம் கொண்ட இலக்கிய வாசகரான தனது நண்பருக்கு ஃபோன் செய்தார் அமைப்பாளர். நண்பர் ஐ டி கம்பெனியில் பணி புரிபவர். ஒரு மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது ; ஒரு மணி நேரம் கழித்து அழைக்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினார். கூறியபடி அழைத்தார். அமைப்பாளர் விபரம் சொல்ல 90 சதவீதம் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார் நண்பர்.
அடுத்த நாள் வங்கி மேலாளருக்கு ஃபோன் செய்து ‘’ தம்பி ! யாரை அனுப்பலாம்னு யோசிச்சயா?’’ என்றார்.
மேலாளர் யோசிக்கவில்லை என பதில் சொல்ல அமைப்பாளர் இந்த விஷயத்தை மனசுல யோசிச்சுட்டே இரு. அப்பதான் நடக்கும் என்றார்.
ஈ சி ஆர் நண்பருக்கு அமைப்பாளர் காலையில் ஃபோன் போட்டார். சாயந்திர நிகழ்வை ஞாபகப்படுத்தினார். ‘’ஞாபகம் இருக்கு. நாலு மணிக்கு நான் அங்க இருப்பன்’’
நான்கு முப்பதுக்கு நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. ‘’வென்யூக்கு இன்னும் 10 நிமிஷத்துல போயிடுவன்.’’
நண்பர் அங்கு சென்றதும் அமைப்பாளர் ஃபோன் செய்து ’’ரூ. 100 லிஸ்ட்ல உள்ள புக்ஸ் என்னென்னன்னு சொல்லுங்க. ரூ. 200 லிஸ்ட்ல உள்ள புக்ஸ் என்னென்னன்னு சொல்லுங்க. எழுதிக்கறன்’’ என்றார். நண்பர் அங்கே உள்ள புத்தகங்களைப் பார்த்து சொன்னார்.
அமைப்பாளர் அவற்றைப் பரிசீலித்து , ’’மேற்கின் குரல், ஆயிரம் வண்ணங்கள், கேள்விக்குறி, தேவமலர், சித்தார்த்தா, எழுத்தே வாழ்க்கை, வீடில்லாப் புத்தகங்கள் ‘’ என ஏழு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ஃபோனில் சொன்னார்.
வங்கி மேலாளருக்கும் பட்டியலைச் சொல்ல அவர் , ‘’மேற்கின் குரல், பறவைக் கோணம், நான்காவது சினிமா, தேவமலர், சித்தார்த்தா, எழுத்தே வாழ்க்கை, அரூபத்தின் நடனம்’’ ஆகிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்.
ஈ சி ஆர் நண்பர் , ‘’மேற்கின் குரல், ஆயிரம் வண்ணங்கள், தேவமலர், நாவலென்னும் சிம்பொனி, சித்தார்த்தா, 18ம் நூற்றாண்டின் மழை’’ ஆகிய நூல்களை தெரிவு செய்திருந்தார்.
கணித்தத்தில் செட் லாங்க்வேஜ் என்ற பிரிவில் வென் வரைபடங்கள் என ஒரு பிரிவு இருக்கும். அதில் ஏ யூனியன் பி யூனியன் சி என மூன்றுக்கும் பொதுவான பரப்பு அடையாளப்படுத்தப்படும். மூன்று பேர் தேர்ந்தெடுத்த புத்தகங்களிலும் அவ்வாறான பொது ரசனைப் பரப்பு இருப்பதாக அமைப்பாளர் எண்ணினார்.
அமைப்பாளர் எடுத்த புத்தகங்கள் ரூ.800 மதிப்புடையவை. இளவல் எடுத்த புத்தகங்களும் ரூ.800 மதிப்புடைய்வை. ரூ. 1600 யு.பி.ஐ மூலம் இளவலால் அனுப்பப்பட்டது. நண்பர் புத்தகங்களுடன் ஈ சி ஆரில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டார்.
வங்கி மேலாளர் அமைப்பாளரிடன் ‘’ அண்ணன் ! இந்த புக்ஸ்ஸை எப்படி கலெக்ட் பண்ணிக்கறது? ‘’ என்று கேட்டார்.
அமைப்பாளர் ‘’அதைத் தனியாக யோசிப்போம்’’ என்றார்.