Monday, 22 June 2026

அனைவருக்கும் அதிகாரம்

இன்றைய தேதியில் உலக மக்கள்தொகை தோராயமாக 700 கோடி எனில் அதில் 420 கோடி மக்கள் சர்வாதிகார ஆட்சி அல்லது ராணுவ ஆட்சி அல்லது மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர் ; 280 கோடி மக்கள் மட்டுமே ஜனநாயகத்தின் கீழ் வாழ்கின்றனர். ஜனநாயகம் நாட்டின் எல்லா குடிமக்களும் அரசியல் அதிகாரத்தின் உச்சநிலையை அடைய முடியும் என்ற உரிமையை அளித்துள்ளது. இயல்பாகவே ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகன் நாட்டின் உயர்பதவியை அடைய வேண்டும் என விரும்ப முடியும் ; அதற்கான பாதையில் செல்ல முடியும். குடிமகன் விரும்புவதைப் போல குடிமக்கள் சமூகங்களும் நாட்டின் அரசியல் அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என விரும்பி அதனை நோக்கிச் செல்கின்றன.  இந்தியாவின் குடிமக்கள் சமூகங்களில் சாதி மிகப் பெரியதும் பிரதானமானதும் ஆகும். சாதி என்னும் சமூக அமைப்பு இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளும் போது இந்தியாவில் எப்போதுமே விவசாயிகளும் விவசாய சாதிகளுமே எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்திருக்கின்றனர் என்பதும் அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லுதல் என்னும் தேவை இல்லாமல் இருப்பவர்கள் என்னும் விஷயத்தையும் இதனுடன் சேர்த்து யோசிக்க வேண்டும். நாட்டின் வட பகுதியிலோ அல்லது தென் பகுதியிலோ ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வசிக்கிறார் என்றால் அவர் தன் வாழ்நாளில் கிராமத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊருக்கு வாழ்நாளில் சிலமுறை சென்றிருப்பார் ; தன் கிராமத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்துக்கு கணிசமான முறை சென்றிருப்பார். இதற்குக் காரணம் என்னவெனில் அவருக்குத் தேவையான அனைத்தும் அந்த கிராமத்திலேயே இருக்கும். உப்பு, மளிகைப் பொருட்கள், துணி, உலோகங்கள் ஆகியவை வணிகர்களால் ஒவ்வொரு கிராமத்துக்கும் வந்து சேரும் அல்லது 200 கிராமங்களுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு வணிக நகரில் கிராமத்து மக்கள் தங்கள் நுகர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்தியாவில் விவசாய சாதிகள் இருந்தன ; மேய்ச்சல் சாதிகள் இருந்தன ; போர்ச் சாதிகள் இருந்தன ; வணிகச் சாதிகள் இருந்தன ;  உலோகத்தொழில் செய்யும் சாதிகள் இருந்தன ; கைவினைப் பொருட்கள் செய்யும் சாதிகள் இருந்தன; வேதம் ஓதும் சாதிகள் இருந்தன. மேற்படி சாதிகள் இப்போதும் இருக்கின்றன. இந்திய வரலாற்றை உற்று நோக்கினோம் என்றால் அதன் 3000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் 3000 ஆண்டுகளாக ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒருவன் தன் வாழ்க்கையை அந்த கிராமத்துக்குள் வாழ்ந்து கொள்ள முடியும் என்னும் நிலை இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல ; அனேகமாக உலகின் எல்லா நாடுகளிலுமே இந்த நிலை ஏறக்குறைய இருந்தது. 18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டிலுமே பொருள் உற்பத்தி ஐரோப்பாவில் பெரிய அளவில் நிகழத் தொடங்குகிறது. அதன் விளைவுகள் உலகம் முழுதையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கத் தொடங்குகின்றன. 

