Monday 26 February 2024

சகோதரன்

சென்னையிலிருந்து நண்பன் கதிரவன் அலைபேசியில் இன்று மாலை தொடர்பு கொண்டார். அலைபேசியில் பெயரையும் எண்ணையும் சேமிக்கும் போது ஊர்ப்பெயரை முன்னாலும் பெயரை பின்னாலும் எழுதி சேமிப்பேன். மாநகரங்களின் மக்கள்தொகை அதிகம் என்பதால் சென்னை என்பதை முன்னொட்டாகக் கொண்ட பலருடைய பெயர்கள் அலைபேசியில் சேமிப்பாகியிருக்கும். சென்னை கதிரவன் என்ற பெயரில் மூன்று பெயர்கள் பதிவாகியிருந்தது. எனவே அழைப்பது எந்த கதிரவன் என்று சிறு குழப்பம். 

கதிரவன் சில மாதங்களுக்கு முன்னால் அறிமுகமானவர். பிறருக்கு உதவும் குணத்தை தனது இயல்பிலேயே கொண்டவர். தீவிரமாக உழைக்கக் கூடியவர். அவருக்கு வாழ்க்கை குறித்து அதன் தன்மை இயல்புகள் குறித்து நிறைய கேள்விகள் மனத்தில் இருந்தன. இருக்கின்றன. ஐ ஏ எஸ் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கிறார். அவ்வப்போது என்னிடம் வாழ்க்கை குறித்து ஏதேனும் கேள்விகளைக் கேட்பார். நான் அவ்வாறான கேள்விகளை ஊக்குவிப்பதில்லை. அவரிடம் சற்று கடுமையாகவே எதிர்வினையாற்றுவேன். அவரை எனது சகோதரனாக உணர்வதால் எடுத்துக் கொள்ளும் உரிமை அது. வேறு விஷயங்கள் எதிலும் மனதைச் செலுத்தாமல் ஐ ஏ எஸ் தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு சொல்வேன். 

என்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் நான் சொல்வதைக் கேட்பார்கள். நான் சொல்வதை செயல்படுத்த முயல்வார்கள். எனது அக்கறையை அவர்கள் புரிந்து கொள்வது ஒரு காரணமாகவும் அவர்கள் நன்மைக்கு உகந்ததையே நான் பரிந்துரைப்பது இன்னொரு காரணமாகவும் இருக்கலாம். 

கதிரவன் என்னுடன் பேசி இரண்டு மாதம் ஆகியிருந்தது. இன்று அவருடன் பேசியது மகிழ்ச்சி அளித்தது. இந்த இரண்டு மாதங்களில் அவருடைய ஐ ஏ எஸ் தயாரிப்பு இரு மடங்கு ஆகியிருக்கிறது. அவருடைய மனப்பக்குவம் கூடியிருக்கிறது. 

இறைமையின் ஆசி எப்போதும் அவரைச் சூழ்ந்திருக்கட்டும்.