Tuesday, 28 July 2026

பொறுப்பில்லாதவர்கள்

கால்பந்து ஆடும் சிறுவன் 17 வயது மட்டுமே ஆனவன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார். தன்னுடைய சுய ஆர்வத்தல் ஐ ஈ எல் டி எஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தான். ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படித்து அதன் மூலம் ஐரோப்பாவின் கால்பந்து கிளப் ஒன்றில் இணைய வேண்டும் என்பது அவனது ஆவல். அவன் சாமானிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அதன் முறைமைகள் ஆகிய்வை அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மிகவும் புதிது.  மிகச் சமீபத்தில் அவன் என்னிடம் வந்தான். அவனும் நானும் சேர்ந்து சில விஷயங்களை முயன்றோம். விவாதித்தோம். எங்கள் தொடர் முயற்சியின் விளைவாக 3 வாரங்களுக்கு முன்னால் அவனுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்க்கை அனுமதி கிடைத்தது. சேர்க்கை கிடைத்த பின் அந்தப் பல்கலை.க்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஓராண்டுக்கான கட்டணம் ரூ.5,30,000. மிகவும் சிரமப்பட்டு அத்தொகையை ஏற்பாடு செய்தோம். மேலும் அவன் ஐரோப்பா செல்ல ரூபாய் தேவைப்படும். முதலில் இந்த ஆண்டுக் கட்டணத்தை செலுத்தி முதல் படியைத் தாண்டுவோம். அதன் பின் மற்ற படிகளையும் கடப்போம் என முடிவு செய்தோம். எங்களிடம் நிறைய நம்பிக்கை இருக்கிறது. போராடியாவது எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முயல்வோம் என்னும் உறுதி இருக்கிறது. கட்டணம் அவன் கணக்கிலிருந்து செலுத்தப்படுவதை விட அவன் குடும்ப உறுப்பினர்கள் எவர் கணக்கிலிருந்தாவது செலுத்தப்படுவது உகந்தது என உணர்ந்தோம் ; கால்பந்து ஆடும் சிறுவனுக்கு வயது 17 தான் ஆகிறது. அவன் மைனர். அவன் தன் கணக்கில் பெரும் தொகை வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவன் குடும்ப உறுப்பினர்கள் கணக்கிலிருந்து மாற்றுவது என முடிவு செய்தோம். அவன் பாட்டி தன்னிடமிருந்த சிறு தொகையை ( மொத்த பணத்தில் 25 சதவீதம்) அவனுக்காக அளித்தார். மொத்த பணமும் அவர் கணக்கில் போட்டு அவர் கணக்கிலிருந்து ‘’ஸ்விஃப்ட்’’ முறை மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ஐரோப்பிய பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். மொத்த பணம் வந்து சேர ஜூலை 24 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியாகி விட்டது. அடுத்த இரு நாட்கள் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வங்கிக்கு சென்று ‘’ஸ்விஃப்ட்’’ மூலம் பணம் அனுப்புவது தொடர்பாக விசாரிக்கச் சென்றோம். நான் தான் வங்கி துணை மேலாளரிடம் விபரம் விசாரித்தேன். ‘’ஸ்விஃப்ட்’’  பணப் பரிவர்த்தனைக்கு அவரே பொறுப்பானவர். 

நேற்று காலை 10 மணிக்கு வங்கிக்குச் சென்றேன். ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் கொடுங்கள் எனக் கூறினேன். படிவம் எனக்குக் கொடுக்கப்படவில்லை. கணக்கு வைத்திருப்பவரின் ஆதார் நகல், கணக்கு வைத்திருப்பவரின் பான் கார்டு நகல், சிறுவனினி பாஸ்போர்ட் நகல், சிறுவனின் ஆதார் நகல், சிறுவனின் பான் கார்டு நகல், ஐரோப்பியக் கல்லூரி அளித்த சேர்க்கை அனுமதிக் கடிதம், கல்லூரியின் கணக்கு விபரங்கள் அனைத்தும் தேவை என்று கூறினார். சிறுவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒரு மணி நேரத்தில் தயார் செய்து எடுத்துக் கொண்டு சென்றேன். காலை 11 மணிக்கு அவர் இருக்கையில் இல்லை. காத்திருந்தோம். மதியம் 12 மணி அளவில் வந்தார். சிறுவனின் பாட்டி கண்க்கு பான் கார்டுடன் இணைக்க்ப்பட வேண்டும் என்றார். நாங்கள் உடன் வீட்டுக்கு வந்து சிறுவனின் பாட்டியை அழைத்துக் கொண்டு வங்கிக்கு வந்து இ-கே ஒய் சி செய்தோம். அதன் பின் இந்தக் கணக்குக்கு காசோலை வசதி இல்லை ; அதனை அப்ளை செய்யுங்கள் என்றார். அதனையும் செய்து காசோலை பெற்றோம். உணவு இடைவேளை நெருங்கி விட்டதால் வங்கி ஊழியர்கள் உணவருந்த சென்று விட்டார்கள். நாங்கள் மூவரும் வீட்டுக்கு வந்து உணவருந்தி விட்டு உடன் வங்கிக்கு சென்றோம். உதவி மேலாளர் வங்கி நேரம் முடியும் வரை இருக்கைக்கு வரவே இல்லை. நாங்கள் சோர்வுடன் வீடு திரும்பினோம். 

