Friday, 22 May 2026

ஒரு நூல் குறித்த நினைவு

காலச்சுவடு கட்டுரை ஒன்றின் மூலம் அறிமுகமான பெயர் ராமச்சந்திர குகா. அந்தக் கட்டுரையை எழுதியவர் பி.ஏ. கிருஷ்ணன். ஆண்டு 2003. அப்போது வெளியாகியிருந்த பி.ஏ. கிருஷ்ணனின் ‘’புலிநகக்கொன்றை’’ நாவலை வாசித்து அதன்பால் தீவிரமாக ஈர்க்கப்பட்டிருந்தேன். அந்த ஈர்ப்பின் காரணமாக பி ஏ கே அறிமுகம் செய்த எழுத்தாளரான ராமச்சந்திர குகாவின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. தி ஹிண்டு பத்திரிக்கையில் வெள்ளிக்கிழமையன்று ராமச்சந்திர குகாவின் ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ என்னும் நூல் வெளியாகியிருக்கிறது என்னும் செய்தி வெளியானது. காலையில் அந்த செய்தியை வாசித்ததும் சென்னையில் இருந்த பிரபலமான ஆங்கிலப் புத்தகக் கடைக்கு காலை 10 மணி அளவில் ஃபோன் செய்து ‘’இந்தியா ஆஃப்டர் காந்தி’’ நூல் அவர்களிடம் இருக்கிறதா எனக் கேட்டேன். அவர்கள் இருக்கிறது என பதில் கூறினார்கள்.  சென்னையில் எனது நண்பரான எனது ஊர்க்காரர் இருந்தார். அவருக்கு ஃபோன் செய்து புத்தகக் கடையைக் கூறி புத்தகத்தின் பெயரையும் கூறி இந்த நூலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ; ஊருக்கு வரும் போது கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். நண்பர் வாங்கி வைத்துக் கொண்டார். பத்து நாள் கழித்து வருவதாயிருந்தவர் எதிர்பாராத விதமாக ஞாயிறு அன்று காலையே ஊருக்கு வந்து விட்டார். எனக்கு ஃபோன் செய்தார். நான் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து நூலை பெற்றுக் கொண்டேன். வீட்டுக்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு அந்த நூல் மிகவும் சுவாரசியமாயிருந்தது. அன்று முழுக்க வாசித்தேன். அடுத்த நாளும் வாசித்தேன். செவ்வாய்க்கிழமை அன்று முழுமையாக வாசித்து முடித்து விட்டேன். அந்தப் புத்தகம் 800 பக்கங்களுக்கு மேல் கொண்டது. இருப்பினும் தொடர்ச்சியாக மிக ஆர்வமாக வாசித்தது ஆச்சர்யமானது. தி ஹிண்டு பத்திரிக்கையில் புதன்கிழமை காலை அந்தப் புத்தகத்துக்கு ‘’புக் ரிவியூ’’ வந்தது. நூல் வெளியான செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. நூல் ‘’புக் ரிவியூ’’ வந்தது புதன்கிழமை. இந்த இடைவெளிக்குள் அந்த நூலை முழுக்க வாசித்து முடித்து விட்டேன் என்பது இன்று நினைத்தாலும் சந்தோஷம் தருவது.