Monday, 15 June 2026

ரயில்களும் சென்னையும்

சென்னை எனக்கு ரயில் நிலையங்களின் நகரமும் கூட. எழும்பூர் என்பது எனக்கு எழும்பூர் ரயில் நிலையம். தாம்பரம் என்பது தாம்பரம் ரயில் நிலையம். கிண்டியும் அவ்வாறே. இப்போது மெட்ரோ ரயில் நிலையங்களும் அவ்விதம் இணைந்து விட்டன.  மொத்த மெட்ரோ நிலையங்களும் ஒரே நிலையம் என எண்ணும் விதமாக மெட்ரோ ரயில் உள்ளது. மெட்ரோ ரயில் பூமிக்குக் கீழேயும் செல்கிறது ; பூமிக்கு மேலேயும் செல்கிறது. வெளிக்காட்சிகளைக் காண்பது அரிது. எனவே மொத்த மெட்ரோவும் ஒன்றே என எண்ணும் விதமாக இருக்கிறது. இந்த முறை சென்னை பயணத்தில் ஊரில் காலை 7.40க்கு ஒரு விரைவு ரயில் இருந்தது. அது 12.30க்கு தாம்பரம் போகும். அங்கிருந்து ரயில் மாற வேண்டும். அதனைத் தவிர்க்கவே காலை 6 மணி பயணிகள் வண்டியில் சென்றேன். விழுப்புரத்தில் ரயில் மாறி 12.30க்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். எழும்பூர் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியாக எதிர்திசையில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. அங்கு சென்று வடபழனிக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு வடபழனி சென்றேன். அங்கே வேலையை முடித்து விட்டு மீண்டும் வடபழனி வந்து 12 X என்ற பேருந்தைப் பிடித்து திருவள்ளுவர் சிலைக்கு வந்தேன். வடபழனியிலிருந்து திருவள்ளுவர் சிலை கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டது. எனினும் பயணச்சீட்டு ரூ.9 தான். ஆச்சர்யமாக இருந்தது. அங்கே வேலையை முடித்து விட்டு இரவு அங்கிருந்து அருகிலிருந்த ஆயிரம் விளக்கு மெட்ரோவுக்குச் சென்று கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன். பின்னர் அதன் ஒரு பகுதியில் இருந்த கிண்டி ரயில் நிலையத்தில் ஊருக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு மின்சார ரயிலில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அந்த்யோதயா புறப்பட்டத் தயாராக இருந்தது. ரயிலின் கடைசிக்கு சென்று கொண்டே இருக்கையில் 8 பேர் இருக்கையில் 4 பேர் அமர்ந்திருந்தனர். அங்கே சென்று அமர்ந்தேன். காலையிலிருந்து தொடர் பயணங்கள். சந்திப்புகள். இடம் இருந்ததால் உடலை நீட்டிப் படுத்தேன். படுத்தவுடன் உறங்கி விட்டேன். வண்டி புறப்பட்டதோ வண்டி நகர்ந்து கொண்டிருந்ததோ தெரியவில்லை. ஆழமான உறக்கம். எழுந்து பார்த்த போது வண்டி ஏதோ ஒரு ஊரில் நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன ஊர் எனக் கேட்டேன். சிதம்பரம் என்றார்கள். எழுந்து அமர்ந்து கொண்டேன். ஊர் வரை விழுத்திருப்பதே உகந்தது. மீண்டும் ஆழ உறங்கி விட்டால் வண்டி தஞ்சாவூர் சென்றடைந்து விடும். அதன் பின் அங்கிருந்து ஊருக்கு தனியே பயணித்து வர வேண்டும்.