Tuesday, 23 June 2026

அரசியல்வாதியின் துயரங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

நம் நாட்டில் சாமானியர்கள் அரசியல்வாதிகளை பிரமிப்புடன் கண்டு அவர்கள் முன் பணிகிறார்கள் என்பது ஓர் உண்மை என்றால் மனதுக்குள் அரசியல்வாதிகளை வெறுக்கவும் வசை பாடவும் செய்கிறார்கள் என்பது இன்னொரு உண்மை.  

15 ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்த ஓர் இளம் அரசியல்வாதி என்னிடம் சொன்னார். ‘’அண்ணன்! அரசியல்வாதி எல்லாமே டயபிடிஸ் வந்து தான் அண்ணன் சாவோம். முகூர்த்த நாள் வந்தா 20 கல்யாண வீட்டுக்கு போக வேண்டியிருக்கு. நாம அரசியல்வாதிங்கறதால உள்ள நுழைஞ்சதுமே நேரா டயனிங்க்கு கூட்டிட்டு போய்டுவாங்க. கேசரி, பொங்கல், பூரி , தோசை, இட்லி சாப்பிட்டே ஆகணும். நம்மள ரொம்ப பாத்து பாத்து கவனிப்பாங்க. நிறைய கல்யாணத்துக்குப் போகணும் கொஞ்சமா வைங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. சாப்பிடாம இலையை மூடினாலும் மனசு புண்பட்டுடுவாங்க. யாராவது ஒருத்தர் மனசை புண்படுத்திட்டா அந்த தகவல் கல்யாண மண்டபத்துல இருக்கற 1000 பேருக்கும் பரவிடும். அவங்க ஒவ்வொருத்தர் 4 பேர் கிட்ட சொன்னா 4000 பேர்ட்ட பரவிடும். அதனால ரொம்ப கஷ்டப்பட்டு 20 கல்யாண வீட்டுக்காரர்களும் சந்தோஷப்படுற மாதிரி சாப்பிட்டுத்தான் அண்ணன் வருவோம். ஆனி , ஆடி மாசமும் மார்கழி மாசமும் தான் அண்ணன் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான மாசம். அந்த மாசங்கள்ல முகூர்த்தமே கிடையாது.’’

அரசியல்வாதிகள் மனித அகத்தின் இருள் பக்கங்களைக் காணவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ என நான் எண்ணுவேன். ஒரு அரசியல்கூட்டம் நடக்கிறது என்றால் அது உரையாற்றுவதற்கானது ; ஆலோசிப்பதற்கானது. கூட்டத்தில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒருவர் 5 நிமிடம் பேசுகிறார் என்றால் அது 100 பேரின் 5 நிமிடம் என்பதால் 500 நிமிடங்களுக்குச் சமம். பேசுபவர் உரையாற்றத் தெரியாமலோ உள்ளடக்கம் இல்லாமலோ பேசினால் கூட்டத்தில் இருக்கும் அனைவரின் மனமும் அசௌகர்யத்தை உணர்ந்து நெளியத் தொடங்கும். கூட்டத்தின் மனநிலையை அது பாதிக்கும். ஆனால் எல்லா கட்சிகளிலும் 99 சதவீத கட்சிக்காரர்கள் உரையாற்றத் தெரியாமலும் உள்ளடக்கம் இல்லாமலும் தான் பேசுப்வார்கள். பதவியில் இருக்கும் அரசியல்வாதி தன் வாழ்நாள் முழுதும் இதனைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது கூட்டமோ ஆலோசனையோ இருக்கும். தினம் இந்தப் பாடினை அரசியல்வாதிகள் பட வேண்டும். 

அரசியல்வாதி ஒரு கூட்டத்துக்கு வந்தால் அந்த கூட்டம் பொதுவாக குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் அவர்களால் அலைபேசியில் பேச முடியாது . வேறு எந்த விஷயமும் செய்ய முடியாது. உள்ளடக்கம் இல்லாமல் பேசும் உரையாற்றத் தெரியாமல் பேசும் நபர்களின் பேச்சைக் கேட்டே ஆக வேண்டும். 

இந்தத் துயரங்களை எவரிடமும் அரசியல்வாதிகள் பகிர்ந்து கொள்ள முடியாது.