Saturday 12 February 2022

ஞான தீபம் (மறு பிரசுரம்)

நான் வாடிக்கையாகச் செல்லும் சலூனின் உரிமையாளர் எனது நண்பர். இளைஞர். சமூகப் பிரக்ஞை உள்ளவர். 

சென்ற ஆண்டில் நான் அங்கு சென்றிருந்த போது அவரிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். 

‘’தம்பி! சலூன் -ல சின்னதா ஒரு புக் ஷெல்ஃப் வைங்க. இருபது முப்பது புத்தகம் வைக்கற மாதிரி. என்கிட்ட ஆயிரம் புக்ஸுக்கு மேல இருக்கு. அதுல இருந்து முப்பது புத்தகம் உங்களுக்கு கிஃப்ட்டா தர்ரேன். சலூனுக்கு வர்ரவங்க வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது வாசிக்கக் கொடுங்க. யூஸ் ஃபுல்லா இருக்கும். ‘’

‘’எங்க அண்ணன்! எல்லார் கையிலும் செல்ஃபோன் இருக்கு. எல்லாரும் செல்ஃபோனைத் தோண்டிட்டு இருக்காங்க’’

‘’உண்மை தான் தம்பி. மனுஷங்கள்ள பெரும்பாலானவங்க பழக்கத்துக்கு அடிமையா இருக்கறவங்க தான். ஆனா அவங்களுக்கும் எது சரி எது தப்புன்னு தெரியும். ஒரு சலூன்ல லைப்ரரி போல ஒரு சிஸ்டம் இருக்கறத அவங்க ரொம்ப வேல்யூ உள்ளதா நினைப்பாங்க’’

’’அண்ணன் கடையில சில இண்டீரியர் ஒர்க் பண்ணலாம்னு இருக்கன். அப்ப ஒரு புக் ஷெல்ஃப் அரேஞ்ச் பண்றேன். ‘’

சில மாதங்கள் சென்றன. அவர் சலூனில் ஒரு ஏ.சி.யைப் பொருத்தினார். சுழலும் நாற்காலிகளை புதிதாக வாங்கிப் போட்டார். எனினும் அவர் திட்டமிட்ட விதத்தில் தச்சுவேலை எதையும் செய்யவில்லை. தற்காலிகமாக அதனை தள்ளி வைத்தார். 

ஒருமுறை நான் சென்றிருந்த போது உற்சாகமாக வரவேற்றார். 

‘’அண்ணன்! விஷயம் கேள்விப்பட்டீங்களா!’’

‘’என்ன விஷயம் தம்பி?’’

‘’தூத்துக்குடி-ல ஒரு சலூன்ல லைப்ரரி மாதிரி நிறைய புக்ஸ் வச்சுருக்காங்க. முடி வெட்டிக்க வர்ரவங்க அந்த புக்ஸை எடுத்துப் படிக்கிறாங்க. பிரைம் மினிஸ்டர் ரேடியோவில பேசற ‘’மன் கி பாத்’’ நிகழ்ச்சில அந்த சலூன் கடைக்காரரோட பேசியிருக்கார் அண்ணன்’’

‘’அப்படியா! நல்ல விஷயம் தம்பி. நிறைய பேருக்கு இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்கறது போய் சேரும். இன்னும் பல பேரு கூட செஞ்சு பாப்பாங்க’’

அந்த உரையின் ஒரு பகுதியின் காணொளியை எனக்கு தன்னுடைய அலைபேசியில் காண்பித்தார். 

‘’அண்ணன்! நாம முன்னாடி பிளான் செஞ்சதைப் போல ஏதாவது செய்யணும் அண்ணன்.’’ சகோதரர் மிகவும் ஆர்வமாக இருந்தார். 

‘’நான் யோசிக்கிறேன் தம்பி’’

வீட்டுக்கு வந்து யோசித்தேன். நடந்த சம்பவங்கள் மனதில் முன்னும் பின்னுமாய் வந்து போயின. ஒரு விஷயம் குறித்து யோசிக்கையில் நான் அதனை மனதில் ஆழ விட்டு விடுவேன். நாம் எதிர்பார்க்காத கணம் ஒன்றில் ஒரு யோசனை அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு அவதானம் மேலெழுந்து வரும். அப்படி ஒரு யோசனை உண்டானது. 

