Thursday 5 September 2019

காவேரித் தண்ணீர்

இளம் பெண்ணின் நாணத்துடன் ஊருக்குள் இன்று காலை அடி எடுத்து வைத்திருக்கிறாள் காவேரி. வாழ்வில் எத்தனை சுக துக்கங்கள் இருந்தாலும் காவேரிக்கரையில் இருப்பவர்களுக்கு காவேரியில் நீர் வருவதைப் பார்ப்பது என்பது அகம் விம்மும் அனுபவம். இயற்கை சிலருக்கு அளிக்கும் வரம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மகவாக சிறுமியாக கன்னியாக அன்னையாக நதியைக் காணும் அனுபவம். எங்கோ பிறந்து எங்கள் மண் தீண்டி எங்களுக்கு வாழ்வு தருகிறாள் காவேரி. யாருமற்ற ஆலயத்தில் ஒரு கலைஞன் இசைக்கும் ஒற்றை நாதஸ்வர இசை போல் காவேரியைப் பார்க்கும் அனுபவம் இருக்கிறது. அம்மா! எங்கள் பிழைகளுக்காக எங்கள் தவறுகளுக்காக எங்கள் மூர்க்கங்களுக்காக எங்கள் அறியாமைகளுக்காக எங்களை மன்னிப்பாயாக. எங்கள் ஜீவனில் படிந்திருக்கும் மாசுகளை உன் நீர்மையால் அகற்றி எங்களைத் தூய்மை அடையச் செய்வாயாக.