இரு சக்கர வாகன சீட் கவர் தைப்பவரின் ஜீனி ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற ஜூன் 1ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுநீதி நாளில் மனு தரப்பட்டது. 24 நாட்கள் ஆகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்தோ அல்லது மாவட்ட வழங்கல் அலுலகத்திலிருந்தோ எந்தத் தகவலும் இல்லை. வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். ஒரு குயர் நோட் ஒன்றில் ‘’மனுநீதி நாள் மனுக்கள்’’ என வரிசை எண். ஆன்லைன் பதிவு எண், மனுதாரர் பெயர் & முகவரி, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஒரு பட்டியல் இருந்தது. சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனுதாரர் பெயர் மற்றும் முகவரி ஆகிய விஷயங்கள் மட்டுமே இருந்தன. மற்ற எந்த விபரமும் ஏட்டில் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனித்தேன். அந்த ஏட்டைப் பராமரிப்பவர் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனக் கோரினார். அது முக்கியத் தேவை என்றால் அலுவலகத்திலிருந்து ஒரு தபால் அனுப்பியிருப்பார்கள். இவ்விதம் இப்போது கோருவது அலைக்கழிக்கும் செயல் என எனக்குத் தோன்றியது. அலமாரியில் அவர் ஒரு படிவத்தைத் தேடினார். அவர் உத்தேசித்த படிவம் கிடைக்கவில்லை. மறுநாள் வருமாறு கூறினார். மறுநாளான நேற்று அங்கே செல்லவில்லை ; வட்ட வழங்கல் அலுவலகத்தின் தலைமை அலுவலகமான மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்றேன். மனுதாரர் பெயரையும் ஜூன் 1ம் தேதி ‘’மனுநீதி நாள் முகாம்’’ மனு என்று சொன்னேன். ஒரு கிளார்க் இன்னொரு கிளார்க்கிடம் விபரம் கேட்கச் சொன்னார். இன்னொருவர் இன்னொருவரிடம். மூன்றாவது கிளார்க் என்னிடம் இந்த விஷயத்தைப் பார்க்கும் கிளார்க் இன்று விடுமுறையில் இருக்கிறார். நாளை வாருங்கள் என்றார். மனுவின் விபரம் கூறி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டேன்.
மனு சென்னைக்கு அனுப்படும் என்றனர். ‘’மனுநீதி நாள் முகாம்’’ ஆன்லைன் கோப்பு நிலுவையில் தானே இருக்கும் எனக் கேட்டேன். சென்னைக்கு மனு அனுப்பப்பட்டால் மனுவின் கோப்பு மூடப்பட்டு விடும் எனக் கூறினர். ஜூன் 1 ஒரு கோரிக்கைக்காக மனு தரப்படுகிறது. அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ; இல்லையென்றால் நிறைவேற்ற இயலாத கோரிக்கை என்று பதில் சொல்ல வேண்டும் அல்லது நிலுவையிலாவது வைத்திருக்க வேண்டும். கோப்பினை மூடி விட்டால் யார் எவ்விதம் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்வது. சென்னை அலுவலகத்துக்கு மனுவை அனுப்பினால் அதன் நகலையாவது மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஒரு கோப்பை மூடினால் மனுதாரர் என்ன செய்ய முடியும் ?
ஏன் இந்த சாதாரண விஷயத்தைக் கூட அரசிடம் எதிர்பார்க்க முடியவில்லை? மாவட்ட வழங்கல் அலுவலகம் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகப் பெரிய பிரும்மாண்டமான கட்டிடம். மாவட்ட வழங்கல் அலுவலகம் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியின் அலுவலகம் போல மிகப் பெரிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் நிறைந்து அமைக்கப்படுகிறது. அலுவலகத்தில் குறைந்தது 7 பேர் பணி புரிகிறார்கள். ஒரு மனுவின் கோப்பை எவ்விதம் உருவாக்கிப் பராமரிப்பது என்பதும் மனுதாரருக்கு பதில் அளிப்பது என்பதும் அடிப்படையான விஷயங்கள். எனினும் இதனைச் செய்ய அரசு ஊழியர்களுக்கு விருப்பம் இல்லை.
‘’நாளை வாருங்கள்’’ என்று சொன்ன கிளார்க்கிடம் ‘’காலை 10.30 க்கு வரட்டுமா’’ என்று கேட்டேன். ‘’11 மணிக்கு வாருங்கள்’’ என்றார்.
எந்த விஷயமாக இருந்தாலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வதே எனது வழக்கம்.