Saturday, 25 April 2026

பள்ளி - உத்தேச மதிப்பீடு

நேற்று என்னை ஒரு நண்பர் சந்திக்க வந்தார். அவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணிபுரிகிறார். அவரது மகளுக்கு ஐந்து வயது. முதல் வகுப்பில் படிக்கிறாள். இங்கே ஊரில் அவளது கல்விக்கு வருடத்துக்கு ரூ.70,000 செலவாகிறது என்றும் அத்தொகை சென்னையின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தம் மாணவர்களிடம் ஆண்டுக்கு நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத்துக்கு சமமானது என்பதை சென்னையில் விசாரித்து அறிந்ததாகவும் தான் சென்னையில் செலவாகும் அளவு இங்கே ஊரில் செலவு செய்தும் இங்கே அளிக்கப்படும் கல்வியில் தனக்குத் திருப்தியில்லை எனக் கூறி தனது குடும்பத்தை கோயம்புத்தூருக்கு இடம் பெயரச் செய்து விட்டதாகக் கூறினார்.  

கல்வி நிறுவனம் நடத்தும் நண்பருக்கு ஃபோன் செய்து நண்பர் என்னிடம் தெரிவித்த விபரத்தை அவரிடம் கூறி கல்விக்கு நடுத்தர மக்கள் எவ்வளவு மக்கள் முக்கியத்துவம் அளிக்கினனர் என்பதைக் கூறி அவருடைய 300 மாணாக்கர் பள்ளியை 1500 மாணாக்கர் பயிலும் விதமாக மாற்றி அமையுங்கள் என்பதை மேலும் வலியுறுத்திச் சொன்னேன். 

பள்ளி நடத்துவதன் சிரமங்களை அவர் நீண்ட காலம் அனுபவத்திருப்பார். நான் வெளியில் இருப்பவன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மக்களை மாணவர்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிலையத்தை நடத்துங்கள் என்பது எனது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல ; சமூகத்தின் சார்பாக என்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைக்கும் போது சமூகத்தின் பிரதிநிதியாகவே முன்வைக்கிறேன். 

***

இவை பரிசீலனைக்கான குறிப்புகள். இவற்றை முகாந்திரமாக வைத்துக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இவை 1500 மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியை ஏற்படுத்த விரும்பும் எவருக்கும் அப்பணி குறித்த ஒரு மனச்சட்டகத்தை அளிக்கலாம். 

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை அனைத்துமே அதிகபட்சமான அளவில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. நடைமுறையில் இன்னும் குறைவான தொகை செலவாகும் என்றால் துவங்குபவருக்கு சேமிப்பே. ( ஹாஸ்யம் : நியூட்டன் பூனை வளர்த்தார். தாய்ப்பூனையும் குட்டிப் பூனைகளும் இருந்தன. ஒரு தச்சரை அழைத்து பூனைகள் தங்கும் விதமாக ஒரு பெட்டி செய்யச் சொன்னார். பெரிய பூனை நுழையும் விதத்தில் ஒரு துளையும் குட்டிப் பூனைகள் நுழையும் விதத்தில் இன்னொரு துளையும் அதில் இருக்கட்டும் என நியூட்டன் சொன்னார். தச்சர் நியூட்டனிடம் ‘’சார் ! பெரிய பூனைக்கான துளைக்குள் குட்டிப் பூனைகள் எளிதில் நுழையும் ; அதனால் பெட்டிக்கு ஒரு துளை போதும்’’ என்றார்)

***

எந்தக் கல்வி நிறுவனத்திலும் பணி புரியும் ஆசிரியர்களுக்கு - மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு - சிறப்பான ஊதியம் தரப்பட வேண்டும். ஆசிரியன் எந்த உலகியல் நெருக்கடியும் இல்லாமல் இருந்தால் தான் கற்பித்தல் சிறப்பாக நிகழும். ஒரு ஆசிரியர் எதிரில் 50 மாணவர்கள் இருக்கும் போது கல்வி என்ன சிறப்பைக் கொடுக்கும் என்னும் ஐயத்துக்கு ஆசிரியர் பெறும் ஊதியமே கூட குறியீட்டுரீதியில் ஒரு பதிலாக இருக்க வேண்டும். எனது உத்தேச மதிப்பீட்டில் ஒவ்வொரு பள்ளி ஆசிரியருக்கும் மாதம் ரூ.50,000 என ஊதியம் நிர்ணயித்துள்ளேன். 

***