Thursday, 7 May 2026

திருமாவளவன் தமிழக முதல்வராக வேண்டும்


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 
அச்சாணி அன்னார் உடைத்து - திருக்குறள் (667)

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் , ‘’பராபவ’’ தமிழ் ஆண்டில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இந்திய அரசியலில் முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்னும் முறை மூலம் வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட தி.மு.க, சுதந்திரா கட்சி, நாம் தமிழர் கட்சி, ஃபார்வர்டு பிளாக், சோஷலிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தேர்தலில் வென்றன. கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றிருந்தும் அத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையவில்லை. திமுக தனியாகவே ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் உருவான தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்னும் நிலை பின்னாட்களில் இந்தியா முழுவதும் பரவியது. ஒரு காலகட்டத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் தனிக்கட்சி ஆட்சி சாத்தியமல்ல என்னும் நிலை 1991ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் நீடித்தது. 2014ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திலும் ஆளும்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருந்தும் பல கட்சிகளுடன் இணைந்த கூட்டணி ஆட்சியாகவே 10 ஆண்டுகள் தொடர்ந்தது. தற்போதுள்ள நாடாளுமன்றத்திலும் கூட்டணி ஆட்சியே நடைபெறுகிறது. 

தமிழகத்தில் 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெருங்கட்சியாக இருந்த தி.மு.க 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சியின் 34 சட்டசபை உறுப்பினர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் 18 சட்டசபை உறுப்பினர்களின் மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் 15 உறுப்பினர்களும் அளித்த ஆதரவில் அந்த ஆட்சி நடைபெற்றது. சட்டசபையின் பெரிய கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்னும் நிலையைப் பயன்படுத்தி காங்கிரஸ், பா.ம.க மற்றும் இதர கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டிருக்க வேண்டும். 34 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் மத்தியில் ஆளும்கட்சியாக இருந்ததால் அவர்களுக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது . தி.மு.க மத்திய அரசின் மந்திரிசபையில் பங்கெடுத்திருந்தாலும் காங்கிரஸ் மாநில அரசில் கூட்டணி ஆட்சியைக் கோரவில்லை. 67 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து  அவ்விதம் கேட்டிருந்தால் 2006ம் ஆண்டு தமிழகம் முதல்முறையாகக் கூட்டணி ஆட்சியைக் கண்டிருக்கும். அது நிகழாமல் போய் விட்டது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்டதால் அவர்கள் மாநில அரசில் பங்கு கோரவில்லை. 

