நண்பருக்காக ஓர் உத்தேச மதிப்பீட்டை உருவாக்கிய போது எனக்கு அதிர்ச்சி தரத்தக்க அளவில் ஓர் உண்மை புரிந்தது. நண்பரிடம் நிலம் இருக்கிறது. பள்ளி இருக்கிறது. 300 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியை 1200 மாணவர்கள் படிக்கும் விதமாக மாற்ற வேண்டும் என்றாலே ரூ.56 கோடி தேவைப்படுகிறது. நிலம் இல்லாத ஒருவர் புதிதாக பள்ளி துவங்க விரும்பினால் மேலும் ரூ.10 கோடி தேவைப்படலாம். அதாவது 1200 மாணவர்கள் பயிலும் விதமாக ஒரு பள்ளி துவங்க குறைந்தபட்சம் ரூ.60 கோடி அளவில் முதலீடு தேவை.
இன்றைய சூழ்நிலையில் வணிகர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் மட்டுமே இவ்வளவு முதலீடு எளிதில் இருக்கும். வணிகர்களுக்கு எதிலும் ஒரு வணிகக் கண்ணோட்டம் கணிசமான அளவில் இருக்கும். தமிழக அரசியல்வாதிகள் ஊழலையும் சுரண்டலையும் மட்டுமே பழகியவர்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மாநிலமெங்கும் இருக்கின்றன. ஆனால் அரசு ஒவ்வொரு பள்ளியையும் நடத்த செலவு செய்யும் தொகையை மொத்தமாகக் கணக்கிட்டு அதனை பள்ளி மாணவன் ஒவ்வொருவருக்கும் அளித்தால் ரூ.2,00,000 செலுத்தி மிக உயர் தனியார் பள்ளியில் தமிழகத்தின் ஒவ்வொரு மாணவனும் பயில முடியும். அவ்வளவு தொகை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பட்ஜெட். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் : நீங்கள் சாலையில் நடந்து செல்லும் தமிழகத்தின் எந்த ஒரு மாணவனையும் அழைத்து தமிழிலோ ஆங்கிலத்திலோ 300 வார்த்தைகளில் ஒரு பத்தியை எழுதச் சொன்னால் 10ல் 9 பேருக்கு எழுத வராது. அவர்கள் அதற்கு பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு 17 வயது மாணவனால் 300 வார்த்தை கூட பிழையில்லாமல் எழுத வராது என்றால் பள்ளிகள் 12 ஆண்டுகள் பயிற்றுவித்தது என்ன?
முக்கியமான சமூகப் பிரச்சனையாகும் இது.