இந்தியாவில் இருந்த சாதிகள் கிராம் அளவிலானவை. ஒரு கிராமம் என்பது 3000 மக்கள்தொகை கொண்டது எனில் சாதி என்பதும் அந்த எண்ணிக்கைக்குள் அந்த கிராமத்துக்குள் இருந்ததே ஆகும். 3000 ஆண்டுகளுக்கு முன்போ 200 ஆண்டுகளுக்கு முன்போ கூட ஒரு கிராமத்தைத் தாண்டி இன்னொரு கிராமத்துக்கு திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எந்த சாதியினரும் தங்கள் கிராமத்துக்கு அப்பால் சொந்த சாதியைச் சேர்ந்தவர்களுடன் கூட மண உறவு கொள்ளவில்லை. இந்த விஷயம் புவியியல் சார்ந்த ஒன்றாகும். இங்கே குறிப்பிட விரும்புவது சாதி நாடு முழுக்க இருந்தாலும் அது கிராம அளவில் அதிகாரம் கொண்டதே ஆகும். இதில் இன்னொரு விஷயத்தையும் கவனித்துப் பார்க்கலாம். தெற்கு வடக்காக நம் நாடு 3000 கி.மீ நீளம் கொண்டது எனில் ஒவ்வொரு 150 கி.மீ க்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள். எந்த சாதியும் 150கி.மீ அல்லது 300 கி.மீ எல்லைக்கு அப்பால் சிறு எண்ணிக்கையில் கூட இல்லாமல் ஆவார்கள். ஒரு புரிதலுக்காக இன்றைய தேதியில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அளவிட்டோம் என்றால் கன்னியாகுமரியில் மீனவர்களும் நாடார்களும் எண்ணிக்கையில் அதிகம் ; மதுரையில் முக்குலத்தோர் அதிகம் ; திருச்சியில் முத்தரையர் அதிகம்; விழுப்புரம் வேலூரில் படையாச்சிகள் அதிகம் ; கடப்பாவில் ரெட்டிகள் அதிகம் ; ரெய்ச்சூரில் ஒக்கலிகா அதிகம் ; பூனாவில் மராத்தாக்கள் அதிகம் ; ஆகதாபாத்தில் படேல்கள் அதிகம் ; ஜெய்ப்பூரில் ராஜபுத் அதிகம் ; சண்டிகரில் ஜாட் அதிகம் ; என்னும் விதமாகவே நம் நாட்டில் சாதிப்பரவல் உள்ளது. ஒரு பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி அதிக எண்ணிக்கையில் இருக்கிறது என்பதன் பொருள் என்னவெனில் அந்த குறிப்பிட்ட சாதி 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை உள்ளது என்பதே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் சாதிகள் 20 சதவீதம் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பல இடங்களில் ஒவ்வொரு பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலும் பல இடங்களில் முதனமை இடத்திலும் இருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல ; நூற்றுக்கணக்கான சாதிகள் விவசாயத் தொழிலாளர்களில் இருக்கிறார்கள். அவர்கள் ‘’பட்டியல் சாதிகள்’’ என பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றனர். பட்டியல் சாதிகள் என்னும் பொதுப் பெயர் நூற்றுக்கணக்கான சாதிகளின் தொகுப்பே ஆகும். 

நம் நாட்டின் வரலாற்றை கவனித்தோம் எனில் 4000 ஆண்டுகளாகவே நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் சாதிகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் தொகுக்கவுமே முயன்றிருக்கின்றனர் என்பதைக் காணலாம். சாதிகள் மூலம் மக்கள் தொகுக்கப்பட்டனர் என்பது ஓர் உண்மை எனில் சாதிகள் கிராமம் என்னும் அளவில் மட்டுமே முழு அதிகாரம் கொண்டிருந்தன என்பதும் அதன் இன்னொரு உண்மை. வரலாற்றின் சுவாரசியமான விஷயம் என்னவெனில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாட்டின் சமூக சித்திரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திடவில்லை. சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து சமூகச் சித்திரம் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. 

***

தமிழகத்தின் சமூகச் சித்திரத்தை இவ்விதமாக வரையறுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள சாதிகள் மாநில மக்கள்தொகையில் யார் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டுக் கொள்வோம். 

பட்டியல் சாதிகள் - 20 சதவீதம் ; படையாச்சி - 14 சதவீதம் முக்குலத்தோர் - 11 சதவீதம் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் - 7 சதவீதம் ஆபிரகாமிய மதத்தினர்-12 சதவீதம் நாடார்கள் - 7 சதவீதம் வேளாளர்கள் - 3 சதவீதம் வேதியர்கள் - 3 சதவீதம் இதர சாதிகள் - 23 சதவீதம். 

