Wednesday, 29 April 2026

வசந்தத்தின் நாட்குறிப்பு

 வசந்தம் ஒரு ஆசிர்வாதம்
பற்றி எரியும் கோடைப் பொழுதை
அதன் நிறை உக்கிரத்தை
தவிர்க்காமல்
புகார் சொல்லாமல்
அலுத்துக் கொள்ளாமல்
கண் கொண்டு நேராகப்
பார்ப்பது 
உங்கள் இயல்பென்றால்
வசந்தம்
உங்களுக்கு
ஒரு ஆசிர்வாதம் 

*

கோடையின் பகலுக்குள்
நுழைந்து
அதில் எங்காவது ஒளிந்து கொள்ள
விரும்புகிறது
ஊர்

மரநிழல்கள்
பூங்காக்கள்
கடல் கரைகள்
கட்டிடங்கள்

பகல் பொழுதை மெல்லக் கடந்து விட விரும்புகிறது ஊர்

*

வெயிலைக் கண்டு அஞ்சாதே
வெயிலை வெறுக்காதே
வெயில் காலத்தில் கண் மூடிக் கொள்ளாதே 
வெயிலில் இறங்கு
வெயிலில் நட
வெயிலில் உலவு

*

வெயிலில் உலவி நடந்து இறங்கியிருந்தால்
கோடையின் அந்தி
உனக்கு ஆசிர்வாதம்
ஊர்
ஊர் மக்கள்
ஊர் மனிதர்கள்
நம்பிக்கை கொள்கிறார்கள்
கோடையின் அந்திப் பொழுதில்
தகிக்கும் நிலத்தில்
மலர்ந்த
மலர்களை
சரங்களாக அணிந்து
வசந்தத்தை வரவேற்கின்றனர்
பெண்கள்

*

சூரியன் அஸ்தமித்த நிலத்தில்
மெல்ல வீசுகிறது
மென்காற்று
அதன் மென்மைக்காக 
அதன் ஸ்பரிசத்துக்காக
அதன் முத்தத்துக்காக
காத்திருப்பவன்
அதிர்ஷ்ட்டசாலி
அதன் மென்மையை
அதன் ஸ்பரிசத்தை
அதன் முத்தத்தை
பெறுபவன்
அதிர்ஷ்டசாலி

*

கோடை அந்தியின் நிலவு
மகத்தானது
என உணர்ந்தவன்
மகத்தானவன்

*

கோடை மாலை அந்தியில்
ஒரு கடற்கரையில்
கடற்கரை மணலில் அமர்ந்து
அலை மெல்ல எழும் போது
பார்வைக்குட்பட்ட 
எல்லா அலைகளும்
ஆடியாகி
ஆயிரமாயிரம் நிலவைப் பிரதிபலிப்பதை
நீ
அடிக்கடி கண்டிருக்கிறாயா
தெய்வங்கள்
உன் மேல்
பிரியம் கொண்டிருக்கின்றன

*

சிவந்த புரச மலர்கள்
கோடையில் 
மேலும்
செக்கச் சிவக்கின்றன
என்பதை
உணர்ந்திருக்கிறாயா
வாழ்வு
உன்னை
விடுதலைக்கு
இட்டுச் சென்று கொண்டிருக்கிறது

*

வாருங்கள்
நண்பர்களே
பிரியமானவர்களே
மனிதர்களே
கோடையின் இந்த நாள் மாலையில்
இந்த மென்காற்றுடன்
இந்தக் கடலலைகளுடன்
இந்த மலர்களுடன்
இந்த வசந்தப் பொழுதில்
அமிர்தம் பருகச் செல்வோம்