Thursday, 12 March 2026

14 ஆண்டுகள்? 100 ஆண்டுகள்? (நகைச்சுவைக் கட்டுரை)

நமது நாட்டில் 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை என்று கூறுவதுண்டு. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை எனக் கருதும் வழக்கம் உண்டு. இப்போதும் 14 ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறைதான். இருப்பினும் சில சமூக அரசியல் பொருளியல் கூறுகளால் இந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இராமாயணத்தில் கைகேயி இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என விரும்பி தசரதனிடம் வரம் கேட்டார். 14 ஆண்டுகளில் அடுத்த தலைமுறை உருவாகி அவர்கள் பொறுப்பேற்கும் சூழல் உருவாகும் என்பதே அந்தக் கால நிர்ணயத்துக்கான காரணம்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி தாங்க அருந் தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.
 
என்பது கம்பன். 

எனினும் கைகேயின் வரத்தை பரதன் தன் தூய அன்பாலும் தியாகத்தாலும் செயலற்றதாக்கினான். அண்ணன் பாதுகையை தன் தலைமையாக ஏற்று அதன் பிரதிநிதியாக அண்ணன் 14 ஆண்டு நிறைவு செய்து திரும்பி வரும் வரை காத்திருந்து அரசாட்சியை ஒப்படைத்தான் என்பது இதிகாசம். 

மகாபாரதத்திலும் பாண்டவர்களின் வனவாசம் என்பது 12 ஆண்டுகள். மேலும் ஒரு வருடம் அக்ஞாதவாசம். அக்ஞாதவாசத்தில் அவர்கள் அடையாளம் வெளிப்பட்டால் மேலும் 12 ஆண்டுகள் வனவாசம். 14 ஆண்டுகள் ஒரு தலைமுறைக் காலம் என்பதை ஓராண்டு குறைப்பது போல் காட்டி இரண்டு தலைமுறை வனவாசத்துக்குக் கொண்டு செல்ல செய்யப்பட்ட முயற்சி. மதிசூழ்கையில் தேர்ச்சி கொண்டவரான சகுனி உருவாக்கிய நிபந்தனை. அக்ஞாதவாசத்தின் கடைசி தினத்தன்று பாண்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பதே பாதி ராஜ்யம் தர மறுத்ததற்கு கௌரவர் சொன்ன காரணம். பாஞ்சால தேசத்தின் தலைமைப் புரோகிதர் பாண்டவர் சார்பில் தூதுச் செய்தி உரைக்க வருவார். யுதிர்ஷ்ட்ரன் 13 ஆண்டு காலத்தைக் கணக்கிட்டு மேலும் கூடுதலாக ஒருநாள் அக்ஞாதவாசத்தில் இருந்த பின்னரே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். கௌரவர் அவையில் பீஷ்மரோ, துரோணரோ கிருபரோ விதுரரோ இவர்களில் எவர் ஒருவர் அக்ஞாதவாசத்தில்  பாண்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக எண்ணினால் யுதிர்ஷ்ட்ரர் எந்த சொல்லும் இன்றி வனவாசம் செல்ல சித்தமாக இருக்கிறார் ; பாஞ்சாலத்தின் தலைமைப் புரோகிதிரான எனது சொல்லும் வாக்குறுதியும் இது என்று அவையில் கூறுவார். நாள் பொழுதை துல்லியமாகக் கணக்கிடுவதில் தேர்ந்த தேர்ச்சி பெற்றவர்கள் புரோகிதர்கள். எனவே பாஞ்சாலத்தின் தலைமைப் புரோகிதர் தூதுக்கு அனுப்பப்பட்டிருப்பார். பீஷ்மர் துரோணர் கிருபர் விதுரர் நால்வரும் எந்த சொல்லும் கூறாமல் அமைதி காப்பார்கள். தலைமைப் புரோகிதர் அவர்கள் காக்கும் அமைதி பாண்டவர்களின் கணக்கீடு சரியானதே என்பதைக் காட்டுகிறது ; எனவே அவர்களுக்கு உரிய பாதி ராஜ்யம் தரப்பட வேண்டும் என்பதே எனது தூதின் செய்தி எனக் கூறுவார். 

60 ஆண்டுகளுக்கு முன்பு வரை 18 வயதில் ஒருவர் குடும்பப் பொறுப்பை ஏற்பது நடக்கும். விவசாயமாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் ஒருவர் 18 வயதில் பொறுப்பை ஏற்பார். நம் நாடு சுதந்திரம் அடைந்த போது வாக்களிக்கும் உரிமை குடிமக்களுக்கு 21 வயதில் தரப்பட்டது. அதன் பின் 35 ஆண்டுகளுக்குப் பின்னரே வாக்காளர் வயது 18 என ஆனது. இன்றைய காலகட்டத்தில் ஒருவர் பட்டப்படிப்பு படிக்கவே 21 வயது ஆகி விடுகிறது. அதன் பின் மேல்படிப்பு மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் படித்தால் 23 வயதாகி விடும். அதன் பின் ஒரு வேலையில் அமர மேலும் 4 ஆண்டுகள் ஆகிறது. திருமணங்களே 27 வயதை ஒட்டி நிகழ்கிறது. இதனால் 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த 14 ஆண்டுகள் என்னும் காலம் இப்போது மேலும் 14 ஆண்டுகள் நீண்டு விட்டது. 

ரியல் எஸ்டேட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை - 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட வங்கிக் கடனுக்கான வில்லங்கச் சான்றிதழ் 14 ஆண்டுகளுக்கு பெறச் சொல்வார்கள். வருவாய்த்துறை ஒரு சொத்து ஒருவரிடம் 14 ஆண்டுகளுக்கு மேல் அவரது அனுபோகத்தில் இருந்தால் அவருக்கு ’’பட்டா’’ என்னும் நில உரிமை ஆவணத்தை வழங்கும். இடத்தின் பட்டா உடையவர் இடத்தின் உரிமையாளர் என்பது தமிழக நடைமுறை. பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் முதன் முதலில் ஏற்பட்டது தமிழகத்திலும் வங்காளத்திலும். அப்போதிருந்து அதுவே வழக்கம். இப்போது அந்த நடைமுறை ஐயத்திற்கிடமில்லாததாக இல்லை. சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ‘’பட்டா’’வின் ஆவண மதிப்பை நூறு சதவீதம் ஏற்பதை ஐயத்திற்கிடமாக்கியுள்ளன. இப்போது வங்கிகள் 14 ஆண்டுகள் வில்லங்கச் சான்றிதழ் மட்டும் கோருவதில்லை ; 100 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் வழங்கக் கோருகிறார்கள். 

இராமாயண காலத்திலிருந்து இன்று வரை நிலம் நில உரிமை இவற்றுடன் சர்ச்சையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 

மனித சமூகம் உருவான முதல் நாளிலிருந்து இந்த நிலம் நில உரிமை சர்ச்சைகள் இருந்திருக்கும் என்று படுகிறது.