தமிழகத்தில் 76 வகையான பட்டியல் சாதியினர் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் கணிசமாக இருக்கும் பட்டியல் சாதியினர் என பறையர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர், சக்கிலியர் ஆகிய சாதிகளைக் கூற முடியும். இதில் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பகுதி தங்களை பட்டியல் சாதியிலிருந்து நீக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கின்றனர். 

படையாச்சி என்னும் சாதி படையாச்சி, வன்னிய குல ஷத்ரியர், அக்னி குல ஷத்ரியர், வன்னியக் கவுண்டர், கண்டர் ஆகிய சாதிகளின் தொகுப்பு ஆகும். 

முக்குலத்தோர் என்னும் சாதி மறவர், கள்ளர் , அகமுடையார் என்னும் சாதிகளின் தொகுப்பு ஆகும். 

தமிழகத்தில் உள்ள ஆபிரகாமிய மதத்தினரில் லெப்பை, ராவுத்தர், மரக்காயர், மாப்ளா, அன்சார், தக்கனி முஸ்லீம், கிருஸ்தவ நாடார், சி எஸ் ஐ , ஃபெர்ணாண்டோ ஆகிய சாதிகள் உண்டு. 

3 சதவீதம் இருக்கும் பிள்ளை சாதியிலும் சைவப் பிள்ளை, நாஞ்சில் நாட்டு பிள்ளைமார், கோட்டைப் பிள்ளை, துளுவ வேளாளர் ஆகிய சாதிகள் உண்டு. 

3 சதவீதம் இருக்கும் வேதியரில் வடமா, வாத்திமா, பிருஹத்சரணம், அஷ்ட சஹஸ்ரம், ஐயங்கார், மாத்வா,நியோகி ஆகிய சாதிகள் உண்டு. 

சாதி என்பது வகைப்படுத்த வகைப்படுத்த மேலும் மேலும் பிரிந்து கொண்டே செல்லும் இயல்பு கொண்டது. இந்த சாதிகளை ஒருங்கிணைக்கவும் தொகுக்கவும் 4000 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் முயன்றன. 4000 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசுகளும் பேரரசுகளும் சாதிகளைத் தொகுக்கவும் ஒருங்கிணைக்கவும் செய்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட ஆட்சியில் குறிப்பிட்ட பிராந்தியங்கள் பொருளியல் ரீதியாக முன்னுக்கு வருவதும் அதன் மூலம் அந்தப் பிராந்தியத்தின் குறிப்பிட்ட சாதிகள் பயன்பெற்றதும் நிகழ்ந்தது. 

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் சாதிகளின் மொத்தப் பட்டியலை உருவாக்க முயன்றது. இந்தியாவில் இருக்கும் மொத்த சாதிகளை பட்டியல் சாதிகள், முன்னேறிய சாதிகள் என வகைப்படுத்தியது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் பட்டியல் சாதிகள், பிற்பட்ட சாதிகள், முன்னேறிய சாதிகள் என்னும் பிரிவுகள் பட்டியலிடப்பட்டன.  கல்வி, அரசு வேலை ஆகிய இரு விஷயங்களில் இட ஒதுக்கீடு வழங்க சாதிப் பட்டியல்கள் உதவின. 1980ம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரை இட ஒதுக்கீடு இந்திய அரசியலில் முக்கிய விஷயமாக இருந்தது ; இப்போதும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. 

இட ஒதுக்கீடு அரசியல் விஷயமாக மாறி ஆட்சி மாற்றம் வரை தாக்கம் செலுத்துவது உண்மை. இட ஒதுக்கீடு மூலம் பலருக்கு அரசு வேலை கிடைத்து நேரடியாக பலன் அடைந்திருக்கிறார்கள் ; பலன் அடைகிறார்கள் என்பது ஓர் உண்மை. இந்த உண்மையை பரிசீலிக்காமல் இட ஒதுக்கீடு குறித்தோ சாதிப் பட்டியல்கள் குறித்தோ பேசிட முடியாது. எனினும் கல்வி , வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மட்டுமே எல்லா குடிமக்களுக்கும் லௌகிகத் தீர்வாக இருக்குமா என்னும் கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்தியாவில் அரசுப்பணி புரிபவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 சதவீதத்தினர் மட்டுமே. இன்றைய தேதிக்கு இந்திய மக்கள் தொகை 140 கோடி எனில் அதில் 2 கோடியே 80 லட்சம் பேர் மட்டுமே அரசுப் பணி புரிபவர்கள். மீதி 138 கோடி பேர் அரசுப்பணியில் இல்லாமல் இருப்பவர்கள். இந்திய அரசியல் இட ஒதுக்கீட்டை மையம் கொள்ளும் போது 2 சதவீதம் குறித்து மட்டுமே பேசியிருக்கிறது. மீதி 138 கோடி பேர் குறித்து இந்த விஷயத்தில் சிந்திப்பது இல்லை. இந்தியா கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் நாடு ; இந்தியா கோடிக்கணக்கான சிறு வணிகர்கள் சிறு தொழில்முனைவோரின் நாடு. கோடிக்கணக்கான மக்கள் தனியார் துறையில் பணி புரியும் நாடு. இருப்பினும் இந்திய அரசியலில் சாதி கல்வியிலும் இட ஒதுக்கீட்டிலும் பொதுமக்கள் அபிப்ராயத்திலும் கணிசமான தாக்கம் ஏற்படுத்துகிறது. 

