Thursday 7 April 2022

விழிப்புணர்வு பிரசுரம்

{மரக்கன்றுகள் வழங்க உள்ள ஒரு கிராமத்தின் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் கீழ்க்காணும் கடிதத்தை அனுப்பி உள்ளேன். மரம் நடுதலில் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். }

போற்றுதலுக்குரிய வேளாண் குடிமக்களுக்கு,

 

‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நம் பகுதியில் உழவர்கள் அல்லும் பகலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் தொடர்புடைய உழவு, நீர் பாய்ச்சல், நாற்றங்கால் உருவாக்கம், நடவு, களையெடுத்தல், அறுவடை ஆகிய விஷயங்களையும் மரப்பயிர்கள் தொடர்பான விஷயங்களையும் முழுமையாக அறிந்துள்ளார்கள். எனினும் மரப்பயிர்களில் அதிக அளவு பயன் விவசாயிகளுக்குக் கிடைக்க சில எளிய வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது.

 

‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக மரக்கன்றுகள் நடுவதில் பின்பற்ற வேண்டிய கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விவசாயிகள் கவனத்துக்குக் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

 

1. மரம் நட எடுக்க வேண்டிய குழியின் அளவு

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அது பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளில் 90 சதவீதம் நிகழ்ந்து விடும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. ஒரு மரத்தின் வளர்ச்சியும் அது நடப்பட்ட ஆறு மாத காலத்தில் பெருமளவு தீர்மானிக்கப்பட்டு விடும். மரத்தின் வளர்ச்சியில் நடப்பட்டதும் அது வேர் விடுதல் என்பது மிக முக்கியமான கட்டம்.

எந்த மரக்கன்றும் நட முதல் படியாக இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி வெட்டப்பட வேண்டும். அந்த குழியில் மக்கிய சாண எரு , மக்கிய ஆட்டு உரம், மக்கிய இலை தழைகள் ஆகியவற்றை அந்த குழி நிரம்பும் வண்ணம் முழுமையாக நிரப்ப வேண்டும்.

 

2. ஒரு மரக்கன்றுக்கும் இன்னொரு மரக்கன்றுக்கும் இடையே உள்ள இடைவெளி

ஒரு மரக்கன்றுக்கும் இன்னொரு மரக்கன்றுக்கும் இடையே உள்ள இடைவெளி 12 அடி என்ற அளவில் இருக்க வேண்டும். இரண்டு மரங்களும் சிறப்பாக வளர்வதை இந்த இடைவெளி உறுதி செய்யும். அருகருகே மரங்கள் நடப்பட்டால் இரண்டு மரங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இரண்டும் போதிய பயன் தராமல் போகும்.

 

 

3. சூரிய ஒளி

மரக்கன்றுகள் போதிய சூரிய ஒளியில் வளரும் வண்ணம் நடப்பட வேண்டும். நிழலில் நடப்படும் மரங்கள் எதிர்பார்த்த பலன் தராமல் போகக் கூடும்.

 

4. நீர் வார்த்தல்

முதல் ஆறு மாதம் வாரத்துக்கு மூன்று முறையும் அதன் பின்னர் வாரத்துக்கு இரண்டு முறையும் மரக்கன்றுகளுக்கு நீர் வார்க்க வேண்டும். மழைக்காலத்தில் மழை பெய்து மரக்கன்றுகளுக்குத் தேவையான நீர் கிடைத்து விடும். கோடைக்காலத்தில் கன்றுகளுக்கு போதிய அளவு நீர் கிடைப்பதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும்.

 

5. மேய்ச்சல்

மரக்கன்றுகளை ஆடு மாடு மேயாமல் இருப்பது மிகவும் அவசியம். ஆடு மாடு புழங்கும் இடம் எனில் எளிய முறையிலேனும் வேலி அமைப்பது மரத்தின் வளர்ச்சிக்கு உதவும்.

 

விவசாயிகள் அதிக அளவில் மரப்பயிர் செய்து அதன் பொருளாதாரப் பயன்களை அவர்கள் அடைய வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பின் விருப்பம். எனவே மேற்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு விவசாயக் குடிமக்களை ‘’காவிரி போற்றுதும்’’ கேட்டுக் கொள்கிறது.

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் சித்திரை மாதம் மரக்கன்றுகள் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் வீட்டிலோ அல்லது வயலிலோ அல்லது தோட்டத்திலோ எங்கு உத்தேசித்திருக்கிறார்களோ அங்கு மேலே குறிப்பிட்ட வண்ணம் குழி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

அன்புடன்,

 

அமைப்பாளர்

காவிரி போற்றுதும்