அனுப்புநர்
ர.பிரபு
*****
******
*******
மயிலாடுதுறை
பெறுநர்
தாளாளர்
***** பள்ளி,
*******
*****
அன்புடையீர்!
இன்று இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தங்கள் பள்ளியில் பணி புரியும் வேன் டிரைவரை சந்திக்க நேர்ந்தது. எனது வாகனத்தில் அவருக்கு ‘’லிஃப்ட்’’ கொடுத்தேன். இருவரும் சேர்ந்து பயணிக்கையில் நாங்கள் உரையாடிய ஒரு விஷயம் குறித்து தங்களுக்குத் தெரிவிப்பது பலருக்குப் பயன் தரத்தக்கதாக இருக்கக்கூடும் என எண்ணினேன். அதற்காகவே இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
தங்கள் பள்ளியின் பள்ளி வாகன ஓட்டுநர்கள் காலை பணி முடிந்த பின் மாலை தங்கள் பணி துவங்கும் வரை - கிட்டத்தட்ட காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் தங்கள் பள்ளியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் காத்திருப்பதாக அறிந்தேன். வாகன ஓட்டுநர்களுக்காக பள்ளியில் பிரத்யேக அறை ஒன்றை ஒதுக்கி அதில் குடிநீர் வசதி செய்து அளித்திருப்பதும் அவர்கள் ஓய்வெடுக்க வசதி செய்தி கொடுத்திருப்பதும் அந்த அறையில் அவர்கள் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதும் நல்ல விஷயங்கள். பாராட்டத்தக்க விஷயங்கள். அதற்காக எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவர்கள் தங்களுக்கும் பள்ளிக்கும் பலன் தரும் வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபட முடியுமா என்று சிந்தித்துப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எனக்குத் தோன்றிய சில யோசனைகளை தங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன். வாய்ப்பு இருந்தால் செயல்படுத்த முயற்சிக்கவும்.
(1) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம் அமைக்கலாம். அதில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்கலாம். அந்த காய்கறிகளை விற்பனை செய்து கொள்ள ஓட்டுநர்களை அனுமதிக்கலாம். இடம் அளிப்பதற்கு பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு குறைவான தொகையை அவர்கள் செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யலாம்.
(2) 40 வாகன ஓட்டுநர்களைக் கொண்டு பள்ளியில் ஒரு நர்சரி உருவாக்கலாம். அதில் கொய்யா, பலா, நாவல், எலுமிச்சை ஆகிய பழ மரக் கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம்.
(3) 40 வாகன ஓட்டுநர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டடைந்து அவர்களுக்குத் துணிப்பை தயாரிப்பதில் பயிற்சி அளித்து துணிப்பை தயார் செய்யச் சொல்லலாம்.
(4) வாகன ஓட்டுநர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய மொழியை கற்றுக் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அவர்கள் புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரை நியமிக்கலாம்.
பள்ளி என்பது கல்வி பயிலும் இடம் ; கற்றுக் கொள்ளும் இடம். எனவே அங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்று வளர்ச்சி அடையும் விதத்தில் இருப்பது மகத்தானது. மாணவர்கள் மட்டுமன்றி பள்ளியின் பணியாளர்களுக்கும் தங்கள் பள்ளி புதிய கல்விக்கான வாய்ப்பை அளிக்கும் எனில் அச்செயல் ஒரு பெருஞ்செயலாக அமைந்து நாட்டின் பிற பள்ளிகளுக்கு மாதிரியாக எடுத்துக்காட்டாக அமையும்.
அன்புடன்,
***
நாள் : 30.08.2025
இடம் : மயிலாடுதுறை