சாமானிய பொதுமக்கள் தேர்தல் அரசியலை கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் என்றே கருதுகிறார்கள். எனவே ஒரு சாதியினர் மற்ற சாதியினரைப் போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் வாக்கு வங்கிகளாக மாறுவது நிகழ்கிறது. 

இந்தியத் தேர்தல் முறையில் ஒரு குடிமகனின் வாக்கு என்பது ரகசியமானது. எனினும் பொதுக் கணிப்பில் எந்த சாதியினர் எந்த கட்சிக்குப் பெருமளவு வாக்களிக்கிறார்கள் என்பதை அரசியலை அவதானிப்பவர்களால் கணிக்க முடிகிறது. வாக்குச்சாவடி அளவிலான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தெரியவருகிறது. எனவே அந்தத் தரவுகளைக் கொண்டு எந்த சாதியினர் எந்த கட்சிக்கு அதிகம் வாக்களிக்கிறார்கள் என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது. 

தமிழகத்தில் ஒரு கட்சி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். 1977ம் ஆண்டு அதிமுக கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்தது. எனினும் தமிழக மக்கள்தொகையில் எந்த சாதியும் 30 சதவீதம் இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட சாதிகளின் ஆதரவைப் பெறும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும். இந்த சூழ்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் ‘’பிரித்து ஆளுதல்’’ என்னும் உபாயத்தை மேற்கொள்வார்கள். எண்ணிக்கை பலம் கொண்ட இரண்டு சாதிகளின் ஆதரவைப் பெற மூன்றாவது சாதியை அந்த இரண்டு சாதிகளுக்கும் போட்டியாளர்களாகக் காட்டுவார்கள். பட்டியல் சாதி இடஒதுக்கீடு பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருக்கிறது. எனவே பட்டியல் சாதியினரை இடைநிலை சாதிகளுக்குப் போட்டியாளர்களாகக் காட்டி இடைநிலை சாதியினரின் வாக்குகளைப் பெற முயல்வார்கள். 

தமிழகத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதியினர் மக்கள்தொகையில் 20 சதவீதம் அளவில் இருக்கின்றனர். இவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்தனர். பின்னர் அதிமுகவுக்கு அதிக அளவில் வாக்களித்தனர். கடந்த 10 ஆண்டுகளாக திமுகவுக்கு வாக்களித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புதிய தமிழகமும் பட்டியல் சாதியினர் மத்தியில் செல்வாக்கு கொண்ட கட்சிகள். இந்தத் தேர்தலில் ஜோசஃப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பட்டியல் சாதியினர் வாக்களித்திருக்கின்றனர். 

தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் படையாச்சிகள் ஆவர். இவர்கள் எண்ணிக்கை 14 சதவீதம். இவர்கள் நாடு சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். பின்னர் திமுக வுக்கு வாக்களித்தனர். பின்னர் திமுக , அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கும் வாக்களித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி படையாச்சி சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற கட்சி. இந்தத் தேர்தலில் இவர்களின் வாக்குகள் திமுக, அதிமுக, த வெ க ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சென்றுள்ளது. 

தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் இடம் வகிப்பவர்கள் முக்குலத்தோர். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு பெருமளவில் வாக்களிப்பவர்கள். திமுகவுக்கும் வாக்களிப்பது உண்டு. 