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் - தமிழகத்தின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் - பட்டியல் சாதியினரின் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை உள்ளனர். இன்றும் பட்டியல் சாதியினரின் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியே உள்ளது. அவர்கள் முன்னேற்றத்துக்கு மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் உள்ளாட்சி அமைப்புகளும் துணை நிற்க வேண்டும் என்னும் நிலை இப்போதும் நீடிக்கிறது. சமூகத்தின் கடைசி மனிதனாக பட்டியல் சாதியைச் சேர்ந்தவனே இருக்கிறான் என்பது கண்கூடான உண்மை. தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளிலும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே தொண்டர்களாக இருக்கிறார்கள். வாக்காளர்களாக எல்லா கட்சிகலுக்கும் வாக்களிக்கிறார்கள். பட்டியல் சாதியினர் முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உடைய கட்சிகளுக்கு அவர்கள் நாட்டின் முதல் தேர்தலிலிருந்து வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதியினரின் முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை தனது வழிமுறையாக எப்போதும் கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி நாட்டின் நலன் என்பது பட்டியல் சாதியினரின் முன்னேற்றத்துடன் இணைந்தது என்பதை பல ஆண்டுகளாக காங்கிரஸின் அரசியல் புரிதலாக்கியிருந்தார். பட்டியல் சாதியினருக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதை காங்கிரஸ் மிக இயல்பாக நிறைவேற்றியிருக்கிறது. சஞ்சீவையா (ஆந்திரா), போலோ பாஸ்வான் சாஸ்திரி ( பீகார்), சுசில் குமார் ஷிண்டே ( மகாராஷ்ட்ரா), சரஞ்சித் சிங் சன்னி (பஞ்சாப்) ஆகிய பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை காங்கிரஸ் கட்சி முதல்வராக ஆக்கியிருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் மாயாவதி , ராம் விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, திருமாவளவன், சிராக் பாஸ்வான் ஆகிய பட்டியல் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர்களும் பெரும் தலைவர்களும் ஆவர்.  இவர்கள் ஒரு சாதிக்கு மட்டும் உரியவர்கள் அல்ல ; அனைத்து சமூகங்களின் முன்னேற்றத்துக்காகவும் அதிகார அரசியலில் செயல்படுபவர்கள் ஆவார்கள். இந்திய அரசியல் என்பது இடைநிலை சாதிகளுக்கும் பட்டியல் சாதிகளுக்குமான சமர் என்றால் மேற்கூறிய தலைவர்கள் பட்டியல் சாதி மக்களின் வாளாகவும் கேடயமாகவும் இருந்து அவர்களைக் காத்தவர்கள். அவர்களைக் காப்பவர்கள். அவர்களுக்காகப் போராடுபவர்கள். பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் சமூகத்தின் பொருளியல் அடுக்கில் கீழ் இடத்தில் இருப்பவர்கள் என்பவர்கள் என்பதால் தொழிலாளர்களாக இருப்பவர்கள் அதில் அதிகம். எனவே இடதுசாரி தொழிற்சங்கங்களிலும் இடதுசாரி கட்சிகளிலும் பட்டியல் சாதியினர் பங்களிப்பு அதிகம். ( இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். பட்டியல் சாதியினரின் தமிழக நிலை குறித்து எழுதும் போது அவர்களுக்கு கணிசமான அரசியல் அதிகாரம் கிடைத்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது அவை ஆந்திராவிலோ பீகாரிலோ உத்திரப்பிரதேசத்திலோ பஞ்சாப்பிலோ இருப்பதை உதாரணம் காட்டும் நிலை உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் - கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தி.மு.க , அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகள் இரண்டும் - பட்டியல் சாதியினருக்கு அளித்த அதிகாரம் என்பது இந்திய தேர்தல் ஆணையம் பட்டியல் சாதியினருக்கு என ஒதுக்கிய தனித்தொகுதிகளில் தங்கள் கட்சியைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த உறுப்பினர்களை சட்டசபை உறுப்பினர் ஆக்கியதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடும் இடங்களை ஒதுக்கியதும் மட்டுமே. தமிழக சட்டசபை சபாநாயகராக ஒருமுறை பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திராவிடக் கட்சிகளின் அரசியல் என்பது இடைநிலை சாதிகளின் அதிகார அரசியலே என்பதை தமிழக அரசியலை மேம்போக்காக கவனிப்பவர்கள் கூட அறிவார்கள். 

தமிழகத்தில் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தங்கள் வாழிடங்கள் தீ வைத்துக் கொளுத்தப்படும் நிலைக்கு ஆளாகுபவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே. தமிழகத்தில் தமிழகத்தில் தங்கள் சமூகத்தின் வாக்குகளை முழுமையாக தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிக்கு சென்று செலுத்துபவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே. வாக்களிக்கும் நாளன்று வன்முறைக்கு உள்ளாகுபவர்களும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களே. எல்லா கட்சிகளிலும் அடிமட்டத் தொண்டர்களாக இருப்பவர்க இருப்பவர்கள் பட்டியல் சாதியினைச் சேர்ந்தவர்களே. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வருவதாக இருந்தாலும் கணிசமான வளர்ச்சியைப் பெறுவதாக இருந்தாலும் அதற்கு பட்டியல் சாதியினரின் ஆதரவு தேவை. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் பட்டியல் சாதியினர் ஆதரவு அதிமுகவுக்கு இருந்தது. 1989க்குப் பின் திமுக , அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பட்டியல் சாதியினர் திரளாக ஆதரவளித்தனர். விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்துக்கு ஆதரவளித்தவர்கள் பட்டியல் சாதியினரே. நாம் தமிழர் கட்சிக்கும் அவர்கள் ஆதரவு இருந்தது ; இருக்கிறது.

