Monday, 2 March 2026

ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்

 
நூல் : ஸ்ரீ காவேரி ரஹஸ்யம் ஆசிரியர் : பி. மஹாதேவ ஐயர் பக்கம் : 320 விலை : ரூ. 400 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், பழைய எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை, 600004 

நதியே மனிதருக்கு வாழ்க்கையைத் தந்தது. தருகிறது. நதியே மனிதர்களை சமூகமாக ஆக்கியது. பாரத நிலம் நதியை அன்னையாகக் கடவுளாக வணங்கும் உணர்வு கொண்டது. உறக்கம் தெளிந்து விழித்ததும் ‘’ கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதை கோதாவரி’’ என்ற ஏழு நதி அன்னையரை நிலத்தில் பிறந்த ஒவ்வொரு மானுடனும் நன்றியுடன் நினைத்து மதிப்புடன் அப்பெயர்களை உச்சரிக்க வேண்டும் என்கிறது நமது மரபு. 

தமிழகத்துக்கு அன்னை போல் விளங்கும் காவிரியின் சிறப்புகளை காவிரிக்கரையில் வாழ்ந்த ஞானியரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. தத்தாத்ரேய குரு மரபு சிறப்புற்றிருக்கும் குடகு மலைப் பிராந்தியத்தில் பிறந்து வீரசைவ மரபு கோலோச்சும் மைசூர் பிராந்தியத்தைத் தாண்டி இறையும் உயிரும் வேறல்ல எனக் காட்டும் அத்வைதிகளின் அருள் வெளியான தமிழகத்தில் பாய்ந்து ஜீவன்கள் பரம்பொருளை அடைவது போல் காவேரி சமுத்திரத்தை அடைகிறது. 

காவிரிக்கரையில் வாழ்ந்த முக்கியமான சான்றோர்களின் யோகிகளின் ஆசான்களின் வாழ்வினை கூறிச் செல்கிறது இந்நூல். அத்தகு பெரியோர்கள் காவிரி குறித்து எழுதிய நூல்களையும் பக்தித் துதிகளையும் வாசகர் முன் கொண்டு வருகிறது ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’. சதாசிவ பிரம்மேந்திரர், போதேந்திராள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், ஸ்ரீதர ஐயாவாள் ஆகிய பெரியோரின் வாழ்க்கையைக் கூறுவதுடன் காவிரி குறித்து பாடப்பட்ட தேவாரப் பாடல்களையும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் காவிரிக்கரையில் வாழ்ந்த ஆழ்வார், நாயன்மார்களின் முழுமையான பட்டியலையும் இந்நூல் அளிக்கிறது. சங்க இலக்கியத்தில் காவிரி இடம் பெற்றிருக்கும் நூல்களை வரிசைப்படுத்தி உள்ளது இந்நூல். நமது மரபில் உன்னதமான விஷயங்களை ‘’ஸ்மரணை’’ செய்ய வேண்டும். நலம் நல்குவதும் பயன் பயப்பதுமான செயல் அது. காவிரியைத் தன் ஸ்மரணையில் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘’ஸ்ரீ காவேரி ரஹஸ்யம்’’.