மறுநாள் நான் சலூன்கடைக்காரரைச் சந்தித்தேன். 

‘’தம்பி! நீங்க சொன்ன விஷயத்தை யோசிச்சுப் பார்த்தேன். ஒரு ஐடியா தோணுச்சு.’’

‘’சொல்லுங்க அண்ணன்’’

‘’இப்ப நம்ம ஊர் மாவட்டத் தலைநகரா ஆகியிருக்கு. தமிழ்நாட்டோட சின்ன மாவட்டங்கள்ல ஒன்னு. இந்த மாவட்டம் முழுதும் எத்தனை சலூன் இருக்கும்?’’

அவர் யோசித்தார். 

‘’நம்ம மாவட்டத்துல மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்னு நாலு தாலுக்கா இருக்கு. நாலு தாலுக்காவிலயும் மொத்தமா 250 கிராமங்கள் இருக்கு. சராசரியா மூணு கிராமத்துக்கு ஒரு சலூன்னு வச்சுகிட்டா கிராமங்கள்-ல 80-லிருந்து 100 சலூன் இருக்கும். பெரிய டவுன், சின்ன ஊர்னு சேர்த்தோம்னா மொத்தம் 400 சலூன் இருக்கும்’’

‘’கரெக்ட் தான் சார்! 400 - 500 சலூன் இருக்கும்’’

‘’நாம இந்த 400 சலூன்லயும் பத்து புக் தர்ரோம். ஒரே நாள்ல நம்ம மாவட்டம் முழுக்க இருக்கற சலூன்கள் சலூன் லைப்ரரியா ஆகுது.’’

‘’கொஞ்சம் பெரிய வேலையாச்சே சார்’’

‘’பெரிய வேலை தான். ஆனா முக்கியமான வேலை. நாம சேந்து செய்வோம். உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணுமோ அத நான் கொடுக்கறன். இதைப் பத்தி நீங்க யோசிங்க. உங்களுக்கு இது சம்பந்தமா மனசுல என்ன கேள்விகள் வருதோ அதுக்கு நான் பதில் சொல்றேன். நாம இந்த விஷயம் சம்பந்தமா சேர்ந்து யோசிப்போம். வேதத்தில ஒரு மந்திரம் இருக்கு.

‘ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்
உங்கள் மனம் ஒன்றாகட்டும்’ ‘’

அவர் யோசிக்கட்டும் என நான் வீட்டுக்கு வந்து விட்டேன். 

நானும் வீட்டுக்கு வந்து ஒவ்வொரு சலூன் நூலகத்திலும் இருக்க வேண்டிய பத்து நூல்கள் என்னவாக இருக்கலாம் என யோசித்தேன். அந்த பத்து நூல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. சுவாமி விவேகானந்தரின் நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்தேன். 




இந்தியாவில் பலருக்கு சுவாமி விவேகானந்தர் பெரும் உந்து சக்தியாக விளங்கியுள்ளார். சமூக சேவகர்கள், கல்வியாளர்கள், தொண்டு புரிபவர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் என பலருக்கு சுவாமிஜியே சிந்தனையின் அடித்தளமாக இருந்துள்ளார். எனவே இந்த பத்து நூல்களும் சுவாமி விவேகானந்தரை அடிப்படையாய்க் கொண்டு இருப்பது உகந்ததாக இருக்கும் என்று எண்ணினேன். 




சுவாமி சித்பவானந்தர் தமிழ் அறிஞர். தமிழில் விவேகானந்த இலக்கியத்தில் முக்கியமான முன்னோடி. அவருடைய தமிழ்த் தொண்டு தமிழ்நாட்டுச் சூழலில் முழுதாக உணரப்படவில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. மொழி, சமயம், இலக்கியம், ஆன்மீகம், சமூகம் சார்ந்து பலநூல்களை இயற்றியவர். தமிழ்நாட்டில் பெரும் கல்வி மற்றும் சமூகப் பணியாற்றியவர். அவர் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய நூல்களாக இந்த 10 நூல்களும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். 

1. சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகாந்தரின் வாழ்க்கையை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நூல். 

2. ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை விரிவாக முன்வைக்கும் நூல். சுவாமிஜி குறித்து ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பர்யம் குறித்து சுவாமிஜி வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து சுவாமிஜி இளைஞர்களுக்கு விடுத்த அறைகூவல் குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல். 

3. சிகாகோ பிரசங்கங்கள்

சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜி ஆற்றிய சரித்திர பிரசித்தி பெற்ற உரைகளின் தொகுப்பு இந்நூல்.

4. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்

சுவாமிஜி சிகாகோவில் உரையாற்றிய பின் இந்தியா திரும்புகையில் கப்பலில் இராமேஸ்வரம் பாம்பன் வந்தடைகிறார். அவர் பாம்பன், இராமேஸ்வரம், இராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் உரையாற்றியுள்ளார். அந்த உரைகளின் தொகுப்பு இந்நூல். 

5. விவேகானந்த உபநிஷதம்

சுவாமிஜி அமெரிக்காவில் தன் மேலைச் சீடர்களுடன் ‘’ஆயிரம் தீவுச் சோலை’’ என்னும் இடத்தில் தங்கியிருந்து அவர்களுக்கு வேதாந்தத்தைப் போதித்தார். அந்த போதனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 

6. ஸ்ரீராமகிருஷ்ண சரிதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர். நமது நாடும் நமது பண்பாடும் அழியாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும். அவரது வரலாற்றை எடுத்துரைக்கும் சிறுநூல். 

7. இராமாயணம்

சுவாமி சித்பவானந்தர் வால்மீகி இராமாயணத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

8. மகாபாரதம்

சுவாமி சித்பவானந்தர் வியாச பாரதத்தை ஒட்டி தமிழில் எழுதிய நூல். 

இந்த எட்டு நூல்களும் சுவாமி சித்பவானந்தர் இயற்றியவை. 

9. ஆத்ம போதம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அத்வைதி. அத்வைதத்தின் ஆச்சார்யரான ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட நூல் ஆத்ம போதம். திரு. வி.எஸ். நரசிம்மன் என்பவர் சுலோகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

10. கந்தர் அனுபூதி

அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட ‘’கந்தர் அனுபூதி’’. 

இந்த பத்து நூல்களும் கொண்ட தொகுப்பு இந்தியா குறித்து இந்திய ஆன்மீகம் குறித்து இந்தியப் பண்பாடு குறித்து மிக நல்ல அறிமுகம் அளிக்கக் கூடியவை. 

அவற்றை இணையத்தில் rktapovanam(dot)org தளத்தில் ஆர்டர் செய்தேன். இரண்டு நாளில் கைக்கு வந்தது. நண்பரின் சலூனில் கொண்டு போய் வைத்தேன். 

‘’தம்பி! எந்த நல்ல விஷயத்தையும் உடனே செய்யணும். சுபஸ்ய சீக்கிரம்-னு சொல்லுவாங்க. இந்த புக்ஸ்ஸை சலூன்ல வைங்க. ஒரு வாரம் பத்து நாள் பாருங்க. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு. கஸ்டமர் என்ன மாதிரி கேள்வி கேக்கறாங்க. எப்படி ரிஸீவ் பன்றாங்கன்னு அப்சர்வ் பண்ணுங்க. அடுத்து என்ன செய்யலாம்னு நாம அப்புறம் யோசிக்கலாம்’’

ஒரு வாரம் கழித்து நான் சலூனுக்குச் சென்றேன். 

‘’அண்ணன்! நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குன்னன். தினமும் அஞ்சு ஆறு பேர் புக் எடுத்து படிக்கிறாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்கறாங்க அண்ணன்’’ 

‘’தம்பி! சுவாமிஜி நம்ம நாட்டையே உருவாக்கினவர். மகாத்மா காந்தி, அரவிந்தர், திலகர், வல்லபாய் படேல், நேரு, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் னு பலபேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவரு. இன்னைக்கு நம்ம தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில அது ஸ்கூலோ காலேஜ்ஜோ சுவாமிஜி பத்தி ஒரு வார்த்தை இல்லை. குழந்தைகளும் இளைஞர்களும் அவங்க பள்ளிப்படிப்பு வழியா சுவாமி விவேகானந்தரைக் கேள்விப்பட கூட வழி இல்ல. இன்னைய தேதில ஒரு கவர்மெண்ட் ஸ்கூலோ காலேஜோ செய்யாதத நீங்க செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நிச்சயம் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் தம்பி.’’