தமிழக வாக்காளர்களில் ஒவ்வொரு தொகுதிகளிலும் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை பிரதிநிதித்துவம் கொண்டிருக்கும் பட்டியல் சாதியினைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ், தி.மு.க , அ.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகள் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆண்டிருக்கும் இந்த 75 ஆண்டுகளில் ஒருமுறையாவது முதலமைச்சர் ஆக ஆகியிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட முதலமைச்சராக ஆகவில்லை. பொதுவாக திராவிடக் கட்சிகள் தமிழகம் பீகார், உத்திரப் பிரதேசத்தை விட எவ்வளவு மேம்பட்டிருக்கிறது ; அவை சமூக ரீதியாக மிகவும் பின் தங்கிய மாநிலங்கள் எனக் கூறுவது வழக்கம். திராவிடக் கட்சிகளின் பார்வையில் மிகவும் பின் தங்கியிருக்கும் பீகாரிலும் உத்திரப் பிரதேசத்திலும் கூட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட முதலமைச்சர் ஆகவில்லை. 

2026ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. தமிழகத்தில் முதல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தமிழ் ஆண்டு ‘’பராபவ’’ மீண்டும் ஒரு சுழற்சிக்குப் பின் வந்திருக்கும் ஆண்டு 2026. இந்திய மரபு காலத்தை ஒரு சக்கரமாக உருவகித்திருக்கிறது. பௌத்த மரபிலும் காலம் ஆழிச்சக்கரமாகக் கொள்ளப்படுகிறது. 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. எந்தக் கட்சிக்கும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை. தமிழக வெற்றிக் கழகம் 107 உறுப்பினர்களுடன் உள்ளது. திமுக வுக்கு 59 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு 47 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சிறு சிறு கட்சிகள் சிறு சிறு எண்ணிக்கை பெற்றுள்ளன. 

ஜனநாயகத்தில் அதிகார அரசியலில் எண்கள் மிகவும் முக்கியமானவை. எண்களே அதிகார அரசியலும் ஜனநாயகமும் ஆகும். 

தமிழகத்தில் இப்போது ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதிகாரத்தில் 75 ஆண்டுகளாக இருந்த கட்சிகள் இந்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயல்கின்றன. அதிகார அரசியலில் அதுவே இயல்பானது. அதுதான் அதிகார அரசியலும் ஆகும். 

இப்போதுள்ள சூழ்நிலையின் இக்கட்டைத் தவிர்க்கும் திறன் கொண்ட ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் என்பது எனது கணிப்பு. நம் நாட்டின் பல அரசியல் நிகழ்வுகளின் முன்னுதாரணங்களை அடிப்படையாய்க் கொண்டு இந்த திட்டத்தை முன்வைக்கிறேன். 

அதாவது, தமிழக சட்டசபையின் மூன்று பெரிய கட்சிகளால் உடனடியாக ஆட்சி அமைக்க முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையை மாற்றியமைக்க விசிக கட்சித் தலைவர் திருமாவளவனால் இயலும். 1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதைப் போன்ற ஒரு நிகழ்வு நேரிட்டது. 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பா.ஜ.க 161 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் 140 உறுப்பினர்களுடன் இருந்தது. இந்த இரண்டு கட்சிகளாலும் ஆட்சியமைக்க இயலவில்லை. அப்போது இரட்டை இலக்க எண்ணிக்கை கொண்டிருந்த ஜனதா தளம் (46), சமாஜ்வாதி கட்சி (17), இந்திய கம்யூனிஸ்டு (12), தமிழ் மாநில காங்கிரஸ் (20), தி.மு.க (17) ஆகிய கட்சிகள் சேர்ந்து ஐக்கிய முன்னணியை (112) உருவாக்கின. காங்கிரஸ் கட்சியும் (140) மார்க்ஸிஸ்டு கட்சியும் (32) ஐக்கிய முன்னணியை வெளியிலிருந்து ஆதரித்தன. 284 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தேவ கவுடாவும் ஐ கே குஜ்ராலும் பிரதமர்களாக இருந்தனர். ( ஐக்கிய முன்னணியின் பிரதமராக ஜோதிபாசு முன்மொழியப்பட்டார். மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ அதனை பரிசீலித்து அந்த வாய்ப்பை ஏற்க வேண்டாம் என முடிவெடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னால் ஜோதிபாசு அந்த முடிவை மார்க்ஸிஸ்டுகள் செய்த ‘’இமாலயத் தவறு’’ என்று கூறினார். 