தமிழக மக்கள்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் நான்காம் இடம் வகிப்பவர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்கள். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு பெருமளவில் வாக்களிப்பவர்கள். திமுக வுக்கும் வாக்களிப்பது உண்டு. இந்த முறை த வெ க வுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். 

தமிழகத்தில் பிற சாதியினர் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களே 23 சதவீதம். இருப்பினும் அவர்கள் ஒரு சாதி இல்லை. எண்ணிக்கையில் பெரிய சாதிகள் எவருக்கு வாக்களித்தாலும் பிற சாதியினர் ஆதரவை எவர் பெறுகிறார்களோ அவர்களே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியும். 

தமிழகத்தில் ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 12 சதவீதம் இருக்கின்றனர். இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக வுக்கு வாக்களிப்பவர்கள். இந்தத் தேர்தலில் த வெ க வுக்கு வாக்களித்திருக்கின்றனர்.

இந்த புள்ளிவிபரங்கள் மாநில மக்கள்தொகை அடிப்படையிலானவை. இவற்றை பிராந்தியரீதியாகப் பிரித்துப் பார்த்தால் இவை வேறு சித்திரம் கொடுக்கும். எவ்வாறெனில் படையாச்சிகள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகம் இருக்கின்றனர். தென் மாவட்டங்களில் அந்த சமூகம் அதிகம் இல்லை. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகம் இருக்கின்றனர். தென் தமிழகத்திலும் வட தமிழகத்திலும் இல்லை. முக்குலத்தோர் தென் தமிழகத்தில் இருக்கின்றனர். தமிழகத்தின் வடக்கிலும் மேற்கிலும் இல்லை. பட்டியல் சாதியினர் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர். ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர். எனினும் இந்தத் தரவில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஒரு வட மாவட்டத் தொகுதி இருக்கிறது என்றால் அங்கே பட்டியல் சாதியினர் மொத்த மாநில மக்கள்தொகையில் அவர்கள் சதவீதமான 20 சதவீதம் என்ற அளவில் இருப்பார்கள். அந்தத் தொகுதியில் படையாச்சிகள் 25 சதவீதம் இருப்பார்கள். படையாச்சிகளின் மாநில முழுதுக்குமான மக்கள்தொகை சதவீதமே 14 சதவீதம். வட மாவட்டஙளில் மட்டும் கணக்கெடுத்தால் அவர்கள் 25 சதவீதம் இருப்பார்கள். தமிழகத்தின் எந்த தொகுதியிலும் பட்டியல் சாதியினர் 20 சதவீதத்துக்கு மேல் அனேகமாக இல்லை. 

தமிழக அரசியலில் இட ஒதுக்கீடு முக்கியமான விஷயமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது ; இருக்கிறது. இட ஒதுக்கீடு நீண்ட காலமாகப் பெற்றவர்கள் பட்டியல் சாதியினர். அதன் பின் படையாச்சிகளும், முக்குலத்தோரும் இதர சாதிகளும் இட ஒதுக்கீடு பெற்றார்கள். தமிழக அரசியல் என்பது இன்னொரு சாதி தங்களை விட அதிகமாக இட ஒதுக்கீடு பெற்று விடுமோ என ஒவ்வொரு சாதியையும் ஐயுற வைப்பதே ஆகும். இந்த ஐய உருவாக்கமே தமிழகக் கட்சிகளின் ‘’பிரித்து ஆளும்’’ முறையின் அடிப்படை விஷயம் ஆகும்.

தமிழக அரசியலில் எவர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம் எனில் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும் சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக முதலமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள். 

ராஜாஜி ஐயங்கார் சாதியைச் சேர்ந்தவர். காமராஜ் நாடார் சாதியைச் சேர்ந்தவர். பக்தவத்சலம் முதலியார் சாதியைச் சேர்ந்தவர். அண்ணாதுரை முதலியார் சாதியைச் சேர்ந்தவர். கருணாநிதி இசை வேளாளர் சாதியைச் சேர்ந்தவர். எம் ஜி ஆர் மன்றாடியார் சாதியைச் சேர்ந்தவர். ஜெயலலிதா ஐயங்கார் சாதியைச் சேர்ந்தவர். ஜோசஃப் விஜய் ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்த கிருஸ்துவ வெள்ளாள சாதியைச் சேர்ந்தவர். 

