குடவாயிலில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இலக்கியம் இசை மற்றும் நுண்கலைகளில் தீவிரமான ஆர்வமும் ஈர்ப்பும் பயிற்சியும் மிக்கவர். கலைஞர்களுக்கே உரிய உணர்ச்சிகரமான அகம் கொண்டவர். அவரது உணர்ச்சிகர இயல்பு குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அவர் இயல்பு குறித்து புறவயமாக நோக்குமாறு அவரிடம் அவ்வப்போது மெலிதாக மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தேன். புதிய வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். வீட்டின் நிறைவுப் பணிகள் அவருடைய நேரத்தையும் மனத்தின் பெரும்பாலான பகுதியையும் எடுத்துக் கொண்டிருந்தது. வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு அளித்திருந்தார். நான் அன்று ஊரில் இல்லை ஆதலால் செல்ல முடியவில்லை. கிரகப் பிரவேசம் சிறப்பாக நடந்தது என பின்னர் அறிந்தேன். விழாவுக்கு 10 நாட்களுக்குப் பின் சாலையில் இரவில் சென்று கொண்டிருந்த போது சிறு சாலை விபத்து ஒன்று நண்பருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறு எலும்பு முறிவு. கட்டு போட்டிருக்கின்றனர். ஒரு மாத காலம் அதிகம் நடக்காமல் படுக்கையில் இருக்குமாறு மருத்துவ அறிவுரை. அதனை முறையாகப் பின்பற்றுகிறார். இன்று நண்பரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் நிறைவுப் பணிகள் பிரமாதமாக நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை போன்ற எழிலுடன் வீடு இருக்கிறது என அவரிடம் கூறினேன். நாள் முழுதும் நாதஸ்வர இசை கேட்டுக் கொண்டு இலக்கியம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இசையில் முழுமையாக மூழ்கியிருப்பதற்கான வாய்ப்பாக நிகழ் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினேன். என்னை இரண்டு நாட்கள் வந்து தங்கியிருங்கள் என்று சொன்னார். சென்று வர வேண்டும்.