சுதந்திர இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 96 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்யவும் ஆயிரக்கணக்கான குடிமக்களும் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளும் முழு சுதந்திரத்துடன் தேர்தலில் போட்டியிடவும் வழிவகை செய்து உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையை சிறப்பான முறையில் நிறைவு செய்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். இந்த செயல்பாடு தேர்தல் ஆணையத்தின் லட்சக்கணக்கான அலுவலர்களாலும் ஊழியர்களாலும் சாத்தியமாகியிருக்கிறது. லட்சக்கணக்கான தேர்தல் ஆணைய ஊழியர்களின் அர்ப்பணிப்பால் சா த்தியம் ஆகியுள்ளது. இந்த தருணத்தில் இந்திய தேர்தல் ஆணையம் முழுமையான பாராட்டுக்குரியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களும் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர் கள்.
உலகின் ஜனநாயக நாடுகள் பல தேர்தல்களை நடத்துகின்றன. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் செயல்படுத்தப்படும் ஜனநாயக முறையில் வித்தியாசங்கள் உள்ளன. அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடுகள் உண்டு . வாக்கு விகிதாச்சாரம் அடிப்படையில் இயங்கும் பாராளுமன்றங்கள் உண்டு. பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையும் உண்டு. அந்தந்த நாட்டின் நில அமைப்பும் மக்கள்தொகையும் அங்கே தேர்தல் நடத்தும் வழிமுறைகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை 34 கோடி. ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடி. ஜெர்மனியின் மக்கள் தொகை 8 கோடி. பிரிட்டனின் மக்கள் தொகை 6.5 கோடி. ஃபிரான்ஸின் மக்கள் தொகை 6.5 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி முடிப்பது என்பது அமெரிக்கா , ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளை ஒட்டு மொத்தமாகச் சேர்த்து இருமுறை தேர்தல் நடத்துவதற்கு சமமானது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இந்திய தேர்தல் ஆணையம் இந்த பெரும் பணியை சிறப்பாகவே செய்து வருகிறது.
இந்தியா போன்ற பரந்த பெரிய நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பது என்பது நிர்வாக ரீதியிலான விஷயம் மட்டுமல்ல ஜனநாயகம் என்ற கருதுகோளை உலக அரங்கில் நிலைப்படுத்தும் வலிமைப்படுத்தும் விஷயமும் ஆகும். பல கோடி மக்கள் வாக்களிக்க காகித வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்திய ஜனநாயகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய அருமருந்தாக வாய்த்தது. மின்னணு முறை கொண்டு வரப்பட்ட காலத்திலிருந்து சில கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய இயலும் என்று கூறி நீதிமன்றங்களை அணுகும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. எனினும் உச்சநீதிமன்றம் இந்தியத் தேர்தல்களில் மின்னணு எந்திரத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் போது மோசடி செய்யப்பட்டு போலியான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார். அவ்வாறு நிகழுமாதலால் அதனை எதிர்த்து வீதிகள் தோறும் வன்முறையில் இறங்க வேண்டும் என்றார் அகிலேஷ் யாதவ். ஜூன் 4 அன்று எல்லா மாநிலங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாயின. அகிலேஷ் யாதவ் மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் கட்சியான சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்ட்ராவில் கணிசமான தொகுதிகளையும் தமிழகத்தில் மொத்த தொகுதிகளையும் வென்றது. இந்த யதார்த்தம் குறித்து ஜெய்ராம் ரமேஷ் , அகிலேஷ் யாதவ் ஆகிய அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் முறைமைகள் மேல் களங்கம் கற்பிப்பது என்பது நூறு கோடிக்கும் மேலான வாக்காளர்கள் லட்சக்கணக்கான தேர்தல் ஆணைய அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஒட்டு மொத்த ஜனநாயக அமைப்பின் மேலும் பழி சேர்க்கும் நடவடிக்கை. ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்கும் இடையே ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன. அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மக்கள் ஏற்கும் பட்சத்தில் அதிகாரத்துக்கு வரலாம் . மக்கள் ஏற்பு இல்லையெனில் அதிகாரத்தில் இல்லாமல் மக்கள் பணியைப் புரியலாம். தங்கள் இயலாமையை மறைக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீதும் தேர்தல் ஆணையம் மீதும் பழி சுமத்துவது என்பது ஏற்கத்தக்க செயல் அல்ல.