1996ல் ஜோதிபாசுவுக்கு கிடைத்த வாய்ப்பு தமிழக அளவில் இப்போது திருமாவளவனுக்குக் கிடைத்திருக்கிறது. திருமாவளவனால் தற்போதைய நிலையில் குறைந்தபட்சம் இரு கம்யூனிஸ்டு கட்சிகளை இணைத்து ஒரு முன்னணியை உருவாக்க முடியும். ‘’சமூகநீதி முன்னணி’’ என ஒரு முன்னணியை உருவாக்கலாம். தற்போது அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6. அதில் மேலும் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களை இணைக்க முடியும். ஒற்றை இலக்கத்தின் உச்சபட்சமான எண்ணான 9 உறுப்பினர்கள் ‘’சமூக நீதி முன்னணி’’யில் இருப்பார்கள் என்றால் தமிழக சட்டசபையின் முதல் இடத்தில் இருக்கும் கட்சியுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் கட்சியோ அல்லது முதல் இடத்தில் இருக்கும் கட்சியுடன் மூன்றாம் இடத்தில் இருக்கும் கட்சியோ இணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். தமிழகத்தின் இரண்டாவது மூன்றாவது இடத்தில் இருக்கும் கட்சிகளும் ‘’சமூக நீதி முன்னணி’’ அல்லாத பிற சிறு கட்சிகளும் இணைந்தால் கூட அவர்களிடம் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இருக்காது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் கட்சிகள் என்பதை எவரும் குறைந்தபட்சமாகவேனும் ஏற்பார்கள். ஐக்கிய முன்னணியைப் போல ‘’சமூக நீதி முன்னணி’’ உருவானால் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் காண்போம். 

காட்சி 1
--------------

விடுதலைச் சிறுத்தைகளும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் ‘’சமூக நீதி முன்னணி’’ ஆட்சியமைக்கும். தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுக, காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகள் ‘’சமூக நீதி முன்னணி’’க்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும். விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஆவார். சமூக நீதி முன்னணியின் 9 உறுப்பினர்களும் அமைச்சர்கள். ( 1990ம் ஆண்டு மத்திய அரசில் சந்திரசேகர் பிரதமராயிருந்த போது மிகச் சிறு எண்ணிக்கையே (60) அவரிடம் இருந்தது. காங்கிரஸ் (191) வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து அந்த அரசு நீடித்தது. சந்திரசேகரின் சமாஜ்வாதி ஜனதா கட்சியின் 60 உறுப்பினர்களில் 32 பேர் சந்திரசேகர் சர்க்காரில் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர்)

காட்சி 2
--------------

விடுதலைச் சிறுத்தைகளும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் ‘’சமூக நீதி முன்னணி’’க்கு தமிழக வெற்றிக் கழகம் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும். 

போட்டியிடும் முதல் தேர்தலில் தமிழக மக்கள் பெரும் ஆதரவை அளித்திருப்பதால் தமிழக மக்கள் மேல் மேலும் ஒரு தேர்தலைத் திணிக்காமல் இருக்கவும் அதிகாரம் மட்டுமே தங்கள் இலக்கு அல்ல என்பதைக் குறியீட்டு ரீதியில் காட்டவும் தமிழக வெற்றிக் கழகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். 

காட்சி 3
-------------

விடுதலைச் சிறுத்தைகளும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து அமைக்கும் ‘’சமூக நீதி முன்னணி’’க்கு தி.மு.க வும் அதிமுக வும் இணைந்து வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும். காங்கிரஸின் ஆதரவும் வெளியிலிருந்து கிடைக்கும். 

இன்றைய சூழல் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் மிகவும் சாதகமாக உள்ளது. தமிழகத்தில் ஓர் அரசு அமைய இன்று விடுதலைச் சிறுத்தைகளின் இரு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இல்லாமல் எதுவும் நிகழாது. பெரிய கட்சிகள் ஏதேனும் திட்டமிட்டால் கூட இந்த 9 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் நிகழாது. 

