Monday, 22 June 2026

பெருவியப்பு (நகைச்சுவைக் கட்டுரை)

ஊரில் பேருந்து நிலையத்திலிருந்து ( ஊரில் ஒரு பேருந்து நிலையம் தான் இருந்தது ; சென்ற ஆட்சியில் ஊரிலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் அண்டை கிராமம் ஒன்றில் ( அந்த கிராமத்தை ஊரின் நகராட்சியுடன் இணைக்க நகராட்சி தீர்மானம் போட்டது ; அந்த கிராமம் நாங்கள் ஊராட்சியாகவே இருக்கிறோம் நகராட்சியுடன் இணைய விரும்பவில்லை எனத் தீர்மானம் இயற்றி விட்டது) புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு புதிய பேருந்து நிலையத்திலிருந்து எல்லா பேருந்துகளும் இயங்கும் என்றார்கள். மக்கள் யாரும் அங்கே செல்லவில்லை. நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கத் தொடங்கினார்கள். புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் வராததால் பேருந்து நிலையத்தை மீண்டும் பழைய பேருந்து நிலையத்துக்கே மாற்றி விட்டார்கள் ) காவிரிக்கரை நோக்கிச் செல்லும் சாலைக்கு ‘’அஞ்சல் அலுவலக சாலை’’ என்று பெயர். இருந்தாலும் அதனை சினிமா தியேட்டர் சாலை என்றே சொல்வார்கள். ஏனென்றால் அந்த சாலையின் கடைசியில் காவிரியின் தென்கரையில் ஒரு பெரிய சினிமா தியேட்டர் இருந்தது ; இருக்கிறது.  இன்று இரவு நண்பர் ஒருவரை ரயில் நிலையத்திலிருந்து ‘’பிக் அப்’’ செய்து கொண்டு பேருந்து நிலையம் வழியே சினிமா தியேட்டர் சாலையில் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் எதிரில் ஆளும்கட்சியின் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அந்த சாலையின் கடைசியில் சினிமா தியேட்டருக்கு எதிரில் அவர்களின் மாவட்டப் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நான் கடந்து சென்ற சிறு பொழுதில் ஒருவர் ஒலிபெருக்கியில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். ‘’இந்த மாவட்டக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கிற மாவட்ட, ஒன்றிய , நகர, மாநிலப் பொறுப்பாளர்களே! இந்தப் பொதுக்கூட்டம் நடக்கிற இடம் சினிமா தியேட்டரின் வாசல். இந்தப் பொதுக்கூட்டம் எனக்கு என்னென்ன ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது என்றால் இங்கே நம் தலைவரின் எத்தனை படங்களுக்கு கட் அவுட் வைத்திருப்போம் ; போஸ்டர் ஒட்டியிருப்போம் ; தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்திருப்போம்; எத்தனை படங்களை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ரசிகர் மன்ற ஷோவாக பார்த்திருப்போம் ; தலைவர் திரையில் தோன்றும் போது எத்தனை விசில் அடித்திருப்போம் ; அந்த நினைவுகள் தான் எனக்கு வருகின்றன. அப்படி தலைவருக்கு ரசிகர்களாக இருந்த நாம் அரசியல் கட்சியாக ஆகி ஆளும்கட்சியாகவும் ஆகி விட்டோம் என்பதை நினைக்கும் போது அப்படியே ‘’கூஸ்பம்ஸ்’’ மொமெண்ட் ஆக இருக்கிறது. இன்று நாம்தான் ஆளுங்கட்சி என்பதை நம்பவே முடியவில்லை’’ என்றார். 

என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.