இந்தப் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மட்டுமே மிகச் சிறு அளவில் மாறுபடுபவர்கள். ஓ. பன்னீர்செல்வத்தின் முக்குலத்தோர் சாதி எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதி, படையாச்சி, ஆபிரகாமிய மதங்கள் ஆகியவற்றுக்கு அடுத்ததாக வரக்கூடிய சாதியே. எடப்பாடி பழனிச்சாமியின் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாதி எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் சாதி, படையாச்சி, ஆபிரகாமிய மதங்கள், முக்குலத்தோர் ஆகிய சாதிகளுக்கு அடுத்த எண்ணிக்கையில் வரும் சாதியே.

தமிழக வாக்காளர்களில் தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்கும் வழக்கம் கொண்டவர்கள் பட்டியல் சாதியினர். மொத்த வாக்காளர்களில் 20 சதவீத எண்ணிக்கை கொண்டவர்கள் பட்டியல் சாதியினர். தமிழகத்தின் பொது வாக்கு சதவீதம் 80 சதவீதம் எனக் கொண்டால் பதிவாகும் வாக்குகளில் 25 சதவீதம் பட்டியல் சாதியினரின் வாக்குகள் என்றாகும். இந்த 25 சதவீத வாக்குகளை ‘’வாக்கு வங்கி’’யாகப் பயன்படுத்துகின்றன தமிழகத்தினை ஆளும்கட்சிகள். பட்டியல் சாதியினருக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்துமே நாடு சுதந்திரம் பெற்ற போது அரசியல் நிர்ணய சபை வழங்கிய சலுகைகளே. தனித்தொகுதி என்னும் முறை இருப்பதால் சட்டசபைக்கு பட்டியல் சாதியினர் செல்லும் நிலை உள்ளது. திராவிடக் கட்சிகள் பட்டியல் சாதியினரின் கணிசமான வாக்குகளால் பதவிக்கு வந்தாலும் பட்டியல் சாதியினருக்கு அரசியல் அதிகாரம் அளித்ததில்லை. ஆபிரகாமிய மதங்களின் 12 சதவீத வாக்குகளும் திமுக வுக்கு வாக்கு வங்கியாக உதவியது. அவர்களுக்கும் திமுக அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுத்ததில்லை. 

இந்த முறை ஆபிரகாமிய மதத்தைச் சேர்ந்த ஜோசஃப் விஜய் முதலமைச்ராக ஆகியிருக்கிறார்.  அவரது அமைச்சரவையில் முக்கியமான நிதி அமைச்சர் பொறுப்பை பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பெற்றிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கும் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கின்றன. 

தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருக்கும் சாதி கல்வி , வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்னும் நிலைக்கு அடுத்த கட்டமாக பட்டியல் சாதியினருக்கும் ஆபிரகாமிய மதத்தினருக்குமான அரசியல் அதிகாரம் என்னும் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. வழக்கமாக தமிழக அரசியலில் படையாச்சிகள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்கள் என்னும் சாதிகள் கணிசமாகவும் பட்டியல் சாதிகளும் ஆபிரகாமிய மதங்களும் மிகச் சிறு அளவிலும் அரசியல் அதிகாரம் பெறுவார்கள். இந்த முறை த வெ க ஆட்சியில் பட்டியல் சாதியினரும் ஆபிரகாமிய மதத்தினரும் கணிசமாகவும் படையாச்சிகள், முக்குலத்தோர் , கொங்கு வேளாளர்கள் ஆகிய சாதிகள் பட்டியல் சாதியினர், ஆபிரகாமிய மதத்தினருக்கு சமமாகவும் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளனர். தமிழக அரசியலில் இந்தக் காட்சி புதிய காட்சி ஆகும். 

கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் சாதியே மையப்புள்ளியாக இருந்திருக்கிறது. சாதியை மையமாக வைத்த கல்வி வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு. வாக்காளர்கள் கணிசமானோர் மனதில் பிற சாதியினர் குறித்த ஐயமும் அவநம்பிக்கையும் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்து மக்களை இதுவரை ‘’பிரித்து ஆளும்’’ அரசியலே நிகழ்ந்துள்ளது. 

இனி, தமிழக மக்களை ‘’ஒன்றிணைக்கும்’’ அரசியலை அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் என்பது தமிழகப் பொதுஜனங்களின் எதிர்பார்ப்பு.