இது ஒரு நல்வாய்ப்பு. இதனை முழுமையாக திருமாவளவன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

திருமாவளவன் முதல்வராக பதவியேற்றால் என்ன நன்மைகள் நிகழும் ?

1. தமிழக அரசியல் வரலாற்றில் 75 ஆண்டுகளாக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்ததில்லை என்னும் நிலை மாறும். ஒவ்வொரு தொகுதியிலும் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை வாக்காளர்களைக் கொண்டிருக்கும் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுக்கும் வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வரும் பட்டியல் சாதி மக்களுக்கு முதல் முறையாக பெரிய அரசியல் அதிகாரமான முதலமைச்சர் பதவி கிடைக்கும். 

2. தமிழக அரசியல் வரலாற்றில் ஐயங்கார் (2), நாடார் (1), முதலியார் (2), இசை வேளாளர் (2), மேனன் (1), முக்குலத்தோர் (1), கவுண்டர் (1) ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்கள். தமிழக மக்கள் தொகையில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கொண்ட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஆனதில்லை. இந்நிலையை மாற்ற திருமாவளவனால் முடியும். 

3. ‘’சமூகநீதி முன்னணி’’க்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகளிடம் கலந்து பேசி திருமாவளவனால் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதன் படி ஆட்சி அமைத்துக் கொள்ளலாம். 

4. தமிழகத்தில் காமராஜ் அமைச்சரவை 9 அமைச்சர்களைக் கொண்ட சிறிய அமைச்சரவை எனக் கூறுவார்கள். அதே போல் ஒரு சிறிய அமைச்சரவையை திருமாவளவன் வழிநடத்த முடியும். 

5. திருமாவளவன் அரசியலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் தில்லி நாடாளுமன்றம், எல்லா அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ஊடகங்கள், அண்டை மாநில முதல்வர்கள் என அனைவரிடமும் அறிமுகமும் பரிச்சயமும் உள்ளவர் என்பதால் நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியும். 

6. திருமாவளவன் ‘’சமூகநீதி முன்னணி’’ அமைத்து முதலமைச்சர் ஆக முடிவெடுத்தால் எந்த அரசியல் கட்சியாலும் அதனை வெளிப்படையாக எதிர்க்க முடியாது. ஆட்சி ஏதும் அமையாமல் போனால் 6 மாதத்தில் மீண்டும் ஒரு தேர்தல் என்னும் நிலையில் ‘’சமூகநீதி முன்னணி’’யை ஆதரிக்காமல் போனால் பட்டியல் சாதியினரின் 25 சதவீத வாக்குகள் அந்தக் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பும். அது அந்தக் கட்சிகளுக்கு பேரிழப்பாக முடியும். 

7. தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்ததில்லை. எனவே உறுப்பினராகி ஆறு மாதத்துக்குள் சட்டசபை உறுப்பினராக பதவியேற்காமல் சட்டசபை உறுப்பினர் ஊதியம் கூட பெறாமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எந்த உறுப்பினரும் விரும்ப மாட்டார்கள். 

8. திருமாவளவன் அமைக்கும் ‘’சமூகநீதி முன்னணி’’க்கு மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். மத்தியில் ஆளும்கட்சிக்கு எதிரான எல்லா பெரிய கட்சிகளும் அதிகாரத்திலிருந்து ‘’சமூகநீதி முன்னணி’’யால் விலக்கி வைக்கப்படுவதால் ‘’சமூகநீதி முன்னணி’’யின் ஆட்சியை தில்லி விரும்பவே செய்யும். 

9. திருமாவளவன் முதலமைச்சர் ஆவது குறியீட்டு ரீதியில் பட்டியல் சாதியினரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஒரு சாதனையைச் செய்தவராவார் திருமாவளவன். 

10. ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் வறுமையை முழுமையாக உணர்ந்து தன் தன்னம்பிக்கையாலும் தளரா ஊக்கத்தாலும் பொதுவாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றி நுட்பமான சமூகப் புரிதலும் ஆழ்ந்த அரசியல் அறிவும் சிறப்பான கல்வியும் கொண்டிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வரானால் அது தமிழக வரலாற்றின் மகத்தான அரசியல் நிகழ்வாக அமையும்.