Sunday, 14 June 2026

ஐந்து பெண்கள்

நேற்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது. எனது வழக்கப்படி காலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். 4 மணிக்கு வெளியே புறப்படும் விதமாக தயாரானேன். மெல்ல நடந்து அதிகாலையில் காலைஉணவு தயாராக இருக்கும் உணவகத்துக்குச் சென்று உணவருந்தி விட்டு டவுன்பஸ் பிடித்து ரயில்வே சந்திப்புக்குச் சென்றேன். காலை 5.30 அளவில் அங்கே சென்று சேர்ந்திருப்பேன். திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் காலை 6.02க்கு வரும். அதில் விழுப்புரம் சென்று சேர காலை 9 மணி ஆகும். அங்கே 9.30க்கு பல்லவன் விரைவு வண்டி வரும். அதில் ஏறினால் 12 மணிக்கு சென்னை எழும்பூர். பயணிகள் ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தது. ரயிலில் பெரிய கூட்டம் இல்லை. 10 பேருக்கான இருக்கையில் 5 பேர் அமர்ந்திருந்த இடத்தில் நானும் சென்று அமர்ந்து கொண்டேன். அதிகாலையில் எழுந்தது ; உணவகம் பேருந்து நிலையம் வரை நடந்தது ; வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொண்டது ஆகியவற்றால் தூக்கம் கண்களைச் சுழற்றியது. 10 பேருக்கான இருக்கையில் 6 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் உடலை நீட்டிப் படுத்து விட்டேன். எழுந்து பார்க்கும் போது வண்டி புதுச்சத்திரத்தைத் தாண்டியிருந்தது. சக பயணிகள் யார் என கவனித்தேன். பெட்டியில் ஏறும் போதே அவர்கள் பேச்சில் சன்னாநல்லூர் என்னும் பெயர் கேட்டது. திருவாரூர் விழுப்புரம் பயணிகள் ரயிலில் சன்னாநல்லூரில் ஏறியிருக்கிறார்கள். ஒரு மூதாட்டி, மூதாட்டியின் மகள், மூதாட்டியின் பேத்தி, மூதாட்டியின் சகோதரி, மூதாட்டியின் சகோதரி மகள் என ஐந்து பெண்கள் பேரங்கியூர் என்னும் ஊருக்கு பயணிக்கின்றனர். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றியிருக்கிறார். அவருக்காக பேரங்கியூரில் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்து குடும்ப நண்பர் உடல்நலம் பெற வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார்கள். எனக்கு இப்போது லேசாக இருமல் இருக்கிறது. நான் இருமியதைக் கண்டு வென்னீர் வேண்டுமா எனக் கேட்டு கொடுத்தார்கள். சகஜமாக பேசிக் கொண்டு வந்தார்கள். கடலூர் முதுநகர் அடைந்தும் அவர்களுக்கு காலை உணவு கொண்டு வரும் விற்பனையாளர்களைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் உணவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கொய்யாக்காய் விற்பனை செய்யும் மூதாட்டி வந்தார். ஒருவருக்கு ஒரு கொய்யாக்காய் என 6 கொய்யாக்காய்களை கொடுக்கச் சொன்னேன். பணம் நான் கொடுத்து விட்டேன். அந்தப் பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘’ குடும்ப நண்பர் ஒருவர் உடல்நலம் பெற வேண்டி சிவனிடம் வேண்டிக் கொள்ள சென்று கொண்டிருக்கிறோம். பக்தர்களாகிய எங்கள் பசியை சற்று முன் அறிமுகமான ஒருவரான நீங்கள் தீர்த்து வைக்கிறீர்கள். எங்களுக்கு கொய்யா கிடைக்க வேண்டும் என்பது இறை சங்கல்பம். அது உங்கள் மூலமாக நிறைவேறியிருக்கிறது ‘’ என்று சொன்னார்கள். அவர்கள் அந்தச் சூழலை மிக உணர்ச்சிகரமாகப் புரிந்து கொண்டாலும் மிக உணர்ச்சிகரமாக எதிர்கொண்டாலும் உலகில் பாரதம் என்னும் இந்த மண்ணில் தான் கடவுளைத் தன் தோழனாகத் தன் பணியாளனாகத் தன் உறவினனாக மக்கள் காண்கிறார்கள். பேரங்கியூர் கோயில் குறித்து நிறைய விஷயம் சொல்லிக் கொண்டு வந்தார்கள். என்னிடம் என்ன தொழில் செய்கிறேன் எனக் கேட்டார்கள். ரியல் எஸ்டேட் என்று சொன்னேன். விழுப்புரம் வந்து ரயில் நின்றதும் அனைவரும் இறங்கினோம். ஐந்து பெண்களும் உங்கள் தொழில் மிகச் சிறப்பாக நடக்கும் ; ரியல் எஸ்டேட்டில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என வாழ்த்தி விட்டு சென்றார்கள்.