மேலும் சில நாட்கள் சென்றன. நான் அவ்வப்போது சென்று பார்த்து வந்தேன். அவருக்கு சில விஷயங்கள் குறித்து விளக்கம் தேவைப்பட்டது. அவற்றைக் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த பதில்களைத் தந்தேன். 

1. அண்ணன்! சலூன் -ல ஆன்மீகப் புத்தகங்கள் இருக்கறது பொருத்தமா இருக்குமா?

தம்பி! மகாபாரதத்துல ஒரு கதை இருக்கு. ஒரு யோகி ரொம்ப வருஷம் தவம் செஞ்சு நிறைய சித்திகளை அடையறாரு. அவர் தவம் செஞ்சுகிட்டு இருக்கும் போது வானத்துல பறக்கற ஒரு பறவை அவர் மேல தெரியாம எச்சமிட்டுடுது. அதை அவர் கோபத்தோட பாக்கறார். அது எரிஞ்சு சாம்பலா விழுந்திடுது. தான் தவத்துல ரொம்ப பெரிய இடத்துக்கு வந்துட்டோம்னு பல வருஷ தவத்தை முடிச்சுட்டு ஊருக்குள் வர்ராறு. 

ஒரு வீட்டு வாசல்ல நின்னு ‘’பவதி பிக்‌ஷாம் தே ஹி’’ன்னு பிச்சை கேக்கறார். அந்த வீட்டு அம்மா பிச்சை போட வர நேரமாகுது. அவங்க வந்ததும் கோபமா பாக்கறாரு. அந்த அம்மா ‘’ என்ன முனிவரே! என்ன கொக்குன்னு நினைச்சீங்களா உங்க பார்வையாலே எரிக்கறதுக்கு ‘’ன்னு சிரிச்சிட்டே கேக்கறாங்க. முனிவருக்கு ரொம்ப அதிர்ச்சி. உங்களுக்கு எப்படி நடந்ததை அறியுற தவவலிமை வந்ததுன்னு கேக்கறாரு. 

தவம் செய்யறவனுக்கு மட்டும்தான் தவவலிமை கிடைக்கும்னு இல்லை. தன்னோட கடமையை முழுமையாச் செய்றவனுக்கும் தவவலிமை கிடைக்கும். உடம்பு முடியாத என்னோட கணவருக்கு நான் சிரத்தையா பணிவிடை செய்றன். அதனால எனக்கு இந்த சித்தி கிடைச்சுதுன்னு அந்த அம்மா சொல்றாங்க. 

அந்த அம்மாட்ட அந்த முனிவர் ஞானோபதேசம் செய்யச் சொல்றாரு. 

இந்த ஊர்ல கடைத்தெருவுல ஒரு இறைச்சிக் கடை இருக்கு. அந்த இறைச்சிக் கடைக்காரர போய் பாருங்க. அவர் தான் உங்களுக்கு உபதேசம் செய்ய மேலும் பொருத்தமானவர்னு சொல்றாங்க. 

முனிவர் அந்த இறைச்சிக்கடைக்காரரைப் பார்க்கப் போறார். 

அந்த இறைச்சிக் கடை ஒரே சந்தடியா இருக்கு. பிராணிகளோட ரத்தம், எலும்பு , தோல்னு சிதறிக் கிடக்கு. முனிவர் அங்க போய் நிக்கறார், கடைக்காரர் அவரைப் பார்த்ததும் ‘’வாங்க முனிவரே! உங்களை அந்த அம்மா அனுப்பினாங்களா. கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? நான் என்னோட வேலைகளை முடிச்சுட்டு வர்ரேன்னு சொல்றார். 

