Thursday, 2 April 2026

திட்டமிடல்கள் (ஹாஸ்யம்)

உத்தரவு கிடைத்து விட்டதால் அமைப்பாளர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். 

தனது யூகச் செல்வங்கள் அனைத்தையும் இருப்புச் செல்வங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் அமைப்பாளரின் பட்டயக் கணக்காளர் ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டும் வைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அதாவது ஒரு சேமிப்புக் கணக்கு. ஒரு நடப்புக் கணக்கு. அப்படியே செயலாக்கினார் அமைப்பாளர். ஒரு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு இருக்கிறது. இப்போது அமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்றால் இனிமேல் வங்கிக் கணக்கே தேவையில்லை என்று. வங்கியில் மேற்கொள்ளும் எல்லா பரிவர்த்தனையும் அஞ்சல் அலுவலகத்தில் செய்து கொள்ள முடியும் என்பதால் இனி வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என எண்ணுகிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர்கள் குறுநில மன்னர்கள் போன்ற மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் ; அவர்களுக்குத் தாங்கள் சேவை அளிக்கும் இடத்தில் இருக்கும் பணியாளர்கள் என்னும் நினைவு இல்லை. ஏன் வங்கிக் கணக்கை முடித்துக் கொள்கிறேன் என்பதை ஒரு கடிதமாக எழுதி கிளைக்கும் மேல் அலுவலகத்துக்கும் அனுப்பி விட்டு முடித்துக் கொள்ள வேண்டும். 

பொதுமக்கள் தங்கள் சேமிப்பை வங்கிக் கணக்கில் இடுவதை விட அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இடுவதே பாதுகாப்பானது. வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் ஆக பணம் பெற்று அந்தப் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கடனாக அளிக்கின்றன. ஆனால் அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்களிடம் பெறும் டெபாசிட் மத்திய அரசாங்கத்துக்கு கடனாக அளிக்கப்படுகிறது. வங்கிகள் திவால் ஆக வாய்ப்பு உண்டு. போஸ்ட் ஆஃபிஸ் திவால் ஆகாது. 

இன்று அமைப்பாளர் போஸ்ட் ஆஃபிஸில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்று பார்த்தார். 

பி ஓ எம் ஐ எஸ் என ஒரு திட்டம். அதிகபட்சம் ரூ.9,00,000 டெபாசிட் செய்யலாம். மாதம் ரூ.5500 கிடைக்கும். 

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என ஒரு திட்டம் உள்ளது. அதில் ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம்.

நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் என ஒரு திட்டம் உள்ளது. அதிகபட்சம் 5 ஆண்டுகாலம் டெபாசிட் செய்யலாம். உச்சபட்ச தொகை என ஏதும் கிடையாது. 

கையிருப்பு இருக்கும் பணத்தில் ரூ.10.5 இலட்சத்தை பி ஓ எம் ஐ எஸ் மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டிலும் மீதித் தொகையில் பாதியை நேஷனல் சேவிங்க்ஸ் டைம் டெபாசிட்டிலும் செய்து விட்டு இன்னொரு பாதிக்கு நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட் வாங்கி வைத்துக் கொள்வது என முடிவு செய்திருக்கிறார் அமைப்பாளர்.