Saturday, 28 February 2026

எஸ் ஐ ஆர் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது வீட்டுக்கு பக்கத்துத் தெருவில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு 82 வயது. அவரது ஒரு மகன் அமெரிக்காவில் இருக்கிறார் ; இன்னொரு மகன் சென்னையில் இருக்கிறார். ஒரு மகள். அவர் இருப்பது பெங்களூரில். நண்பர் அதனால் அவ்வப்போது சென்னை பெங்களூர் சென்று விடுவார்.  

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அறிவிக்கப்பட்டதும் எனக்கு ஃபோன் செய்தார். ‘’பிரபு ! எஸ் ஐ ஆர் க்கு எனக்கு ஃபார்ம் ஃபில் அப் செய்யணும்’’

‘’சார் ! இப்பதான் அனௌன்ஸ்மெண்ட் வந்திருக்கு. கணக்கெடுப்பு ஆரம்பிக்க இன்னும் 1 மாசமாவது ஆகும்’’

இருப்பினும் வாரத்துக்கு இரண்டு நாள் எனக்கு ஃபோன் செய்து நினைவூட்டுவார். 

கணக்கெடுப்பு ஆரம்பித்ததும் தினமும் ஃபோன் செய்வார். ‘’பிரபு ! எங்க வீட்டுக்கு யாரு கணக்கெடுக்க வர்ராங்கன்னு பாருங்க’’

‘’சார் எங்க வீட்டுல கணக்கெடுக்க வந்தா என்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லியிருக்கன். இன்னும் யாரும் வரல. அவங்க 3 தடவை வருவாங்க. நிச்சயம் உங்க பேரை சேத்துடலாம்’’

எங்கள் பகுதிக்கு ஒருவர். அவர் பகுதிக்கு இன்னொருவர். இருந்தாலும் அவரது படிவத்தை ஃபில் அப் செய்து சென்னைக்கு தபாலில் அனுப்பி கையெழுத்து வாங்கி சேர்த்து விட்டேன். 

’’தற்காலிகப் பட்டியல் எப்போ வெளியிடுவாங்க?’’ என்று கேட்கத் துவங்கினார். 

பட்டியல் வெளியானது. அவரது வீட்டில் எல்லாருடைய பெயரும் இருந்தது அவர் பெயரைத் தவிர.

மீண்டும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு படிவம் சென்னைக்கு அனுப்பி கையெழுத்து வாங்கி தாலுகா ஆஃபிஸில் கொடுத்தேன். 

இறுதிப் பட்டியல் எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இறுதிப் பட்டியல் வந்ததும் அதில் என் பெயரைத் தேடவில்லை ; அவருடைய பெயரைத்தான் தேடினேன். இருந்தது. ஃபோன் செய்து சொன்னேன். 

‘’பிரபு ! எனக்கு இப்ப ஒரு புது வோட்டர் ஐ டி கொடுப்பாங்க. அது தபாலில் வரும் . வாங்கி வச்சுக்கங்க’’

இன்று போஸ்ட்மேனைப் பார்த்தேன். பெரியவர் விபரம் சொல்லி வோட்டர் ஐ டி வந்தால் என்னிடம் கொடுங்கள் என்றேன். 

‘’சார் அவருக்கு போன வாரமே வோட்டர் ஐ டி வந்திடுச்சு. வீடு பூட்டியிருக்கு. அதனால டெலிவரி பண்ண முடியல’’ 

இன்று போஸ்ட் ஆஃபிஸ் சென்று நான் கையெழுத்து போட்டு அவருடைய வோட்டர் ஐ டி யை வாங்கினேன்.