Tuesday 19 March 2024

சங்கிரகம் (மறு பிரசுரம்)

சில நாட்களாக தளத்தில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளை மீள்பதிவு செய்து கொண்டிருந்தேன். அது பணிகளைத் தொகுத்துக் கொள்ள உதவிகரமாக இருந்தது. என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை புறவயமாக அறியச் செய்தது. இச்செயல்கள் அமைப்பின் செயல்கள் மட்டும் அல்ல ; மக்களின் செயல்களும் கூட. மக்கள் பங்களிப்பு இருக்கும் விதத்திலேயே ‘’காவிரி போற்றுதும்’’ தன் செயல்களை வடிவமைக்கிறது. எனவே மக்களுக்கு முதற்கண் நன்றி தெரிவிக்கிறது.  தமிழ்ச் சூழலில் எவ்விதமான பங்களிப்பும் நிதிப்பங்களிப்பே என்ற மனப்பதிவு பரவலாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் செயல்கள் மூலம் பங்கெடுப்பதும் பெரும் பயன் விளைவிக்கக் கூடியது என்பதை ‘’காவிரி போற்றுதும்’’  அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது. 

புதிதாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ கூறும் போதெல்லாம் அதற்கு ஊக்கம் தந்து அது நிகழ்வதற்கு சகலவிதமான உதவிகளும் செய்து அதனைச் சாத்தியமாக்குவது நண்பர்களே. அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இந்த தருணம் பொருத்தமானது ஆகும். 

உண்மையில் ‘’காவிரி போற்றுதும்’’  ஓர் இணைப்புப் பாலமாகவே செயல்படுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒரு பக்கம். சாமானிய மக்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இருவரும் ‘’காவிரி போற்றுதும்’’ வழியாக இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது என்பதே உண்மை.