Thursday, 12 March 2026

அதிகார அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

நம் நாட்டில் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  4000 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20,000 பேர் இருக்கக் கூடும். முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 25,000 என இருக்கக் கூடும். மத்திய மாநில அரசு ஊழியர்கள் 2 கோடி பேர் இருக்கிறார்கள். முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய மாநில அரசு ஊழியர்கள் எண்ணிக்கையுடன் சேர்த்து கணக்கிட்டாலும் அந்த கணக்கீடு உகந்ததே. எல்லாம் சேர்த்து மொத்தமாக 2 கோடி.

நமது நாட்டின் மக்கள் தொகை 120 கோடி. குறைந்தது 30 கோடி குடும்பங்கள் நம் நாட்டில் இருப்பார்கள். அதில் குறைந்தபட்சம் 20 கோடி குடும்பங்கள் விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருப்பார்கள். மண்ணையும் விண்ணையும் நம்பி வாழ்பவர்கள். அவர்களே நம் நாட்டின் பண்பாட்டினை உயிர்க்கச் செய்திருக்கின்றனர். அனாதி காலமாக இந்த விவசாயிகளே நாட்டின் பண்பாட்டை முன்னெடுத்திருக்கின்றனர். இன்றும் நம் கிராமங்கள் அமைதியான வாழ்க்கைமுறைக்கு வாய்ப்பு அளிக்கின்றன. இந்த கிராமங்கள் தான் இஸ்லாமியர் தாக்குதலுக்கு ஆளாயின. பிரிட்டிஷார் சுரண்டலுக்கு ஆளாயின. எனினும் அவை முழுக்க அழிந்து விடவில்லை. ஒவ்வொரு அழிவிலிருந்தும் மீண்டு வந்தன. 

ஜனநாயக அரசியல் செய்திகளும் நிலவரங்களும் இன்று நாட்டின் சகல குடிகளையும் சென்று சேர்ந்திருக்கிறது. எனினும் நமது சர்க்கார் இயங்குமுறை பிரிட்டிஷ் மனோபாவங்களால் ஆக்கப்பட்டது. அரசியலால் சர்க்காரால் கோடானுகோடி மக்களுக்கு நலம் பயத்து விட முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி. இருப்பினும் நாட்டின் உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்த பலர் கோடானுகோடி மக்களின் வாழ்வைத் தொடும் விதமாக வாழ்வில் நன்மையை உருவாக்கும் விதமாக பொருட்படுத்தத்தக்க விஷயங்களை செய்திருக்கின்றனர். 

நான் ஜனநாயக அரசை மதிப்பவன். ஜனநாயக அரசமைப்பின் மீது மதிப்பு கொண்டவன். எனினும் அரசை விட சமூக அமைப்புகள் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். சாமானிய மக்கள் சாமானிய குடும்பங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த சமூக அமைப்புகள் பணி புரிய வேண்டும் என்னும் விருப்பமும் எதிர்பார்ப்பும் கொண்டவன்.  எதிர்காலத்தில் நம் நாட்டில் ஒட்டு மொத்த உலகிலும் கூட அரசியல் அமைப்புகளை விட சமூக அமைப்புகள் அதிக அளவில் உருவாகி மானுட இனத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.