Monday 18 March 2019

அறுபது நாழிகை

உனது காலை விழிப்புகள்
இனிமையாக அமையட்டும்
அதிகாலைச் செவ்வானின் முன்
மெல்ல கரைதொடும் அலைகளைப் போல

உனது பகல்
மணல் குவியல் மேல்
வைக்கப்பட்டுள்ள
பானை நீர்த் தட்பமென
குளிர்ந்திருக்கட்டும்

உனது அந்திகள்
நீ உன் விரல்களால்
உருவாக்கும்
தீச்சுடரென ஒளிரட்டும்

நீண்டிருக்கும் இரவுகள்
உன் ஆழ் துயிலில்
ஒரு மலரென
கணம் கணமாக
மலர்ந்து கொண்டிருக்கட்டும்