நேற்று ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
இப்போது யாரைச் சந்தித்தாலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா எனக் கேட்கிறேன். பலரும் இல்லை என்கிறார்கள். சிலர் நான் கேட்ட பிறகு அதனால் உந்தப்பட்டு செய்து விட்டு பின்னர் என்னிடம் தகவல் தெரிவிக்கிறார்கள்.
நண்பரின் வீட்டில் நண்பரும் அவரது மனைவியும் இருக்கிறார்கள். இருவருமே சீனியர் சிட்டிசன். குழந்தைகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை பார்க்கிறார்கள்.
சிறிது நேர உரையாடலுக்குப் பின் ‘’மக்கள்தொகை கணக்கெடுப்பு சுய விபரப் பதிவு செய்து விட்டீர்களா’’ எனக் கேட்டேன்.
‘’வாட்ஸப் பில் நிறைய மெஸேஜ் இது பத்தி வந்தது. இன்னும் செய்யல’’ என்றார்கள்.
‘’உங்களோட ஐ பேட் கொடுங்க’’
’’ஐ பேட் , லேப் டாப் இரண்டையும் தம்பி கொண்டு போயிருக்கான்’’
‘’உங்க ஸ்மார்ட்ஃபோன் கொடுங்க’’
சற்று தயக்கத்துடனே கொடுத்தனர்.
எனக்கு இந்த சுய விபரப் பதிவில் நல்ல பழக்கம் இருப்பதால் சர சர என ஸ்மார்ட்ஃபோனில் இயங்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவருக்கும் இவன் சாதாரண ஜி எஸ் எம் ஃபோன் பயன்படுத்துபவன் தானே . ஸ்மார்ட்ஃபோனில் இவனால் 33 கேள்விகளுக்கும் பதில் சொல்லி எடுத்த காரியத்தை முழுக்க முடிக்கத் தெரியுமா அல்லது பாதி பிராசஸில் விஷயத்தை நிறுத்தி வைத்து விடுவானா என ஐயம். எனக்கு ‘’நாள் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள். என்ன ஏது என உள்நுழைந்து பார்த்தால் தான் என்ன’’ என்று எண்ணம்.
பெயரும் அலைபேசி எண்ணும் உள்ளிட்டு பக்கத்தைத் திறந்தேன். வீட்டின் அமைவிடத்தை கூகுள் மேப்பில் குறிக்க வேண்டும். முதல் முறை இணையத்தின் வேகம் ஒத்துழைக்கவில்லை ; இருவரும் சோர்ந்து விட்டார்கள். உடன் விரைவாக மீண்டும் உள்சென்று கூகுள் மேப்பில் வீட்டின் அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் குறித்து விட்டேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் பதிவு செய்தேன். வீடு சொந்த வீடு. வீட்டின் தரை கல் ( மார்பிள்). வீட்டு வளாகத்தில் சுத்திர்கரிக்கப்பட்ட குடிநீர் இருக்கிறது. சமையல் எரிவாயு இணைப்பு உண்டு. பிரதான உணவு அரிசி. இணையம், டிவி, ரேடியோ, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உண்டு. பதிவு முடிந்தது.
சுய விபர எண் கிடைத்தது.
‘’இதை ஒரு நோட்ல எழுதி வச்சுக்கங்க. கணக்கெடுக்க வர்ரப்ப சொல்லுங்க’’ என்றேன்.
‘’ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கறன்’’ எனக் கூறி எடுத்துக் கொண்டார்கள்.