மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், செம்பனார் கோவில் கிராமத்தில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் ஏழு பட்டியல் பழங்குடியினர் குடும்பத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வசிக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும் மூங்கில் கூடை முடைவதும் அவர்கள் தொழில் ஆகும். ஏழு குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரில் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதியவர்கள் ஆகியோரும் உள்ளனர்
அவர்கள் மைதானத்தின் தெற்குப் பகுதியில் பாலிதீன் ஷீட்களால் ஆன கூடாரங்களை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். கூடாரத்தின் தரை மண் தரை ஆகும். கூடாரத்தின் கூரையும் பக்கச்சுவர்களும் பாலிதீன் ஷீட்டால் ஆனவை. மின்சார வசதி இல்லை. இரவில் விளக்கு வசதி இல்லை. குழந்தைகள் சாலையில் இருக்கும் மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றன. சமையல் திறந்தவெளியில் விறகடுப்பு கொண்டு நடக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு எவருக்கும் இல்லை. குளியலறை வசதி இல்லை. 7 குடும்பத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் கழிவறை வசதி இல்லை. பிளாஸ்டிக் பொருள் வணிகத்துக்குச் செல்லும் ஆண்கள் இரு சக்கர வாகனம் வைத்திருக்கின்றனர். அனைத்து குடும்பங்களும் அலைபேசி பயன்படுத்துகின்றனர். அலைபேசி பயன்படுத்துவதால் இணைய வசதி இருக்கிறது.
ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று செம்பனார்கோவில் காவல் நிலையத்துக்கு எதிரில் வசிக்கும் ஏழு பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபர இணையதளத்தில் தங்கள் குடியிருப்பின் நிலை குறித்து கேட்கப்பட்ட 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு எண்ணைப் பெற்றனர்.
வீட்டின் தரை எதனால் ஆனது என்னும் கேள்விக்கு மண்ணால் ஆனது என்றும் வீட்டின் கூரையும் பக்கச்சுவரும் எதனால் ஆனது என்னும் கேள்விக்கு பாலிதீன் ஷீட்டால் என்றும் சொந்த வீடா வாடகை வீடா அல்லது மற்றவை என்னும் பகுப்பில் வரும் வீடா என்னும் கேள்விக்கு மற்றவை என்றும் விளக்கு வசதி இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் சமையலறை , குளியலறை, கழிவறை இருக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்றும் பதிலைப் பதிவு செய்தனர். குடிநீர் ஆதாரம் என்ன என்னும் கேள்விக்கு ஊராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் சற்று தொலைவில் கிடைக்கிறது என பதிவு செய்தனர். இணைய வசதி உள்ளதா என்னும் கேள்விக்கு அலைபேசி மூலம் இணைய வசதி இருக்கிறது என்றும் பதிவு செய்தனர்.
நாட்டின் குடிமக்களாக அரசு எதிர்பார்க்கும் விதமாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரம் அளித்தலில் ஈடுபட்டிருக்கும் செம்பனார்கோவில் பட்டியல் பழங்குடியின 7 குடும்பங்களும் மாவட்ட நிர்வாகத்தையும் மாநில அரசையும் மத்திய அரசையும் தாங்கள் பதிவு செய்திருக்கும் தரவுகள் சென்றடையும் என நம்புகிறார்கள். சாமானிய வசதிகள் கூட இல்லாமல் வாழும் தங்கள் வாழ்நிலையை மக்கள்தொகை கணக்கெடுப்பின் சுய விபரப் பதிவு மாற்றியமைக்கும் என அந்த 7 குடும்பத்தினரும் தீவிரமாக நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை மெய்யாக்குவது மாவட்ட நிர்வாகம், மாநில மத்திய அரசுகள் கையில் இருக்கிறது.