இன்று காலை 10 மணிக்குச் சென்று ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் வாங்கி வந்தேன். அதனை நிரப்பி 10.30க்கு கொடுத்தேன். சிறுவன், சிறுவனின் பாட்டி, நான் ஆகிய மூவரும் வங்கிக்கு சென்றிருந்தோம். எங்களிடம் ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டை கொடுங்கள் எனக் கேட்டேன். எங்களுக்கு ஒப்புகைச்சீட்டு கொடுக்கப்படவில்லை. மாலை 3.15க்கு வாருங்கள் எனக் கூறினர். மாலை 3.15க்கு வங்கிக்கு வந்து எங்களால் பணம் அனுப்ப முடியவில்லை என வங்கியில் கூறினால் என்ன செய்வது என எனக்குப் பதட்டம் உருவானது. வழக்கமான நிலைமை எனில் எங்கள் நுகர்வோர் உரிமையை வலியுறுத்திப் பேசியிருப்பேன். இப்போது , ஒரு சிறுவன் தன் 12 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் தருவாயில் இருக்கிறான் ; அவனது பாட்டி இறந்து போன தன் மகன் செய்திருக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வந்திருக்கிறார். மேலும் கல்லூரி சேர்க்கை என்பது அவர்கள் குடும்பத்தில் நிகழும் மங்களமான செயல் என்பதால் அமைதி காப்போம் என முடிவு செய்தேன். 

நாங்கள் சென்றது தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கி ( இவ்வளவு நடந்தும் நாகரிகம் கருதி வங்கியின் பெயரைத் தெரிவிக்காமல் இருக்கிறேன்). எனது கேள்விகள் : 

1. 27.07.2026 அன்று காலை 10 மணிக்கு வந்த வாடிக்கையாளர் கேட்ட ‘’ஸ்விஃப்ட்’’படிவத்தை ஏன் அப்போதே தரவில்லை? 

2. பாட்டி 1986லிருந்து அந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கிறார். 40 ஆண்டுகளாக் அந்த கிளையின் வாடிக்கையாளர். அவருக்கு செக் புக் தேவைப்படவில்லை. இன்று காலை ‘’ஸ்விஃப்ட்’’ படிவம் நிரப்பி கொடுக்கப்பட்ட போதும் ''pay yourself'' என எழுதி எந்தக் காசோலையும் கோரப்படவில்லை. ஒரு காசோலையை கேன்சல் செய்து படிவத்துடன் இணைக்குமாறு சொன்னார்கள். விண்ணப்பிப்பது அந்தக் கணக்கு எண்ணின் வாடிக்கையாளர்தானா என்பதை அவருடைய கைரேகையை மின்னணு முறையில் சோதித்து ஆதாருடன் இணைந்திருக்கும் வசதி மூலம் அறிய முடியும். அந்த கைரேகையைக் கூட பிரிண்ட் அவுட் எடுத்து ஆதாரமாக வைத்துக் கொள்ள முடியும். அதை ஏன் முயலவில்லை?

3. 28.07.2026 அன்று காலை 10.30க்கு கொடுத்த ‘’ஸ்விஃப்ட்’’படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு கொடுக்காதது ஏன்? 

4. நேற்று வந்த வாடிக்கையாளர் கோரிய சேவையை இன்றைக்கு நகர்த்திக் கொண்டு வந்தது ஏன்? 

5. அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் யூரோ - ரூபாய் மதிப்பு நேற்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நேற்று 1 யூரோவின் மதிப்பு ரூ. 108. இன்று 1 யூரோவின் மதிப்பு ரூ.109. துணை மேலாளர் அனாவசியமாக ஒருநாள் நகர்த்தியதால் எங்களுக்கு தோராயமாக ரூ.5000 இழப்பு. 

6. துணை மேலாளர் எவ்விதம் கடமை தவறி விட்டு சகஜமாக இருக்க முடிகிறது?

7. பாட்டியின் வயது 78. அவர் மூத்த குடிமகள். தன் பேரன் வெளிநாட்டுக் கல்லூரியில் சேரப் போகும் மங்களமான தருணத்தை அவர் நினைக்க வேண்டுமா? இந்த நேரத்தில் வங்கி மேலதிகாரிகளுக்கு தனக்கும் தன் பேரனுக்கும் நிகழ்ந்த அலைக்கழிப்பு குறித்து புகார் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா? 

8. இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரம் மதியம் 2.34. இன்னும் கணக்கிலிருந்து பணம் மின்னணு பரிமாற்றம் செய்யப்பட்டதாக எந்த குறுஞ்செய்தியும் பாட்டி அலைபேசிக்கு வரவில்லை. 

9. நானும் சிறுவனும் 3.15க்கு செல்ல இருக்கிறோம். 

பி எஸ் என் எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஊழியர்கள் பொறுப்பின்மைக்கு மிக பெயர் போனவர்கள். நாட்டின் தொலைபேசிகளும் ஆரம்ப கட்டத்து அலைபேசிகளும் அவர்கள் பராமரிப்பில் இருந்தது. உச்சபட்சமான பொறுப்பின்மையையும் அக்கறையின்மையையும் வெளிப்படுத்தி வந்தார்கள். பொதுமக்களும் குடிமக்களும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் நொந்து போயிருந்தனர். ஒரு நல்ல காலைப் பொழுதில், அந்த நிறுவனம் ஒரு ’’விருப்ப ஓய்வு’’ திட்டத்தை அறிவித்தது. அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ சென்று விடுவது அவர்களுக்கு மிக்க நலம் என்பது குறிப்புணர்த்தப்பட்டது. லட்சக்கணக்கான ஊழியர்கள் அந்த ‘’விருப்ப ஓய்வில்’’ நிறுவனத்தை விட்டு வெளியேறினர். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இருக்கும் கோடானுகோடி குடிமக்களும் அந்நிகழ்வால் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

நம் நாட்டின் பொதுத்துறை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களுக்கும் அந்நிலை வர வேண்டும். அப்படி ஒரு நிலை வருவதே நாட்டுக்கு நலம்.