முனிவர் ரொம்ப நேரமா காத்திருக்கார். சாயந்திரமா வியாபாரத்தை முடிச்சுட்டு கடையை சுத்தமாக் கழுவி விட்டுட்டு முனிவருக்கு ஸ்வதர்மம் பத்தி உபதேசம் செய்றார். 

இது மகாபாரதக் கதை தம்பி. 

தன்னோட கடமையை முழுமையாச் செய்றது தான் ஆன்மீகம்னு சுவாமி விவேகானந்தர் சொல்றார். நீங்க சமூகப் பிரக்ஞையோட ஒரு நல்ல காரியம் செய்யறீங்க. அதை எங்கயும் செய்யலாம் தம்பி. தீபம் எங்க இருந்தாலும் ஒளி கொடுக்கும். மல்லிகை எப்போதும் மணம் வீசும். 

2. புத்தகங்களை யாராவது வீட்டுக்கு எடுத்துப் போய் வாசிக்கக் கேட்டா என்ன செய்றது?

அவசியம் கொடுங்க தம்பி. என் கையில நான் ஸ்பேரா சில புக்ஸ் வச்சுக்கறன். அதுல இருந்து ரீ-பிளேஸ் பண்றேன். 

3. ஒரு நாளுக்கு 5 அல்லது 6 பேர் தான் படிக்கிறாங்க. எல்லாரும் படிக்கறது இல்லையே?

அதாவது தம்பி நாம இப்ப செய்யறது முதல் முயற்சி. மாவட்டம் முழுசும் 500 இடத்துல இருந்தா ஒரு நாளைக்கு ஒவ்வொரு சலூன்லயும் ஒருத்தர்னு எடுத்துப் பார்த்தா கூட 500 பேர் தினமும் பார்க்கறாங்கன்னு அர்த்தம். ஒரு மாசத்துக்கு ஒரு வருஷத்துக்குன்னு கணக்கு போட்டு பாருங்க. எத்தனை பேரை ரீச் செய்யும்னு யோசிங்க. 

அண்ணா ஹசாரே ஒரு ரயில்வே ஸ்டேஷன் புக் ஷாப்-ல தற்செயலா சுவாமி விவேகாந்தர் புத்தகத்தை வாசிக்கறார். அதுதான் அவர் வாழ்க்கைல ஒரு முக்கியமான திருப்புமுனையா இருந்துச்சு. ‘’ரலேகான் சித்தி’’ மாதிரி கிராமத்தோட அடிப்படை அது. 

நம்ம முயற்சி என்ன பலன் கொடுக்கும் நம்மால முழுக்க கணிச்சுற முடியாது தம்பி. 

4. இப்ப நான் என்ன செய்யணும்?

’’தம்பி! நான் ஃபிரண்ட்ஸ் சில பேர்ட்ட பேசி இருக்கேன். அவங்க சப்போர்ட் பண்றேன்னு சொல்றாங்க. அவங்களுக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு. 400 சலூன். சலூனுக்கு 10 புக்-னா மொத்தம் 4000 புக்ஸ். நாம ஃபிரண்ட்ஸ் சப்போர்ட்டோட புக்ஸை வாங்கிடுவோம். அப்புறம் ஒவ்வொரு சலூனுக்கும் நேரா போய் விஷயத்தைச் சொல்லி கொடுத்துட்டு வருவோம். நல்ல விஷயத்தை எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க தம்பி. உங்க சலூன்ல ஒரு மாசமா இந்த 10 புக்ஸ் இருக்கு. உங்க எக்ஸ்பீரியன்ஸ அவங்களுக்கு சொல்லுங்க. அது இன்னும் பொருத்தமா இருக்கும்.’’

5. இது பெரிய அளவில பலன் கொடுக்குமா சார்?

இது சின்ன அளவில பலன் கொடுத்தாக் கூட நிறைய பேருக்கு பிரயோஜனமா இருக்கும் தம்பி. 

6. இதுல வேற ஏதும் சிறப்பா செய்யனுமா?

மார்ச் 15 அன்னைக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி. அன்னைக்கு நம்ம மாவட்டத்துல உள்ள எல்லா சலூன்லயும் இந்த பத்து புக்ஸ் இருக்கற மாதிரி ஏற்பாடு செய்யலாம். 

வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. 

இந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.