Wednesday, 1 April 2026

உத்தரவு கிடைத்தது

 இன்று காலையிலேயே எழுந்து விட்டேன். அதிகாலை நேரத்தில் ஒரு நல்ல கனவொன்று கண்ட பின் எழுந்திருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்தேன். கலனில் நீர் நிரப்பி குடிநீர்த்தேவைக்கான ஏற்பாடுகளை செய்தேன். பின்னர் எனது உணவை சமைத்து விடுவோம் என முடிவு செய்து கேழ்வரகுக் களி கிண்டினேன். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களில் எனது உணவு தயாராகி விடும். ஒரு சிறு தட்டில் அதனை வைத்து அதன் மீது இன்னொரு சிறு தட்டை மூடி டயனிங் டேபிள் மீது கொண்டு சென்று வைத்தேன். இன்று காலை நேரத்திலேயே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என எண்ணியிருந்ததால் சிறு தூரம் மட்டுமே நடைப்பயிற்சி சென்று வந்தேன். அதன் பின் வீட்டுக்கு வந்து காலையிலேயே சில பதிவுகள் எழுதி தளத்தில் பதிவிட்டேன். நேரம் காலை 8 மணியாக இருந்தது. குளித்து விட்டு ஆலயத்துக்குச் சென்றேன். 

ஆலயம் சென்ற போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஊரின் மிகப் பெரிய கட்டுமானம் ஆலயம். இன்றும் கூட. இத்தனை பெரிய நிலமும் இத்தனை பெரிய கட்டுமானமும் இன்றும் ஊரில் ஒரே இடத்தில் இணைந்து இல்லை. ஒவ்வொரு ஆலயத்திலும் வேதம் படிக்கும் 100 மாணவர்களுக்கு மாதம் கணிசமான தொகை உதவித் தொகையாக அளித்து ஆலயத்தில் எப்போதும் வேத முழக்கம் கேட்கும் வகையில் ஏன் ஏற்பாடு செய்யப்படக் கூடாது? அதைப் போலவே திருமுறைகள், தமிழிசை, பரதம் முதலிய நுண் கலைகள் ஆகியவற்றுக்கு ஏன் ஆலயம் இடம் தரக் கூடாது? ஆலயத்துக்கு எவ்வளவோ வருமானம் இருக்கிறது. வேதக் கல்வியும் திருமுறைக் கல்வியும் நுண்கலைக் கல்வியும் ஆலயத்தின் வருமானத்தை பலவகைகளிலும் அதிகரிக்கவே செய்யும். ஆலய நிர்வாகம் என்பது அப்பிரதேசத்தின் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஆலயம் பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையமாகவும் இருக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். 

உள எழுச்சியும் உள நெகிழ்ச்சியும் கொண்டிருந்த நிலையில் இன்று ஆலயம் சென்றிருந்தேன். நேற்று எழுதிய ‘’உத்தரவு’’ என்னும் பதிவு உருவாக்கியிருந்த மனநிலை. ஊரில் ஆலயத்தில் மஹாகணபதி சன்னிதி ஒன்று உள்ளது. தமிழ் மக்களுக்கு ஆனைமுகனைப் போல் இன்னொரு ஆப்த தெய்வம் இல்லை. ஆற்றல் கொண்டிருப்பவனும் குழந்தையாயிருப்பவனும். அவன் முன் சென்று நின்றேன். அவனிடம் என் துயரங்களைத் தெரிவிக்க நினைத்தேன். கடவுள் மிகப் பெரியவன். அவனிடம் என் லௌகிகத் துயரங்களைக் கூற வேண்டுமா என ஓர் எண்ணம். என் துயரங்களைச் சொல்ல என் வலிகளைச் சொல்ல என் வேதனைகளைச் சொல்ல அவனன்றி வேறு துணை இல்லை. சொல்வதை முழுதாகக் கேட்டுக் கொள்ளக் கூட அவனன்றி வேறு உறவு இல்லை. எதுவும் சொல்லாமல் தான் அவன் முன் நின்றிருந்தேன். அபயாம்பிகையை தரிசனம் செய்தேன். நான் சென்ற போது மயூரநாதருக்கு சுடராட்டு நிகழ்ந்தது. ‘’திருச்சிற்றம்பலம்’’ ‘’திருச்சிற்றம்பலம்’’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் இருப்பது மாயூரத்தில் ; திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பரம். மாயூரத்தில் ஏன் சிதம்பரத்தைச் சொல்கிறோம் என நினைத்தேன். தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். திருமுறைகள் ஓதத் துவங்கும் போதும் நிறைவு செய்யும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். சிவ பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். எனவே எந்த ஊரிலும் திருச்சிற்றம்பலம் சொல்லலாம் என எண்ணினேன். ஆடலரசன் நடராஜன் ஆடுவது காஸ்மிக் நடனம். எனவே நடராஜன் சபையில் ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அடக்கம். எனவே திருச்சிற்றம்பலம் என்பது ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் குறிக்கும் மந்திரம் என எண்ணினேன். 

கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு பெண் கூடையில் வில்வ இலைகளையும் நாலலிங்கப் பூவையும் வைத்திருப்பதைக் கண்டேன். கர்நாடகாவில் சிவாலயங்கள் அனைத்திலும் வில்வ இலைகளும் வில்வ இலை மாலைகளும் பெருமளவில் விற்பனை ஆகும். 

மாயூரநாதர் கோவிலிலிருந்து திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்றேன். பெருமாள் கோயிலுக்கு மாலை செல்லலாமா என ஒரு கணம் எண்ணினேன். பெருமாள் தரிசனத்தை மாலை வரை தள்ளி வைக்க வேண்டாம் என முடிவெடுத்துப் புறப்பட்டேன். 

திருஇந்தளூர் கீழவீதி அருகே வந்த போது பரிமள ரங்கன் பக்தர்கள் வடம் இழுக்க தேர் பவனி வருவதைக் கண்டேன். இறைவன் எனக்கான உத்தரவை அளித்து விட்டான் என்பதை உணர்ந்த போது உளம் நெகிழ்ந்தது. பரமாத்மா ஜீவன்களுடன் ஆடுவது ஆடல் ; விளையாடல். தேரில் இறைவனைக் கண்ட கணம் அவனை என் குழந்தையாக எண்ணினேன். என் கடவுள் எனக்கு அனுமதி அளித்து விட்டான். புதிய நிலம் காண புதிய காட்சிகளைக் காண புறப்பட்டுச் செல் என்பதே அவன் எனக்கு அளித்திருக்கும் உத்தரவு. மூலவர் யோக நித்திரையில் சயனித்திருக்கிறார். உற்சவர் ஊர் உலகம் கண்டு வருகிறார். எனக்கு இன்று காட்சி கொடுத்தது உற்சவர். 

இறைவா ! உன் லோகங்களில் கோடானுகோடி ஜீவன்கள். அந்தக் கோடானுகோடி ஜீவன்களில் ஓர் எளிய ஜீவன் அடியேன். உன் திருவுளம் அடியேனையும் கருதுகிறதா ? உன் கருணை பெரியது இறைவனே. உன் கருணையால் தான் ஜீவன்கள் ஜீவித்திருக்கிறோம். அதனை நாங்கள் எப்போதும் உணர்ந்திருப்பதில்லை இறைவனே ! எப்போதாவது உணர்கிறோம். இறைவா உன் கருணை எங்கள் மீது எப்போதும் இருக்கட்டும்.